தமிழில் வெளிவந்திருக்கும் கிறித்தவ இலக்கியங்களுள் தேவ அருள் வேதபுராணம் முதல் இயேசு காவியம் வரை பத்தொன்பது காப்பியங்கள் தோன்றியுள்ளன. தேவ அருள் வேதபுராணம் கி.பி.1725-ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்து யாகோம் கொன்சால் வசு அடிகளார் எழுதியதாகும். விவிலிய நூலை அடிப்படையாகக் கொண்டு இயேசுவின் வாழ்வியலையும், அவர்தம் வாழ்வையும் இவை எடுத்துரைக்கின்றன.
தேம்பாவணி:
வளன் என்பவர் இயேசுவின் வளர்ப்புத் தந்தை. அவரது வாழ்வை அழகுற வழங்கும் காப்பியமே தேம்பாவணி. வீரமாமுனிவர் இயற்றிய இக்காப்பியம் 36 படலங்களையும், 3615 பாக்களையும் உடையது. தமிழில் அச்சேறிய முதல் கிறித்தவக் காப்பியம் என்னும் பெருமைக்குச் சொந்தமானது தேம்பாவணி.
திருச்செல்வர்காவியம்:
தெல்லிச்சேரி பூலோக சிங்க அருளப்ப நாவலர் கி.பி.1741-ஆம்
ஆண்டு எழுதி வெளியிட்ட காவியம் இது. இருபத்து மூன்று படலங்களும், ஆயிரத்துத் தொள்ளாயிரத்து நாற்பத்தாறு விருத்தங்களும் கொண்டதாக அமைந்துள்ளது. இது இலங்கையில் கி.பி.1896-ஆம்
ஆண்டு அச்சிடப்பட்டுள்ளது.
யோசேப்புப் புராணம்:
கூழங்கைத் தம்பிரான் கி.பி. 1765-ஆம்
ஆண்டு உருவாக்கிய யோசேப்புப் புராணம் 1203 விருத்தங்களுடன் விளங்குகிறது.
கிறிசுதாயணம்:
திருவனந்தபுரம் ஜான் பால்மர் (கி.பி. 1812-1883) இயேசுவின்
வரலாற்றையே கிறிசுதாயணம் என்று எழுதி கி.பி. 1865-இல்
வெளியிட்டார். பாலகாண்டம், கிரியாகாண்டம், அவசுதாகாண்டம், ஆரோகணகாண்டம் என நான்கு காண்டங்களும்,
842 விருத்தங்களும் இக்காப்பியத்தில் உள்ளன.
திருவாக்குப்
புராணம்:
யாழ்ப்பாணத்துக் கனகசபைப் புலவர் பாடிய திருவாக்குப் புராணம் கி.பி.1866-ஆம்
ஆண்டு வெளிவந்தது. பதிகத்தில் 111 விருத்தங்களும், முதற்பகுதியில் பழைய ஏற்பாட்டுச் செய்தியை உள்ளடக்கிய இரு காண்டங்களும், இரண்டாம் பகுதியில் புதிய ஏற்பாட்டுச் செய்தியை உள்ளடக்கிய எட்டு காண்டங்களும் இடம்பெற்றுள்ளன.
ஆதிநந்தவனப் பிரளயம்:
வேதக்கண் என்பவர் கி.பி. 1868-ஆம்
ஆண்டு வழங்கிய ஆதிநந்தவனப் பிரளயம் ஆறு காண்டங்களுடன் அமைந்துள்ளது. மில்டனின் ‘வீடு பேறு இழப்பு”
(Paradise Lost) என்னும்
ஆங்கிலப் படைப்பின் தமிழாக்கமே இந்நூலாகும். வேதக்கண் தொடர்ந்து வழங்கிய மற்றொரு காப்பியம் ஆதிநந்தவனப் பிரளய மீட்சியாகும்.
பூங்காவனப் பிரளயம்:
மில்டன் ஆங்கிலத்தில் எழுதிய ‘வீடுபேறு இழப்பு’ எனும் நூலின் முதலிரு காண்டங்களையே கி.பி.1872-ஆம்
ஆண்டு சாமுவேல் வேதநாயகம் தாமசு ‘பூங்காவனப் பிரளயம்’ என வெண்செந்துறை யாப்பில்
பாடியுள்ளார். பாதாள காண்டம், யாத்திரை காண்டம் என வரும் இரு
காண்டங்களும், 2626 அடிகளும் கொண்டு இந்நூல் அமைந்துள்ளது.
ஞானானந்த புராணம்:
ஈழத்து தொம்மைப்பிலிப்பு கி.பி. 1874-ஆம்
ஆண்டு திருவிவிலியத் திருநூலின் விளக்கமாக ‘ஞானானந்த புராணம்’ என்னும் காப்பியத்தை விருத்தப்பா யாப்பில் வழங்கியுள்ளார். உற்பத்தி, உபத்திரவம், உத்தானம் ஆகிய மூன்று காண்டங்களும், இருபத்து நான்கு சருகங்களும் உடையதாக இக்காப்பியம் விளங்குகிறது.
ஞானாதிக்கராயர்
காப்பியம்:
சாமிநாதர் கி.பி. 1876-இல்
எழுதிய ‘ஞானாதிக்கராயர் காப்பியம்’
ஞானாதிக்கன் கிறிஸ்துவின் வரலாற்றை 2222 பாடல்கள் கொண்ட 30 படலங்களில் கூறுகிறது.
இரட்சணிய யாத்திரிகம்:
எச்.ஏ. கிருட்டிணப் பிள்ளை
என்பவர் பதினான்கு ஆண்டுகள் (கி.பி. 1878-1892) ‘நற்போதகம்’ இதழில் தொடர்ந்து எழுதி வந்த ‘இரட்சணிய யாத்திரிகம்’ இதழ்
ஆசிரியராலேயே பதிக்கப்பட்ட சிறப்பு வாய்ந்த முற்றுருவகக் காப்பியமாகும். 47 படலங்களும், 3776 பாக்களும் கொண்ட இந்நூல் திருப்பயணியான கிறிஸ்துவைக் காப்பியத் தலைவனாகப் பெற்றுள்ளது.
கிறிஸ்து மான்மியம்:
சுதோச ஐயர் கி.பி. 1891-இல்
தரங்கம்பாடி லூத்தரன் திருச்சங்க அச்சகத்தில் பதிப்பித்த கிறிஸ்து மான்மியம் முப்பத்தொன்பது சருக்கங்களுடன் திகழ்கிறது. இது கிறிஸ்து பெருமானின் மாட்சியைப் புகழ்கிறது.
சுவர்க்க நீக்கம்:
வெள்ளக்கால் ப. சுப்பிரமணிய முதலியார்
‘மில்டனின் வீடுபேறு இழப்பு’ என்னும் ஆங்கில நூலை மொழிபெயர்த்து, இரு காண்டங்கள் கொண்ட செய்யுள் நூலாகச் ‘சுவர்க்க நீக்கம்” என்னும் பெயரில் கி.பி.1895-ஆம்
ஆண்டு வெளியிட்டார். விருத்தப் பாக்களாலாகிய இந்நூலுக்கு அவரே அருமையான விளக்கவுரையும் தந்துள்ளார்.
சுவிசேட புராணம்:
மதுரையில் அரசுப்பணி புரிந்து வந்த சுகாத்தியர் (Scott) புதிய
ஏற்பாட்டு நிகழ்ச்சிகளை 3360 விருத்தப்பாக்களாக எழுதியுள்ளார். இக்காப்பியம் கி.பி.1896-இல்
வெளிவந்தது. மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான், அப்போஸ்தலர் காண்டங்கள் என ஐந்து பெரும்
பிரிவுகள் கொண்ட இந்நூல், பன்னிரு பகுதிகளையும், பகுதிக்கு ஏழு பாடல்களும், படலத்திற்கு எட்டுப்பாக்களும் கொண்டுள்ளது.
திரு அவதாரம்:
மாணிக்கம் ஆசிர்வாதம் ‘நற்போதகம்’
இதழில் ஒன்பது (1936-1944) ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதிவந்த சிறப்பான காவியம் ‘திரு அவதாரம்’.
இது பாலகாண்டம், உத்தியோக காண்டம், செய காண்டம், ஆதிராகண காண்டம் என்னும் நான்கு பகுதிகளும், 2367 பாக்களும் கொண்டுள்ளது.
சுடர்மணி: இயேசுபெருமான் வழங்கிய நற்செய்தியினையும், அவர் நிறுவிய இறையரசினையும் பற்றி இனிய எளிய தமிழ்நடையில் ‘சர்வ வியாபி’ வார இதழ் வாயிலாக ஆரோக்கியசாமி என்பவர் வழங்கிய காப்பியம் ‘சுடர்மணி’
ஆகும். இது 1976-இல் வெளிவந்தது. இப்படைப்பு நான்கு காண்டங்களும், 47 படலங்களும், 1201 பாடல்களும் கொண்டுள்ளது. ‘சேசு கிறித்து நாதரின் சீவிய சரித்திரம்’ என்னும்
உரைநடை நூலை அடியொற்றி விருத்தப்பாவால் இந்நூல் உருவாகியுள்ளது.
கிறிஸ்து வெண்பா:
புலவர் மரியந்தோணி என்பவர் நற்செய்தியின் அருள்மொழிகளைப் பன்னிரு பகுதிகளும், 1006 வெண்பாக்களும் கொண்டது. அரிய பல உண்மைகளை அனைவரும்
தெரிந்து கொள்ளும் வகையில் வெண்பா யாப்பில் 1978-ஆம் ஆண்டு வெளிவந்த இக்காப்பியம் இயேசுவின் புகழ் பாடுகிறது. தோமையார், சவேரியார் ஆகிய அருளாளர்கள் வாழ்வியலும் இக்காப்பியத்தின் இறுதிப் பகுதியில் இணைக்கப்பட்டுள்ளது.
இயேசு காவியம்:
கவிஞர் கண்ணதாசன் பதினைந்து நாள்களில் ஒன்பதாயிரம் அடிகள் கொண்ட இயேசு காவியத்தை 1981-ஆம் ஆண்டு உருவாக்கியுள்ளார். மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் ஆகிய நால்வர் அருளிய நற்செய்தியின் அடிப்படையில் இயேசு பெருமான் வாழ்வுடன் தொடர்புடைய 148 நிகழ்ச்சிகள் தொகுக்கப்பட்டுள்ளன. இயேசுவின் மலைப் பொழிவை ‘மக்கள் உயிர் காக்கும் அமுதம்’ எனப் போற்றியுள்ளார்.
உவமை
வளமும், சொல் நயமும் விளங்க மக்கள் மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும் வகையில் எளிமையும் தெளிவும் கொண்டதாக இக்காப்பியம் துலங்குகிறது.