news-details
கவிதை
மரியின் மகிழ்வான மே மாதமே அருள் தருக!

அம்மா உன்னை நினைத்து மகிழ்ந்திட தந்திட்டாய்

தயங்காமல் தரணிக்கு ஆறுதலை அளித்திட்டாய்

அருளும் ஆசிரும் நிறைவாய் பெற்றிடுவோம் இம்மாதம்!

 

அன்னையே உந்தன் செபமாலை நாள்தோறும் செய்திட

அழைத்திட்டாய் எம்மை இந்த அருள் மாதத்தில்

ஆசையாய் குடும்பத்தோடு கூடிடுவோம் ஆலயத்தில்!

 

பல வண்ணப் பூக்களால் அலங்கரித்தல் அழகாமே!

அழகோவியமே உந்தன் கருணை மட்டும் போதும் அம்மா!

பாடிப்பாடி புகழந்தேத்திட எம்மை அழைத்தாயே!

 

கருணை உந்தன் பார்வை பட்டால் போதுமம்மா

காலமெல்லாம் நின் பணி கிடைத்தலே சுகமம்மா

கால தேவனே உன் கட்டளையைக் கேட்கலாம்!

 

தாயே உன்னைப் புகழ்ந்து பாடிட தந்தாயே

இந்த முழு மாதத்தையும் உன் கருணையால் நிறைத்தாயே

நாள்தோறும் அலங்கரித்திடுவோம் செபமாலையால்!

 

நாதனின் தாயேஆகட்டும்என்றவளே அம்மா!

உன் முகம் பார்த்தால் கவலைகள் காணாதம்மா!

உம் முன் முழந்தாளிட்டால் முழுப்பயனும் எமதம்மா!

 

தாயே இந்த மாதம் எங்களின் வசந்தகாலம் அம்மா

கூடி வருவோம் குதூகலத்தோடு ஆடிப்பாடிடுவோம்

உந்தன் ஆணையாம் செபமாலையை ஏந்திடுவோம்!

 

வாழ்வில் வசந்தங்கள் தந்திட்ட தாயே

வாயார உம்மைப் போற்றி நன்றி நவிலும் மாதமம்மா

நீயின்றி எங்களுக்குத் தஞ்சம் யாரம்மா!

 

எமக்காகத் திருமகனை அளித்திட்ட தாயே

எங்களின் எல்லாமுமான அழகு அன்னையே

குடும்பமாய் கூடி வந்திட்டோம் உம்மை வணங்க!