மனித மனம் எதிலும் நிறைவு கொள்ளாது; குறைவில் தொக்கி நிற்கும் நிறைவையே தேடும். 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் களத்தில் எல்லாம் இருக்கிறது; ‘ஏதோ ஒன்று குறைகிறதே?’ எனும் நிலை உள்ளது. வாக்காளர்களில் 15 முதல் 20 விழுக்காட்டினர் இந்த மனநிலையில் இருக்கிறார்கள். எந்தக் கட்சியையும் சாராத அவர்களே தேர்தல் வெற்றி-தோல்விகளை நிர்ணயம் செய்கிறார்கள். மதில்மேல் உள்ள பூனை காரணமின்றி அல்லது காரணங்களோடு இடதோ வலதோ குதிக்கலாம்.
தேர்தல்
களப் படிநிலைகள் என்பது கூட்டணி அமைப்பு, வேட்பாளர் அறிவிப்பு, தேர்தல் அறிக்கை வெளியீடு, பரப்புரை செய்தல் என்பதே. தேர்தல் களத்தில் கூட்டணி என்பதே இணைந்த கட்சிகளின்
செல்வாக்கை உயர்த்தி,
சேர்ந்த கூட்டணியின் வெற்றியை உறுதி செய்கிறது. மேற்கு வங்கத்தில் 1977 முதல் 2011 வரை இடது முன்னணி 34 ஆண்டுகள் கூட்டணியாகத் தேர்தலைச் சந்தித்து பெரும் வெற்றியை ஈட்டியது. மேற்கு வங்க இடதுசாரிக் கட்சிகளை
ஒருங்கிணைத்து 1977 முதல் 2000 ஆண்டு வரை முதலமைச்சராக, அசைக்க முடியாத சக்தியாகத் திகழ்ந்தவர் ஜோதிபாசு. அதே அரசியல்
சூத்திரம் 2017-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசியலில் நடந்தது. சமூக நீதி, சமத்துவம், சுயமரியாதை, மொழிப்பற்று, இன உரிமை, மாநிலச்
சுயாட்சி என்ற கொள்கை கொண்ட இடதுசாரிக் கட்சிகள் ஓரணியில் இணைந்தனர். அன்றைய ஆளும் அ.தி.மு.க.-வுக்கு எதிராகப்
போராட்டக் களத்தில் தொடங்கிய கூட்டணி, 2026 தேர்தல் களம் வரை சிறு சிறு சலசலப்புகள் இருப்பினும் தொடர்கிறது.
‘தேர்தல் களத்தில் சமபலம், சமவாய்ப்பு, உள்ளதா?’ எனும் கேள்விக்கு விடைகள் ‘இல்லை’ என்பதே பதிலாகும்.
தேர்தல் பெரும் செலவு செய்யும் கோடீஸ்வரர்களின் கையில்
உள்ளது. சாமான்ய மக்கள் பார்வையாளர்களாக இருக்கலாம்; வாக்காளர்களாக இருக்கலாம்; ஆனால், பங்கேற்பாளர்களாக இருக்க வாய்ப்பும் இல்லை, வசதியும் இல்லை. 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்களில் சிறுபான்மையோர் மற்றும் பெண்களுக்கான பங்களிப்பு இல்லை. இசுலாமிய சமுதாயம், விடுதலைக்கு முன்னிருந்து களப்பணியாற்றிப் போராடியதால் மதச்சார்பற்ற கூட்டணியில் 11 இடங்களில் போட்டியிடுகிறார்கள். என்.டி.ஏ. கூட்டணியில்
ஒரேயொருவர் மட்டுமே போட்டியிடுகிறார். இசுலாமிய சகோதரர்கள் “எடப்பாடி பழனிச்சாமி தனது
நான்கரை ஆண்டுகால ஆட்சியில் எங்களுக்கு மந்திரி சபையில் இடம் தராதவர்தானே!” எனக் கொதிக்கிறார்கள். அது அவரது கூட்டணிக் கட்சியான பா.ச.க.
கட்சியின் நிலையின் பிரதிபலிப்பாகக்கூட இருக்கலாம்.
கிறித்தவச்
சிறுபான்மையோர் பத்து ஆண்டுகளாக அரசியல் பேசுவதைக் காண்கிறோம். அதில் நமது ‘நம் வாழ்வு’ வார இதழ் கொடுத்த அரசியல் விழிப்புணர்வும் அடிப்படைக் காரணம் என்றால் மிகையில்லை. 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், திருச்சி கிழக்குத் தொகுதியில் போட்டியிடும் மதச்சார்பற்ற கட்சிகளின் கிறித்தவ வேட்பாளர் இனிகோ இருதயராஜ் குறிப்பிடத்தக்கவர். அவர், “நான் ஓர் இலட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெல்வேன்”
என்று கூறுகிற தன்னம்பிக்கை, நமது கிறித்தவ வாக்குகளின் கூட்டுச் சக்தி தவிர,
வேறு எதிலும் இல்லை எனக் கட்டியம் கூறலாம்.
2026 தமிழ்நாடு சட்டமன்றத்
தேர்தலில் பெண்களுக்கான சமவாய்ப்பு எல்லாக் கூட்டணிகளிலும் மறுக்கப்பட்டுள்ளது. ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும், நான்காவது அணியான ‘நாம் தமிழர்’ கட்சியில் 50% பெண் வேட்பாளர் என்ற நிலையைப் பாராட்டுவோம், வாழ்த்துவோம்.
இனி
தேர்தலின் அடுத்த நிலையான தேர்தல் வாக்குறுதிகள் குறித்துப் பார்க்கலாம். அனைத்துக் கூட்டணிகளின் வாக்குறுதிகளும், “நீ என்னைப் பார்த்துப்
படி எடுத்தாய்”
எனக் குழந்தைத்தனமான குற்றச்சாட்டில் நிற்கிறது. சங் பரிவார் மற்றும் வலதுசாரிகள் அரசின் இலவசங்களை எதிர்க்கிறார்கள். மாநிலக் கட்சிகள், மாநில அரசுகள் மக்கள் நலத் திட்டம் என்ற பெயரில் தேர்தல் வாக்குறுதிகள், திட்டங்கள், மாநில அரசுகளின் கடன் சுமை உயர்கிறது என வாதம் வைக்கிறார்கள்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்கும் இலவசத் திட்டங்களில் உடன்பாடு இல்லை. ஆனாலும், மாநிலத் தேர்தல் வெற்றிகளுக்காக பா.ச.க.வும் இலவசத்
திட்டங்களுக்குக் கட்டாயமாக உட்படுகிறது. அதுவே தேர்தல் எனும் வாக்கு வங்கி அரசியல் எனலாம்.
தமிழ்நாட்டுத்
தேர்தல் களத்தில் அ.தி.மு.க.வின் குளிர்சாதனப்
பெட்டி என்ற வாக்குறுதியும், தி.மு.க.வின் ரூபாய் 8000-க்கான மின்னணுச் சாதன வீட்டு உபயோகப் பொருள் கூப்பனும் மக்கள் மனத்தில் பதிவதைக் களத்தில் கண்கூடாகக் காண்கிறேன். மகளிர் உரிமைத் தொகை உயர்வு 2000, 2500, 3000 என்ற ஏல உயர்வும் எல்லாக் கூட்டணிகளையும்
ஒரே நேர்கோட்டில் நிறுத்துகிறது.
வாருங்கள்...
தேர்தல் பரப்புரைக்குக் காது கொடுப்போம். தமிழ்நாட்டின் எதிர்க்கட்சிகள், தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை, பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்கிறார்கள். தமிழநாடு அரசை நடத்த முடியாமல் நாளொரு மேனி, பொழுதொரு வண்ணம் தலைவலி கொடுத்தவர் மேனாள் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி. அவர் தனது பணிமாற்றத்திற்குச் சில நாள்களுக்கு
முன்பு, “தமிழ்நாட்டுப் பெண்களுக்குப் பாதுகாப்பான மாநிலம்” எனச் சான்று வழங்கி உள்ளார்.
தேசியக்
குற்றப் பிரிவு தரவுகளின் அடிப்படையில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், போதைப் பொருள் நடமாட்டம், போதைப்பொருள் பயன்பாடு என்ற பட்டியலில் தமிழ்நாடு முதல் பத்து இடங்களில் இல்லை என்பதே உண்மை. முதல் பத்து இடங்களில் பா.ச.க.
ஆளும் மாநிலங்களே உள்ளன என்பது மறுக்க முடியாத நிலை. கடந்த காலங்களில் அ.தி.மு.க. ஆட்சியில் குட்கா
வழக்கு, ரெய்டு, சுகாதாரத்துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், தலைமைச் செயலகம்
வரை நடந்ததை மறந்து, என்.டி.ஏ. கூட்டணியினர்
வெற்றுக் கூச்சலிடுகிறார்கள். இது சம்பந்தமான அமைச்சர் மீதான கோப்பு ஆளுநர் மாளிகையில் தூங்குகிறது.
‘இந்தியா’ கூட்டணியினர் தமிழ்நாடு தேர்தல் களத்தில் மதச்சார்பற்ற கூட்டணி என்ற பெயரில் மறுக்கப்படும் மாநில உரிமைகள், நிதி ஆதாரங்கள், திட்டங்கள் என்பதில் வலுத்த வாதங்களை வைக்கிறார்கள். ஜி.எஸ்.டி.
வரிவிதிப்பு நடைமுறை செய்யப்பட்ட பின்பு மாநில அரசின் வருவாய் 95% குறைந்துவிட்டது. ஒன்றிய அரசு
வரிப்பகிர்வில் மாற்றாந்தாய் மனப்பான்மையில் செயல்படுகிறது. பா.ச.க.
மற்றும் பா.ச.க.
கூட்டணி ஆட்சி நடைபெறும் மாநிலங்களுக்கு வாரி வழங்குகிறது. தமிழ்நாடு செலுத்துகிற ஒரு ரூபாய்க்கு 23 காசுகள் திருப்பிக் கிடைக்கின்றன. பா.ச.க.வின் இரட்டை இஞ்சின் ஓடுகிற பீகாருக்கு, ஒரு ரூபாய் பெற்றால் 7 ரூபாய் திருப்பித் தருகிறது. இருந்தாலும், பீகார் மாநிலத்தோடு தமிழ்நாட்டை ஒப்பீடு செய்தால், ஐம்பது ஆண்டுகள் வளர்ச்சியில் பின்தங்கி இருக்கிறது என்பதே கண்கூடு. பலமுறை வட மாநிலங்களில் பயணம்
செய்தவன் என்ற முறையில் கூறுகிறேன்: ‘தமிழ்நாடு பூலோக சொர்க்கமாக உள்ளது.’ நாம் வளர்ச்சியின், சமூக அமைதியின் பாதையில் தெளிவாகப் பயணிக்கிறோம்.
தமிழ்நாட்டுத்
தேர்தல் களத்தில் மூன்றாவது, நான்காவது, ஐந்தாவது அணிகள் உள்ளன. இவர்கள் கட்டுத்தொகையைத் தவறவிடுவோம் எனத் தெளிவாகத் தெரிந்திருந்தும் களம் காண்கிறார்கள், மாயம் காட்டுகிறார்கள், மாயமானாக ஓடுகிறார்கள்.
விலைமதிப்பில்லா
நம் சனநாயக உரிமையான நம் வாக்குகளை நாம் இவர்களுக்கு அளித்து, வீண் விரயம் செய்யக் கூடாது. தமிழர்களின் வலிமைமிகு கூட்டு மனசாட்சி கூறுகிறது: சமூக நீதி, சமதர்மம், சமயச்சார்பின்மை கொண்ட வெற்றிப் பாதையில் நட்சத்திரமாய் உள்ள மதச்சார்பற்ற கூட்டணியை ஆதரிப்போம்.