இந்திய நாட்டின் சனநாயகப் பேராயத்தில், பிரதிநிதித்துவம் என்பது வெறும் எண்களின் விளையாட்டு அல்ல; அது பன்முகத்தன்மை கொண்ட ஒரு நாட்டின் அதிகாரப் பகிர்வுக்கான அறச்சீட்டு. ஆனால், தற்கால அரசியல் சூழலில் ‘தொகுதி மறுசீரமைப்பு’ (Delimitation) எனும் பெயரில் ஒன்றிய பா.ச.க. அரசு முன்னெடுக்கும் நகர்வுகள், இந்திய அரசமைப்பின் கூட்டாட்சித் தத்துவத்தின் அடித்தளத்தையே அசைத்துப் பார்க்கும் ஒரு பேராபத்தாக உருவெடுத்துள்ளன.
எதிர்வரும்
தொகுதி மறுசீரமைப்பினால் ஏற்படக்கூடிய அரசியல் மாற்றங்கள், தென் மாநிலங்களின் நியாயமான அச்சங்கள் மற்றும் சாதிவாரிக் கணக்கெடுப்பின் அவசியம் ஆகியவை குறித்து ஒரு விமர்சனப் பார்வையை நாம் யாவரும் கொண்டிருக்கவேண்டியது இன்று காலத்தின் கட்டாயமாகிறது.
தற்போது
நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை 1971 மக்கள்தொகை புள்ளிவிவரப்படி கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால், 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு, நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை மாற்றியமைக்க ஒன்றிய அரசு காட்டும் அதீத ஆர்வம், தென் மாநிலங்களின் அரசியல் இருப்பைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.
தற்போதைய
தரவுகளின்படி, 543 ஆக இருக்கும் மக்களவைத்
தொகுதிகளின் எண்ணிக்கை 816 ஆக உயரும் என்று
கணிக்கப்பட்டுள்ளது. இதில் 33% மகளிர்
இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டால், சுமார் 273 இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்படும். இது சமூகநீதிப் பார்வையில் வரவேற்கத்தக்க மாற்றமாகத் தெரிந்தாலும், இதன் அடிநாதமாக விளங்கும் ‘அதிகாரப் பகிர்வு’ என்பது முற்றிலும் ஒருதலைப் பட்சமாக வட இந்திய மாநிலங்களை
நோக்கிச் சாய்ந்துவிடும்.
மறுசீரமைப்பிற்குப்
பின், பெரும்பான்மைக்குத் தேவையான இடங்கள் 272-லிருந்து 408 ஆக உயரும். இந்த
விஸ்வரூப வளர்ச்சியில், இந்தி பேசும் மாநிலங்களின் ஆதிக்கம் நாடாளுமன்றத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு ஓங்கப்போகிறது.
உதாரணமாக,
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள 80 தொகுதிகள் 120 தொகுதிகளாக உயரும். பீகாரில் இருக்கும் 40 தொகுதிகள் 60 தொகுதிகளாக விரிவடையும். இராஜஸ்தான் மற்றும் மத்தியப்பிரதேச மாநிலங்கள் முறையே 38 மற்றும் 44 தொகுதிகளாகப் பலம்பெறும்.
இத்தகைய
சூழலில், ஒரு தேசியக் கட்சி வட இந்திய மாநிலங்களில்
மட்டும் கணிசமான இடங்களை வென்றாலே, தென்னிந்தியாவின் தயவின்றி ஒன்றியத்தில் ஆட்சியைத் தீர்மானிக்கும் பெரும் அதிகாரத்தைப் (Super-power)
பெற்றுவிடும். இது சனநாயகத்தின் ஆன்மாவான ‘சமமான பிரதிநிதித்துவம்’ என்பதற்குப்
புறம்பானது.
அதாவது,
அதிக மக்கள்தொகையுடைய வட மாநிலங்களில் மட்டும்
வெற்றி பெற்றாலே மக்களவையில் பெரும்பான்மை கிடைக்கும் அபாயம் ஏற்படும். 2011 மக்கள்தொகை அடிப்படையில் மறுவரையறை நடந்தால் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்திய தமிழ்நாடு கடுமையாகப் பாதிக்கப்படும். வட இந்தியாவில் தொகுதிகள்
கணிசமாக உயரும் அதேநேரத்தில், தென் மாநிலங்களில் பெயரளவுக்கே தொகுதிகள் எண்ணிக்கை மாறும். மக்கள்தொகையைக் கட்டுப்படுத்திய மாநிலங்களைத் தண்டிப்பதாக மறுவரையறை அமையும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஏற்கெனவே
தெலுங்கானா, கர்நாடகம் உள்ளிட்ட ஏழு மாநில முதலமைச்சர்கள், தலைவர்களை அழைத்து ஆலோசனை நடத்தியதும் குறிப்பிடத்தக்கதே.
1971 மக்கள்தொகை அடிப்படையிலேயே
தொகுதி மறுவரையறை செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு உள்பட தென் மாநிலங்கள் வலியுறுத்தியதும், தொகுதி மறுசீரமைப்பை மேலும் 25 ஆண்டுகளுக்கு ஒத்தி வைக்கவேண்டும் என முதலமைச்சர் தலைமையிலான
கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதும், 1971 மக்கள்தொகை அடிப்படையிலேயே மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை விரிவுபடுத்தவேண்டும் எனும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதும் நினைவுகூரத்தக்கதே.
கடந்தகால
வரலாற்றின் பின்னணியில், இந்திய விடுதலைப் போராட்டத்திலும் அதற்குப்பின் விடுதலை இந்தியாவின் வளர்ச்சிப் பாதையிலும் தென் மாநிலங்களின் பங்கு ஈடு இணையற்றது. கடந்த ஐந்தாண்டுகளில் குடும்பக் கட்டுப்பாடு, கல்வியறிவு, பெண் கல்வி மற்றும் பொருளாதார மேலாண்மை ஆகியவற்றில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்கள் தேசிய சராசரியைவிட மேலான சாதனைகளைப் புரிந்துள்ளன. மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தியதன் விளைவாக, இந்த மாநிலங்களின் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளது. ஆனால், மறுசீரமைப்பு விதிகளின்படி, எங்கு மக்கள்தொகை அதிகமாக இருக்கிறதோ அங்கு அதிகத் தொகுதிகள் ஒதுக்கப்படும். இது நாட்டின் நலன் கருதி மக்கள்தொகையைக் கட்டுப்படுத்திய தென் மாநிலங்களுக்கு வழங்கப்படும் ஓர் அரசியல் தண்டனை அல்லவா!
தமிழ்நாட்டின்
தொகுதிகள் 39-லிருந்து 58 ஆக உயர்ந்தாலும், ஒட்டுமொத்த
நாடாளுமன்ற விகிதாச்சாரத்தில் அதன் ‘வாக்கு வலிமை’
(Voting Power) குறையப்போகிறது
என்பதே உண்மை. அதாவது, வடக்கே 100 தொகுதிகள் கூடும்போது தெற்கே 20 தொகுதிகள் மட்டுமே கூடுமானால், கொள்கை முடிவுகளை எடுக்கும் அதிகாரத்தில் தெற்கின் குரல் நசுக்கப்படும்.
தொகுதி
மறுசீரமைப்பிற்கு அடிப்படையான மக்கள்தொகை கணக்கெடுப்பு என்பது வெறும் தலைகளை எண்ணும் பணி அல்ல; அது ஒரு சமூகத்தின் சமூக, பொருளாதார நிலையைத் துல்லியமாகப் படம்பிடிக்க வேண்டிய ஆவணம். தற்போது எழுந்துள்ள ‘சாதிவாரிக் கணக்கெடுப்பு’ (Caste Census) கோரிக்கை இச்சூழலில் மிக முக்கியத்துவம் பெறுகிறது.
உண்மையான
சமூக நீதி நிலவ வேண்டுமானால், எந்தெந்தச் சமூகங்கள் அதிகாரத்தில் பின்தங்கியுள்ளன? யாருக்குப் பிரதிநிதித்துவம் மறுக்கப்படுகிறது? என்ற கள எதார்த்தங்கள் வெளிப்படையாகத்
தெளிவுபடுத்தப்படவேண்டும்.
வெறும் மாநிலம் வாரியாக, பகுதி வாரியாகத் தொகுதிகளைப் பிரிப்பது மட்டும் போதாது; அந்தத் தொகுதிகளுக்குள் ஒடுக்கப்பட்ட சமூகங்களின் குரல் ஒலிக்கின்றனவா? என்பதும் உறுதி செய்யப்படவேண்டும். சாதிவாரிக் கணக்கெடுப்பைத் தட்டிக் கழித்துக்கொண்டு, வெறும் எண்களை மட்டும் வைத்துத் தொகுதி மறுசீரமைப்பு செய்வது என்பது, ஆதிக்க சக்திகளின் அதிகாரத்தை மேலும் உறுதிப்படுத்தும் ஒரு கருவியாகவே அமையும்.
இந்திய
அரசமைப்புச் சட்டம் ‘இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம்’
என்கிறது. ஆனால், 816 தொகுதிகளாக நாடாளுமன்றம் விரிவடையும்போது, மாநிலக் கட்சிகளின் முக்கியத்துவம் குறைந்து, தேசியக் கட்சிகள் வட இந்தியாவை மட்டும்
மையப்படுத்தித் தங்கள் அரசியலை வடிவமைக்கும் அபாயம் உள்ளது.
கேரளா
(30 இடங்கள்), தமிழ்நாடு (59 இடங்கள்) எனத் தொகுதிகள் அதிகரித்தாலும், 120 இடங்களைக் கொண்ட உத்தரப்பிரதேசமும், 60 இடங்களைக் கொண்ட பீகாரும் இணைந்து எடுக்கும் முடிவுகளே தேசத்தின் தலையெழுத்தை மாற்றும் சட்டங்களாக மாறும். நிதிப்பகிர்வில் ஏற்கெனவே தென் மாநிலங்கள் வஞ்சிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், அரசியல் அதிகாரத்திலும் இத்தகைய ஏற்றத்தாழ்வு ஏற்படுவது கூட்டாட்சித் தத்துவத்தைச் சவக்குழிக்குள் அனுப்புவதற்குச் சமம்.
தொகுதி
மறுசீரமைப்பு என்பது தொழில்நுட்ப ரீதியான ஒரு நடைமுறை மட்டுமல்ல; அது இந்தியாவின் பன்முகத்தன்மையைக் காக்கும் ஒரு புனிதமான பொறுப்பு. வெறும் மக்கள்தொகையை மட்டுமே அளவுகோலாகக் கொள்ளாமல், மாநிலங்களின் ஜி.டி.பி.
பங்களிப்பு, கல்வியறிவு மற்றும் சமூக மேம்பாட்டுச் சாதனைகளையும் கருத்தில் கொண்டு ஒரு ‘புதிய விகிதாச்சாரத்தை’ உருவாக்க
வேண்டியது காலத்தின் கட்டாயம்.
அதிகாரப்
பரவலாக்கமே ஓர் ஆரோக்கியமான சனநாயகத்திற்கு அழகு. அதிகாரம் என்பது வடக்கே மட்டும் குவியுமானால், அது இந்தியாவின் ஒருமையைச் சிதைக்கும் ‘அரசியல் நிலநடுக்கத்திற்கு’ வழிவகுக்கும்.
தென் மாநிலங்களின் கவலையைப் போக்கி, அனைத்து மாநிலங்களுக்கும் சமமான அதிகாரப் பகிர்வை உறுதி செய்யும் வகையிலே இந்த மறுசீரமைப்பு அமையவேண்டும். இல்லையேல், நாடாளுமன்றத்தின் பலம் 816 ஆக உயர்ந்தாலும், சனநாயகத்தின்
பலம் பூஜ்ஜியமாகவே இருக்கும். “வடக்கு வாழும்; தெற்குத் தேயும்!” என்ற பேரறிஞர் அண்ணாவின் கூற்று உண்மையாகிவிடும்.
அன்புத்
தோழமையில்,
அருள்முனைவர்
செ.
இராஜா
@ இராஜசேகரன்
முதன்மை
ஆசிரியர்