ஏ.ஐ. நாம் செய்யும் வேலைகளுக்குப் பதிலாக அமையுமா? அல்லது மனிதர் எதிர்கொள்ளும் சிக்கலைத் தீர்க்குமா? என்பது தொடரும் வாதப் பொருளாகவே இருப்பதைப் பார்க்கிறோம்.
கி.மு. 5-ஆம் நூற்றாண்டின் புகழ்பெற்ற கிரேக்க தத்துவஞானி சாக்ரடீஸ், “எழுத்துமுறை மனித நினைவாற்றலைப் பாதிக்கும்” என்றார்.
அதாவது, எழுத்துமுறை முன்னேற்றத்தின் அடையாளம் என்ற கருத்தை முன்னிறுத்தவில்லை.
ஈராயிரம்
ஆண்டுகளுக்குப்பின் தாமஸ் ஆல்வா எடிசன் என்ற விஞ்ஞானி மின்விளக்கு, திரைப்படக் கருவிகளை உருவாக்கினார் என்பதை அறிவோம். இவர் திரைப்படங்கள் பாடப்புத்தகங்களுக்கு மாற்றாக அமையுமென்றும், மனித அறிவைப் புகட்ட சினிமா உதவும் என்றார். இவ்வாறான கருத்துகள் இவர்களின் படைப்புகள் பழையவற்றை மாற்றியமைக்குமா? அல்லது புதிய திறன், தகவல்-செய்தி பரவலுக்கு உதவுமா? என்பதைத் தெளிவுபடுத்தவில்லை. அதே நிலைதான் இன்று ஏ.ஐ. தொழில்நுட்ப
உலகிலும் நிலவுகிறது.
இன்றைய உலகம்
21-ஆம்
நூற்றாண்டின் தொடக்கத்தில் ஏ.ஐ.-யின்
பிரிவான கற்கும் இயந்திரத் (Machine learning)
தொழில்நுட்பம், நிரலாற்றல் (programming) இல்லாமலே தரவுகள் அடிப்படையில் கற்று மேம்படுத்திக்கொள்ளும் திறனைத் தந்தது. ஜியாஃப்ரே ஹிண்டன் என்பவரின் நரம்புவலை இயந்திரச் சிந்தனை (Deep learning)
தொழில்நுட்பம் இயந்திரத் திறனை மேலும் உயர்த்தியது. இதன்மூலம் பிம்பங்களை (images
recognition) அறிதல், பேச்சைப் புரிந்துகொள்ளுதல் (speech
recognition) போன்ற திறனுடன் ஏ.ஐ. துரிதமாக
மக்களிடம் சென்றடைந்தது.
இத்தகைய
ஏ.ஐ. சார்ந்த தொழில்நுட்ப
முன்னேற்றங்கள்மேல் கட்டப்படும் இன்றைய பொருளாதாரம் சமநிலையில் இல்லை என்ற பார்வையும் உள்ளது. ஏற்றத்தாழ்வு நிறைந்த சூழலில்
உலகம் இன்று ஏ.ஐ.யோடு
பயணிக்கத் தொடங்கிவிட்ட நிலையில், சமுதாயம் தன்னைத் தயார்படுத்திக் கொண்டிருக்கிறதா? என்பது ஒருபுறமிருக்க, ஏ.ஐ.-யின்
வளர்ச்சி நாடுகளுக்கிடையே நிலவும் வேறுபாடுகளின் இடைவெளியை மேலும் அதிகரிப்பதாகவும் உணரப்படுகிறது. குறிப்பாக, ஆசியா, கிழக்குத் தீவு நாடுகளின் பொருளாதாரச் சமநிலையின்மை, அண்டை மற்றும் மேற்கத்திய நாடுகளுடன் ஈடு கொடுக்க இயலாமை என்பவை எவ்விதத்தில் ஏ.ஐ. தொழில்நுட்பம்
அனைவருக்குமானதாக (inclusive) இருக்கும் என்றும் சிந்திக்க வைக்கிறது.
இன்றைய
ஏ.ஐ.யின் வளர்ச்சி
முற்றிலும் இயந்திரத்தைச் சார்ந்தே இருப்பதை அறிவோம். ஏ.ஐ.-க்குத்
தேவையான வன்பொருள் முதல் அதன் இயக்கம்வரை அனைத்தும் மின்சாரத்தையே நம்பி உள்ளது. ஏ.ஐ. எவ்வளவு
வரவேற்கப்படுகிறதோ அல்லது வளர்கிறதோ அதே விகிதத்தில் மின்சாரத் தேவையும் உயர்ந்துகொண்டே போகும் என்பதில் எவ்விதச் சந்தேகமுமில்லை. இந்நிலையில் 2030 ஆண்டுக்குள் ஏ.ஐ. சார்ந்த
தரவு மையங்களின் மின் தேவை மூன்று மடங்கு அதிகரிக்குமென்றும், இதற்கேற்ப தயார்படுத்த இயலாத நிலத்தடி எரிபொருளையே நம்பியிருக்கும் நாடுகள் ஏ.ஐ.யின்
பயனைப் பெறுவதில் திண்டாடும் நிலை ஏற்படலாம் என்றும் கருதப்படுகிறது. நாளுக்கு நாள் மின்சார உற்பத்திக்கும் - தேவைக்கும் உள்ள இடைவெளியை நம் அன்றாட மின் பயன்பாட்டின் கட்டண உயர்விலிருந்தே அறிந்துகொள்கிறோம்.
ஏறக்குறைய
25% ஆசிய-பசிபிக் கடல் நாடுகள் இன்று இணையதளத் தொழில்நுட்பத்தை அடையாமலிருப்பதும், ஸ்மார்ட் ஃபோன்களைப் பயன்படுத்துவதில் பெண் வர்க்கத்தினர் குறைந்த விகிதத்திலிருப்பதும், டிஜிட்டல் தொழில்நுட்பம் கணிசமான அளவில் சமுதாயத்தில் அனைவரையும் சென்றடையவில்லை என்பதாகக் கருதப்படுகிறது.
இது
ஒருபுறமிருக்க, சில நாடுகள்
மின் உற்பத்தியை அதிகரிக்க தங்கள் உள்நாட்டுக் கட்டமைப்பை வேகமாக உருவாக்குவதும்,
சில நாடுகள் இதில் முற்றிலும் பின்தங்கியிருப்பதும், ஏ.ஐ. சார்ந்த
பொருளாதாரப் பயன்கள் பின்தங்கிய பிரிவினரிடம் சென்றடையாமல் போகும் என்றும் கூறப்படுகிறது.
ஏ.ஐ.யின்
எதிர்காலம்
ஏ.ஐ.யின் எதிர்காலம்
மிகவும் ஆர்வமும் நம்பிக்கையூட்டுவதாவும் உள்ளது என்றாலும், ஒவ்வொரு நாளும் ஏ.ஐ. புதிய
வடிவமெடுப்பதும், ஏ.ஜி.ஐ.
(Artificial General Intelligence) என்ற அடுத்தகட்ட
நிலையை நோக்கி நகர்வதும் விஞ்ஞானிகள் மற்றும் தத்துவ ஞானிகளிடையே கவலையையும் விவாதத்தையும் எழுப்பியுள்ளது. ஏனென்றால், இயந்திரம் மனிதத்திறனை மிஞ்சிய நிலையில் (ஏ.ஜி.ஐ.)
அதற்கான கட்டுப்பாடு, பாதுகாப்பு நெறிமுறை பற்றியும், இதனால் ஏற்படும் விளைவுகளைக் குறித்தும் கேள்விகள் எழுகின்றன.
எந்த
ஒரு தொழில்நுட்பமும் மனிதக் கட்டுப்பாட்டிலிருப்பதும், மனித இனத்திற்குப் பயனுள்ளதாய் இருப்பதுமே சமுதாயத்தின் எதிர்பார்ப்பு. இதற்கான பதிலை அடுத்து வரும் ஆண்டுகளின் ஏ.ஐ.யின்
நகர்வுகளே தீர்மானிக்கும் என்றே கருதப்படுகிறது.
21 -ஆம் நூற்றாண்டின் கட்டமைப்பு
18 -ஆம் நூற்றாண்டின்
தொழில்புரட்சி, நீராவி எஞ்சினையும், இயந்திர உற்பத்தியையும் உலகிற்கு அளித்தது. இதனைப் பயன்படுத்தி 19 -ஆம் நூற்றாண்டில் முன்னேறிய நாடுகளின் தனிமனித வருமானமும், மனித ஆயுள்காலமும் வெகுவாக அதிகரித்தன. இந்த ஓட்டத்தில் பங்குபெற இயலாத நாடுகள் இதன் பயன்களைப் பெறமுடியாமல் போனநிலையை இன்று ஏ.ஐ. உருவாக்கலாமென்று
ஐ.நா. சபையின் யு.என்.டி.பி. (UNDP) அறிக்கை
எச்சரித்துள்ளது.
எவ்வாறு
நம் அன்றாடத் தேவைக்கு மின்சாரம், சாலைவசதி போன்றவை அடிப்படையாக அமைந்துவிட்டனவோ, அதேபோன்று 21-ஆம் நூற்றாண்டின் கட்டமைப்புகளில் ஒன்றாக உருவெடுக்கும் ஏ.ஐ.-யின்
பயன் மக்கள் அனைவருக்கும் பரவலாகக் கிடைப்பது அவசியமும் சமூக நீதியுமாய் இருக்கும் என்று கருதப்படுகிறது.
இந்நூற்றாண்டு
புதியதொரு தொழில் எழுச்சி யுகத்தைப் படைக்கவேண்டுமென்றால், அதற்கு ஏ.ஐ. மட்டும்
காரணமாய் அமையாது; அதை நாம் எவ்வாறு சமுதாயத்தில் செயல்படுத்துகிறோம் என்பதில்தான் இருக்கும்.