‘நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க நல்லார்சொற் கேட்பதுவும் நன்றே-நல்லார் குணங்கள் உரைப்பதுவும் நன்றே அவரோ(டு) இணங்கி இருப்பதுவும் நன்று’
என்ற
சான்றோரின் கூற்றிற்கிணங்க எம் சபை நிறுவுநர் அன்னை ஸ்கொலாஸ்டிக்காவை 1973-ஆம் ஆண்டிலிருந்து நான் பார்ப்பதற்கும், அவர் சொல் கேட்பதற்கும், அவருடன் இரண்டு ஆண்டுகள் வாழ்வதற்கும் கிடைத்த வாய்ப்பை இறைவன் எனக்களித்த பெரும்பேறு என்றே கூறுவேன்.
அன்னையைப்
பார்த்தால் அவர்களின் கண்களில் கருணை, சொல்லில் இனிமை, செயலில் நன்மை, வாழ்வில் எல்லாம் இறைச்செயல் மிளிர்ந்ததைப் பார்க்க முடிந்தது. அன்னை
அவர்கள் ஆதரவற்ற அனைவரையும் (முதியோர், விதவைகள், ஏழைகள், மாற்றுத்திறனாளிகள், மனவளர்ச்சி குன்றியோர், மனநலம் பாதிக்கப்பட்டோர், கைவிடப்பட்ட குழந்தைகள்) அன்புடன் அரவணைத்ததைப் பார்த்தேன். பாசத்தோடு பராமரித்ததைக் கண்டேன். அவர்கள்
அனைவரிலும் இறைவனைப் பார்த்ததை உணர்ந்தேன். இத்தகைய
அன்னையின் வாழ்வில் என் உள்ளத்தை உரசியது அன்னையின் ஏழ்மை!
“நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து செல்வராயிருந்தும் உங்களுக்காக ஏழையானார்; அவருடைய ஏழ்மையினால் நீங்கள் செல்வராகுமாறு இவ்வாறு செய்தார்”
(2கொரி 8:9). இறைவன் நாம் வளமாக மகிழ்வாக வாழும் பொருட்டு அவர் ஏழையாகப் பிறந்தார்; ஏழையாக வாழ்ந்தார்; ஏழையாக இறந்தார். அதுபோன்று இயேசுவின் அடியாராகிய நம் அன்னை ஸ்கொலாஸ்டிக்காவும் செல்வச்செழிப்பு நிறைந்த குடும்பத்தில் பிறந்து வளர்ந்தாலும், அவர்கள் ஆரம்பித்த இயேசுவின் திரு இருதய சபையின் இலக்கு மக்களுக்காக, அவர்களின் நல்வாழ்விற்காகத் தன்னை ஏழ்மையாக்கிக்கொண்டார்.
நான்
1973-ஆம் ஆண்டு எம் துறவற சபையில் நுழைந்தேன். முதல் இரண்டு வருடங்கள் அன்னை ஸ்கொலாஸ்டிக்காவோடு அழகப்பபுரம் இல்லத்தில் வாழும் பேறுகிடைத்தது. அந்நாள்களில்
அதிகாலை 5 மணி திருப்பலிக்கு 4.30 மணிக்குப் புறப்பட்டு அன்னை அவர்களோடு சேர்ந்து போவோம். ஒருநாள்
திருப்பலி முடிந்து வரும்போது அன்னையின் கால்களில் வெவ்வேறான காலணிகளைப் போட்டிருந்ததைப் பார்த்து என் மனம் வெகுவாகப் பாதித்தது. ஒருவேளை அதிகாலையில் புறப்பட்டதால் தெரியாமல் போட்டு வந்தார்களோ? என நினைத்தேன்.
இல்லத்திற்குள்
வந்ததும் அன்னையிடம் கேட்டேன்: “ஏன் அம்மா, இப்படி இரண்டு கால்களிலும் வேறு வேறு செருப்பு போட்டிருக்கிறீர்கள்?” என்று. அதற்கு அவர்கள் கூறிய பதில்: “தாயி, ஒரு செருப்பு தேய்ந்து அறுந்துவிட்டது; ஒன்று நன்றாக இருக்கிறது. வேறொரு சோடியில் அடுத்த காலுக்குரிய செருப்பு நன்றாக இருந்தது; எனவே, அதை எடுத்துப் போட்டுக் கொண்டேன்.” அவர்களது பதிலும் செயலும் என் உள்ளத்தை உரசியது. அந்தக் காலணிகளைப் போட்டுக்கொண்டுதான் பள்ளிக்கூடம் செல்வார்கள். பங்கு
ஆலயத்திற்குத் திருப்பலிக்கும் செல்வார்கள். அன்னையின் இத்தகைய ஏழ்மையை, பற்றற்ற தன்மையைப் பார்த்து வியந்தேன்.
இன்னும்
அன்னை அவர்கள் நான்கு அல்லது ஐந்து ஆடைகள்தான் வைத்திருப்பார்கள். அவர்கள்
தன் ஆடைகளை மிகச் சுத்தமாக உடுத்துவார்கள். ஆனால், அவர்கள் உடுத்தும் ஆடையில் வேறு துணிகளைக் கொண்ட ஒட்டுகளையும், கிழிந்த இடத்தை நூலால் தைத்திருக்கும் தையல்களையும் பார்த்து மனம் நெகிழ்ந்திருக்கிறேன். அவர்கள் உடுத்தும் ஆடை முழுமையாகக் கிழிந்துவிட்டால் அதைத் துவலையாகவோ, தலையணை உறையாகவோ அல்லது கைக்குட்டையாகவோ பயன்படுத்துவதைப் பார்த்து வியந்து மகிழ்ந்திருக்கிறேன். துறவறப் பயிற்சி பெறும் எங்களைப் பார்த்து அன்னை அவர்கள், “தாயி, தேவைக்கு மிஞ்சிய எந்தப் பொருளும் கன்னியாஸ்திரிகளிடம் இருக்கக்கூடாது; எந்தப் பொருளையும் வீணாக்கக் கூடாது; வீணாகப் போகிறதைக் கண்டுகொள்ளாமல் இருப்பதே பாவம்” என்று அடிக்கடிக் கூறுவார்கள்
அன்னை
சொல்வதைப் போன்று அவர்கள் தன் வாழ்வில், தனக்கென்று எந்தப் பொருளையும் வைத்திருந்தவர் அல்லர்; தான் உடுத்தும் ஆடையும், கால்களுக்கு அணியும் செருப்பும், வெயில்-மழைக்குப் பயன்படுத்தும் ஒரு குடை யும், பயணத்திற்குப் பயன்படுத்தும் ஒரு சிறு பையும், ஒரு சிறு பெட்டி (சூட்கேஸ்) மட்டுமே அவரது உடைமையாக வைத்திருந்தார்கள். ஒருநாள் பயணம் சென்றால் தன்னிடம் உள்ள சிறு பையை எடுத்துச்செல்வார்கள். வேறு இல்லங்களுக்குச் சில நாள்கள் தங்குவதற்காகச் சென்றால், தனக்குரிய ஆடை, மற்றப் பொருள்களை அட்டைப் பெட்டியில் வைத்து எடுத்துச்செல்வார்கள். சபையின் முக்கியமான பத்திரங்கள், ஆயர் மற்றும் குருக்களின் கடிதங்கள் மட்டும் சிறிய கைப்பெட்டியில் வைத்திருப்பார்கள்.
அதுபோன்றுதான்
உணவிலும் அப்படி ஓர் ஏழ்மையைப் பார்க்க முடிந்தது. அந்த நாள்களிலே காலை
உணவு மரவள்ளிக்கிழங்கு அல்லது கோதுமை, சோளம் போன்ற உணவுதான். அன்னையும்
அதே உணவைத்தான் சாப்பிடுவார். அன்னை அவர்கள் ஒவ்வொரு நாளும் ஆஸ்துமா நோயால் அதிகம் துன்பப்படுவார். அதனால் அவருக்குச் சில நாள்களில் முட்டை அல்லது பால் கொடுத்தால் அதைப் பலவீனமாக இருக்கும் சிறு குழந்தைகளுக்குக் கொண்டு போய் கொடுப்பார்கள். சகோதரிகள், “ஏன் அம்மா இப்படிச் செய்கிறீர்கள்?” என்று
கேட்டால், “இப்போது என்னைவிட அதிகம் தேவை இந்தப் பிள்ளைகளுக்குத்தான் தாயி! நாம் பத்து பேர் சோறாகச் சாப்பிடுவதை இருபது பேருக்குக் கஞ்சியாகக் கொடுத்து நாம் சாப்பிடுவது சிறந்தது”
என்பார்கள். ஏழைகளின் நிறைவில், மகிழ்வில் இறைவனைக் கண்டவர் நம் அன்னை அவர்கள்.
அம்மாவின்
வாழ்வில் எங்கும் ஏழ்மை, எதிலும் ஏழ்மையைப் பார்க்க முடிந்தது. நான்
அம்மாவோடு வாழ்ந்தபோது அம்மாவும், சகோ. மார்கிரெட், சகோ. ஆக்னஸ் ஆகிய மூன்று பேரும் ஒரே அறையில் தங்கியிருந்தார்கள். அதன் அளவு ஒரு வகுப்பறையை இரண்டாகப் பிரித்து, பாதியில் செபிப்பதற்கான ஆலயம். மறுபாதியை இரண்டு அறைகளாகப் பிரித்து ஓர் அறையில் அம்மாவும், மற்ற இரண்டு சகோதரிகளும்; மறு அறையில் நாங்கள் 12 பேர் பெட்டி, படுக்கை மட்டும் வைப்பதற்கான அறையாய் இருந்தது. இரவு நாங்கள் தூங்குவது பள்ளிக்கூட வகுப்பறையில். அம்மா, சகோ. மார்கிரெட் தூங்குவது சிறு பிள்ளைகள் தூங்கும் இடத்தில். அங்கு
இரவு பிள்ளைகளின் அழுகைச்சத்தம், சிறு பிள்ளைகள் இரவு படுக்கையில் சிறுநீர் கழித்தல் ஆகியவற்றின் மத்தியில்தான் அம்மா ஆஸ்துமா நோயின் வேதனையிலும் பிள்ளைகளோடு தூங்குவார்கள். தாயில்லாத பிள்ளைகளுக்கு ஏழ்மையான சூழலிலும் தாயாக உடனிருந்து, கண்விழித்துக் காத்துப் பராமரித்து வந்தார்கள். அன்னையின் ஏழ்மையான இத்தகைய வாழ்வு என்னை மட்டுமல்ல, அவர்களோடு வாழ்ந்த அனைவரையும் தொட்டது.
நாசரேத்தூர்
இயேசுவின் ஏழ்மையைப் பின்பற்றி வாழ வந்திருக்கும் நாம், நம் அர்ப்பண வாழ்வில் ஏழ்மையை எப்படி மதிக்கிறோம்? கடைப்பிடிக்கிறோம்? எனச் சுய ஆய்வு செய்வோம். துறவு வாழ்வின் உரைகல் எனப் போற்றப்படுவது, வலியை ஏற்கும் ஏழ்மையாகும். நம் வாழ்வில் ஏழ்மையை விரும்பி ஏற்று வாழ்ந்தோம் என்றால், அர்ப்பண வாழ்வில் கற்பையும் கீழ்ப்படிதலையும் சிறப்பாக வாழமுடியும். எனவே, நாசரேத்தூர் இயேசுவை முழுக்க முழுக்கப் பின்பற்றி வாழ்ந்த நம் அன்னை ஸ்கொலாஸ்டிக்காவின் ஏழ்மை வாழ்வைப் பின்பற்றி வாழ்வோம், இறைவனில் மகிழ்வோம்.
(குறிப்பு:
இக்கட்டுரை விளம்பரப் பகுதியின் கீழ் இடம்பெற்றுள்ளது)