news-details
சிறப்புக்கட்டுரை
பேச்சுரிமை (வலையும் வாழ்வும் – 46)

மல்லிகா பேகம் சாலையோர இட்லிக்கடை ஒன்றை நடத்தி வந்தாள். இளம் வயதிலேயே காதல் திருமணம் செய்துகொண்டதால், அவளை அவளுடைய குடும்பத்தில் யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. ஒரே ஊரில் இருந்தபோதும் இன்றுவரை அக்குடும்பத்திலிருந்த யாரும் அவளோடு பேசுவதில்லை.

பள்ளத்தில் உருண்டோடும் சக்கரத்தைப்போல ஆண்டுகள் பல வேகமாகத் தலைதெறிக்க ஓடிவிட்டன. ஆனாலும், இரு குடும்பத்தாருக்கும் இடையே இருந்த கோபம் மட்டும் தீரவில்லை.

மல்லிகாவிற்கு இப்போது நாற்பது வயதிருக்கும். பிள்ளைகளை நன்றாகப் படிக்க வைத்திருந்தாள். ஆனாலும், தனக்கும் தன் குடும்பத்திற்கும் சோறுபோட்ட இந்தச் சாலையோர இட்லிக்கடையை மட்டும் விட்டுச்செல்ல அவளுக்கு மனம் வரவில்லை.

காலையிலும் மாலையிலும் மட்டும் இட்லிக் கடை திறந்திருக்கும். மாவாட்டுவது, இட்லி சுடுவது, சந்தைக்குச் சென்று பொருள்கள் வாங்குவது என்று அவளுடைய வாழ்க்கை எப்போதும் ஆவியாய் பறந்து கொண்டிருந்தது. அவளுடைய கணவரும் பிள்ளைகளும் மாமியாரும் அவ்வப்போது உதவி செய்வதுமுண்டு.

மல்லிகா பேகத்தின் அண்ணன், அவர் மகள் பாத்திமாவைத் தேர்வு நாள்களில் பள்ளிக்குத் தன் பைக்கில் வைத்து அழைத்துச்செல்வார். சீக்கிரம் செல்லவேண்டும் என்பதால் வேறு வழியில்லாமல் மல்லிகாவின் கடையில்தான் இட்லி வாங்கிச்செல்வார்கள். ஆனால், அவர்களுக்குள் ஒட்டுமில்லை, உறவுமில்லை என்பதுபோல இருப்பார்கள். அந்த ஊரில் வேறுகடை இல்லையென்பதால், மல்லிகாவிடமே இட்லி வாங்கவேண்டிய கட்டாயமும் அவர்களுக்கு இருந்தது. ஆனாலும், மல்லிகா தன் அண்ணன் மகளுக்கு இட்லி பொட்டலத்தில் கூடுதலாக இட்லி ஒன்றையோ அல்லது வடை ஒன்றையோ வைக்காமல் இருந்ததே இல்லை.

ஒருநாள் தன் போனில் கியூ.ஆர். கோடு வழியாகப் பணம் செலுத்திக்கொண்டிருந்த பாத்திமாகியூ.ஆர். கோடுல காசு போகல, அப்பா! உங்ககிட்ட இருபது ரூபாய் சில்லறை இருக்குமா?’ என்று பக்கத்துப் பெட்டிக்கடையில் நின்றுகொண்டு பீடி பிடித்துக்கொண்டிருந்த தன் அப்பா மன்சூரிடம் கேட்டாள் பாத்திமா.

தன் சட்டைப் பாக்கெட்டைப் பார்த்துக்கொண்டேஇல்லையேமாஎன்றார் மன்சூர். தான் விரோதம் பாராட்டும் தன் தங்கையிடமிருந்து எப்படி ஓசிக்கு இட்லி வாங்குவது? மன்சூருக்கு ஏதோபோல் இருந்தது.

காசில்லனா பிரச்சினையில்ல, நாளைக்கு வரும்போது கொடுமாஎன்று இட்லிப் பொட்டலத்தை எடுத்து பாத்திமாவின் கைகளில் திணித்தாள் மல்லிகா பேகம்.

பாத்திமாவிற்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. இட்லிப் பொட்டலத்தை வாங்கவா? அல்லது வேண்டாமா? என்று எண்ணிக் கொண்டிருந்தபோதே, ‘ஓடிப்போனவ கையிலிருந்து பிச்சையெடுக்கவா உன்ன பெத்தேன்?’ என்று சொல்லிக்கொண்டே பாத்திமாவின் கையிலிருந்த இட்லிப் பொட்டலத்தை வாங்கி கீழே வீசியெறிந்தார் மன்சூர்.

தரையில் விழுந்து கட்டவிழ்ந்து சிதறிக்கிடந்த இட்லிப் பொட்டலத்தைப்போல எத்தனையோ ஆண்டுகளாகக் கட்டிவைக்கப்பட்டிருந்த அவர்களின் கோபம் பெரும் சண்டையாக வெடித்தது.

சண்டையைப் பலரும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர். வார்த்தைப் போர் எப்போது முடியும் என்பது யாருக்கும் தெரியவில்லை. பாத்திமாவிற்குக் கடைசித் தேர்வு எழுதச் செல்ல நேரமாகிறது. என்ன செய்வதென்று அறியாமல் தன் கைக்கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டே பசியில் நின்றுகொண்டிருந்தாள் பாத்திமா.

பேசாமலிருப்பது எவ்வளவிற்குப் பிரச்சினையை வருவிக்குமோ, அதேபோல அதிகமாகத் தேவையற்றதைப் பேசுவதும் பல்வேறு இக்கட்டுகளையும் பிளவுகளையும் கொண்டுவரும். பேச்சுரிமை என்பது இந்திய நாட்டினுடைய அரசமைப்புச் சட்டம் அதன் குடிமக்களுக்குத் தரும் சட்டப் பாதுகாப்பு எனலாம். இந்திய அரசமைப்பின் 19(1)(a) பிரிவானது, அனைத்துக் குடிமக்களுக்கும் பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரத்திற்கான அடிப்படை உரிமையை உறுதி செய்கிறது. இதன் மூலம் அவர்கள் பேச்சு, எழுத்து, அச்சு அல்லது ஊடகங்கள் மூலம் தங்கள் கருத்துகளைச் சுதந்திரமாக வெளிப்படுத்த அனுமதிக்கப்படுகிறார்கள். இந்திய அரசமைப்பின் பிரிவு 19(2)-இன் அடிப்படையில் சில வரம்புகளும் உள்ளன. இதன் அடிப்படையில் இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு (Sovereignty and integrity of India), மாநிலத்தின் பாதுகாப்பு (Security of the State), வெளிநாடுகளுடனான நட்புறவு (Friendly Relations with Foreign Nations), பொது ஒழுங்கு (Public Order), கண்ணியம் அல்லது ஒழுக்கம் (Decency or Morality), நீதிமன்ற அவமதிப்பு (Contempt of Court), அவதூறு (Defamation), ஒரு குற்றத்திற்குத் தூண்டுதல் (Incitement to an offense) போன்றவைகளுக்குக் குந்தகம் அல்லது விதிமீறல் ஏற்படாதவாறு பேச்சுரிமை மற்றும் கருத்துச்சுதந்திரம் இருக்க வேண்டும் என்பதை இச்சட்ட வரம்பு எடுத்துரைக்கிறது. எனினும், ‘தி பியூச்சர் ஆப் ப்ரீ ஸ்பீச் (The Future of Free Speech) அமைப்பின் 2025-ஆம் ஆண்டுக்கான பேச்சுரிமைக் குறியீட்டில் இந்தியா 62.6 புள்ளிகளைப் பெற்று 33 நாடுகளில் 24-வது இடத்தைப் பிடித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு வலுசேர்க்கும் விதத்தில் மார்ச் 23, 2026 அன்றுதி இந்துபத்திரிகை வெளியிட்டுள்ள கட்டுரையில், 2014 முதல் 2021 வரை முடக்கப்பட்ட URL மற்றும் இணையதளக் கணக்குகளின் எண்ணிக்கை 470-லிருந்து 9,800-ஆக உயர்ந் துள்ளது என்கிறது. அதிலும் குறிப்பாக, மத்திய அரசுக்கு எதிராகக் கருத்து கூறுபவர்களின் இணையதளக் கணக்குகள் முடக்கப்படுவதாக அக்கட்டுரை செய்தி வெளியிட்டுள்ளது.

தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000-இன் பிரிவு 69A-படி, அரசு ஒரு கணக்கை முடக்க வேண்டுமெனில், அதற்கான சரியான காரணங்களை வழங்கவேண்டும்; ஆனால், 2009-ஆம் ஆண்டின் விதி 16-ஐப் பயன்படுத்தி இணைய தளத்தை முடக்கும் நடவடிக்கைகளை அரசு இரகசியமாக வைக்கிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தங்கள் கணக்கு ஏன் முடக்கப்பட்டது என்ற காரணம் தெரியாததால், அவர்களால் நீதிமன்றத்தை நாட முடிவதில்லை.

ஒரு நபரின் முழு சமூக ஊடகக் கணக்கை அல்லது இணைய தளத்தை முடக்குவது என்பது அவரை டிஜிட்டல் முறையில் அந்நியப்படுத்துவதற்குச் (Digital Exile) சமம். இது கருத்துச் சுதந்திரத்தைப் பறிப்பதோடு, ஒரு நல்ல சனநாயகத்திற்குப் பதிலாக அதிகாரத்துவ ஆட்சிக்கே வழிவகுக்கும் என்று இக்கட்டுரை எச்சரிக்கிறது.