நமது வாழ்வில் நாம் எதையோ எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்; ஆனால், ஏமாற்றமே மிஞ்சுகிறது. திட்டமிட்ட செயல்கள் சிதறும் போது, ‘எல்லாம் முடிந்துவிட்டது’ என்ற விரக்தியில் நம்பிக்கையை (எருசலேமை) விட்டு வெகுதூரம் விலகிச் செல்கிறோம். அந்தத் தனிமைப் பயணத்தில் நம் இதயம் கனக்கிறது. ஆனால், நாம் முற்றிலும் கைவிடப்பட்டதாக உணரும் அந்த இருண்ட நேரத்தில்தான் ஒரு ‘தெரியாத வழித்துணை’ நம்மைத் தேடி வருகிறார். நாம் அவரை அடையாளம் காணத் தவறினாலும், அவர் நம் அடியோடு அடியெடுத்து வைக்கிறார். நம்முடைய தயக்கம், தடுமாற்றம் மற்றும் கவலைகளுக்கு நடுவே அவர் அமைதியாகத் துணையாக நடக்கிறார் என்பதுதான் உயிர்ப்பின் உண்மையான செய்தி.
இன்று
பாஸ்கா காலத்தின் மூன்றாம் ஞாயிறைச் சிறப்பிக்கின்றோம். இன்றைய இறைவார்த்தைகள், தோல்வியின் விளிம்பில் நின்று தவிக்கும் ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு மாபெரும் நம்பிக்கைப் பிரகடனமாக அமைகின்றன. இவ்வுலகிற்குத்
தந்தையாம் இறைவனால் வழங்கப்பட்ட உன்னதக் கொடை இயேசு. ஆனால், அவரது உண்மையான வல்லமையையும், இறையாட்சியின் ஆழத்தையும் சீடர்கள் முழுமையாகப் புரிந்துகொள்ளவில்லை. ஒரு புதிய அரசியல் மாற்றத்தையோ அல்லது உலகியல் ரீதியான அரசையோ இயேசு நிறுவுவார் என்று அவர்கள் ஆவலோடு காத்திருந்தனர். அந்த உச்சக்கட்ட எதிர்பார்ப்பின் நடுவே, இயேசு பரிதாபமாய் சிலுவையில் அறையப்பட்டு இறந்தபோது, அவர்களின் கனவுகள் சுக்குநூறாக உடைந்தன.
இந்த
ஏமாற்றம் அவர்களை நிலைகுலையச் செய்தது. அவர்கள் ஒருவரை ஒருவர் விட்டுச் சிதறுண்டு போனார்கள். இயேசு அறிவித்த அந்த ‘புதிய சமுதாயம்’
என்ற ஆர்வம் கருகிப்போனது. ஒருபுறம், யூதருக்கு அஞ்சித் தாங்கள் இருந்த இடத்தின் கதவுகளைச் சிலர் இறுக மூடிக்கொண்டார்கள் (யோவா 20:19); மறுபுறம், இயேசுவில் கொண்டிருந்த நம்பிக்கையை அறவே இழந்து, தங்களின் பழைய வாழ்விடங்களை நோக்கிச் சிலர் நடக்கத் தொடங்கினார்கள் (லூக் 24:13). ஒருவருக்கொருவர் சந்தேகக் கண்களோடு பார்த்தபடி, நம்பிக்கையற்று காலத்தைக் கடத்தினர். சிலரோ சீடர்கள் குழுமத்தோடு இல்லாதிருந்தார்கள் (யோவா 20:24).
இயேசு
தமது இறப்பு மற்றும் உயிர்ப்பைப் பற்றி ஏற்கெனவே முன்னறிவித்திருந்தும், ‘அவரை நேரில் காணவில்லை’
(லூக் 24:24) என்ற அந்த ஒரே காரணத்திற்காக, உயிர்ப்பின் பேருண்மையை நம்ப அவர்கள் மறுத்தார்கள். ஆனால், இந்த இருண்ட சூழலிலும் மகளிர் மட்டும் நம்பிக்கையை இழக்கவில்லை; துணிவோடு கல்லறைக்குச் சென்றார்கள். அந்தத் துணிச்சலின் பரிசாகவே உயிர்ப்பின் நற்செய்தி அவர்களுக்கு முதலில் வழங்கப்பட்டது. “கலிலேயாவுக்குச் செல்லுங்கள், அங்கு மீண்டும் இயேசுவைக் காண்பீர்கள்” என்ற
அந்தப் பேரானந்தச் செய்தி, மகளிர் வழியாகச் சீடருக்கு ஒரு புதிய அழைப்பாக விடுக்கப்பட்டது. ஆனால், உயிர்ப்பின் நற்செய்தியை அந்த மகளிர் வழியாகக் கேட்டும், அதைப் பொருள்படுத்தாமல் ஆறாத்
துயரத்தில் மூழ்கிக் கிடந்த அந்த இரு சீடர்கள் (ஒருவரது பெயர் கிளயோப்பா, மற்றொரு சீடரின் பெயர் குறிப்பிடப்படவில்லை) கலிலேயாவுக்குச் செல்லாமல் எம்மாவு நோக்கிப் பயணப்பட்டனர். “நாங்கள் இவரை எவ்வளவோ நம்பினோம்! இவரிடமிருந்து எவ்வளவோ எதிர்பார்த்தோம்! ஆனால், நமக்கு மீட்பளிக்க வந்த மெசியாவிற்குச் சமாதி கட்டிவிட்டனரே!” என்ற அவர்களின் உள்ளக் குமுறல்கள், வழியெங்கும் புலம்பல்களாகவும், கோபமான வார்த்தைகளாகவும் வெடித்திருக்கும்.
இந்தச்
சீடர்களின் குமுறல்கள் இன்றும் பல தலைமுறைகளாய் நம்
மத்தியில் ஒலித்துக்கொண்டுதான் இருக்கின்றன. நாம் எதிர்பார்த்த நன்மைகள் கிடைக்காதபோது, எதிர்பாராத ஏமாற்றங்கள் வந்து சேரும்போது, நாமும் நமது நம்பிக்கையை (எருசலேமை) விட்டுவிட்டு, நமது பழைய பலவீனங்களை (எம்மாவு) நோக்கிப் பின்வாங்குகிறோம். ஆனால், அங்கேதான் ஒரு வல்ல செயல் நிகழ்கிறது. நம்மைப் போலவே விரக்தியில் நடப்பவர்களுடன் ஒரு ‘தெரியாத வழித்துணையாக’ உயிர்த்த
ஆண்டவர் உடன் பயணிக்கிறார். அவர்களின் புலம்பல்களைப் பொறுமையுடன் கேட்கிறார்.
சீடர்கள்
பயந்துபோய் பின்வாங்கிய அந்தப் பாதையில், ஆண்டவர் அவர்களோடு இணைந்து நடந்து, அவர்களின் பயத்தைத் துணிச்சலாக மாற்றத் தொடங்கினார். ஆனால், அவர்களின் கண்கள் அவரை அடையாளம் காண முடியாதபடி ‘மறைக்கப்பட்டிருந்தன’ (லூக்
24:16). சீடர்கள் தங்களின் ஏமாற்றங்களை விவரிக்கும்போது, இயேசு அவர்களுக்கு மறைநூலை விளக்கிச் சொல்லத் தொடங்குகிறார். அவரின் வார்த்தைகளைக் கேட்கக் கேட்க, சீடர்களின் உள்ளத்தில் ஒரு மாற்றம் நிகழ்கிறது. அவர்கள் அதுவரை ஒரு ‘தோல்வியடைந்த மெசியாவை’
பற்றித் துக்கப்பட்டுக் கொண்டிருந்தார்கள். ஆனால், இயேசுவோ ‘வெற்றிபெற்ற மீட்பரை’ பற்றிப் பேசுகிறார். இருண்ட பாதையில் அவர்களுக்கு அந்த வார்த்தைகள் ஒரு பேரொளியைத் தந்தன. வார்த்தை வழியாகத்தான் அந்த ‘தெரியாத வழித்துணை’
மெல்ல மெல்ல ‘தெரிந்த கடவுளாக’ மாறத் தொடங்குகிறார்.
பயணம்
எம்மாவு கிராமத்தை நெருங்கியபோது, இயேசு அதற்கு அப்பால் போகிறவர்போலக் காட்டிக் கொண்டார். ஆனால், சீடர்களோ “எங்களோடு தங்கும்; ஏனெனில், மாலை நேரம் ஆயிற்று; பொழுதும் போயிற்று”
(லூக் 24:29) என்று அன்புடனும் உரிமையுடனும் அவரைத் தடுத்து நிறுத்தினர். அவர்கள் காட்டிய அந்த விருந்தோம்பலே, அவர்களுக்கு ஒரு மாபெரும் இயேசு அனுபவத்தைப் பெற்றுத்தந்தது. அவர்களோடு உணவருந்த அமர்ந்தபோது அந்த ‘தெரியாத வழித்துணை’
குடும்பத் தலைவரைப் போல அப்பத்தை எடுத்து, கடவுளைப் போற்றி, அதைப் பிட்டு அவர்களுக்குக் கொடுத்தார். அந்த ஒரு நொடியில் அவர்கள் ‘கண்கள் திறந்தன!’ (லூக் 24:31). வாரத்தின் முதல் நாளன்று, மேல்மாடியில் இயேசு செய்த அதே செயல்... அதே பிட்கப்படும் அப்பம்... அதே அன்பு! அவர் ‘அப்பம் பிட்கையில்’ அவர்களுக்கு
அடையாளமானார்.
இயேசு
அப்பத்தைப் பிட்டுக் கொடுத்த அந்த ஒரு நொடியில் சீடர்களின் கண்கள் திறந்தன. அதே கணத்தில் அவர் மறைந்து போனார். ஏன்? இப்போது அவர் அவர்களுக்கு வெளியே ஒரு மனிதராக இருக்க வேண்டிய அவசியமில்லை. அவர் பிட்கப்பட்ட அப்பமாக அவர்களுக்குள்ளே கலந்துவிட்டார்! இதுவே நற்கருணைத் திருவிருந்தின் உச்சக்கட்டத் தருணம். நாம் ஒவ்வொருமுறை திருப்பலியில் பங்கேற்று அப்பம் பிட்கப்படுவதைக் காணும்போதும், அந்த ‘தெரிந்த கடவுளை’ நம் ஆன்மாவிற்குள் சந்திக்கிறோம். நம் கவலைகளால் மூடப்பட்டிருந்த கண்கள் நற்கருணையின் ஒளியால் திறக்கப்படும்போது, நம் சோர்வும் பயமும் மறைந்து போகிறது. 11 கி.மீ. தூரத்தை
‘நடைப் பிணங்களாக’
கடந்து வந்த சீடர்கள், இப்போது ‘உயிர்ப்பின் சாட்சிகளாக’ அதே
தூரத்தை ஓடிக் கடந்து எருசலேமுக்குத் திரும்புகிறார்கள். “ஆண்டவர் உண்மையாகவே உயிருடன் எழுப்பப்பட்டார்!” (லூக் 24:34) என்று அவர்கள் முழங்கிய அந்தத் தருணமே, அவர்களின் சாட்சிய வாழ்வின் தொடக்கமாகும்.
ஓர்
உண்மையான ‘கிறிஸ்து அனுபவம்’ ஒருபோதும் நம்மை முடக்கி வைக்காது. அது நம்மைப் பிறரை நோக்கியும், புதிய நம்பிக்கையை நோக்கியும் ஓடச்செய்யும். இந்த மாற்றத்தை இன்றைய முதல் மற்றும் இரண்டாம் வாசகங்களில் நாம் மிகத் தெளிவாகக் காண்கிறோம். ஆண்டவரை மூன்று முறை மறுதலித்த பேதுரு, இப்போது தூய ஆவியின் வல்லமையால் நிரப்பப்பட்டு, தன் உடன் திருத்தூதர் பதினொருவருடன் எழுந்து நின்று அஞ்சாமல் சான்றுபகர்கிறார். தொடர்ந்து இன்றைய இரண்டாம் வாசகத்தில், ‘நாம் மீட்கப்பட்டது அழியக்கூடிய பொன் அல்லது வெள்ளியால் அல்ல; மாறாக, மாசற்ற ஆட்டுக்குட்டியாம் கிறிஸ்துவின் விலை மதிப்பற்ற இரத்தத்தால்’ என்ற
உன்னத உண்மையை அவர் எடுத்துரைக்கிறார். இந்த இறைத் திட்டத்தை முழுமையாகப் புரிந்துகொண்ட அந்த நொடியே, சீடர்கள் முடங்கிப்போய் ‘ஒன்றும் செய்யாமல்’
இருந்துவிடவில்லை;
மாறாக, உலகிற்குச் சாட்சியம் சொல்லத் துணிச்சலோடு தங்கள் எருசலேம் நோக்கிப் புறப்பட்டனர்.
நிறைவாக,
இந்த எம்மாவு பயணம் நமக்குத் தரும் பாடம் என்ன? முதலில், நாம் கவலையில் மூழ்கி, கடவுள் நம்மை விட்டு விலகிவிட்டார் என்று நினைக்கும்போதுதான், அவர் ஒரு ‘தெரியாத வழித் துணையாக’ நமக்கருகில் நடக்கிறார். நம்முடைய இருண்ட நேரங்களில் நாம் ஒருபோதும் தனிமையில் இல்லை என்பதை உணர்வோம். இரண்டாவதாக, அப்பம் பிட்கையில் சீடர்களின் கண்கள் திறந்ததுபோல, நாமும் ஒவ்வொரு திருப்பலியிலும் இறைவார்த்தைக்கும் நற்கருணைக்கும் முக்கியத்துவம் அளிக்கும்போது, உயிர்த்த ஆண்டவரைத் தனிப்பட்ட முறையில் சந்திக்க முடியும்.
இறுதியாக,
நாம் தோல்வி அடையும்போது, நம்பிக்கையை விட்டு ஓடுவது இயல்பு. ஆனால், இயேசுவைத் தொட்டுணர்ந்த பிறகு, நாம் மீண்டும் நம் கடமைகளுக்கும் சமுதாயத்திற்கும் சாட்சிகளாகத் திரும்பவேண்டும். நம் வாழ்வின் பயணங்களில் அந்தத் தெரியாத வழித்துணை எப்போதும் நம்மோடு இருக்கிறார். அவரை ‘தெரிந்த கடவுளாக’ அடையாளம் காண நம் இதயக் கதவுகளைத் திறப்போம்.