news-details
வத்திக்கான் செய்திகள்
“பொதுநலனுக்காக உழைக்கும் தலைவர்களை உருவாக்குங்கள்” - திருத்தந்தை

மத்திய ஆப்பிரிக்கக் கத்தோலிக்கப் பல்கலைக்கழகத்தின் (UCAC) சமூகத்தைச் சந்தித்த திருத்தந்தை லியோ, எதிர்காலத் தலைவர்களை உருவாக்குவதில் கல்வி நிறுவனங்களின் பங்கு குறித்து உரையாற்றினார். அறிவுத் தேடலோடு நின்றுவிடாமல், சமூக நீதி மற்றும் ஒற்றுமைக்காக உழைக்கும் அர்ப்பணிப்புமிக்க நிபுணர்களைப் பல்கலைக்கழகங்கள் உருவாக்கவேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். இன்றைய உலகில் ஆன்மிக மற்றும் தார்மிக விழுமியங்கள் சிதைந்து வருவதைச் சுட்டிக்காட்டிய திருத்தந்தை, பல்கலைக்கழகங்கள் வெறும் அறிவுக்கூடங்களாக மட்டுமில்லாமல், கூட்டுறவு மற்றும் நேர்மையான மனசாட்சியை வளர்க்கும் இடங்களாக மாறவேண்டும் என்று தெரிவித்துள்ளார். “ஒரு நாட்டின் செல்வம் என்பது அதன் இயற்கை வளங்களை வைத்து மட்டும் தீர்மானிக்கப்படுவதில்லை; அது உண்மையை அடிப்படையாகக் கொண்ட நேர்மையான குடிமக்களைப் பொறுத்தே அமைகிறதுஎன்று திருத்தந்தை குறிப்பிட்டுள்ளார். புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) பெருகிவரும் இக்காலத்தில், மனிதநேயத்தை மறக்கக்கூடாது என்று எச்சரித்த திருத்தந்தை, ஆப்பிரிக்க இளையோர் தங்கள் அறிவைத் தங்கள் சொந்த நாட்டின் வளர்ச்சிக்குத் தாராளமாகப் பயன்படுத்தவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.