இன்றைய வேகமான உலகில், இளையோர் பெரும் கனவுகளோடு ஓடிக்கொண்டிருக்கிறார்கள். கல்வி மற்றும் வேலைவாய்ப்பிற்காகப் பலர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி, நகரங்களில் தனியாக வாழத் தொடங்குகிறார்கள். இந்த வாழ்க்கை அவர்களுக்குச் சுதந்திரத்தைத் தந்தாலும், அதனுடன் தன்னைத்தானே கவனித்துக்கொள்ளும் பெரும் பொறுப்பையும் சேர்த்தே வழங்குகிறது.
சூழலும் மனநிலையும்:
ஒரு மனிதன் வாழும் இடமானது அவனது மனநிலையை மெதுவாக வடிவமைக்கிறது. சுத்தமான சூழல் மனத்தை இலகுவாக்கும்; அதுபோன்று, அலட்சியமான சூழல் மனத்தைச் சுமையாக மாற்றும். இது உடனடியாகத் தெரியாவிட்டாலும், நாளடைவில் ஒருவரது வாழ்க்கையைப் பாதிக்கத் தொடங்கும். இதற்கு ஓர் இளம்பெண்ணின் வாழ்க்கைச் சம்பவமே சிறந்த உதாரணம். வேலை நிமித்தமாகத் தனியாக வாழத் தொடங்கிய அவள், ஆரம்பத்தில் சமூக ஊடகங்களிலும் கொண்டாட்டங்களிலும் மூழ்கி இருந்தாள். ‘நேரமில்லை’
என்ற காரணத்தைக் கூறி வீட்டைச் சுத்தம் செய்வதைத் தள்ளிப்போட்டாள். விளைவாக, வீட்டில் குப்பை தேங்கியது போலவே, அவள் மனத்திலும் குழப்பங்களும் பதற்றமும் தேங்கின. ஒரு கட்டத்தில், அது மன அழுத்தமாக மாறுகிறது.
வாழ்க்கையையே முடித்துக்கொள்ளலாம் என நினைத்த நேரத்தில்
தனது வீட்டைக் கவனித்தாள். அவளுக்கு அப்போது ஒன்று தோன்றுகிறது, ‘இந்த
வீடு எப்படி இருக்கிறதோ, என் மனமும் அப்ப டித்தானே இருக்கிறது!’ என்று. தனது முடிவை ஒதுக்கிவைத்துவிட்டு, துடைப்பத்தை எடுத்து வீட்டில் ஒவ்வொரு மூலையையும் சுத்தம் செய்யத் தொடங்கினாள். அது வெறும் வீடு சுத்தம் செய்வது மட்டுமல்ல; அவள் மனச் சிதைவுகளைச் சீரமைக்கும் முயற்சியாகவும் மாறியது.
இன்றைய இளையோரின்
சவால்கள்:
இன்றைய இளையோர் சுதந்திரத்தை மிகவும் விரும்புகின்றனர். இந்தச் சுதந்திரத் தேடலில், அவர்கள் பல நேரங்களில் பாதுகாப்பின்
எல்லைகளை மீறவும் முயல்கிறார்கள். ஆகையால், அவர்களுக்குச் சரியான வழிகாட்டுதலுடன் சுதந்திரத்தை வழங்குவது மிக முக்கியமானது. அவர்கள் தாங்களாக முடிவுகளை எடுக்கக் கற்றுக்கொள்ளும் வாய்ப்புகளைப் பெற்றால், அவர்களின் நம்பிக்கை மற்றும் பொறுப்புணர்வு மேம்படும். மேலும், இன்றைய இளையோருக்கு வெளிப்புறச் சவால்களைவிட, உள்ளுக்குள் நடக்கும் போராட்டங்களே அதிகம். மற்றவர்களுடன் ஒப்பிடுதல், சமூக ஊடகங்களின் தாக்கம், தனிமை மற்றும் தன்னம்பிக்கையின்மை போன்றவை மனத்தை மெதுவாக மாசுபடுத்துகின்றன. தூய்மை என்பது தேகத்தைச் சுத்தமாக வைத்திருப்பது மட்டுமல்ல, அது மனத்தெளிவையும் சார்ந்தது.
மனத்தையும் இதயத்தையும்
சுத்தமாக
வைத்திருக்க சில எளிய
பழக்கங்கள்:
இடத்தைச் சுத்தப்படுத்துதல்:
உங்கள் இருப்பிடத்தைச் சுத்தமாக வைப்பது சுய ஒழுக்கத்தைக் கற்றுத்தரும்.
திரை நேரத்
தணிக்கை:
தினமும் சிறிது நேரம் சமூக ஊடகங்களிலிருந்து விலகிDigital Detox செய்யுங்கள்.
குறிப்பெடுத்தல்:
எண்ணங்களையும் அன்றாடச் சம்பவங்களையும் எழுதும் பழக்கத்தை உருவாக்குங்கள்.
நல்ல சூழல்:
தேவையற்ற ஒப்பீடுகளை நிறுத்திவிட்டு, நல்ல நண்பர்களையும் நேர்மறையான சிந்தனைகளையும் கொண்ட சூழலைத் தேர்வு செய்யுங்கள்.
வாழ்க்கை
கட்டுப்பாட்டில் இல்லாததுபோல் தோன்றும் கடினமான நேரங்களில், அச்சூழலிலிருந்து தப்பிப்பதைத் தவிர்த்துவிட்டு, ஒரு சிறிய இடைவேளை எடுங்கள். சூழலைச் சுத்தம் செய்வதும், செபம் அல்லது தியானம் மூலம் மனத்தை அமைதிப்படுத்துவதும் உள்ளத்தைச் சுத்திகரிக்க உதவும். மேலும், பகுதி நேர வேலை செய்வது, புதிய விளையாட்டுகளை முயற்சிப்பது போன்ற ஆரோக்கியமான செயல்களில் ஈடுபட வேண்டும். இது முழுமையான வளர்ச்சிக்கும் நல்ல பாதையை உருவாக்கும்.
உலகத்தை
மாற்றும் சக்தி கொண்ட இளையோரின் அந்த மாற்றம், வெளியிலிருந்து அல்லாமல் உள்ளிருந்து தொடங்கவேண்டும். ஒரு சுத்தமான இடம், தெளிவான மனம் மற்றும் சமநிலையான வாழ்க்கைமுறை ஆகியவையே உண்மையான வளர்ச்சியின் அடையாளங்களாகும்.
“தூய்மையான உள்ளத்தோர்
பேறுபெற்றோர்...”
(மத்தேயு
5:8).