தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு மாபெரும் தலைமுறை மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. பல்லாண்டு காலம் திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய இருபெரும் துருவங்களைச் சுற்றியே சுழன்று கொண்டிருந்த மாநில அரசியல், இன்று ஒரு புதிய திசையை நோக்கித் திரும்பியுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) தலைவர் திரு. ச. ஜோசப் விஜய், மக்களின் பேராதரவுடன் தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஆட்சிக்கட்டிலில் அமர்ந்திருப்பது ஒரு சாதாரண அதிகார மாற்றம் மட்டுமல்ல; அது ஒரு தலைமுறை மாற்றத்தின் வெளிப்பாடே!
இந்தத்
தேர்தல் முடிவுகள் தமிழ்நாட்டின் வாக்காளர்களுடைய அறிவார்ந்த
முதிர்ச்சியைப் பறைசாற்றுகின்றன என்று ஒருசாராரும், கல்வியறிவு பெற்ற மாநிலமாக இருந்தாலும் மக்கள் தெளிவற்றே இன்னும் உள்ளனர் என்ற விமர்சனம் மறுபுறம் எழுந்தாலும், ஒரு கட்சிக்குத் தனிப்பெரும்பான்மையை வழங்கி, ‘அதிகார மதம்’ தலைக்கேற அனுமதிக்காமல், அதேசமயம் ஒரு புதிய மாற்றத்திற்கு வழிவகுக்கும் வகையில் த.வெ.க.வைத் தனிப்பெரும் கட்சியாக மக்கள் தேர்ந்தெடுத்துள்ளது பெரிதும் வியப்பளிக்கிறது. இந்தத் தொங்கு சட்டசபை போன்ற சூழலிலும், தமிழ்நாட்டில் முன்னெப்போதும் கண்டிராத ஒரு நாகரிக அரசியல் பண்பாடு வெளிப்பட்டிருப்பதாகவும் கருதப்படுகிறது.
மாநிலத்தின்
நலன் கருதியும், மதச்சார்பற்ற கொள்கைகளைக் காக்கும் பொருட்டும், இந்தியக் கம்யூனிஸ்ட் (CPI), மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்ட் (CPI-M), விடுதலைச்
சிறுத்தைகள் கட்சி (வி.சி.க.)
மற்றும் இந்திய யூனியன் முசுலிம் லீக் (IUML) ஆகிய
கட்சிகள் த.வெ.க.
ஆட்சியமைக்க நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியதுடன், ஆட்சியிலும் பங்குபெறுவது அரசியல்
தளத்தில் ஒருபுறம் பெரிதும் பாராட்டப்படுகிறது. மறுபுறம், தி.மு.க.-வுடனான தங்களின் நீண்டகால உறவைத் தொடர்ந்துகொண்டே அதேசமயம், தமிழ்நாட்டில் பா.ச.க.
போன்ற சக்திகள் குழப்பத்தைப் பயன்படுத்தி ஊடுருவுவதைத் தடுப்பதற்காக எடுக்கப்பட்ட இந்த முடிவு பல விமர்சனத்திற்கும் உள்ளாகியிருக்கிறது.
இந்தச்
சூழலில், ஒவ்வொரு கட்சியின் செயல்பாடுகளையும் நாம் சற்றே சீர்தூக்கிப் பார்க்கவேண்டும். த.வெ.க.
அரசுடன் அமைச்சரவையில் பங்கெடுக்காமல், வெளியே இருந்து ஆதரவளிப்பதாக வி.சி.க.வும் இடதுசாரிகளும் அறிவித்தபோதும், ‘ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு’ என்று வி.சி.க.
முன்பு முழங்கியது போலவே, மாநில உரிமைகளுக்காக தி.மு.க. அணியிலேயே
நீடிப்போம் என்றதுடன், இன்று அமைச்சரவையில் பங்கெடுத்திருப்பது பெரிதும் விமர்சிக்கப்படுகிறது.
ஆயினும்,
த.வெ.க.வுக்கு
ஆதரவளிக்க காங்கிரஸ் முன்வந்த போதிலும், அவர்கள் விதித்த நிபந்தனைகள் பெருமளவில் விவாதத்திற்கு உள்ளாகியுள்ளன. பா.ச.க.வை எதிர்க்கவேண்டும் என்ற நிபந்தனை
அவசியமானது என்றாலும், அமைச்சரவையில் இடம் கோரியது அவர்களின் அதிகார வேட்கையையே காட்டுகிறது என்றே விமர்சிக்கப்படுகிறது. 60 ஆண்டுகளாக தமிழ்நாட்டின் ஆட்சியதிகாரத்தை இழந்த நிலையில், முதுகில் குத்திவிட்டு அணிமாறிச் சென்றார்கள் என்ற விமர்சனத்திற்கு காங்கிரஸ் ஆளாகியுள்ளது. தி.மு.க.விடம் நாகரிகமான முறையில் விடைபெறாமல் சென்ற அவர்களின் அணுகுமுறை முதிர்ச்சியற்ற அரசியலின் வெளிப்பாடே!
எடப்பாடி
பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. இன்று சிதறுண்டு
கிடக்கிறது. உட்கட்சிப் பூசல்களும், எடப்பாடியார் தலைமைக்கு எதிரான போக்கும் அக்கட்சியைப் பலவீனப்படுத்தியுள்ளன. சட்டமன்ற உறுப்பினர்கள் பிரிந்து சென்று விஜய்க்கு ஆதரவளிக்கும் சூழல் உருவானால், அது அ.தி.மு.க.-வின் அடித்தளத்தையே
அசைத்துவிடும். மதவாதத்தைச் சுமந்துவரும் கட்சிகளை தமிழ்நாட்டில் மக்கள் என்றும் நிராகரிப்பார்கள் என்பதை அ.தி.மு.க. உணரத் தவறியதன்
விளைவே இந்தத் தோல்வி.
மேலும்,
தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பாதை என்பது கல்வி, மருத்துவம் மற்றும் சமூக நீதியை உள்ளடக்கிய ‘திராவிட மாடல்’ வளர்ச்சியாகவே இருந்து வந்துள்ளது. விஜய் தலைமையிலான புதிய அரசு, இந்த முற்போக்கான திட்டங்களைச் சிதைக்காமல் தொடரவேண்டும் என்றே அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
தமிழ்நாடு
இன்று தேசிய அளவில் மனிதவள மேம்பாட்டில் சிறந்து விளங்குவதற்குத் திராவிட இயக்கங்கள் அமைத்துக் கொடுத்த வலுவான அடித்தளமே காரணம் என்றால் அது மிகையல்ல. விஜய் அரசு இந்த வளர்ச்சிப் பாதையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லவேண்டுமே தவிர, அதைச் சீர்குலைத்துவிடக் கூடாது.
“நான் தவறு செய்யமாட்டேன்; மற்றவர்களைத் தவறு செய்யவிடமாட்டேன்” என்று
முழங்கிய விஜய், நிர்வாகத்தில் ஒளிவுமறைவற்றத் தன்மையையும் நேர்மையையும் நிலைநாட்டவேண்டும் என்றே மக்கள் விரும்புகின்றனர். வெறும் பரப்புரைகளால் மட்டுமே மக்களைத் திருப்திப்படுத்திவிட முடியாது; களப்பணியும் நேர்மையான செயல்பாடுகளுமே நிலைத்து நிற்கும் ஆட்சியைத் தரும் என்பதை ஆட்சியாளர்கள் மறந்துவிடக்கூடாது.
இந்தப்
புதிய ஆட்சியின் தற்போதைய ‘தேன்நிலவுக் காலங்களின்’ மகிழ்ச்சியில்
‘ஏன் மக்கள் மாற்றத்தை விரும்பினார்கள்?’ என்ற கேள்வியையும் நாம் மறந்துவிடக்கூடாது. பாரம்பரியக்
கட்சிகள் மற்றும் இயக்கங்கள் மக்களை குறிப்பாக, இளைய தலைமுறையை நெருங்கத் தவறிவிட்டனவோ என்பதையும் மீளாய்வு செய்து பார்க்கவேண்டியுள்ளது. மேடைப்பேச்சுகளும், பழைய முழக்கங்களும் இன்றைய எண்மத் தொழில்நுட்பத் (டிஜிட்டல்) தலைமுறைக்கு உவப்பானதாக இல்லை என்பதையும் நாம் புரிந்தாகவேண்டும்.
த.வெ.க.வினர்
வீடு வீடாகச் சென்று, ஒவ்வொரு குடும்பத்தையும் உணர்வுப்பூர்வமாக நெருங்கியதே அவர்களின் வெற்றியின் இரகசியம் என்றும் கணிக்கப்படுகிறது.
அறிவார்ந்த
வளர்ச்சிக்குத் தேவையான திட்டங்களைத் தி.மு.க.
அரசு கொண்டு வந்த போதிலும், அதை மக்களிடம் முறையாகக் கொண்டு சேர்க்கத் தவறியதும், அடிமட்ட அளவில் நடந்த ஊழல்களுமே அதிருப்திக்குக் காரணமாயின என்றும் விமர்சிக்கப்படுகிறது.
அதேசமயம்,
சாதி அரசியலைத் தவிர்த்துவிட்டு ஓர் அமைதிக் கிளர்ச்சி மூலம் மக்கள் மதவாதத்தையும் சாதியப் பாகுபாட்டையும் தேர்தல் பணப் புழக்கத்தையும் நிராகரித்திருக்கிறார்கள் என்பதே உண்மை!
தமிழ்நாட்டிற்கு
இன்று தேவைப்படுவது, தனிநபர் துதிபாடும் அரசியலோ அல்லது வசைபாடும் அரசியலோ அல்ல; மாறாக, மாநில நலம் சார்ந்த நிலைப்பாடும் நாகரிக அரசியலுமே! வாரிசு அரசியல் என்பது இந்தியச் சமூக அமைப்பில், ஒன்றிய, தமிழ்நாட்டு அரசியல் சூழலில் தவிர்க்க முடியாதது. ஆனால், வாரிசாக வருபவர் தகுதியோடும், மக்களுக்கான சேவை மனப்பான்மையோடும் வருகிறாரா? என்பதே கேள்வி. வாரிசு என்பதற்காக மட்டுமே ஒருவரைக் கண்மூடித்தனமாக ஆதரிப்பதும் எதிர்ப்பதும் நலமான அரசியலாகாது.
விஜய்
முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு மேனாள் முதலமைச்சரையும், அரசியல் முன்னோடிகளையும் சந்தித்தது ஒரு நல்ல அரசியல் பண்பின் வெளிப்பாடே. இத்தகைய நாகரிகமான அணுகு முறைகள் தொடரவேண்டும் என்பதே மக்கள் விருப்பம்.
ஆளுங்கட்சியும்
எதிர்க்கட்சியும் நிறை மரியாதையுடன் செயல்படுவதே ஓர் ஆரோக்கியமான மக்கள் அரசியலுக்கு அழகாகும்.
தமிழ்நாட்டு
மக்கள் த.வெ.க.மீது மிகப்பெரிய நம்பிக்கையை வைத்துள்ளனர். கோட்-சூட் அணிந்து நவீனத்துவத்தின் அடையாளமாகப் பதவியேற்ற விஜய், தமிழ்நாட்டின் தொன்மையான கலாச்சாரம், பண்பாடு, மரபுகளைக் காக்கவேண்டும்; கல்வி, மருத்துவம் மற்றும் தொழில் துறைகளில் உண்மையான நவீனத்துவத்தைக் கொண்டுவர வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர். முற்போக்கான திட்டங்களைத் தொடர்வதும், மாநில உரிமைகளுக்காக உறுதியாக நிற்பதுமே அவருக்கு ஆதரவளித்த கட்சிகளுக்கும் மக்களுக்கும் அவர் செய்யும் உண்மையான கைம்மாறு.
இறுதியாக,
மாநிலத்தின் வளர்ச்சி என்பது வெறும் புள்ளி விவர எண்களில் அல்ல; மாறாக, அது எளிய மக்களின் புன்னகையில் இருக்கிறது. தமிழ்நாடு மக்கள் நலம் சார்ந்ததொரு மாநிலமாகவும், இந்தியாவிற்கே வழிகாட்டும் நாகரிக அரசியலின் தளமாகவும் திகழவேண்டும்.
புதிய
அரசு மக்களின் நம்பிக்கையைக் காத்து, சமத்துவத்தையும் சமூக நீதியையும் என்றும் நிலைநிறுத்தட்டும்!
அன்புத்
தோழமையில்,
அருள்முனைவர்
செ.
இராஜா
@ இராஜசேகரன்
முதன்மை
ஆசிரியர்