இந்தியக் குடியரசு அதன் அரசமைப்புச் சட்டத்தின் வாயிலாக சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் மதச்சார்பின்மை ஆகிய உன்னத விழுமியங்களைத் தனது ஆன்மாவாகக் கொண்டுள்ளது. ஆனால், நடைமுறையில் இந்த விழுமியங்கள் ‘தலித் கிறித்தவர்கள்’ எனும் பெரும் சமூகத்திற்கு மட்டும் எட்டாக்கனியாகவே இருந்து வருகின்றன.
சாதியப்
பாகுபாட்டின் கோரப்பிடியிலிருந்து விடுபட விழைந்து கிறித்தவத்தைத் தழுவிய தலித் மக்கள், இன்று மதத்தின் பெயரால் அரசமைப்புச் சட்டம் வழங்கும் பாதுகாப்பிலிருந்தும், நீதியின் கரங்களிலிருந்தும் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்படுகிறார்கள்.
அண்மையில் உச்ச நீதிமன்றம் வழங்கிய ‘சிந்தாதா ஆனந்த்’ வழக்கின் தீர்ப்பு, இந்த வரலாற்று அநீதியை மீண்டும் ஒருமுறை ஆழமாக உறுதிப்படுத்தியுள்ளது.
2026, மார்ச் 24 அன்று
உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் பிரசாந்த் குமார் மிஸ்ரா, மன்மோகன் ஆகியோர் கொண்ட அமர்வு, ‘சிந்தாதா ஆனந்த் எதிர் ஆந்திரப் பிரதேச அரசு’ என்ற வழக்கில் வழங்கிய தீர்ப்பு அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. ‘இந்து, சீக்கியம் மற்றும் பௌத்த மதங்களைத் தவிர, வேறு மதங்களுக்கு மாறும் தலித்துகள், தங்களது அட்டவணைச் சாதி (SC) அந்தஸ்தை
உடனடியாகவும் முழுமையாகவும் இழக்கிறார்கள்’ என்பதே
அந்தத் தீர்ப்பின் சாரம்.
இந்த
வழக்கின் பின்னணி மிகவும் வேதனையானது. இந்து மதத்திலிருந்து கிறித்தவத்திற்கு மாறி பத்து ஆண்டுகள் அருள்பணியாளராகப் பணியாற்றிய சிந்தாதா ஆனந்த், உயர் சாதியினரால் தாக்கப்பட்டார். அவர் தனது சாதியைக் குறிப்பிட்டு இழிவுபடுத்தப்பட்டதாகப் புகார் அளித்தபோது, அவர் கிறித்தவர் என்பதால் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் (SC/ST Act) அவருக்குப் பாதுகாப்பு வழங்க முடியாது என நீதிமன்றம் கைவிரித்துவிட்டது.
அதாவது, ஒருவரைத் தாக்குபவர் சாதிய வன்மத்துடன் தாக்கினாலும், தாக்கப்படுபவர் கிறித்தவராக இருந்தால் அந்த வன்மம் சட்டத்தின் பார்வையில் சாதியக் குற்றமாகக் கருதப்படாது என்ற விபரீத தர்க்கம் இங்கே முன்வைக்கப்படுகிறது. சிந்தாதா ஆனந்த்திற்கு வழங்கப்பட்ட தீர்ப்பு,
ஒரு சமூகப் பேராபத்து; இது இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மதச்சார்பின்மைக்கு விடப்பட்ட பெரும் சவால்!
உச்ச
நீதிமன்றத்தின் இந்த அணுகுமுறை, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 14-வது பிரிவு (சமத்துவம்), 15-வது பிரிவு (மத அடிப்படையிலான பாகுபாடின்மை)
மற்றும் 25-வது பிரிவு (மதச் சுதந்திரம்) ஆகியவற்றிற்கு முற்றிலும் முரணானது. ஒரு நபர் தனது ஆன்மிகத் தேடலுக்காகவோ அல்லது சமூக விடுதலைக்காகவோ ஒரு மதத்தைத் தேர்ந்தெடுக்கும்போது, அரசு அவருக்கு வழங்கிய சமூகப் பாதுகாப்பைப் பறிப்பது என்பது மதத்தைத் தேர்வு செய்யும் உரிமையைத் தண்டிப்பதற்குச் சமமாகும்.
நீதிமன்றம்
முன்வைக்கும் வாதம் என்னவெனில், கிறித்தவம் மற்றும் இசுலாம் போன்ற மதங்கள் சாதியக் கட்டமைப்பை மதநம்பிக்கை அடிப்படையில் ஏற்பதில்லை என்பதாகும். ஆனால், சமூகம் என்பது இறையியல் கொள்கைகளால் இயங்குவதில்லை; அது நிலப்பரப்பின் எதார்த்தங்களால் இயங்குகிறது. கிறித்தவத்திற்கு மாறிய பிறகும் ஒரு தலித் அதே நிலப்பரப்பில் (சமூகத்தின் பார்வையில் சேரியில்) வசிக்கிறார்; அதே சமூகப் புறக்கணிப்பை எதிர்கொள்கிறார்; அதே தீண்டாமைக் கொடுமைக்கு ஆளாகிறார் என்பதுதான் நிதர்சனம். 1985-ஆம் ஆண்டின் ‘சூசை எதிர் இந்திய ஒன்றியம்’
வழக்கிலிருந்து
இன்றுவரை, “மதம் மாறிய பிறகும் சாதியப் பாகுபாடு தொடர்கிறது என்பதற்கான அனுபவப்பூர்வமான ஆதாரங்கள் இல்லை” என்று நீதிமன்றம் கூறுவது, எரியும் கொள்ளியை மறைக்கும் செயலே அன்றி வேறல்ல.
உச்ச
நீதிமன்றம் சில மதங்களுக்கு மட்டும் (சீக்கியம், பௌத்தம்) சலுகை வழங்கி, கிறித்தவம் மற்றும் இசுலாத்தை விலக்கிவைப்பது பாரபட்சமானது; இது நீதித்துறையின் முரண்பட்ட நிலைப்பாடுகளைக் காட்டுகிறது. 1956 மற்றும் 1990-ஆம் ஆண்டுகளில் கொண்டு வரப்பட்ட திருத்தங்கள் மூலம் சீக்கிய தலித்துகளும், பௌத்த தலித்துகளும் SC அந்தஸ்தைப்
பெற்றனர். இந்த மதங்களும் பிறப்பின் அடிப்படையிலான பாகுபாட்டைத் தத்துவ ரீதியாக எதிர்ப்பவைதான். அப்படியிருக்க, கிறித்தவ தலித்துகளுக்கு மட்டும் இந்த உரிமை மறுக்கப்படுவது ஏன்?
மேலும்,
‘கைலாஷ் சோன்கர் எதிர் மாயாதேவி’
(1983) வழக்கின்படி, ஒரு தலித் கிறித்தவர் மீண்டும் ‘தாய் மதத்திற்கு’ (இந்து
மதம்) திரும்பினால் அவருக்கு மீண்டும் SC அந்தஸ்து
கிடைக்கும் என்கிறது நீதிமன்றம். இது ‘தண்டனை மற்றும் சலுகை’ என்ற அடிப்படையிலான ஒரு மதமாற்றத் தூண்டலாகவே தெரிகிறது. நீதியை வழங்கவேண்டிய நீதிமன்றம், ஒரு குறிப்பிட்ட மதத்திற்குத் திரும்புவதை ஊக்குவிப்பது, அதன் நடுநிலைமையைக் கேள்விக்குள்ளாக்குகிறது.
இந்தியாவில்
சுமார் 2.1 மில்லியன் தலித் கிறித்தவர்கள் உள்ளனர். பல்வேறு ஆய்வுகளின்படி, இவர்களில் 70% பேர் வறுமைக்
கோட்டிற்குக் கீழே வசிக்கின்றனர். இவர்கள் எதிர்கொள்ளும் சமூகப் பாகுபாடு, இந்து தலித்துகள் எதிர்கொள்ளும் நிலைக்கு இணையாக இருப்பதை ‘சதீஷ் தேஷ் பாண்டே அறிக்கை’
(2008) உறுதிப்படுத்துகிறது.
மேலும், தலித் கிறித்தவர்கள் எதிர்கொள்ளும் சமூகப் பின்தங்கிய நிலை குறித்துப் பல்வேறு ஆணையங்கள் விரிவான அறிக்கைகளைக் கடந்த காலங்களில் வழங்கியுள்ளபோதும் அரசு அலட்சியம் காட்டுவது ஏன்? குறிப்பாக, இரங்கநாத் மிஸ்ரா ஆணையம் (2007), SC அந்தஸ்தை
மதச்சார்பற்றதாக மாற்ற வேண்டும் என்றும், அனைத்து மதங்களிலும் உள்ள தலித்துகளுக்கு இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்றும் பரிந்துரைத்தது. சச்சார் குழு அறிக்கை (2006), மதம் மாறிய பிறகும் தலித்துகளின் சமூக, பொருளாதார நிலை மாறவில்லை என்பதை உறுதிப்படுத்தியது. தேசிய பட்டியலினத்தவர் ஆணையம் (NCSC), 2010-ஆம்
ஆண்டில் தலித் கிறித்தவர்களுக்கும் முசுலிம்களுக்கும் SC அந்தஸ்து வழங்க முழு ஆதரவைத் தெரிவித்தது.
இத்தனை
ஆதாரங்கள் இருந்தும், ‘சாதியக் கொடுமை தொடர்வதற்குச் சான்று இல்லை’ என்று கூறுவது தலித் கிறித்தவர்களின் காயங்களில் ஈட்டியைப் பாய்ச்சுவதாகும். இன்றும் தமிழ்நாடு மற்றும் ஆந்திரா போன்ற மாநிலங்களில் கிறித்தவக் கல்லறைகளில் தனிச்சுவர் எழுப்பப்படுவதும், தேவாலயத் தேர்ப்பவனிகளில் தலித் கிறித்தவர்கள் புறக்கணிக்கப்படுவதும் ஊரறிந்த உண்மை. மதம் மாறியும் சாதி மாறவில்லை என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்றுவேண்டும்?
அரசமைப்புச்
சட்டத்தின் கீழ் பழங்குடியினராக (ST) அங்கீகரிக்கப்பட்ட
ஒருவர் கிறித்தவத்திற்கு மாறினாலும், அவரது பழங்குடி அந்தஸ்து பறிக்கப்படுவதில்லை. ஏனெனில், பழங்குடி என்பது ஓர் இன அடையாளமாகக் கருதப்படுகிறது.
அதேபோல, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) எந்த
மதத்திற்கு மாறினாலும், அவர்களுக்கான இடஒதுக்கீடு தொடர்கிறது. ஆனால், தலித் மக்களுக்கு மட்டும் ஏன் இந்த மதத்தாலான வரையறை?
தீண்டாமை என்பது ஒரு மதத்தின் சடங்கு அல்ல; அது ஒரு சமூகக் கறை. அந்தக் கறை மதம் மாறியதாலேயே துடைக்கப்பட்டுவிடும் என்று சட்டம் கருதுவது ஒரு மாயையாகும்.
ஒன்றிய
அரசு 1950-ஆம் ஆண்டின் குடியரசுத் தலைவர் ஆணையில் உள்ள 3-வது பத்தியை நீக்கி, SC அந்தஸ்தை
மதச்சார்பற்றதாக மாற்றவேண்டும் என்பதே எமது கோரிக்கை. அதுவரை காலங்கடத்தாமல், மாநில அரசுகள் தலித் கிறித்தவர்களுக்கு உரிய நீதியை வழங்க முன்வரவேண்டும் என்பதே எமது வேண்டுகோள்.
தற்போது
OBC பட்டியலில்
உள்ள தலித் கிறித்தவர்களின் மக்கள்தொகையைக் கணக்கிட்டு, அவர்களுக்குக் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் ‘உள் ஒதுக்கீடு’
வழங்கவேண்டும்.
இதற்குப் புதிய சட்டங்கள் தேவையில்லை; மாநில அரசே ஓர் அரசாணை மூலம் இதைச் செய்ய முடியும். இது தலித் கிறித்தவர்களின் நீண்டகாலக் கோரிக்கையும் கூட. சமூக நீதியைப் பேசும் அரசுகள் இந்த விளிம்பு நிலை மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டியது தங்கள் தார்மிகக் கடமையே!
தலித்
கிறித்தவர்கள் தங்களது உரிமைகளுக்காகக் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாகப் போராடி வருகிறார்கள். 2004-ஆம் ஆண்டு முதல் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் (WP 180/2004) இன்னும்
ஒரு முடிவுக்கு வரவில்லை. நீதி என்பது தாமதப்படுத்தப்படும்போது அது மறுக்கப்பட்டதாகவே கருதப்படும்.
சாதிய
ஒடுக்குமுறையிலிருந்து
தப்பிக்க ஒரு மனிதன் தேடும் புகலிடம், அவனது சட்டப்படியான உரிமைகளைப் பறிக்கும் சிறைச்சாலையாக மாறக் கூடாது. நீதியின் தராசு மதத்தின் பெயரால் ஒரு பக்கம் சாயக்கூடாது. தலித் கிறித்தவர்களின் உரிமை என்பது வெறும் இடஒதுக்கீடு சார்ந்தது மட்டுமல்ல; அது ஒரு குடிமகனின் அடையாளம் மற்றும் பாதுகாப்பு சார்ந்தது. இந்த நீண்டகால அநீதியைக் களைந்து, அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள சமத்துவத்தை அனைவருக்கும் உறுதி செய்வதே ஒரு முற்போக்குச் சமூகத்தின் அடையாளமாகும். நம் உரிமையை நாம் அடையும்வரை நாம் போராடுவோம்.
“சில நேரங்களில்
நிதானிப்பவர்களே
நிற்கிறார்கள்;
தோற்பவர்களே
வெல்கிறார்கள்;
அடிபட்டவர்களே
அடிக்கோடிடப்படுகிறார்கள்!”
எனும்
இறையன்பு அவர்களின் வரிகள்தான் இங்கு நம் நினைவிற்கு வருகின்றன.
அன்புத்
தோழமையில்,
அருள்முனைவர்
செ.
இராஜா
@ இராஜசேகரன்
முதன்மை
ஆசிரியர்