news-details
சிறப்புக்கட்டுரை
விழித்தோமெனில் பிழைப்போம்!

இது என்ன தலைப்பு? யார் விழித்துக் கொள்ளவேண்டும்? ஏன் விழித்துக் கொள்ளவேண்டும்? யாரை எச்சரிக்க இக்கோரிக்கை?

இன்றைக்கு  இந்துத்துவக் கொள்கை மீது அரசியல் செய்துவரும் இந்துத்துவர்கள் முன் வைத்து நடத்தும் தேசியம் (Nationalism) பற்றி நம்மவர் எத்தனை பேர் தெளிவு பெற்றுள்ளனர்? ஆயிரக்கணக்கான இளைஞர்களை இறையியல் பயிற்சியென்றும், இன்னும் பல்வேறு பயிற்சிகள் மூலம் நாடெங்கும் பயிற்றுவிக்கப்பெறும் இளம் மாணவர்கள், இளம் குருமட மாணவர்கள், பொதுநிலையினரை முன்னிறுத்தி நடத்தப்பெறும் பணிக் குழுக்கள்... இவற்றிலெல்லாம் இக்கருத்தியல் பற்றிப் பேசுகின்றோமா?

தமிழ்நாட்டில் தேர்தல்சூடு வேகமெடுத்துள்ளது. தேர்தல் வெற்றிக்கு மிகப்பெரிய பரப்புரைகளை முன்னெடுத்துவரும் கட்சிகள் கடுமையான வெப்பத்தையும் கண்டுகொள்ளாது பணியாற்றி வருவது கண்டு, நம் போன்ற மதச்சிறுபான்மையினருக்கு ஒரு பாடத்தைத் தந்திருக்க வேண்டுமே!

இக்கட்டுரையில் மதச்சிறுபான்மையினரின் நிலைப்பாடு பற்றியே கவலைகொள்ள வேண்டிய அவசியம் நோக்கி எச்சரிக்கும் வகையில் இக்கட்டுரை எழுதப்படுகிறது.

அனல் பறக்க நடத்தப்பெறும் பரப்புரைகளின் வேகம் கிறித்தவர்களின் மீதும் சில தாக்கங்களை உருவாக்கி வரும் என்பதும் உண்மையே. அண்மையில் ஊடகங்களின் செயற்பாட்டு வழி நம்மவர்களும் புதிய செய்திகளை அறிந்திருப்பர்; ஒருவகை நிலைப்பாட்டை எடுத்திருப்பர்.

திரு அவைதேர்தல் நிலைப்பாடுஒன்றை முன்னெடுத்து மக்களுக்குத் தந்தாலும் கிறித்தவருள் பெரும்பான்மையோர் உறுதியாக மோடியை உள்ளடக்கிய பாரதிய சனதா கட்சிக்கு உறுதியாக வாக்களிக்க மாட்டார்கள் என்பது உறுதி. தமிழ்நாட்டில் வாழும் இசுலாமியர் கட்சி ரீதியாக அல்லது அமைப்பு ரீதியாகப் பிளவுபட்டுக் கிடப்பினும் பாரதிய சனதா எனும் மதவாத கட்சியினை எதிர்ப்பது என்பதில் மிகத் தெளிவோடு செயல்படுவர் என்பதே உண்மை. கிறித்தவர்கள் அரசியல் மயப்படுத்தப்படவில்லையெனினும், கிறித்தவர் அனைவரையும் உள்ளடக்கிய வகையில் கட்சிகளோடு அமைப்புகளோ உருவாகவில்லையெனினும், இசுலாமியரைப் போன்று பெரும்பான்மைவாதம் பேசும் பாரதிய சனாதன எதிர்ப்பிற்குக் கிறித்தவருக்கு யாரும் பாடம் நடத்த வேண்டுவதில்லை என்பதே உண்மை.

தமிழ்நாட்டில் பாரதிய சனதா கட்சி வேரூன்றாமைக்கும், ஆட்சியைப் பிடிக்க முடியாமைக்கும், மதச்சார்பற்றக் கட்சிகளின் தேர்தல் வெற்றிக்கும் மதச் சிறுபான்மையினரின் தேர்தல் நிலைப்பாடு ஒரு காரணம் என மதச்சார்பற்ற கட்சிகள் ஏற்றுக்கொண்டிருக்கின்றன. மேனாள்  .தி.மு.. அமைச்சர்கள் இருவர் தம் தோல்விக்கு, .தி.மு.. பாரதிய சனதாவோடு கொண்ட தேர்தல் உடன்பாடே காரணம் என்று வெளிப்படையாக ஒப்புக்கொண்டிருந்தமை இங்கு நினைவுகூரத்தக்கது.

கற்க வேண்டிய பாடம்

மண்டைக்காட்டைக் கலவர பூமியாக்கி நடத்தப்பட்ட கலவரத்தால், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தமிழ்நாட்டுக் கிளையான இந்து முன்னணி முன்னெடுத்த வகுப்புவாத நச்சினால் குமரி மாவட்டம் மதரீதியாகப் பிளவுபடுத்தப்பட்டது. குமரி மாவட்ட மக்கள் எப்போதும் மதரீதியாகத் தம் வாக்குகளைச் செலுத்தாத நிலையில், 80-கள் தொடங்கி குமரி மாவட்டம் மதத்தை அடிப்படையாகக்கொள்ளத் தொடங்கியது. மதரீதியாகப் பிளவுபட்ட குமரிச் சமூகம், பிரிவினைவாத அரசியலுக்கு ஆட்பட்டது.

குமரி மாவட்டக் கிறித்தவம் மதம் மறந்து, தாம் விரும்பிய கட்சிகளின் அடிப்படையில் தம் தேர்வை அல்லது தெரிவை எப்போதெல்லாம் செலுத்தியதோ, அப்போதெல்லாம் மதவாத பாரதிய சனதாவின் வேட்பாளர் வெற்றி பெற்றார். வெற்றி பெற்ற இவர் கடுமையான கிறித்தவ எதிர்ப்பாளர். கிறித்தவர்கள் கட்சி ரீதியாகப் பிளவுபட்டு மதவாதக் கட்சிக்கு வெற்றிக்கனியைத் தந்ததால், ஒன்றிய அரசியல் அமைச்சரும் ஆனார். மதச்சிறுபான்மையினர் சம அளவிற்கும் மேலான எண்ணிக்கையினராக இருந்தும் மதவாத எதிர்ப்பு, மதச்சார்பின்மைக்கு ஆதரவு, வகுப்புவாத எதிர்ப்பு என்ற அளவில் கிறித்தவர்கள் அணிதிரளாமல் அல்லது அணி திரட்டப்படாமல் விட்டதன் விளைவைக் கிறித்தவர்கள் இப்போதும் புரிந்துகொண்டார்களா? என்பது தெரியவில்லை. குமரிமுனையில் நடந்தேறிய அரசியல், தேர்தல் களத்தில் கிறித்தவர்கள் முன்னெடுக்க வேண்டிய யுக்திகளை அறிய வேண்டியுள்ளது.

குமரி மாவட்டத்தில் தேர்தல் காலத்து குமரிக் கிறித்தவர்கள் தம் பேதம் மறந்து கிறித்தவர்களாக ஒன்றுபட்ட போதெல்லாம் வெற்றி கண்டனர். தமிழ் நாட்டுத் தேர்தலில் நாம் கிறித்தவர்களாக ஒன்றுபடுவது மிக அவசியமாகிறது.

குமரிக் கிறித்தவர் சாதிபேதம் மறந்து, மதத்தால் ஒன்றுபட்டமையால் மதச்சார்பற்ற கட்சிகள் வெற்றி பெற்றன. இதுபோன்று தமிழ்நாட்டுக் கிறித்தவர் ஒன்றுபடுவரா? கிறித்தவத்துள் புரையோடிப் போன சாதிப்பிரிவு இதனை ஏற்குமா? சாதியைக் கடந்தும், நாம் ஏற்றிருக்கும் கிறித்தவ அடையாளத்தை ஆதாயமாக்கி வெற்றியைக் கவர நினைக்கும் நபர்களை எப்படிப் புறந்தள்ளப் போகிறோம்?

தமிழ்நாடு முழுவதும் எட்டும் அளவிலான இளைஞர் படையோடு வலம் வரும் ஒரு நடிகர், தி.மு.. எனும் கட்சியைப் பெரிய தீய சக்தியாகச் சுட்டிக்காட்டி பரப்புரை நிகழ்த்துகிறார். தன் வாழ்வின் எப்பகுதியிலும் கிறித்தவச் சாயலே இல்லாத இவர், இவர் அறியாக் குழந்தைப் பருவத்தில்ஜோசப்என்ற பெயரைச் சூட்டியமையால் கிறித்தவராகிவிட்டாராம்! ‘ஜோசப்என்ற பெயர் திருச்சியின் ஒரு தொகுதியில் விலைபோகும் என்பதை அறிந்து கொண்ட இவரும் களம் காண்கிறார். ‘ஜோசப்எனும் பெயரைக் கொண்டாடுகின்ற கிறித்தவர் அரசியல் ரீதியாக ஒதுக்கப்பட்டு, ஒடுக்கப்படுகின்றபோது காதடைந்துபோன இம்மனிதர், திருச்சி கிழக்குத் தொகுதியிலிருந்து சில கல் தொலைவு அருகிலிருக்கும் விரகாலூர் என்ற சிற்றூரைச் சார்ந்த அருள்பணியாளர் ஸ்டான் சாமி பற்றி அறிவாரா? நுனி நாக்கில் கூட உச்சரிக்க மறுக்கும் மதவாத பாரதிய சனதாவின் கொடுங்கோல் சட்டத்தினால் மரணித்தார் என்பது இவர் அறிவாரா? மூன்றாண்டுகளுக்குமுன் இறந்து போன இந்த அருள்பணியாளருக்கு, விரகாலூரில் கடந்த சூலை மாதம் சிலை வைக்கப்பட்டிருக்கிறது.

ஜோசப்எனும் அடையாளத்தைத் தேர்தல் விலைபொருளாக மாற்றத்துடிக்கும் இவர், இவ்வருள்பணியாளருக்கு அஞ்சலி செலுத்துவாரா? கிறித்தவர்களுக்குக்கிறித்தவர்என்ற அடையாளம் கட்டிக்காக்கப் பெறவேண்டிய ஓர் உன்னத அடையாளம். இவ்வுண்மை அடையாளத்தைச் சுய ஆதாய நோக்கில் எவரேனும் சுரண்ட இடம் கொடுக்கக் கூடாது என்பதை வலியுறுத்துவதே நம் நோக்கம்.

நாம் மதவாதிகளல்லர்...

நாம் கிறித்தவர்களாக ஓர் அரசியல் நிலைப்பாடு ஒன்றினை முன்னெடுக்கவேண்டும் என்ற கோரிக்கையானது, நாம் மதரீதியாக ஒன்றிணைய வேண்டும் என்பதற்காக அல்ல; ஏனெனில், பெரும்பான்மை மதவாதத்தை எதிர்க்க ஒருங்கிணையவேண்டிய நாம், மதரீதியாக ஓர் அமைப்பை உருவாக்கி, மதவாதத்தை எதிர்த்திட முடியாது. வகுப்புவாதக் கருத்தியலை அடிநாதமாகக்கொண்டு இயங்கும் பெரும்பான்மை மதவாதத்தைச் சிறுபான்மை மதவாதத்தால் (Minority Communalism) எதிர்க்கவும் முடியாது.

பெரும்பான்மை மதவாதம், சிறுபான்மை மதவாதம் இரண்டும் மக்களின் சமத்துவத்திற்கு அறிவுப்பூர்வப் பார்வைக்கு எதிரானதுதான். மதரீதியாக ஒருங்கிணைக்கப்பட்ட பெரும்பான்மைவாதம் சனநாயகத்திற்கு, சமயச்சார்பின்மைக்கு எதிரானது என்பதில் தெளிவு ஏற்படுமானால்இன்று வளர்ந்து நிற்கும் மதப்பெரும்பான்மைவாதத்தை எதிர்த்து நிற்கும் ஆற்றல், மதச்சார்பின்மை எனும் உயிர்க்கொல்லிக்கும், சனநாயகம் எனும் உயர்மாந்த மதிப்பீட்டிற்கும் உண்டு என்பதால், நாம் மதம் காக்கும் மனிதர்களாக, குழுக்களாக மாற வேண்டுவதில்லை என்பதனைப் புரிந்து கொள்வோம்.

மதவாதம், மத அடிப்படைவாதம், வகுப்புவாதம், மதவாதத் தேசியம் என்பனவெல்லாம், இன்று மிகப் பெரிய சிந்தனைக்குரிய செய்திகளாக (Discourse) மாறவேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது. மத உணர்வைத் தூக்கிப்பிடித்து, மக்களை மடையர் களாக்கும் மதவாத அரசியலை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

தமிழ்நாடு திரு அவை என்பது வெறும் நகரங்களில் செயல்படுகின்ற அமைப்பல்ல; நம் திரு அவை வெறும் திருக்கோவில்களோடு நின்று விடும் அமைப்பும் அல்ல. திரு அவை இந்நாட்டில் கால்கோள் கொண்ட காலத்திலிருந்து எங்கெல்லாம் வழிபாட்டுத் தலங்களை நிறுவியதோ, அங்கெல்லாம் சென்றடைந்த மக்களின் முழுவளர்ச்சியையும் கருத்தில் கொண்டு, வளர்ச்சித் திட்டங்களையும் முன்னெடுத்தத்  திரு அவை என்பதனை வரலாறு அறியும். இந்த உண்மையை  எத்தனை பேருக்குக் கொண்டு சென்றிருக்கிறோம்?

இந்திய நாட்டில் வளர்ந்திருக்கிற இந்திய மதப்பெரும்பான்மைவாதம் வரலாற்றைத் திரிக்கிறது. இல்லையெனில், வரலாற்று உண்மைகளைக் கொச்சைப்படுத்துகிறது. வெறும் புராணக் காலத்துப் புனைவுகளை உண்மையெனத் திணிக்க முயற்சிக்கிறது. நாடு முழுவதும் நடத்தப்பெறும் நம் கல்வி நிறுவனங்கள் மூலம் இப்புனைவுகளை உடைக்கவும் தகர்க்கவும் என்ன செய்துவருகிறோம்?

இந்தியாஎன்ற நாட்டிற்குபாரதம்எனும் புதுப் பெயரிட்டு, இத்தேசத்தைஇந்துநாடென்று கூறிஇந்நாட்டில் இயங்கும் மதச்சார்பின்மைக்கு எதிராகச் செயல்பட்டுவரும் அமைப்பை நாம் புரிந்து கொண்டிருக்கின்றோமா?

இந்திய சனநாயகத்தையும், சனநாயகத்தின் உள்ளீடான சமயச்சார்பின்மையையும் போற்றும் தேசத்தில்தான், மதச்சார்பின்மையும் மதச்சார்பின்மையின் உள்ளீடான சமத்துவமும் பேணப்பெறும் என்பதில் மதச்சிறுபான்மையினர் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளனர்.

மதவாதம் எனும் பிரிவினைக் கொள்கைஇந்தியாஎனும் அடிப்படைக் கொள்கைக்கு (Idea of India) எதிரானது என்பதில் உறுதியாக இருக்கிறோம். நாங்கள் வாழும் நாட்டை நேசிக்கிறோம். நாட்டின் ஒற்றுமையை, ஒருமைப்பாட்டைக் காப்பதில் உறுதியாக இருக்கிறோம்.

மதரீதியாக மக்களை ஒருங்கிணைத்து (Polarize) மதச் சிறுபான்மையினரை அந்நியராக்கி, எதேச்சதிகார அரசு ஒன்றினை உருவாக்கும் முயற்சியினை, ‘வாக்குஎனும் அதிகாரத்தால் முறியடிப்போம் என்று உறுதியேற்போம்.