திரு அவை என்கிற சங்க ஏட்டின் எண் 31-இல் குருகுலத்தாரும், திரு அவையின் இசைவு பெற்ற துறவற நிலையினரும் நீங்கலாக ஏனைய கிறித்தவ நம்பிக்கையாளர்களைக் குறிப்பதே ‘பொதுநிலையினர்’ என்ற சொல். திரு அவைச் சட்டம் 225:2 மற்றும் கத்தோலிக்கக் கிறித்தவ மறைக்கல்வி ஏட்டின் எண் 897 ஆகியவற்றிலும் ‘பொதுநிலையினர்’ என்ற சொல் இவ்வாறே விளக்கப்படுகிறது. ஆன்மிகம் என்பது மனிதனின் அக மற்றும் புற வாழ்வைக் குறிப்பிடும் சொல். நற்செய்தி மதிப்பீடுகளுக்கு ஏற்பவும் (Gospel Values and Charisms), தனி வரங்களுக்கு ஏற்பவும் வாழும் புனித வாழ்வே ஆன்மிக வாழ்வாகும்.
மனிதனின்
சிந்தனை, சொல், செயல் இவற்றை நிர்ணயிக்கும் அகக் காரணிகள் ஆன்மிகத்தை இயக்கும் சக்திகளாகும். கிறித்தவ இறைநம்பிக்கை, பிறரன்பு இவை இரண்டும் ஆன்மிகத்தின் முக்கியப்
பரிமாணங்களாகும்.
பொதுவான
கிறித்தவ ஆன்மிகம் என்பது கிறிஸ்துவை ‘மீட்பர்’ என அறிவித்து, அவரை
அனுப்பிய தந்தையைக் கடவுளாக ஏற்று, அவரால் படைக்கப்பட்ட மனிதரைச் சகோதர அன்புடன் நேசித்து, கிறிஸ்துவுக்குச் சான்று பகரும் வாழ்க்கை வாழ்வதாகும்.
பொதுநிலையினரின்
ஆன்மிகம் என்பது திருமண
மானவர்கள் தங்களது திருமண வார்த்தைப்பாடுகளுக்குப் பிரமாணிக்கமாக வாழ்வதும், வார்த்தையாலும் வாழ்க்கையாலும் கிறிஸ்துவுக்கு உயிருள்ள சாட்சிகளாக வாழ்வதுமாகும். திருமணமாகாதவர்கள் கிறித்தவ நம்பிக்கை, பிறரன்பு இவற்றைக் கடைப்பிடித்து, அருளடையாளங்களின் மூலம் தங்களது ஆன்மிக வாழ்வில் இறையனுபவத்தைப் பெறுவதாகும்.
இல்லற
வாழ்வில் இறை வெளிப்பாட்டையும் இறைப் பாதுகாப்பையும் உணர்ந்து வாழ்வதுதான் பொதுநிலையினரின் ஆன்மிகமாகும்.
பொதுநிலையினர்
திருமுழுக்கு மற்றும் உறுதிப்பூசுதல் வழியாகவும், நற்கருணை மற்றும் ஒப்புரவு அருளடையாளங்களின் மூலமும் ஆன்மிக எழுச்சி பெற்று, கிறிஸ்துவின் போதிக்கும் பணியிலும், புனிதப்படுத்தும் பணியிலும், ஆளும் பணியிலும் அருள்பணியாளர்களின் வழிநடத்துதலில் பங்கேற்றுத் தமது கிறித்தவக் கடமைகளை நிறைவேற்றுவதே பொதுநிலையினர் ஆன்மிகத்தின் மற்றொரு பரிமாணம்.
பொதுநிலையினரின்
ஆன்மிகத்தின்
தனித்தன்மைகள்
1) பொதுநிலையினர்
உலகக் காரியங்களில் ஈடுபட்டு உழைக்கும்போது கிறிஸ்துவின் மதிப்பீடுகளான உண்மை, அன்பு, நீதி, நேர்மை, பணிவு, துணிவு, உள்ளத்தூய்மை, கீழ்ப்படிதல், தாழ்ச்சி, சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம் ஆகியவற்றைக் கடைப்பிடித்து மறு கிறிஸ்துவாக வாழ்வதாகும்.
தொடக்கத்
திரு அவையில் முதல் பொதுநிலையினர் மற்றும் மறைச்சாட்சிப் புனிதருமான ஸ்தேவான் (திப 7:60) முதல் இக்காலத் திரு அவையில் பொதுநிலையினரின் புனிதரான தேவசகாயம் வரை எத்தனையோ பொதுநிலையினர், கிறித்தவ நம்பிக்கைக்காகத் தங்களது உயிரைக் கொடுத்துள்ளனர் என்று திரு அவை வரலாறு கூறுகின்றது.
புனித
பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்தில் (4:8-9) கூறியிருப்பதுபோல, பொதுநிலையினராகிய நாம் உண்மையானவை எவையோ, கண்ணியமானவை எவையோ, நேர்மையானவை எவையோ, தூய்மையானவை எவையோ, விரும்பத்தக்கவை எவையோ, பாராட்டுதற்குரியவை எவையோ, நற்பண்பு உடையவை எவையோ, போற்றுதற்குரியவை
எவையோ அவற்றையே மனத்தில் நிறுத்தி, சொல்லிலும் செயலிலும் வெளிப்படுத்துவதே பொதுநிலையினரின் ஆன்மிகமாகும்.
பொதுநிலையினரின்
ஆன்மிகம் அருள்பணியாளர்களின் மற்றும் துறவறத்தாரின் ஆன்மிகத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டது. அருள்பணியாளர்கள் தங்கள் வார்த்தைப்பாட்டிற்குப் பிரமாணிக்கமாக வாழ்ந்து, தங்களது அருள்பணிகளை ஆற்றுவதில்தான் அவர்களின் ஆன்மிகம் உள்ளது. துறவறத்தார் தங்களது வார்த்தைப்பாட்டிற்கு ஏற்ப தூயவாழ்வு வாழ்ந்து தங்களது தனிவரத்திற்கேற்ப நற்செய்திப் பணியாற்றுவதே அவர்களின் ஆன்மிகமாகும்.
அருள்பணியாளரும்
துறவறத்தாரும் பொதுநிலையினரும் கிறித்தவ ஆன்மிகத்தைக் கடைப்பிடித்து, கிறிஸ்துவுக்குச் சான்று பகரும் புனித வாழ்வு வாழ - மறு கிறிஸ்துவாக வாழ அழைக்கப்பட்டிருக்கிறோம் என்பதுதான் கிறித்தவ ஆன்மிகமாகும். அதுவே, கிறிஸ்துவின் ஆன்மிகமும் ஆகும்.
எனவே,
புனித மாற்கு நற்செய்தியில் (16:17-18) கூறப்பட்டுள்ளதுபோல, முழு நம்பிக்கையுடன், புனித பவுல் 1கொரிந்தியர் 13:4-8-இல் கூறியிருக்கும் அன்பின் பண்புகளை வாழ்ந்து காட்டி, புனித மத்தேயு 25 35, 36 ஆகிய அதிகாரங்களில் கூறப்பட் டுள்ள அறச்செயல்கள் அனைத்தையும் வாழ்க்கை நெறியாக்கி, இறைவனின் ஆசிர் பெற்றவர்களாய் நிலைவாழ்வைப் பெறத் தகுதியான புனித வாழ்வு வாழ்வதே பொதுநிலையினரின் ஆன்மிக வாழ்வு.
புனித
பவுல் 2000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த கிறித்தவர்களுக்குக் கூறிய அறிவுரைகள் அனைத்தும் இன்று வாழும் நமது வாழ்வுக்கும் பொருந்துமானால், அதைக் கடைப்பிடித்து, “இனி வாழ்வது நானல்ல; கிறிஸ்துவே என்னில் வாழ்கிறார்” என்று
துணிவுடன் கூறும் அளவுக்கு நமது வாழ்வு நம்பிக்கை, அன்பு, நிறைந்த வாழ்வாக இருந்தால், அதுவே பொதுநிலையினராகிய நமது ஆன்மிகம் ஆகும்.
புனித
மாற்கு நற்செய்தியில் (16:17-18) இயேசு குறிப்பிடும் நம்பிக்கை கொண்டோராய் வாழ்வதே பொதுநிலையினரின் ஆன்மிகத்தின் அளவுகோல். அதாவது, “நம்பிக்கை கொண்டோர் பின்வரும் அரும்அடையாளங்களைச் செய்வர்; அவர்கள் என் பெயரால் பேய்களை ஓட்டுவர்; புதிய மொழிகளைப் பேசுவர்; பாம்புகளைத் தம் கையால் பிடிப்பர்; கொல்லும் நஞ்சைக் குடித்தாலும், அது அவர்களுக்குத் தீங்கிழைக்காது. அவர்கள் உடல்நலமற்றோர்மீது கைகளை வைக்க அவர்கள் குணமடைவர்.” நாம் இத்தகைய இறைநம்பிக்கையுடன் வாழ்வதே பொதுநிலையினரின் ஆன்மிகமாகும்.
புனித
மத்தேயு நற்செய்தியில் (25:35,40) நமது ஆண்டவர் இயேசு கூறுவதுபோல, “என் தந்தையிடமிருந்து ஆசி பெற்றவர்களே, வாருங்கள். உலகம் தோன்றியது முதல் உங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் ஆட்சியை உரிமையோடு பெற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில் பசியாய் இருந்தேன், நீங்கள் உணவு கொடுத்தீர்கள்; தாகமாயிருந்தேன், தணித்தீர்கள்; அந்நியனாய் இருந்தேன், என்னை ஏற்றுக்கொண்டீர்கள்; நான் ஆடையின்றி இருந்தேன், எனக்கு ஆடை அணிவித்தீர்கள்; நோயுற்றிருந்தேன், என்னைக் கவனித்துக் கொண்டீர்கள்; சிறையிலிருந்தேன், என்னைத் தேடிவந்தீர்கள்’ என்பார்.
‘மிகச் சிறியோராகிய என் சகோதர-சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததை எல்லாம் எனக்கே செய்தீர்கள் என உறுதியாக உங்களுக்குச்
சொல்கிறேன்” என்பார்.
தூய
ஆவியாரின் துணையுடன் ஊனியல்பின் செயல்களான பரத்தமை, கெட்டநடத்தை, காம வெறி, சிலைவழிபாடு, பில்லிசூனியம், பகைமை, சண்டை சச்சரவு, பொறாமை, சீற்றம், கட்சி மனப்பான்மை, பிரிவினை, பிளவு, அழுக்காறு, குடிவெறி, களியாட்டம் முதலியவற்றை விலக்கி (கலா 6:19-21), தூய ஆவியின் கனிகளான அன்பு, மகிழ்ச்சி, அமைதி, பொறுமை, பரிவு, நன்னயம், நம்பிக்கை, கனிவு, தன்னடக்கம் (கலா 6:22) நிறைந்த தூய வாழ்வு வாழ்வதே பொதுநிலையினரின் ஆன்மிகம்.
பொதுநிலையினரின்
புனிதர் தேவசகாயம் போல மறைச்சாட்சியாக வாழ்வதுதான் முழுமையான சாட்சிய வாழ்வு, நமது கிறித்தவ நம்பிக்கை, பிறரன்புடன் தூய வாழ்வு வாழ்வது; அதுவே பொதுநிலையினரின் ஆன்மிகம்.