மானுடத்தின் மாட்சியைப் போற்றும் உன்னதத் திருநாளான ஆண்டவருடைய விண்ணேற்றப் பெருவிழாவை இன்று மகிழ்வோடு கொண்டாடுகிறோம். விண்ணேற்றம் என்பது ஒரு மனிதரின் பிரிவோ அல்லது ஒரு காலத்தின் முடிவோ அல்ல; மாறாக, அது கடவுளுக்கும் மனிதகுலத்திற்கும் இடையிலான இடைவெளியை உடைத்து, தெய்வீகம் மனித இதயங்களில் குடியேறிய ஒரு மகத்தான பரிமாற்றமாகும். “இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்” (மத் 28:20) என்ற இயேசுவின் அந்த இறுதித் திருவாக்கு, காலங்களைக் கடந்து நம் காதுகளில் இன்றும் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. இந்த வாக்குறுதிதான் இன்றுவரை திரு அவையை இயக்கும் உயிர்நாடியாகவும் துடித்துக் கொண்டிருக்கிறது.
“இயேசு விண்ணகத்திற்கு ஏறிச்சென்றபோது நம்மிடமிருந்து பிரிந்து விடவில்லை; அதேபோல அவர் பூமிக்கு இறங்கி வந்தபோது விண்ணகத்தை விட்டுப் பிரிந்துவிடவில்லை” என்பார்
புனித அகுஸ்தின். இந்த ஆழமான இறையியல் உண்மைதான் இன்றைய விழாவின் மையம். இயேசு விண்ணேற்றம் அடையும் முன்னர் ஒரு தந்தை தன் பிள்ளையிடம் பொறுப்புகளை ஒப்படைக்கும்போது காட்டும் அதே நம்பிக்கையை, அவர் தம் சீடர்களிடம் காட்டுகிறார். தமக்கெனத் தந்தையாம் இறைவன் தந்த பணியை முழுமையாய் நிறைவேற்றி, அப்பணி உலகில் தொடர்ந்து நடைபெறத் தமது ஆவியைத் தருவதாகச் சீடர்களுக்கு வாக்களித்து, வானகம் திரும்புகிறார்.
இன்றைய
முதல் வாசகத்தில், திருத்தூதர் பணிகளின் ஆசிரியர் புனித லூக்கா, இயேசுவின் உலகளாவிய பணிகளை மீண்டும் ஒருமுறை சிந் தித்துப் பார்க்க நம்மை அழைக்கிறார். இயேசு விண்ணேற்றம் அடைந்த நாள்வரை அவர் செய்தவை, கற்பித்தவை அனைத்தையும் நாம் கூர்ந்து நோக்கவேண்டும் (திப 1:2). இயேசு வெறும் வார்த்தைகளை உதிர்க்கும் பேச்சாளர் அல்லர்; அவர் ஒரு செயல்வீரர். அவர் தம்மை முன்னிலைப்படுத்திக் கொள்ளாமல், இறைத்தந்தையின் ஆட்சி இவ்வுலகில் மலர உழைத்தார். அந்த ஆட்சி அன்பின் அடிப்படையில் அமையவேண்டுமே தவிர, வெறும் சட்டங்களிலோ அல்லது சடங்குமுறைகளிலோ சிறைப்பட்டிருக்கக் கூடாது என்பதில் உறுதியாய் இருந்தார். மானுட நலனைப் பேணுவதே உண்மையான ஆன்மிகம் என்பதை வாழ்ந்து காட்டிய அவர், அதற்கு முரணாக நின்ற அதிகார வர்க்கத்தை எதிர்த்தார். அதன் விளைவாக, அரசியலும் ஆன்மிகமும் கைகோர்த்து, அவரைச் சிலுவையில் அறைந்தன. ஆனால், சாவை வென்று உயிர்த்த ஆண்டவர், விண்ணேற்றம் அடையும்வரை தம் சீடர்களோடு தங்கி, அவர்களைத் தகுதியுள்ள சாட்சிகளாக உருவாக்கினார். இயேசு விண்ணேற்றம் அடையுமுன் சீடர்களுக்கு வழங்கும் இறுதிப்பணி, இன்றைய நற்செய்தியில் ஒரு கட்டளையாக ஒலிக்கிறது: “சீடராக்குங்கள் - திருமுழுக்குக் கொடுங்கள் - கற்பியுங்கள்.”
இயேசு
தரும் கட்டளைகள் ஒரு போர் வீரனுக்குத் தரப்படும் ஆணை போன்றது அல்ல; மாறாக, ஒரு தந்தை தன் பிள்ளையிடம் குடும்பப் பொறுப்புகளை ஒப்படைப்பது போன்றது.
முதலாவதாக,
‘மக்களினத்தாரைச்
சீடராக்குதல்’ என்பது,
தாம் உவமைகள் வழியாக உணர்த்திய உலகளாவிய மீட்பை எல்லைகளின்றி அனைவரும் பெற்றிடச் செய்து, பாரபட்சமற்ற ஒரே இறையாட்சிச் சமூகத்தை உருவாக்குவதைக் குறிக்கிறது. இரண்டாவதாக, ‘மூவொரு கடவுளின் பெயரால் திருமுழுக்குக் கொடுத்தல்’
என்பது, சடங்குகளைக் கடந்து தீமையிலிருந்து நன்மைக்கும், தன்னலத்திலிருந்து பிறர்நலத்திற்கும் கடந்துசெல்லும் ஒரு புது வாழ்வின் அடையாளமாகவும், சமூக முன்னேற்றத்திற்காகத் தம்மை முழுவதுமாகக் கையளிக்கும் அர்ப்பணிப்பாகவும் அமைகிறது. மூன்றாவதாக, ‘கட்டளைகளைக் கற்பித்தல்’ என்பது,
இயேசு சிலுவை வரை வாழ்ந்து காட்டிய அந்தத் தியாகமிக்க, தூய, மன்னிக்கும் அன்பின் புதிய கட்டளையை உலகிற்குப் போதிப்பதாகும்.
சுருக்கமாகக்
கூறினால், அன்பினால் அனைவரையும் ஒருங்கிணைத்து, அருளடையாளத்தால் புனிதப்படுத்தி, கிறிஸ்துவின் வாழ்வுமுறையைப் பிறருக்குக் கற்றுக்கொடுப்பதே இவ்விழா நமக்குத் தரும் வாழ்நாள் பணியாகும்.
வாழ்நாள்
பணியாகிய இறையாட்சியை அறிவிக்கும் இக்கடமையில், நாம் ஒருபோதும் தனித்து விடப்படுவதில்லை என்பதை உறுதிப்படுத்தும் விதமாக, தாம் உலகம் முடியும்வரை சீடரின் நற்செய்திப் பணிக்கு உறுதுணையாக இருப்பதாகவும் வாக்களிக்கிறார் இயேசு. அதாவது, நற்செய்திப் பணியைத் தொடங்கியவரும் அவரே; அதைத் தொடர்ந்து வழிநடத்துபவரும் அவரே என்ற மகிழ்ச்சியான சிந்தனை இந்த வாக்குறுதியில் வெளிப்படுகிறது.
இந்த
வாக்குறுதி திடீரென வழங்கியதல்ல; மாறாக, அவரது பணிவாழ்வு முழுவதும் பல்வேறு சூழல்களில் இது வெளிப்பட்டதைக் காண்கிறோம். சீடர்கள் புயலில் சிக்கித் தவித்தபோது, “துணிவோடிருங்கள்; நான்தான், அஞ்சாதீர்கள்” (மத்
14:27) என்று தேற்றியவர் அவரே. “இரண்டு அல்லது மூன்று பேர் என் பெயரால் கூடும்போது அவர்கள் நடுவே இருப்பேன்”
(18:20) என்று சமூக உறவுகளுக்குள் குடியேறியவரும் அவரே.
இயேசு
மறைநூலை விளக்கும்போதும் (லூக் 24:27), அப்பத்தைப் பிட்டுப் பகிரும்போதும் சீடர்கள் அவரது பிரசன்னத்தை உணரத் தொடங்கினர் (24:30-31). “நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடமாட்டேன்” (யோவா
14:1,18); “வேறொரு துணையாளரை உங்களுக்கு அருள்வேன்”
(14:16) என்று
தாம் முன்மொழிந்த அதே பாதுகாப்பை, இன்று விண்ணேற்றத்தின் வாயிலாக உறுதிப்படுத்துகிறார். ஆகவே, எல்லா மக்களையும் உள்ளடக்கிய ஓர் அன்பின் சமுதாயத்தைக் கட்டியெழுப்பும் நமது அன்றாடப் போராட்டங்களில் உயிர்த்த ஆண்டவர் நம் ஒவ்வொரு மூச்சிலும் செயலிலும் உடனிருந்து வழிநடத்துகிறார் என்பதை இத்திருநாள் நமக்கு மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்துகிறது.
ஆண்டவரின்
விண்ணேற்றப் பெருவிழா நமது அன்றாட வாழ்விற்கு வழங்கும் மூன்று முக்கிய வாழ்வியல் பாடங்களை நம் இதயத்தில் ஏந்துவோம்.
முதலாவதாக,
நற்செய்தி அறிவிப்பு என்பது ஆயருக்கோ அல்லது துறவியருக்கோ மட்டுமே உரிய பணி அல்ல; அது ஒவ்வொரு கிறித்தவக் குடும்பத்திற்கும் விடுக்கப்பட்ட பொதுவான அழைப்பு என்பதை உணர்வோம். அன்று இயேசுவிடமிருந்து இந்தக் கட்டளையைப் பெற்றவர்கள் சாதாரண குடும்பத் தலைவர்களும் தொழிலாளிகளுமே. எனவே, இந்தப் பணி நமது இல்லங்களில் ஒரு வாழ்வியல் முறையாக மலரவேண்டும். குறிப்பாக, தம்பதியர் ஒருவருக்கொருவர் மன்னித்து ஏற்றுக்கொண்டு ஒப்புரவாகும்போது, அங்கே நற்செய்தி உயிர் பெறுகிறது. பெற்றோர் நற்செய்தியை அடுத்த தலைமுறைக்குக் கடத்தும் மறைப்பணியாளர்களாக மாறவேண்டும். மேலும், நமது இல்லங்களின் கதவுகள் விருந்தோம்பலுக்காகவும், ஏழைகளின் நலனுக்காகவும் திறந்திருக்கும்போது, நமது குடும்பம் ஒரு ‘நடமாடும் நற்செய்தியாக’ மாறுகிறது.
இவ்வாறு, அன்றாட உறவுகளில் வெளிப்படும் சுயநலமற்ற அன்பே சமூகத்திற்கு நாம் வழங்கும் மிகப் பெரிய நற்செய்தி அறிவிப்பாகும்.
இரண்டாவதாக,
நற்செய்திப் பயணத்தில் சவால்களும் தடைகளும் இயல்பானவை என்பதை உணர்வோம். இயேசுவின் பணிவாழ்வு எப்படித் துன்பங்களால் நிறைந்திருந்ததோ, அதுபோலவே நமது நற்செய்திப் பயணமும் துயரங்கள் நிறைந்ததாக இருக்கலாம். ஆனால், ‘நாம் ஒருபோதும் தனிமையில் இல்லை’ என்ற ஆழமான நம்பிக்கை அந்தத் தடைகளைத் தகர்க்கும்.
இயேசுவின்
உடனிருப்பு ஒரு நிழலைப் போன்றது. அது வெளிச்சத்தில் நமக்குத் தெரியாமல் இருக்கலாம்; ஆனால், அது எப்போதும் நம்மைத் தொடரும். “மகனே, மகளே... கலங்காதே, உன் கரங்களைப் பிடித்திருப்பது நான்தான்”
என்று விண்ணேற்றம் கண்ட ஆண்டவர் நமக்கு வாக்குறுதி அளிக்கிறார். நாம் சோர்ந்துபோகும் போதெல்லாம் அந்த ‘உடனிருப்பின் வாக்குறுதி’ நம்மை
மீண்டும் எழுந்து நடக்கச்செய்யும் உந்துசக்தியாக மாறும்.
மூன்றாவதாக,
நமது இறுதி இலக்கு விண்ணகம் என்பதை உணர்ந்து, மண்ணக வாழ்வைத் தூய்மையாக வாழ்வோம். நாம் பூமியில் வாழ்ந்தாலும், நமது உண்மையான குடியுரிமை விண்ணகத்தில் இருக்கிறது; விண்ணேற்றம் அடைந்த இயேசு இப்போது எங்கும் நிறைந்திருக்கிறார்; அவர் நோயுற்றவரின் படுக்கையருகிலும், ஏழையின் கண்ணீரிலும், நம்பிக்கையற்றவரின் இதயத்திலும் குடிகொண்டிருக்கிறார்; மண்ணகத்தின் மடியில் நின்றுகொண்டு விண்ணகத்தைப் பார்த்த சீடர்களுக்கு, மண்ணகத்தையே விண்ணகமாக மாற்றும் இரகசியத்தை இயேசு கற்றுக்கொடுத்தார். பசியோடும் நோயோடும் அகதிகளாகவும் வாடும் மாந்தருக்கு நாம் செய்யும் சிறு உதவியும் இயேசுவுக்கே செய்யப்படுகிறது. இந்த உணர்வு நம்மை வெறும் சொற்களின் மனிதராக அல்லாமல், செயல்களின் மனிதராக மாற்றுகிறது.
நிறைவாக,
விண்ணேற்றம் என்பது இயேசு நம்மை விட்டுத் தூரமாகச் சென்ற நிகழ்வு அல்ல; மாறாக, அவர் நம் ஒவ்வொருவருடைய வாழ்விலும் ஆழமாகக் குடியேறிய உன்னத நிகழ்வு. அவர் எங்கோ எட்டாத வானத்தில் இல்லை; மாறாக, துயருறுவோரின் கண்ணீரைத் துடைக்கும் கரங்களிலும், பசித்திருப்போர் அருந்தும் உணவிலும், தனிமை யில் வாடுவோருக்கு ஆறுதல் தரும் அன்புக் குரலிலும் உயிர்ப்போடு இருக்கிறார்.
“எல்லா நேரங்களிலும் நற்செய்தியை அறிவிக்க முயற்சியுங்கள்; தேவைப்பட்டால் மட்டும் வார்த்தைகளைப் பயன்படுத்துங்கள்” என்ற
புனித பிரான்சிஸ் அசிசியாரின் கூற்றிற்கேற்ப, நாம் நற்செய்தியின் கருவிகளாக மாறுவோம். மண்ணகத்தின் மடியில் நின்றுகொண்டு, விண்ணகத்தின் வாக்குறுதியைச் சுமந்தபடி, துணிவோடும் நம்பிக்கையோடும் புறப்படுவோம். உயிர்த்த ஆண்டவர் உலகம் முடியும் வரை எந்நாளும் நம்மோடு இருக்கிறார்.