திருப்பலி முன்னுரை
வழியும்
உண்மையும் வாழ்வுமாக இருக்கின்ற இறைவனோடு இணைந்து வாழ, பாஸ்கா காலத்தின் ஐந்தாம் ஞாயிறு நமக்கு அழைப்பு விடுக்கிறது. கடவுளின் பேரன்பையும் இரக்கத்தையும் சுவைத்து இறையாசியைப் பெற்றுக்கொள்ள ஆவலோடு ஞாயிறு திருப்பலிக்கு வருகை புரிந்திருக்கும் உங்கள் அனைவரையும் வாஞ்சையோடு வரவேற்கிறோம். கவலைகள், துன்பங்கள், போராட்டங்கள், வறுமை, பொருளாதாரப் பின்னடைவுகள், இழப்புகள் இவற்றால் சோர்வடைந்துள்ள நம்மைப் பார்த்து இயேசு, ‘கலங்காதீர்கள், நான் உங்களோடு இருக்கிறேன்’ என்று
கூறுகின்றார். இயேசு பிலிப்பிடம் மட்டுமல்ல, நம்மிடமும் ‘இவ்வுளவு காலம் நான் உங்களோடு இருந்தும் நீங்கள் என்னை அறிந்துகொள்ளவில்லையா?’ என்று கேட்கிறார்.
இமைப்பொழுதும்
நம்மை விட்டு நீங்காது நம்முடன் பயணிக்கும் இயேசுவின் உடனிருப்பை உணர்ந்து அவரில் தஞ்சமாவோம். இந்த உலகம் தரமுடியாத அன்பை, அமைதியை, மகிழ்ச்சியைக் கொடுக்கக்கூடிய இயேசுவில் நம்பிக்கை கொண்டு வாழ்வோம். ஆலயத்தில் மட்டுமல்ல, உடன் வாழும் சகோதர-சகோதரிகளிடமும் இறைவனைக் காண முயற்சி செய்வோம். நம்மைச் சோர்வடையச் செய்யும் செயல்களிலிருந்து விலகி, ஆண்டவர் இயேசுவைப் பயமின்றி அணுகி வருவோம்.
வார்த்தையாலும்
வாழ்க்கையாலும் நமக்கு மதிப்பீடுகளைக் கற்றுக்கொடுத்த நமது ஒரே தலைவன் இயேசுவின் வழியை நமதாக்கி வாழ்வோம். கைவிடாத இறைவனின் கரத்தைப் பற்றிக்கொண்டு மகிழ்ச்சியோடும் அமைதியோடும் வாழ
வரம்வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்.
முதல் வாசக
முன்னுரை
கிறித்தவர்
என்ற முகவரியைப் பெற்ற நாம், இறைவார்த்தையை வாசித்து, அவற்றின்படி வாழ்ந்து, அவற்றைப் போதிப்பது நம்மேல் சுமத்தப்பட்ட கடமையாகும். கடவுளின் வார்த்தை உயிருள்ளது, ஆற்றல் வாய்ந்தது, அற்புதங்களைச் செய்ய வல்லது என்பதை உணர்ந்த சீடர்கள், ஆர்வத்தோடும் தாகத்தோடும் இறைவார்த்தையை அறிவித்தனர். அதுபோல, இறைவார்த்தையின்மீது தாகம் கொண்டவர்களாய் வாழ அழைக்கும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.
இரண்டாம் வாசக
முன்னுரை
திருமுழுக்குப்
பெற்ற நாம் அனைவருமே இயேசுவின் சீடர்கள். நற்செய்தி அறிவிப்பது நமது முதன்மையான பணியாக இருக்கவேண்டும். நமது வாழ்வுக்கு உயிருள்ள மூலைக்கல்லாக இருக்கின்ற இயேசுவின்மீது நம்பிக்கை கொண்டு வாழ்வோம். உயிரைக் கொடுத்து நமக்கு வாழ்வைக் கொடுத்த உத்தமர் இயேசுவின் மேன்மைமிக்க செயல்களை அறிவித்து, நற்செய்தியின் தூதுவர்களாக வாழ அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.
நம்பிக்கையாளர்
மன்றாட்டுகள்
1. ‘நானே நல்லாயன்’ என்று
மொழிந்த ஆண்டவரே! எம் திரு அவைத் தலைவர்கள் அனைவரும் இந்த அறிவியல் உலகில், மெய்ஞானமாகிய உம்மைப் பற்றி ஞானத்தோடு அறிவிக்கவும், அழைத்த உம்மில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டு வாழவும் வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
2. எம்மைப்
பாதுகாக்கும் ஆண்டவரே! உமது பிள்ளைகளாகிய நாங்கள் அனைவரும் எமக்கு வாழ்வு கொடுக்கும் இறைவார்த்தையை அன்றாடம் ஆர்வத்தோடு படித்து, உம்மீது கொண்டுள்ள நம்பிக்கையில் ஒவ்வொரு நாளும் வளரவும், உம்மோடு இணைந்து வாழவும் வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
3. ஞானத்தின்
ஊற்றாகிய இறைவா! மக்களை மதத்தின், இனத்தின் பெயரால் பிரிக்கும் சக்திகளை அழித்து, அமைதியை ஏற்படுத்தும் தலைவர்களை எம் நாட்டிற்கு நீரே தேர்ந்தெடுத்துத் தந்திடவும், தேர்ந்தெடுக்கப்படும் தலைவர்கள் மக்கள் என்ற சொத்தைப் பேணிக்காத்து நாட்டின் ஒற்றுமைக்காக உழைத்திடவும் வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
4. பாதுகாக்கும்
பரம்பொருளே எம் இறைவா! எம் நாட்டின் மிகப்பெரிய சக்தியாக விளங்கிடும் எம் இளையோர் அனைவரும், உலகப்போக்கின்படி வாழாமல் மனசாட்சியின் குரலுக்குச் செவிகொடுத்து வாழவும், நல்ல மதிப்பீடுகளில் வளர்ந்திடவும் வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.