news-details
கவிதை
தித்திக்கும் திருப்பாடல்

நற்பேறுபெற்றவர் யார்? (திபா 1:1)

அவர் பொல்லாரின் சொல்லின்படி நடவாதவர்;

பாவிகளின் தீயவழி நில்லாதவர்;

இகழ்வாரின்

குழுவினில் அமராதவர்!

 

அன்புத் தந்தையே,

நற்பேறு பெற்றவராகிடவேண்டும்

மூன்று நிபந்தனைகள்!

ஊதாரி மகனோ,

பொல்லாரின் சொல்லின்படி நடந்தான்,

பாவிகளின் தீயவழி நின்றான்,

இகழ்வாரின் குழுவில் அமர்ந்தான், நடந்தான், நின்றான், அமர்ந்தான்.

முடிவு பன்றிக் கூடாரமாயிற்று! (லூக் 15: 13-16)

 

மூன்று ஆலோசனைகள் பொன்னானவை;

நல்லாரின் சொல்படி நடக்கவேண்டும்,

நடப்பதற்கான அடிச்சுவடுகளை

இயேசு விட்டுச் சென்றுள்ளார் (1 பேது 2:21).

மறு கிறிஸ்துவாக

வாழ்ந்த புனிதர்கள்

(கலா 2:20, எபி 13:7)

வாழ்வின் நிறைவை

மகுடமாய்த் தந்துள்ளனர்

(1கொரி 11:1; பிலி 3:17).

நல்ல மனச்சான்றின் வழியாக

தூய ஆவியார் போதிக்கிறார்.

இதுதான் வழி;

இதிலேயே நடந்து செல்  (எசா 30:21)

போதகராக அறிவுறுத்துகிறார்!

நன்றி தந்தையே!

 

தூயோரின் நல்வழியில்

நிற்கவேண்டும்.

பாவத்திற்கு எதிரான

நல்லாருடன்

நீதி, சமத்துவத்திற்குச் சார்பான

போராளிகளுடன் சாதி, மதம்,

இனம், மொழி கடந்து (யாக் 4:7)

குரல் கொடுப்பவருடன்

நிற்கவேண்டும் (எசா 1:16-19).

நற்செய்தியாக வாழ்பவருடன்

கரம் கோர்க்கவேண்டும்.

கரங்களை இணைப்பதற்காக

நன்றி தந்தையே!

 

இறைப்புகழ் மனிதரோடு

அமரவேண்டும்.

முணுமுணுப்பவர்களிடமோ

அவநம்பிக்கை மனிதரிடமோ

தோழமை கூடவே கூடாது.

அது தொற்றுநோய்

எம்மைத் தீண்டவிடக்கூடாது.

என்ன நேரிடினும் நன்றி

(1தெச 5:18) என்று எப்போதும்

இறைப்புகழ் பாடுபவர்

தோழர்களாகிட

வேண்டும் (திபா 34:1-5).

தூய தோழர்களைத்

தருவதற்காக

நன்றி தந்தையே! (திபா 119:63).

 

யாரோடு நடக்க, நிற்க,

அமரவேண்டும்?

புரிந்து கொண்டோம் தந்தையே!

உலகம் பாவத்துள் கிடக்கிறது (தொநூ 6:5).

உலகில் வாழ்ந்தாலும்

யாம் உலகத்திற்குரியவரல்லர் (யோவா 17:16).

விண்ணில் உம்மோடு

இருப்பவர்கள் (எபே 2:6).

விண்ணக வாசனையுடன்

வாழ்ந்திட வரம் தாரும்

தந்தையே!