news-details
சிறப்புக்கட்டுரை
குறளும் வாழ்வும் (வாரம் ஒரு குறள் – 04)

வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு

யாண்டும் இடும்பை இல (குறள் 4)

குறள் விளக்கம்

விருப்பு - வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவருக்கு எப்போதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை.

சிந்தனை

விருப்பு - வெறுப்பு இல்லாத மனிதர் உண்டோ?’ எனக் கூறும் அளவிற்கு சில விருப்பு - வெறுப்புகள் மனித வாழ்வைக் கட்டுப்படுத்துகின்றன. விருப்பு வெறுப்பின்றி வாழ்பவர்கள் கட்டுகளை உடைத்துச் சுதந்திர வாழ்வு வாழ்பவர்கள். இதுவே இறைவனின் குணம். அதனைப் பொருந்தி வாழவேண்டும் என்றே வள்ளுவர் கூறுகின்றார்.

அச்சுதன் மிகவும் நல்லவர். அதுவே அவருக்கு ‘ஏமாளி, ‘வாழத் தெரியாதவன் என்ற பெயரைப் பெற்றுக் கொடுத்தது. இந்தக் குறையை ஒரு ஞானியிடம் போய் கூறினார். ஞானி அவருக்குத் தீர்வுகூறும் விதமாக அவரை ஓர் அன்னச்சாவடிக்கு அழைத்துச் சென்றார். அங்குச் சாப்பிட்டு விட்டு வெளியில் வருபவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று கேட்கச் சொன்னார்.

அவ்வாறு கேட்கும்போது பலர் சத்திரத்தை நடத்துபவரைப் பாராட்டினர். சிலர் ‘முன்புபோல் தரமுள்ள உணவு இப்போது இல்லை என்றனர். இன்னும் சிலர் ‘அப்பா சொத்தைச் செலவு செய்யத் தெரியாமல் இந்தப் பையன் இவ்வாறு செலவு செய்கிறான் என்றனர். இதையெல்லாம் கேட்ட அச்சுதன், “இந்தச் சத்திர முதலாளியும் என்னைப் போல் ஓர் ஏமாளிதான் என்றான். பின் சத்திர முதலாளியை நேரில் சந்தித்து, “இந்த விமர்சனங்களை எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள்? என்னால் கேட்க முடியவில்லையே!” என்றார்.

அதற்குச் சத்திரக்காரர், “என் சூழ்நிலை மற்றும் பின்புலத்தை அறியாமல் பேசுபவர்களை நான் கருத்தில் கொள்வதில்லை. நல்ல காரியம் செய்ய நான் முடிவெடுத்தேன்; அதன்படி செய்கிறேன். அதனால் பிறர் விமர்சனங்களைக் கண்டு எனக்கு விருப்பு, வெறுப்பு ஏற்படவில்லை. அவர்களை நான் கருத்தில் கொள்வதில்லை என்றார்.

விருப்பு வெறுப்பின்றித் தீர்ப்பிடுங்கள். உயர்ந்தோனுக்கும் தாழ்ந்தோனுக்கும் ஒன்று போல் செவிகொடுங்கள் என்று இணைச்சட்டம் 1:17 கூறுகின்றது. ஒரு மனிதன் தனிப்பட்ட வாழ்வில் எப்படி வாழ்ந்தாலும், பொதுவாழ்வில் பலருக்கும் பயன்பட்டு வாழவேண்டுமென்றால், விருப்பு வெறுப்புகளைக் களைந்துதான் வாழவேண்டும். உதாரணமாக, ஒரு நீதிபதி என்றால் மக்கள் பணியில் இருக்கும் அவர் விருப்பு வெறுப்புகளைக் களைந்து, சரியான முடிவெடுத்து, மக்களுக்கு  நல்ல தீர்ப்புகளை வழங்கவேண்டும்.

இன்னும் கூறவேண்டுமென்றால் ஒரு திருக்குறளையே இக்குறளுக்கு மேற்கோளாகக் காட்ட முடியும்.

இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்

துன்ப முறுதல் இலன் என்கிறது குறள் 628.

அதாவது, உடம்பிற்கு இன்பம் விரும்பாதவனாய், அதற்கு வரும் துன்பத்தை ‘இயல்புதானே என்பவன், மனம் தளர்ந்து துன்பப்பட மாட்டான்.

எனவே, விருப்பு வெறுப்புகளைக் கடந்து உண்மையை அறிவோம்.