திருப்பலி முன்னுரை
அன்பான
இறை மக்களே! இன்று நமது தாயாம் திரு அவை ஒரே சித்தம், ஒரே ஞானம், ஒரே வல்லமை கொண்ட மூவோர் இறைவனின் பெருவிழாவைக் கொண்டாடி, உறவில் நிலைத்திருக்க நமக்கு அழைப்பு விடுக்கிறது. அறிவியல் அறிவுக்கு எட்டாத ஆனால், ஆன்மிகத்தால் உணரக்கூடிய உன்னத மறைபொருள் இந்த மூவோர் இறைவன்.
படைக்கும்
தந்தை, திருமகன் வழியாகத் தூய ஆவியின் நிறைவில் இப்பூமியைப் படைத்துப் பராமரித்து வருகிறார். தந்தையின் திருவுளத்திற்குப் பணிந்து மண்ணிற்கு வந்த திருமகன் இயேசு, நமக்காக வாழ்ந்து, துயருற்று, மரித்து மீண்டும் உயிர்த்தெழுந்து, தூய ஆவியானவரின் அருளை நமக்குத் தேடித்தந்தார். தொடக்கம் முதல் அசைவாடிக் கொண்டிருக்கும் அந்தத் தூய ஆவியானவர், திருத்தூதர்களுக்குத் துணையாளராகி, இன்றும் திரு அவையின் உயிராற்றலாக விளங்குகிறார்.
புனித
சியன்னா கத்தரின், “முடிவில்லா மூவோர் இறைவா! கடலின் ஆழத்தைப் போல் நீர் புரிந்துகொள்ள இயலா மறைபொருள்”
என்று வியக்கிறார். ஆம், மூவோர் இறைவனை முழுமையாகப் புரிந்துகொள்ள இயலாவிட்டாலும், அவரின் உடனிருப்பை நம்மால் உணர முடியும். எங்கே ஒற்றுமையும் மன்னிப்பும் இருக்கிறதோ, எங்கே சமத்துவமும் மனத் தூய்மையும் நிலவுகிறதோ, எங்கே உண்மையான அன்பு இருக்கிறதோ அங்கே மூவோர் இறைவன் வாழ்கிறார். நமது உள்ளமும் இல்லமும் மூவோர் இறைவன் தங்கும் ஆலயமாக அமைந்திடவும், இறையுறவிலும் மனித உறவிலும் நாம் நாளும் வளர்ந்திடவும் தேவையான வரம் வேண்டி, இந்தத் திருப்பலியில் பக்தி உணர்வோடு இணைவோம்.
முதல் வாசக
முன்னுரை
இறைவன்
தம்மையே வெளிப்படுத்தும் உன்னத நிகழ்வை இன்றைய முதல் வாசகம் விவரிக்கிறது. சீனாய் மலையில் மோசேவுக்குத் திருக்காட்சி அளிக்கும் ஆண்டவர் தம்மை ‘இரக்கமும் கனிவும் கொண்டவர்; சினம் கொள்ளத் தயங்குபவர்; பேரன்பும் உண்மையும் மிக்கவர்’
என்று அறிமுகப்படுத்துகிறார். இஸ்ரயேல் மக்களைத் தமது உரிமைச் சொத்தாக ஏற்றுக்கொண்ட இறைவனின் அளப்பரிய அன்பைப் பறைசாற்றும் இவ்வாசகத்திற்குப் பக்தி உணர்வோடு செவிமடுப்போம்.
இரண்டாம் வாசக
முன்னுரை
புனித
பவுலடியார் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்தின் நிறைவுப் பகுதி இன்று நமக்கு வாசிக்கப்படுகிறது. கிறிஸ்துவில் நாம் மகிழ்ச்சியோடு வாழவும், நம்மைச் சீர்படுத்திக்கொண்டு அமைதியையும் ஒற்றுமையையும் வளர்க்கவும் அவர் நமக்கு அழைப்புவிடுக்கிறார். “ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அருளும், கடவுளின் அன்பும், தூய ஆவியின் உறவும் உங்கள் அனைவரோடும் இருப்பதாக”
என்ற உன்னத வாழ்த்தின் வழியாக, மூவோர் இறைவனின் ஆசிரைப் பெற்றுத் தரும் இவ்வாசகத்திற்குச் செவிமடுப்போம்.
நம்பிக்கையாளர்
மன்றாட்டுகள்
1. அன்பின்
இறைவா! எம் திருத்தந்தை, ஆயர்கள், பணியாளர்கள் அனைவரும் உம் தெய்வீக ஒன்றிப்பில் நிலைத்திருந்து, மக்களை நற்செய்தி வழியில் வழிநடத்தத் தேவையான வரங்களைத் தரவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
2. உறவுகளின்
ஊற்றே இறைவா! நாங்கள் உலகப் பற்றுகளைவிட உறவுகளுக்கு முதலிடம் கொடுக்க வும், முதியோரைப் போற்றிப் பாதுகாக்கும் நல் மனத்தைப் பெற்றிடவும் வரம் தரவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
3. அமைதியின்
தேவனே! நாடுகளுக்கிடையே நிலவும் போர் மற்றும் வன்முறைகள் ஒழிந்து, மக்கள் சகோதரத்துவத்துடனும் மகிழ்ச்சியுடனும் வாழ அருள்புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
4. ஞானத்தின்
உறைவிடமே! புதிய கல்வியாண்டைத் தொடங்கும் எம் மாணவர்கள் அறிவிலும் ஒழுக்கத்திலும் வளர்ந்து, வாழ்வின் சவால்களில் வெற்றிபெற ஆசியளிக்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.