இன்று நாம் மீட்பு வரலாற்றின் மிக முக்கியமான தூய ஆவியாரின் வருகைப் பெருவிழாவைக் கொண்டாடுகிறோம். உயிர்ப்புப் பெருவிழாவிற்குப்பின் வரும் ஐம்பதாம் நாளில் இவ்விழா கொண்டாடப்படுவதால், இது ‘பெந்தகோஸ்து விழா’ என்று அழைக்கப்படுகிறது. ‘பெந்தகோஸ்து’ என்னும் சொல்லுக்கு ‘ஐம்பதாம் நாள்’ என்பது பொருள். இது கோதுமை அறுவடைக்காக நன்றி செலுத்தும் யூதத் திருவிழா. ஏழு வாரங்கள் கழித்துக் கொண்டாடியதால் இது ‘வாரங்களின் விழா’ எனவும் அழைக்கப்பட்டது. கி.மு. 2-ஆம் நூற்றாண்டிலிருந்து சீனாய் மலை உடன்படிக்கையை நினைவுகூரும் நாளாகவும் இது கொண்டாடப்பட்டது.
“என் தந்தை வாக்களித்த வல்லமையை நான் உங்களுக்கு அனுப்புகிறேன்...” (லூக் 24:49) என்ற உயிர்த்த இயேசுவின் வாக்குறுதிப்படி, பெந்தகோஸ்து விழாவே திரு அவையின் தொடக்கமாயிற்று. “தூய ஆவி என்னும் நெருப்பால் உங்களுக்குத் திருமுழுக்குக் கொடுப்பார்” (லூக்
3:16) என்ற இயேசுவைப் பற்றிய திருமுழுக்கு யோவானின் கூற்று நிறைவேறிய இந்நாளே சீடர்களும் தொடக்ககாலக் கிறித்தவர்களும் திருமுழுக்குப் பெற்ற நாள் என்றும் கூறலாம்.
இந்த
உன்னத நாள், அச்சம் தோற்கடிக்கப்பட்டு வீரம் வெற்றிகொண்ட ஒரு மாபெரும் மாற்றத்தின் நாள்! சீடர்களைச் சிறைபிடித்திருந்த மூடிய கதவுகள் நற்செய்தி அறிவிப்பிற்காகத் திறக்கப்பட்டு, அவர்களின் சந்தேகங்கள் அன்பு நிறைந்த நம்பிக்கையினால் விரட்டியடிக்கப்பட்ட நாள்! நற்செய்தி அறிவிப்பின் வழியாக மக்களை இறையாட்சிக்குள் அறுவடை செய்யும் பணியைத் தொடங்கி வைத்த நாள்! நம் திரு அவையின் பிறந்த நாள்! இன்று திரு அவை உலகம் முழுவதும் ஆல்போல் பரவியிருக்கிறது என்றால், உறுதியாக அது ஆவியாரின் செயல்தான். சுருக்கமாக, திரு அவையின் தொடக்கமும் ஓட்டமும் அதன் அனைத்தும் தூய ஆவியாரின் செயலே.
திருவிவிலியச்
சிந்தனைகளிலும் இறையியல் ஆய்வுகளிலும் தூய ஆவியாரைப் பற்றிய தேடல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. கத்தோலிக்கத் திரு அவை இவரை மூவொரு கடவுளின் மூன்றாம் ஆளாக நம்பி ஏற்றுக்கொள்கிறது. “தந்தையிடமிருந்தும் மகனிடமிருந்தும் புறப்படும் ஆண்டவரும் உயிரளிப்பவருமான தூய ஆவி, தந்தையோடும் மகனோடும் ஒன்றாக ஆராதனையும் மாட்சியும் பெறுகிறார்” என்கிறது
நீசான் நம்பிக்கை அறிக்கை.
‘ஆவி’ என்ற சொல் எபிரேயத்தில் ‘ரூஆ’ என்றும், கிரேக்கத்தில் ‘நீயூமா’ என்றும், இலத்தீனில் ‘ஸ்பிரித்துஸ்’ என்றும்
அழைக்கப்படுகிறது. இதற்கு மூச்சு, காற்று, ஆன்மா எனப் பல பொருள்கள் உள்ளன.
குறிப்பாக, ‘ரூஆ எலோயிம்’ என்பது கடவுளின் ஆவி, வல்லமை மற்றும் வாழ்வைக் குறிக்கிறது.
திருவிவிலிய
வரலாற்றில் மிக முக்கியமான நான்கு பிறப்புகளை நாம் காண்கிறோம்: உலகின் பிறப்பு (தொநூ 1:2); இஸ்ரயேல் என்னும் தேர்ந்தெடுக்கப்பட்ட இனத்தின் பிறப்பு (விப 19:3); இறைமகன் இயேசுவின் பிறப்பு (மத் 1:18-25) மற்றும் இன்றைய நாளில் நாம் கொண்டாடும் திரு அவையின் பிறப்பு (திப 2:1-11). இந்த நான்கு வரலாற்றுத் திருப்புமுனைகளுக்கும் மூலக் காரணமாய், இயக்கு சக்தியாய் இருந்தவர் தூய ஆவியார். மீட்பின் வரலாற்றில் இவருடைய இன்றியமையாத செயல்பாட்டைத் திருவிவிலியம் சூட்டும் பெயர்கள் நமக்குப் பறைசாற்றுகின்றன. அவர் நம்மை வழிநடத்தும் துணையாளர், வாழ்வு தரும் உயிர் அளிப்பவர், உண்மையை வெளிப்படுத்துபவர் மற்றும் நம்மை இறைப்பிள்ளைகளாக்கும் ஆவியாக இருக்கிறார். மேலும், வல்லமை, விடுதலை, மாட்சி மற்றும் அருங்கொடைகளின் ஊற்றாகத் திகழும் இவரைத் தண்ணீர், எண்ணெய், நெருப்பு, புறா, காற்று மற்றும் ஞானம் போன்ற பல்வேறு அடையாளங்கள் வழியாக நாம் உணர்ந்துகொள்ள முடிகிறது.
தூய
ஆவியார் அடிப்படையில் மாற்றங்களைக் கொண்டுவருபவர் என்பதைத் திருவிவிலியத்தின் தொடக்கம் முதல் முடிவுவரை நாம் காணமுடிகிறது. தொடக்கத்திலேயே, பாழ்வெளிக்கும் இருளுக்கும் நடுவே “கடவுளின் ஆவி அசைந்தாடிக் கொண்டிருந்ததால்...” (தொநூ 1:2) அங்கே படைப்பு என்னும் மாபெரும் மாற்றம் நிகழ்ந்தது. கடவுள் மண்ணால் மனிதனை உருவாக்கி, அவன் நாசியில் தம் ‘உயிர் மூச்சை’ ஊதியபோதுதான், வெறும் மண் உயிருள்ள மனிதனாக உருமாறியது (தொநூ 2:7). “நான் உங்களில் உயிர்மூச்சைப் புகச் செய்வேன்; நீங்களும் உயிர் பெறுவீர்கள்” (எசே
37:5) என்ற இறைவாக்கினரின் வரிகள், தூய ஆவியார் உலர்ந்த எலும்புகளையும் உயிர்ப்பிக்கும் வல்லமை கொண்டவர் என்பதை உறுதிப்படுத்துகின்றன. இவ்வாறு, ஆண்டவரின் ஆவி எங்கே அனுப்பப்படுகிறதோ, அங்கெல்லாம் படைப்புகளிலும் மனிதர்களிலும் புதுவாழ்விற்கான மாற்றங்கள் மலர்கின்றன. அந்த வகையில், இன்றைய திருவழிபாட்டின் வாசகங்கள் தூய ஆவியார் நம் வாழ்வில் எத்தகைய வியத்தகு மாற்றங்களை ஏற்படுத்துகிறார் என்பதைத் தெளிவாக நமக்கு எடுத்துரைக்கின்றன.
திருத்தூதர்
பணிகள் நூலிலிருந்து எடுக்கப்பட்ட முதல் வாசகம், சீடர்களிடம் ஏற்பட்ட வியத்தகு மாற்றத்தைப் படம் பிடித்துக் காட்டுகிறது. இயேசு உயிர்த்துவிட்டார் என்பதை அறிந்திருந்தும், அதைப் புற உலகிற்கு அறிவிக்கத் துணிவின்றி, யூதர்களுக்கு அஞ்சி “தாங்கள் இருந்த இடத்தின் கதவுகளை மூடிவைத்திருந்தார்கள்” (யோவா
20:19). ஆனால், ஆண்டவர் இயேசு அவர்கள் நடுவே தோன்றி, தம் ‘உயிர்மூச்சை’ அவர்கள்மீது
ஊதி, தூய ஆவியாரை வழங்கிய பின்னரே அவர்களின் அச்சம் விலகியது. தூய ஆவியாரால் ஆட்கொள்ளப்பட்ட அந்த நொடியே, பாவங்களை மன்னிக்கும் தெய்வீகத் திடத்தையும் அவர்கள் பெற்றார்கள் (யோவா 20:22). அதுவரை தங்களுக்குத் தெரிந்த மொழிகளில் மட்டும் பேசிக்கொண்டிருந்த சாதாரண மனிதர்கள், ஆவியாரின் தூண்டுதலால் உலகெங்கும் நற்செய்தி பரவத் தடையாக இருந்த மொழி எல்லைகளைத் தகர்த்து, பல்வேறு மொழிகளில் பேசத் தொடங்கினார்கள். எந்த இயேசுவைப் பாடுகளின் போதும் இறப்பின் போதும் அச்சத்தினால் கைவிட்டு ஓடினார்களோ, அதே இயேசுவை எவருக்கும் அஞ்சாமல் உரக்க அறிவித்ததே தூய ஆவியின் வல்லமையால் சீடர்கள் பெற்ற மாற்றம்.
இரண்டாம்
வாசகத்தில், தூய ஆவியார் அருளும் வாழ்வு குறித்து புனித பவுல் மிகத் தெளிவாக விளக்குகிறார். திருமுழுக்குப் பெற்ற ஒவ்வொருவர் மீதும் தூய ஆவியாரின் அழியாத முத்திரை பதிக்கப்படுவதால், அவர்கள் அனைவரும் பல்வேறு அருள்கொடைகளால் நிரப்பப்படுகிறார்கள். இந்த அருள்கொடைகள் தனிமனிதப் பெருமைக்காக வழங்கப்பட்டவை அல்ல; மாறாக, அவை அனைத்தும் பொது நன்மைக்காகவும், கிறிஸ்துவின் உடலாகிய திரு அவைக் கட்டியெழுப்பப்படுவதற்காகவுமே
பொழியப்படுகின்றன என்கிறார். மேலும், அவர் “தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டவரன்றி, வேறு எவரும் ‘இயேசுவே ஆண்டவர்’ எனச் சொல்ல முடியாது”
(1கொரி 12:3) என்று வலியுறுத்துகிறார். நம் உதடுகள் இயேசுவை அறிக்கையிடுவதே நமக்குள் ஆவியார் செயல்படுகிறார் என்பதற்கான சான்றாகும்.
தூய
ஆவியாரின் ஆட்கொள்தலால் நம் வாழ்வில் நிகழவேண்டிய மாற்றங்களை மூன்று முக்கியப் பாடங்களாகக் காணலாம். முதலாவதாக, தூய ஆவியானவர் மாற்றத்தைக் கொண்டுவரும் முதன்மையான இடம் நமது உள்ளம். நம்மிடம் காணப்படும் கடினமான மனநிலை, பிடிவாதம் மற்றும் குறுகிய சுயநலம் போன்ற தடைகளை அவர் அகற்றி நம்மைப் புதுப்பிக்கிறார். இன்றைய நவீன உலகில் தொழில்நுட்பத்தால் நாம் உலகெங்கும் இணைக்கப்பட்டிருந்தாலும், இதயப்பூர்வமான பிணைப்பின்றித் தனிமைப் பயணிகளாகவே வாழ்கிறோம். எனவே, போலித்தனமான முகமூடிகளைக் களைந்து, ‘சுயநலம்’ என்னும் சிறையை உடைத்து, நம் இதயத்தை இறைவனின் மகிழ்ச்சிக்கும் பிறரின் தேவைகளுக்கும் இடமளிக்கும் ஒரு வரவேற்கத்தக்க இல்லமாக மாற்றவேண்டும்.
இரண்டாவதாக,
தூய ஆவியார் நமது உறவுகளின் எல்லைகளைத் திறந்து, பிளவுகளைக் கடக்கத் துணைபுரிகிறார். இறைவனின் அன்பு நமக்குள் குடிகொள்ளும்போதுதான், கடினத்தன்மையை வென்று பிறருக்கு இதயத்தைத் திறக்கும் ஆற்றலைப் பெறுகிறோம். இதன் மூலமே திரு அவை அனைவரையும் உள்ளடக்கிய இடமாக மாறுகிறது. எனவே, உறவுகளில் நிலவும் கசப்புகளை ஆவியாரின் உதவியால் வெல்லவேண்டும். வேறுபாடுகளை ஒருங்கிணைத்து, அனைவரையும் அன்புடன் வரவேற்கும் விருந்தோம்பும் மனப்பான்மையால் நம் உறவுகளைப் புனிதப்படுத்த முன்வர வேண்டும்.
மூன்றாவதாக,
தூய ஆவியார் வெறுப்பின் சுவர்களைத் தகர்த்து, நம்மை அமைதியின் மொழியைப் பேச அழைக்கிறார். பெந்தகோஸ்து நாளில் சீடர்கள் பேசியவை மனிதர்களை இதயத்தால் இணைக்கும் ‘சந்திப்பின் மொழிகள்’ ஆகும். இது திரு அவையின் உலகளாவிய பணியைச் சுட்டிக்காட்டுகிறது. ஆவியார் அலட்சியம் மற்றும் வெறுப்பு என்னும் சுவர் களைத் தகர்த்து, அமைதி ஆட்சி செய்யும் உலகைக் கட்டியெழுப்ப நமக்கு ஆற்றல் தருகிறார். எனவே, பிரிவினையைத் தூண்டும் சொற்களைத் தவிர்த்து, நல்லிணக்கத்தின் மொழியைப் பேசவேண்டும்; பிறர் மீதான அலட்சியத்தைக் களைந்து, துன்பப்படுபவர்களுக்குக் கரம் கொடுக்கும் தூய ஆவியின் கருவிகளாக நாம் மாறவேண்டும்.
நிறைவாக,
நம் எல்லைகளைத் தகர்த்து மாற்றங்களைக் கொண்டுவரும் தெய்வீக ஆற்றலோடு நம் தன்னலத்தைத் தகர்த்து, உறவுகளை மேம்படுத்தி, உலகிற்கு அமைதியின் தூதுவர்களாகச் செயல்படுவோம். நம் அன்றாட வாழ்வு ஆவியாரால் புதுப்பிக்கப்பட்ட வாழும் நற்செய்தியாக மாறட்டும். அனைவருக்கும் தூய ஆவியார் பெருவிழா வாழ்த்துகள்!