ஒரு சனநாயக நாட்டின் ஆன்மா என்பது அதன் தேர்தல் முறையில்தான் குடிகொண்டுள்ளது. அந்தத் தேர்தல் முறையைத் தூய்மையாகவும் நடுநிலையாகவும் நிர்வகிக்க வேண்டிய தலையாய பொறுப்பு இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. வரலாற்றில் ஒரு காலத்தில், நீதித்துறையை விடவும் மக்கள் அதிக நம்பிக்கை வைத்திருந்த ஒரு நிறுவன அமைப்பு, இன்று தனது தார்மிகக் கண்ணியத்தை இழந்து, ஆளுங்கட்சியின் ஒரு துணைப் பிரிவாக மாறி வருகிறதோ என்ற அச்சம் நாட்டு மக்கள் உள்ளத்தில் மேலோங்கியுள்ளது.
இத்தகைய
சூழலில், தேர்தல் ஆணையத்தால் தொடர்ந்து சுதந்திரமாக இயங்க முடியுமா? என்பது மட்டுமல்ல; மாறாக, மக்களிடையே அது நம்பிக்கையைத் தொடர்ந்து பெறமுடியுமா? என்பதுதான் நம்மிடம் எழும் அடிப்படைக் கேள்விகள். காரணம், அந்த நம்பிக்கை சிதைந்துவிட்டால், இனி ஆணையம் நடத்தும் அனைத்துத் தேர்தல்களும் வெறும் இயந்திரத்தனமான சடங்குகளாகவே மாறிவிடும்.
அண்மைக்காலமாகத்
தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் நாடெங்கும் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளன. கேரளத்தில் பா.ச.க.
கட்சியின் முத்திரையுடன் கூடிய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வக் கடிதம் வெளியான விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை வெறும் ‘கவனக்குறைவால் நேர்ந்த பிழை’ என்று கூறி ஆணையம் கடந்து செல்ல முயல்கிறது. ஆயினும், ஓர் அதிகாரியைப் பணிநீக்கம் செய்வதன் மூலம் இந்த விவகாரம் முடிந்துவிட்டதாகவும் நாம் கருத முடியாது.
ஒரு
நாட்டின் சனநாயக நிறுவனங்கள் ஒரே நாளில் சரிந்துவிடுவதில்லை; மாறாக, சிறிய தவறுகள், சந்தேகத்திற்குரிய சில முடிவுகள், தற்காப்புத் தொனியிலான விளக்கங்கள் என இவை யாவும்
ஒவ்வொன்றாகச் சேரும்போதுதான் ஒரு மாபெரும் நிறுவனத்தின் வீழ்ச்சி தொடங்குகிறது. கேரள விவகாரம் என்பது ஒரு தனித்த தவறல்ல; மாறாக, தேர்தலின் நேர்மையைப் பாதுகாக்கும் ஓர் அமைப்பின்மீது மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையைத் தொடர்ந்து கேலிக்குள்ளாக்கும் செயலே!
அவ்வாறே,
கடந்த 2024 மக்களவைத் தேர்தலின்போதும், தேர்தல் ஆணையம் கையாண்ட விதம் பல்வேறு முரண்பாடுகளைக் கொண்டிருந்தது. முதல்கட்டத் தேர்தல் முடிந்து இறுதி வாக்குப்பதிவு விழுக்காட்டை அறிவிக்க ஆணையம் 11 நாள்கள் எடுத்துக்கொண்டது. நவீன எண்ணிமத் (டிஜிட்டல்) தொழில்நுட்பம் வளர்ந்துள்ள இக்காலத்தில், சண்டிகர் போன்ற சிறிய தொகுதிகளில் கூட இறுதித் தரவுகளை வெளியிட ஐந்து நாள்கள் ஆனது ஏன் என்பது புரியாத புதிர்.
மேலும்,
‘வோட் ஃபார் டெமாக்ரசி’
(VfD) போன்ற
அமைப்புகள் நடத்திய ஆய்வில், தற்காலிக வாக்குப்பதிவு விழுக்காட்டிற்கும் (Provisional Data),
சில நாள்கள் கழித்து வெளியிடப்பட்ட இறுதி விழுக்காட்டிற்கும் இடையே சுமார் 5 கோடி வாக்குகள் (4,65, 46,885) வித்தியாசம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த வித்தியாசம் அதிகமாக இருந்த மாநிலங்களில் ஆளுங்கட்சியான பா.ச.க.
அல்லது தேசிய சனநாயகக் கூட்டணி வியக்கத்தக்க வகையில் குறிப்பாக, ஆந்திரா மற்றும் ஒடிசாவில் அதிக இடங்களை வென்றுள்ளது.
அவ்வாறே,
சனநாயகச் சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ADR) 2024 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு வெளியிட்ட அறிக்கையில், மொத்தம் உள்ள 543 தொகுதிகளில், 538 தொகுதிகளில் பதிவான வாக்குகளுக்கும், எண்ணப்பட்ட வாக்குகளுக்கும் இடையே வேறுபாடுகள் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது. சுமார் 5.89 இலட்சம் வாக்குகளில் இத்தகைய முரண்பாடுகள் இருப்பது தேர்தலின் வெளிப்படைத்தன்மையை, அதன் உண்மைத் தன்மையை, ஏன் அதன் கண்ணியத்தையே கேள்விக்குள்ளாக்குகிறது.
தேர்தல்
ஆணையத்தின் தலைமைப் பொறுப்புக்கான நபரை நியமிக்கும் முறையில் கொண்டுவரப்பட்ட மாற்றம் (தலைமை நீதிபதிக்குப் பதிலாக ஓர் அமைச்சரைச் சேர்த்தது) இந்த அமைப்பை ஒன்றிய பா.ச.க.
அரசு, ஓர் ‘அரசுத் துறை’
(Government
Department) போல
மாற்றியுள்ளது. கடந்த தேர்தல் பிரச்சாரத்தின்போது பிரதமர் உள்ளிட்ட ஆளுங்கட்சித் தலைவர்கள்மீது 110-க்கும் மேற்பட்ட வெறுப்புப் பேச்சுகள் மற்றும் தேர்தல் நடத்தை விதிமீறல் புகார்கள் எழுந்தபோதிலும், அவர்கள்மீது ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தற்போது
நாடெங்கும் நடைபெற்று வரும் சிறப்புத் தீவிரத் திருத்தப்பணி (Special Intensive
Revision - SIR), பல
இலட்சம் வாக்காளர்களைக் குறிப்பாக, சிறுபான்மையினர் மற்றும் தலித் சமூகத்தினரைப் பட்டியலிலிருந்து நீக்கும் அபாயத்தை உருவாக்கியுள்ளது. ‘சட்ட விரோதக் குடியேறிகளை’ நீக்குவதாகக்
கூறப்படும் இந்த நடவடிக்கை, ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை இலக்கு வைப்பதாகக் குற்றம்சாட்டப்படுகிறது.
இத்தகைய
கோணத்தில்தான் தலைமைத் தேர்தல் ஆணையரைப் பதவியிலிருந்து நீக்கும் கோரிக்கையை நாம் உற்று நோக்கவேண்டும். இது வெறும் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை அல்ல; மாறாக, தன்னாட்சி அதிகாரம் கொண்ட ஓர் அரசமைப்பு தனது நேர்மையை இழந்துவிட்டது என்பதற்கான உறுதியான எதிர்வினையாகும். சாதாரண நிர்வாகச் சீர்திருத்தங்கள் இனி போதுமானதாக அமையாது என்ற நிலையையே இது சுட்டிக்காட்டுகிறது.
தேர்தல்
ஆணையம் தனது அதிகாரத்தை அச்சத்தின் மூலமோ அல்லது சட்டத்தின் மூலமோ பெறுவதில்லை; அது நடுநிலையானது என்ற மக்கள் நம்பிக்கையிலிருந்தே அந்த அதிகாரம் பிறக்கிறது. அந்த நம்பிக்கை பலவீனமடையும்போது, அதன் ஒவ்வொரு நடவடிக்கையும் சந்தேகத்தையே எழுப்புகிறது. ‘ஒருமுறை இழந்த நம்பிக்கையை மீண்டும் பெறுவது எளிதல்ல’ எனும் கூற்று, இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கும் பொருந்தும்.
அவ்வாறே,
சில ஊடகங்கள் இச்செய்தியை ஆராயத் தயக்கம் காட்டுவதும், நிறுவனத்தைச் சீர்குலைக்கவேண்டாம் என்று கருத்துத் தெரிவிப்பதும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கதே. தேர்தல் ஆணையத்தைப் பாதுகாப்பது ஊடகங்களின் வேலையல்ல; அதன் செயல்பாடுகளைச் சுதந்திரமாக ஆய்வு செய்து மக்களுக்கு உண்மையை உரக்கக் கூறுவதே முறையான அறம் செறிந்த செயலாகும்.
இறுதியாக,
தேர்தல் என்பது வெறும் இயந்திரத்தனமான வாக்குப்பதிவு அல்ல; மாறாக, அது குடிமக்கள் தங்கள் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் ஒரு சிறப்பான வாய்ப்பு. தேர்தல் ஆணையத்தின் ஒளிவுமறைவற்ற போக்கும், ஆளுங்கட்சிக்குச் சாதகமாக விதிகளை வளைக்கும் தன்மையும் அரசமைப்புச் சட்ட சனநாயகத்தின் வேரிலேயே கைவைப்பதாக உள்ளது.
இன்று
இந்தக் கேள்விகளை நாம் எழுப்பத் தவறினால், எதிர்வரும் காலங்களில் தேர்தல் என்பது ஒரு சடங்காகவே மாறிவிடும். ஐந்து கோடி வாக்கு முரண்பாடு என்பது அடுத்த தேர்தலில் பத்து கோடியாகவும் உயரக்கூடும். இந்தியாவை ஒரு ‘பெயரளவு சனநாயகம்’
என்ற நிலைக்குத் தள்ளும் அபாயம் நம் கண்முன்னே தெரிகிறது.
ஆகவே,
தேர்தல் ஆணையம் தன்னைத் தானே சுயபரிசோதனை செய்து கொண்டு, வெளிப்படைத்தன்மையுடனும் பொறுப்புடனும் செயல்படவேண்டியது காலத்தின் கட்டாயம். இல்லையெனில், சனநாயகத்தின் காsவலர்களாக அல்ல; மாறாக, அதற்குப் புதைகுழி தோண்டி கல்லறை கட்டியவர்களாகவே வரலாறு தன் பக்கங்களில் இவர்களைப் பதிவு செய்யும்!
அன்புத்
தோழமையில்,
அருள்முனைவர்
செ. இராஜா @ இராஜசேகரன்
முதன்மை
ஆசிரியர்