நமது நலனுக்காக மனிதராகப் பிறந்த மூவொரு இறைவனின் இரண்டாவது நபராகிய இயேசு கிறிஸ்துவைப் பெற்றெடுத்ததால், கன்னி மரியா உண்மையிலேயே ‘இறைவனின் தாய்’ என்று எபேசு திருச்சங்கமானது கற்பிக்கின்றது.
1. மீட்பரது
பிறப்பின் மறைபொருளைப் பற்றிச் சிந்தித்துப் பார்த்தோமானால், அது கிறித்தவர்கள் கன்னி மரியாவை இயேசுவின் தாயாக அழைப்பதோடு மட்டுமல்லாமல், அவரை ‘இறைவனின் தாய்’ என்று அங்கீகரிக்கவும் வழிவகுத்திருக்கிறது. கி.பி. 431-இல்
எபேசு திருச்சங்கத்தால் ‘அன்னை மரியா இறைவனின் தாய்’ என்று ஆர்ப்பரிப்போடு அறிவிக்கப்படுவதற்கு முன்பே, கிறித்தவத்தின் தொடக்க கால நூற்றாண்டுகளிலிருந்தே இந்த மறையுண்மையானது கிறித்தவ நம்பிக்கையின் பாரம்பரியத்தைச் சார்ந்தது எனக் கருதப்பட்டது.
முதல்
கிறித்தவக் குழுமத்தில், இயேசு தந்தையாம் கடவுளின் மகன் என்பதைச் சீடர்கள் அதிகம் அறிந்ததால், கன்னி மரியா இறைவனின் தாய் அதாவது ‘Theotókos’ என்பது அவர்களுக்கு
மிகவும் தெளிவானது. இப்பெயரானது நற்செய்திகளில் வெளிப்படையாகத் தெரியவில்லையென்றாலும், அவற்றில் ‘இயேசுவின் தாய்’ என்பது குறிப்பிடப்பட்டுள்ளது மற்றும் இயேசுவே கடவுள் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது
(யோவா 20:28; ஒப்பிடுக 5:18; 10:30-33). எப்படியாயினும் கன்னி மரியா ‘கடவுள் நம்மோடு’
(மத் 1:22-23) என்ற பொருளில் ‘இம்மானுவேலின் தாய்’ என்றும் வழங்கப்படுகின்றார். ஏற்கெனவே மூன்றாம் நூற்றாண்டில், பழங்காலத்தில் எழுதப்பட்டதோர் ஏட்டிலிருந்து, பின்வரும் செபத்தை எகிப்திலிருந்த கிறித்தவர்கள் அன்னை மரியாவை நோக்கிச் செபித்ததாக அறியலாம்.
Theotókos என்ற சொல்லானது இந்தப் பழமையான ஆவணத்தில் முதல்முறையாக வெளிப்படையாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது. பிற சமயங்களின் புராண இலக்கியங்களில், ஒரு குறிப்பிட்ட பெண் தெய்வமானது ஏதாவதொரு தெய்வத்தின் தாயாகக் காண்பிக்கப்படுவது வழக்கமாகும். எடுத்துக்காட்டாக, சேயுஸ் (Zeus) எனப்படும்
தெய்வமானது ‘ரேயா’
(Rhea) என்னும்
பெண் தெய்வத்தை அதன் தாயாகக் கொண்டிருந்தது. இந்த வழக்கமானது, இயேசுவின் தாயான கன்னி மரியாவுக்கு Theotókos அதாவது
‘இறைவனின் தாய்’ என்கிற பெயரைக் கொடுக்கப் பெரிதும் உதவியது. எனினும், ‘இறைவனின் தாய்’ என்னும் பெயரானது அதற்குமுன் யாருக்கும் கொடுக்கப்பட்டதில்லை.
எபேசு திருச்சங்கமானது
மரியாவை
இறைவனின்
தாயாக
அறிவித்தது
2. நான்காவது
நூற்றாண்டில் Theotókos அதாவது
‘இறைவனின் தாய்’ என்ற சொல்லானது கிழக்கத்திய மற்றும் மேற்கத்திய நாடுகளில் அடிக்கடிப் பயன்படுத்தப்பட்டு வந்தது. வெகு மக்கள் பக்தியிலும் இறையியலிலும் வெகுவாகப் பயன்படுத்தப்பட்டு வந்த இச்சொல்லாடலானது இன்று திரு அவையினுடைய நம்பிக்கையின் மிகப்பெரிய சொத்தாகிவிட்டது. ஆகவே,
கி.பி. 5-வது நூற்றாண்டில் ‘இறைவனின் தாய்’ என்ற தலைப்பின் சரியான தன்மை குறித்து நெஸ்டோரியுஸ் சந்தேகம் எழுப்பியபோது எழுந்த பெரும் எதிர்ப்பு இயக்கத்தை (protest movement) ஒருவரால் புரிந்துகொள்ள முடியும். உண்மையில், மரியா மனிதராகிய இயேசுவின் தாய் மட்டுமே என்ற நிலைப்பாட்டின் பக்கமாக, மரியா ‘கிறிஸ்துவின் தாய்’ என்பது மட்டுமே கோட்பாட்டு முறையில் சரியானதொரு பொருளாக இருக்க முடியும் என்பதில் நெஸ்டோரியுஸ் உறுதியாய் இருந்தார். கிறிஸ்துவின் ஒற்றுமையை ஒப்புக்கொள்வதில் அவருக்கிருந்த சந்தேகமும், தெய்வீக மற்றும் மனித இயல்புகளுக்கிடையேயான வேறுபாட்டைப் பற்றிய அவரின் தவறான விளக்கமும் நெஸ்டோரியுஸ் இப்பிழையைச் செய்ய வழிவகுத்தது. கி.பி. 431-இல்
கூடிய எபேசு திருச்சங்கமானது அவரது ஆய்வறிக்கையைக் கண்டித்ததுடன், இயேசு கிறிஸ்துவில் உள்ள தெய்வீக மற்றும் மனித இயல்புகளின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்தி மரியாவை, ‘இறைவனின் தாய்’ என்று அறிவித்தது.
3. Theotókos என்ற சொல்லாடலானது ‘இறைவனைப் பெற்றெடுத்தவர்’ என்று
பொருள்படும். முதல் பார்வையில், இது நமக்கு ஆச்சரியமாகத் தோன்றலாம். ‘உண்மையில் ஒரு மனித உயிரினம் எவ்வாறு இறைவனைப் பெற்றெடுக்க முடியும்?’ என்ற கேள்வியையும் நம்மில் எழுப்புகின்றது. இக்கேள்விக்கான திரு அவையின் நம்பிக்கை சார்ந்த பதில் தெளிவாக உள்ளது. அதாவது, மரியாவின் தெய்வீகத் தன்மை என்பது இறைமகனைப் பெற்ற பெண்ணை மட்டுமே குறிக்கின்றதேயொழிய, அவரது தெய்வீகப் பிறப்பைக் குறிக்கவில்லை.
இறைமகன்
தந்தையாம் கடவுளால் அற்புதமான விதத்தில் படைக்கப்பட்டார் மற்றும் எல்லா விதத்திலும் அவருடன் ஒத்திருக்கிறார். இந்த உண்மையில், இயேசுவின் இந்த அற்புதமான பிறப்பில் மரியாவுக்கு எந்தவிதமான பங்குமில்லை. இருப்பினும், 2000 வருடங்களுக்கு முன்பாக இறைமகன் நமது மனித இயல்பை ஏற்று மரியாவின் கருவில் உருவாகிப் பிறந்தார் என்பது முக்கியக் கருத்தாகும். இவ்வாறாக, ‘இறைவனின் தாய்’ என்று மரியாவை அறிவிப்பதில் திரு அவையானது ‘கடவுளாம், வார்த்தை மனுவுருவானவரின் தாய் அவர்’
(Mother of the Incarnate Word, who is God) என்பதை உறுதிப்படுத்த விரும்புகிறது. எனவே, அவரது தாய்மையானது மூவோர் இறைவனுக்கும் விரிவுபடுத்தப்படவில்லை. மாறாக, இரண்டாவது ஆளாகிய இயேசு கிறிஸ்துவுக்கே உரியது. மனித அவதாரம் எடுப்பதில், அம்மனித இயல்பை அவர், அவரிடமிருந்தே (மரியாவிடமிருந்தே) எடுத்தார்.
தாய்மை
என்பது இரு நபர்களுக்கிடையே உள்ள உறவாகும். ஒரு தாய் என்பவள் ஒரு நபருக்கு அவரது உடலைக் கொடுத்த தாய் மட்டுமல்ல; மாறாக, அவரைத் தோற்றுவித்தவர் (அதாவது, அவரைப் பெற்றெடுத்தவர்). இவ்வாறாக, இயேசுவுக்கு அவரது மனித இயல்புக்கேற்ப அவரைப் பெற்றெடுத்ததனால் மரியா இறைவனின் தாயாவார்.
ஆசிர்வதிக்கப்பட்ட
கன்னி
மரியாவின்
ஒப்புதலானது
இயேசுவின்
மனுவுருவாதலுக்கு
முந்தியுள்ளது!
4. மரியாவை
‘இறைவனின் தாய்’ என்று அறிவிக்கும் இந்த ஒரே சொல்லாடலில் மகனையும் தாயையும் பற்றிய தமது நம்பிக்கையைத் திரு அவை வெளிப்படுத்துகிறது. இந்த ஒற்றுமையை மரியாவின் தெய்வீகத் தாய்மையை அறிவிப்பதில், ஏற்கெனவே எபேசு திருச்சங்கத்தில் பங்கெடுத்த திருச்சங்கத் தந்தையர்கள் கிறிஸ்துவின் தெய்வீகத் தன்மையின் மீதான தங்களது நம்பிக்கையை வலியுறுத்த விரும்பியதில் காணலாம்.
இந்தச்
சொல்லாடலால் மரியாவை அங்கீகரிப்பதற்கான தகுதியைப் பற்றிய பண்டைய மற்றும் அண்மையில் மறுப்புகள் இருந்தபோதிலும், எல்லாக் காலத்திலும் உள்ள கிறித்தவர்களுக்கும் இந்தத் தாய்மையின் அர்த்தத்தைச் சரியாக விளக்கியதன் வழியாக, கிறிஸ்துவின் தெய்வீகத்தன்மை மற்றும் ஆசிர்வதிக்கப்பட்ட கன்னி மரியா மீதான அவர்களது நம்பிக்கையின் சிறப்புமிக்கதொரு வெளிப்பாடாக இச்சொல்லாடலை உருவாக்கினர்.
ஒருபுறம்,
திரு அவையானது Theotókos-ஐ
மனுவுருவாதலின் உண்மைக்கு உத்தரவாதம் அளிப்பதாக அங்கீகரிக்கின்றது. ஏனெனில், புனித அகுஸ்தினார் கூறுவதைப்போல, “தாய் கற்பனையாக இருந்தால், கிறிஸ்துவின் சதையும் உயிர்த்தெழுதலின் வடுக்களும் கற்பனையானதாகவே இருந்திருக்கும்” (Tract. in Ev. Ioannis, 8, 6-7); மறுபுறம், திரு அவையும் அவரது மகனாக இருக்க விரும்பியவரால் மரியாவுக்கு வழங்கப்பட்ட மகத்துவமிக்க மாண்பை ஆச்சரியத்துடன் சிந்திக்கவும் கொண்டாடவும் செய்கின்றது.
‘இறைவனின் தாய்’ என்ற சொல்லாடலானது மனுவுருவாதல் வழியாகத் தாழ்நிலையில் இருந்த மனிதனை, இறைமகன் என்னும் தெய்வீக நிலைக்கு உயர்த்திய கடவுளின் இறைவார்த்தையைக் குறிக்கின்றது. நாசரேத்து மரியாவுக்கு வழங்கப்பட்ட உயர் மதிப்பின் வெளிச்சத்தில் இந்தச் சொல்லாடலானது பெண்ணின் பெருமையையும், அவர் பெற்ற உயர்ந்ததோர் அழைத்தலையும் பறைசாற்றுகின்றது. இறைவன் உண்மையில் மரியாவை ஒரு
சுதந்திரமுள்ள மற்றும் பொறுப்பானதொரு நபராகக் கருதுகிறார்; மேலும், அவர் அவரது சம்மதத்தைப்
பெறுகின்றவரை அவரது மகனின் மனுவுருவாதலை நிறைவேற்றவில்லை. எகிப்தில் வாழ்ந்த பண்டைய கிறித்தவர்களின் முன்மாதிரியைப் பின்பற்றி, இறைமக்கள் தங்களை அவரிடம் ஒப்படைப்பார்களாக; ஏனெனில், இறைவனின் அன்னையாகத் திகழும் அவர், தமது இறைமகனிடமிருந்து தீமையிலிருந்து விடுதலை பெறும் அருளையும், முடிவில்லா மீட்பையும் பெற்றுத் தர வல்லவர் ஆவார்.
மூலம்:
John Paul II, Church proclaims Mary Mother of God, in
«L’Osservatore Romano», Weekly Edition in English, 4 December
1996, p. 11.