news-details
தலையங்கம்
வாக்குப் புரட்சியும் மக்களாட்சியின் மகோன்னதமும்!

திராவிடக் கருத்தியல் ஆழமாக வேரூன்றிய தமிழ் மண்ணில், அறுபது ஆண்டுகளாகக் கோலோச்சிய இருபெரும் துருவங்களான தி.மு.. மற்றும் .தி.மு.. கூட்டணிகளைத் தனித்து எதிர்கொண்டு, தமிழக வெற்றிக் கழகம் (.வெ..) ஈட்டியுள்ள வெற்றி, இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு மைல் கல்! மக்களாட்சியின் மாண்பினை உலகிற்குப் பறைசாற்றும் வகையில், வன்முறையற்ற முறையில்ஒற்றை விரல் புரட்சிவாயிலாகப் புதியதோர் அரசியல் விடியலை ஏற்படுத்திய தமிழ்நாட்டு வாக்காளர்களுக்கும், புதிய முதல்வராகப் பொறுப்பேற்கவுள்ள திரு. ஜோசப் விஜய் அவர்களுக்கும் எமது வாழ்த்துகள்!

எனினும், இந்த வெற்றி வெறும் கொண்டாட்டத்திற்குரியதா? அல்லது ஆழமான அரசியல் ஆய்வுக்குரியதா? என்பதை நடுநிலையோடு அணுக வேண்டியது காலத்தின் கட்டாயம்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் - 2026 இளைய தலைமுறையின் வீரியமிக்கப் பங்களிப்பால் ஒரு மாபெரும் வாக்குப் புரட்சியைக் கண்டுள்ளது. போராட்டங்கள், வன்முறைகள் மற்றும் குருதி சிந்தும் கலவரங்கள் வாயிலாக உலகெங்கிலும் ஆட்சி மாற்றங்கள் அரங்கேறும் வேளையில், தமிழ்நாடு அமைதியான முறையில் வாக்களிப்பின் மூலம் ஆட்சி-அதிகார மாற்றத்தை நிகழ்த்தியுள்ளது.

இருப்பினும், இந்த வெற்றி  ‘ஏமாற்றம் தந்த மாற்றமா?’ அல்லதுமாற்றம் தரவுள்ள ஏமாற்றமா?’ என்ற வினா அரசியல் அரங்கில் பலமாக ஒலித்துக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டின் இன்றைய உணர்வுநிலை என்பது மகிழ்ச்சி, ஆரவாரம் ஆகியவற்றைத் தாண்டி அதிர்ச்சி, கலக்கம், பேரச்சம் மற்றும் கவலை எனப் பல உணர்ச்சிகளின் கலவையாக இருக்கிறது. தூய நீர் சுமந்துவரும் நதி, சாயக்கழிவுகள் கலந்துவரும் கால்வாய், பசுமை தந்து தாகம் தீர்த்துவரும் ஆறு, அழுக்கு நிறைந்த கூவம் என யாவற்றையும் உள்வாங்கித் தன்னுள் கரைத்துக்கொள்ளும் கடலைப் போன்றதொரு விசித்திரமான சூழலில் இன்று தமிழ்நாடு சமூக - அரசியல் களம் நிலவுகிறது.

வெறும் தரவுகளைச் சேகரித்து விமர்சனப் பார்வையை முன்வைப்பது மட்டுமல்லாமல், சாமானிய மக்களின் அடி மனத்து எண்ணங்களைப் பிரதிபலிப்பதே ஒரு நேர்மையான ஊடகவியலாளனின் அறம். ஆட்சிக் கட்டிலில் அமரப்போகும் .வெ..வின் அரசியல் நிலைப்பாடு, அவர்களின் தேர்தல் உத்திகள், திரைப்பிம்பத்தின் அதீத தாக்கம், அதன் பின்னே இயங்கும் பெரும் முதலாளிகளின் நிழல், ‘தீய சக்தி - கொள்கை எதிரிஎன்ற முழக்கங்கள் மற்றும் இரசிகர் (தொண்டர்) கூட்டத்தின் செயல்பாடுகள் எனப் பல்வேறு பரிமாணங்களை நாம் நுணுகி ஆராயவேண்டும்.

.வெ..வின் வெற்றி குறித்து குறிப்பிடும் தவத்திரு. திருவடிக்குடில் சுவாமிகள், “உணவில் உப்பு அதிகமானால்உப்புஎன்று சொல்கிறோம்; குறைவானால்உப்புஎன்று கேட்கிறோம். இரண்டிலும் எங்கோதப்புநடந்திருக்கிறது என்பது மட்டும் உண்மை. வெற்றி பெற்றவர்களையும் வாக்களித்தவர்களையும் ஆட்டிசம் குறைபாடுள்ள அழகிய குழந்தைகளாகவே பார்க்கிறேன். ஒதுக்கித் தள்ளவும் முடியாது; பெரிய பொறுப்பை ஒப்படைக்கவும் முடியாது. இவர்களுக்குத் தேவை அரவணைப்புடன் போதுமான சிகிச்சை. ஒரே உடலில் ஒருபுறம் குளிர்ச்சியும், மறுபுறம் வெப்பமும் கொண்ட உணர்வு. மறுபுறமும் குளிரப் போகிறதா? அல்லது சுட்டெரிக்கப் போகிறதா? என் பதை இவர்களது அடுத்தடுத்த செயல்பாடுகளை வைத்தே தீர்மானிக்க முடியும். அறிஞர் அண்ணா தொடங்கி செல்வி ஜெயலலிதா வரையிலான பேராளுமை மிக்கவர்களைப் பார்க்கிறோம். அப்படி ஒருவரின் தேவையுமுண்டு. ஆனால், அவர் திரைத்துறையில் இருந்துதான் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்கின்ற தமிழ்நாட்டு மக்களின் பொது அறிவின்மை ஒரு பற்றாக்குறைதான்என்கிறார்.

சுவாமிகளின் இக்கருத்து, ஆளுமைமிக்கத் தலைவர்களின் தேவையை வலியுறுத்தும் அதே வேளையில், திரையுலகை மட்டுமே தலைவர்களை உருவாக்கும் தொழிற்சாலையாகக் கருதும் மக்களின்பொது அறிவின்மையைமிகக் கடுமையாகச் சாடுகிறது.

அதேபோல மூத்த பத்திரிகையாளர் விஜய சங்கர் அவர்களின் எச்சரிக்கை மிகவும் கவனிக்கத்தக்கது: “பினராயி  விஜயன், மு.. ஸ்டாலின், மம்தா பானர்ஜி எனும் மூன்று முக்கிய எதிர்க்குரல்களின் தோல்வி, இந்திய அரசியலை ஓர் அபாயகரமான கட்டத்திற்கு நகர்த்தியிருக்கிறது. இனி பா...வின் ஆட்டம் அதிகமாகும். இன்று கொண்டாடும் எத்தனை பேர், இந்த அபாயத்தை உணர்ந்திருக்கிறார்கள் என்று தெரியாது. அனுபவம் பல பாடங்களைக் கற்றுத்தரும்என்கிறார். இது தமிழ்நாட்டின் மாநில சுயாட்சி மற்றும் கூட்டாட்சித் தத்துவத்திற்கு ஏற்படப் போகும் அச்சுறுத்தலைச் சுட்டிக்காட்டுகிறது.

அவ்வாறே, “அடுத்து என்ன நடக்கும்... விஜய் தமிழ்நாட்டின் முதல்வராகக் கூட்டணி அமைத்துப் பதவியேற்பார்; அக்கூட்டணியைப் பா... பின்னிருந்து இயக்கும். அவர் வாக்களித்த எந்த உறுதி மொழியையும் அவரை நிறைவேற்றவிடாமல் பா... பார்த்துக்கொள்ளும். இரண்டு மாதம் கழித்துகரூர் வழக்குகையில் எடுக்கப்படும். விஜய்யும் அவர் கூட்டாளிகளும் CBI-யால் கைது செய்யப்படுவார்கள். பா... நியமிக்கின்ற ஒருவர் பதவியில் இருப்பார். அன்றிலிருந்து பெரும்பாலான எம்.எல்..-க்கள் பா...-வில் சேருவார்கள். அதிகபட்சமாக இரண்டு ஆண்டுகளுக்குள் தமிழ்நாட்டைப் பா... ஆளும். அறுபது ஆண்டுகளாகப் பார்த்துப் பார்த்து வளர்த்த பயிரை விளையாட்டுப் பிள்ளைகள் வேரோடு பிடுங்கி வீதியில் எறிந்துவிட்டார்கள்; இனி விஷச் செடிகள் மட்டுமே இங்கே வளரும். அவரவர் வீட்டுப் பிள்ளைகளைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்ளுங்கள். தமிழினம் தம் அடையாளத்தை இரண்டே ஆண்டுகளில் இழந்துவிடும்எனும் ஊடகவியலாளர் லூர்துராஜ் அவர்களின் கணிப்பு இன்னும் அச்சமூட்டுவதாக உள்ளது. இளைய தலைமுறையினரின் உணர்ச்சிவசப்பட்ட முடிவுகள், நீண்ட காலமாகப் பேணிக்காக்கப்பட்ட சமூக நீதிப் பயிரை வேரோடு அழித்துவிடுமோ என்ற குமுறல் இதில் தெரிகிறது.

எழுத்தாளர் சித்தன் எபி அவர்கள் தேர்தலின் பின்னால் இருக்கும்கார்ப்பரேட்உத்திகளைத் தோலுரித்துக் காட்டுகிறார். அவரோ, “கட்சிகளே நேரடியாகத் தேர்தலை எதிர்கொண்ட காலமெல்லாம் மாறிக்கொண்டே வருகிறது; தேர்தல் வல்லுநர்கள், தேர்தல் உத்தியாளர்கள், இன்ஃப்ளூவன்சர், மார்க்கெட்டிங் நிறுவனங்கள், சமூக ஊடக ஊடுருவல்கள் என இது பெரிய பிரம்மாண்டத் திட்டமாக மாறியிருக்கிறது. யாரை வேண்டுமானாலும் முன்னிறுத்தி எளிய மக்களின் மனத்தை மாற்றிவிட முடியும். ‘மாற்றம், ‘ஆயிரம் கோடியை விட்டுட்டு வருகிறார், ‘ஒரு தடவை வாய்ப்பு கொடுக்கலாமேபோன்ற எந்தவித வாக்குறுதியும் கொள்கையும் கோட்பாடும் இல்லாத வார்த்தைகளையே நம் மனத்தில் நம்பிக்கையாக விதைக்கும் பணிகளை அவர்களால் செய்துவிட முடியும்.

முற்றும் முழுவதுமாக எந்தக் கட்சி அடிப்படையும் இல்லாமல், இப்படியான கார்ப்பரேட் நிறுவனங்களின் இமேஜ் கட்டமைப்பு மூலமாக மட்டுமே மக்களின் மனத்தை ஈர்த்து இவ்வளவு பெரிய வெற்றியைப் பெற்றவர் விஜய் மட்டும்தான். இது ஓர் ஆபத்தான தொடக்கம். எளியோரிடமிருந்தும் கொள்கைகளிடமிருந்தும் கோட்பாடுகளிடமிருந்தும் தேர்தலும் அரசியலும் ஆட்சியும் முழுவதுமாகத் தள்ளிப்போவதன் குறியீடு. TVK is the easiest shortcut for RSS and BJPஎன்கிறார். ஆகவே, வெறும் கவர்ச்சிகரமான விளம்பரங்கள் மூலம் மக்களின் வாக்குகளைப் பெற்றுவிடலாம் என்பது சனநாயகத்தின் வீழ்ச்சியாகவே பார்க்கப்படுகிறது.

இத்தனை விமர்சனங்களுக்கும் குமுறல்களுக்கும் மத்தியில் நேர்மறையான பார்வையும் நிலவுகிறது. ஆந்திராவின் என்.டி. ராமராவ் மற்றும் தமிழ்நாட்டின் எம்.ஜி.ஆர். போன்ற பேராளுமைகளைப் போல, கட்சி தொடங்கிய முதல் தேர்தலிலேயே ஆட்சியைப் பிடித்திருப்பது மக்களின்மாற்றத்திற்கானதாகத்தைக் காட்டுகிறது. சாதி, மதம், இனம் கடந்து மக்கள் .வெ..வை ஆதரித்திருப்பது ஆரோக்கியமான அறிகுறியாகக் கருதப்பட்டாலும், அந்த ஆதரவு ஒருதிரைப்பிம்பத்திற்குவழங்கப்பட்டதா? அல்லதுதிறமையான மேலாண்மைக்குவழங்கப்பட்டதா? என்பது வருங்காலங்களில்தான் தெரியும்.

.வெ.. முன்வைத்தமாற்றம்தேர்தலில் நிகழ்ந்திருக்கிறது. இனி மாற்றம் எங்கும் நிகழும் என்பது நமது நம்பிக்கை. ஆட்சிக் கட்டிலில் அமரும் கட்சிமாற்று அரசியல்செய்தாகவேண்டும்; ஆட்சிக் கட்டிலை இழந்த திராவிடக் கட்சிகளும் தங்கள் கட்சியில் மாற்றம் நோக்கிய நகர்வுகளை முன்னெடுத்தாகவேண்டும்.

இறுதியாக, மக்களின் வாக்கை வெல்வது எளிது; ஆனால், மக்களின் நம்பிக்கையைத் தக்க வைப்பது கடினம். தமிழ்நாட்டின் இருபெரும் சக்திகளை வீழ்த்தி, புதிய சக்தியாக உருவெடுத்துள்ள திரு. விஜய் அவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதிலும், மாநிலத்தின் உரிமைகளைப் பாதுகாப்பதிலும் காட்டும் தீவிரத்தில்தான் அவரது உண்மையான வெற்றி அடங்கியுள்ளது. ‘திரைக் கலைஞர்என்ற விமர்சனத்தைத் தகர்த்து, ‘விவேகமுள்ள தலைவர்என்று அவர் நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.

தமிழ்நாடு ஒரு பொற்காலத்தை நோக்கிப் பயணிக்கிறதா? அல்லது ஓர் இருண்ட காலத்தை நோக்கித் தள்ளப்படுகிறதா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். மாணிக்கவாசகர் வாக்குப்படி, “நன்றே செய்வாய் பிழை செய்வாய் நானோ இதற்கு நாயகமே - திருவருள் எதைச் செய்யவிருக்கிறது என்பதை வரலாறு தீர்மானிக்கும்.

அன்புத் தோழமையில்,

அருள்முனைவர் செ. இராஜா @ இராஜசேகரன்

முதன்மை ஆசிரியர்