அன்பு என்பது தனித்துவமானது; எல்லைகள் அனைத்தையும் கடந்து நிற்பது; தனக்கென வாழாமல் பிறருக்கென வாழ்வதில் பெரும் மகிழ்ச்சி காண்பது; தான் நேசிப்பவர்கள் விரும்புவதை முன்னின்று செய்வதில் உள்ளம் பூரிப்பது. தன்னை வருத்தித் தியாகம் செய்வதும், பிறர் நலனில் தன் நலம் காண்பதுமே அன்பின் இலக்கு. தூய அன்போ எல்லாவற்றையும் விஞ்சியது; தன் குழந்தைக்காகத் தன்னையே இழக்கும் ஆற்றல்மிக்கது; தன் பிள்ளைகளுக்காகத் தன்னையே உருக்கித் தரும் தன்மையது. மானிடரின் அன்பே இத்தனை உன்னதமானது என்றால், அதற்கெல்லாம் ஊற்றாக விளங்கும் இறைவனின் பேரன்பு எத்துணை மேலானது!
இன்று
நாம் தூய்மைமிகு மூவொரு கடவுளின் பெருவிழாவைக் கொண்டாடி மகிழ்கின்றோம். இப்பெருவிழா தந்தை, மகன், தூய ஆவியார் எனும் மூவொரு கடவுளின் பேரன்பின் முழுமையை நமக்கு உணர்த்துகிறது.
இன்று
‘சுயநலம்’ எனும்
தீராத நோயில் சமூகம் சிக்கித் தவிக்கும் வேளையில், இந்த மூவொரு கடவுள் பெருவிழா இன்னும் பொருத்தமானதாகவும், கூடுதல் பொருளுள்ளதாகவும் மாறுகிறது. திரு அவையின் வரலாற்றில் பத்தாம் நூற்றாண்டிலிருந்தே இவ்விழா கொண்டாடப்பட்டதற்கான சான்றுகள் இருந்தாலும், 1334-ஆம் ஆண்டு திருத்தந்தை 22-ஆம் யோவான் அவர்களே இவ்விழாவைத் திரு அவை முழுவதும் அதிகாரப்பூர்வமாகக் கொண்டாடப் பணித்தார். இருப்பினும், இவ்விழாவின் வேர்கள் நான்காம் நூற்றாண்டிலேயே ஆழமாக ஊன்றப்பட்டிருந்தன. அக்காலத்தில் ஆரியுஸ் என்ற ஆயர், “இயேசு கடவுள் அல்லர்; அவர் கடவுளின் முதல் படைப்பு மட்டுமே” என்று போதித்து, இயேசுவின் இறைத்தன்மையையும், தந்தைக்கும் மகனுக்கும் இடையிலான சமநிலையையும் மறுத்தார். மூவொரு கடவுள் எனும் பேருண்மையைச் சிதைக்க முயன்ற இந்தத் தவறான போதனையைத் திரு அவை துணிச்சலுடன் எதிர்கொண்டது. கி.பி. 325-இல்
புனித அத்தனாசியுஸ் தலைமையில் கூடிய நைசியா பொதுச்சங்கம், மூவொரு கடவுள் பற்றிய தெளிவான படிப்பினையை வரையறுத்தது.
அன்று
உருவான ‘நைசியா நம்பிக்கை அறிக்கை’,
“இயேசு எல்லாக் காலங்களுக்கும் முன்பே தந்தையிடமிருந்து பிறந்தார்; அவர் உதித்தவர், உண்டாக்கப்பட்டவர் அல்லர்” என்றும், “தூய ஆவியார் தந்தையிடமிருந்தும் மகனிடமிருந்தும் புறப்படுபவர், உயிரளிப்பவர்” என்றும்
முழங்கியது. இந்த நம்பிக்கைப் போராட்டத்தின் வெற்றிக் கொண்டாட்டமே இப்பெருவிழாவின் தொடக்கம். மாறிவரும் இந்த அதிநவீன காலத்தில், அறிவியல் முன்னேற்றங்களுக்கு மத்தியிலும் இறைவனின் மாறாத பேரன்பை நாம் சிந்திப்பது காலத்தின் கட்டாயமாகிறது.
நாம்
ஒவ்வொருவரும் மழலையாய் இருந்தபோது, ‘அம்மா, அப்பா’ என்ற உறவுகளுக்கு அடுத்தபடியாக நமக்கு அறிமுகமான மிக நெருக்கமான உறவு - மூவொரு கடவுளே. நாம் பூவுலகில் கால்பதித்த தருணத்தில், நம்மைக் காண வந்த ஒவ்வொருவரும் நமது பிஞ்சு நெற்றியில் சிலுவை அடையாளம் வரைந்து, இறை ஆசியை நமக்குப் பெற்றுத்தந்தனர். ‘தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே, ஆமென்’ என்ற எளிமையான செபமே நம் நாவுகள் முதன்முதலில் உச்சரிக்கக் கற்றுக்கொண்ட மூவொரு கடவுளின் திருமந்திரம். அந்தப் பேரன்பின் பெயராலேயே நாம் திருமுழுக்குப் பெற்று இறைமக்களாகப் பிறந்தோம்.
நம்மீது
தூய நீர் தெளிக்கப்படும்போதெல்லாம், அந்தப் பெயரைக் கூறி சிலுவை அடையாளம் வரைந்து, நம்மைப் புனிதப்படுத்திக்கொள்கிறோம்.
பாவச்சுமையிலிருந்து நாம் விடுதலை பெற்று மன்னிக்கப்படுவதும், இல்லறம்-துறவறம் என நாம் ஏற்கும்
அனைத்து அருளடையாளங்களும் அதே மூவொரு கடவுளின் பெயராலேயே உறுதிப்படுத்தப்படுகின்றன. நம்முடைய ஒவ்வொரு விடியலும், ஒவ்வொரு செயலும் அந்தத் திருப்பெய ரால் தொடங்கி, அந்தப் பேரன்பிலேயே நிறைவுபெறுகின்றன.
இன்றைய
திருவழிபாட்டு வாசகங்கள் அனைத்தும் மூவோர் இறைவனின் அளப்பரிய பேரன்பை மையப்படுத்துகின்றன. முதல் வாசகத்தில், இஸ்ரயேல் மக்களை அடிமைத்தனத்திலிருந்து மீட்டு, பாலைநிலப் பயணத்தில் உடனிருந்து வழிநடத்திய ஆண்டவர், மோசேவுக்குத் தம் திருப்பெயரை வெளிப்படுத்துகிறார். மோசே சீனாய் மலையில் இறைப்பிரசன்னத்தில் நின்ற போது, இறைவன் கடந்து சென்று தம்மையே “இரக்கமும் பரிவும் உள்ள இறைவன் சினம் கொள்ளத் தயங்குபவர்; பேரன்புமிக்கவர்” (விப
34:6) என்று அறிமுகப்படுத்துகிறார். இஸ்ரயேல் மக்கள் பலமுறை இறைவனுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்து ‘வணங்காக் கழுத்துள்ள மக்களாக’
(34:8) இருந்த போதிலும், இறைவன் அவர்களைக் கைவிடவில்லை; மாறாக, மோசேயின் பரிந்துரையால் அவர்களின் கொடுமைகளையும் பாவங்களையும் மன்னித்து, அவர்களைத் தமது உரிமைச் சொத்தாக மீண்டும் ஏற்றுக்கொள்கிறார். இது மனித வலுவின்மையைத் தாண்டி நிற்கும் இறைவனின் எல்லையற்ற பேரன்பை நமக்கு உணர்த்துகிறது.
பழைய
ஏற்பாட்டில் தம்மை இரக்கமும் பேரன்பும் மிக்கவராக வெளிப்படுத்திய அதே மூவொரு கடவுள், பாவத்தினால் தம்மை விட்டுப் பிரிந்து போன உலகை மீட்கத் தம் ஒரே மகனையே கையளித்ததில் அந்த அன்பின் ஆழம் முழுமைபெறுகிறது. புனித யோவான் குறிப்பிடுவது போல, “உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பளிக்க அல்ல; தம் மகன் வழியாக அதனை மீட்கவே கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார்” (யோவா
3:17). கண்ணுக்குத் தெரியாத இறைத்தந்தையின் பேரன்பு, மானிடருக்குப் புலப்படும் வகையில் அவரது அன்பு மகன் வழியாகவே வரலாற்றில் வெளிப்பட்டது (1யோவா 4:9-10).
கடவுள்
அனைத்து மக்களையும் எவ்விதப் பாரபட்சமுமின்றி நேசிக்கும் ஓர் உன்னதத் தந்தை என்றும், நாம் அனைவரும் அவரது பிள்ளைகள் என்றும் இயேசு நமக்குக் கற்றுத் தந்தார். அந்த அன்பை வெறும் வார்த்தைகளால் மட்டும் சொல்லாமல், “சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்கு”
(பிலி 2:8) தம்மையே உருக்கித் தந்து நிரூபித்தார். இயேசுவின் இந்தத் தன்னலமற்ற, எல்லைகளற்ற தியாக அன்பினால்தான் நாம் மீண்டும் இறைத்தந்தையின் உரிமைச் சொத்தாகவும், அவரது சொந்த மக்களாகவும் மாறினோம்.
இன்றைய
இரண்டாம் வாசகத்தில் புனித பவுல், “ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அருளும், கடவுளின் அன்பும், தூய ஆவியின் உறவும் உங்கள் அனைவரோடும் இருப்பதாக”
(2கொரி 13:13) என்று வழங்குகின்ற வாழ்த்து வெறும் சடங்கு வார்த்தைகள் அல்ல; அது மூவோர் இறைவனின் இயல்பை விளக்கும் உன்னதமான நம்பிக்கை அறிக்கையாகும். மீட்பராகிய திருமகனிடமிருந்து வழியும் ‘அருள்’,
படைப்பின் மூலமான தந்தையிடமிருந்து பொழியும் ‘அன்பு’ மற்றும் நம்மை இறைவனோடும் பிறரோடும் பிணைக்கும் தூய ஆவியின் ‘உறவு’ ஆகியவற்றை இது குறிக்கிறது. இதன் மூலம், நாம் ஒவ்வொருவரும் மூவொரு இறைவனின் தெய்வீக அன்பின் வட்டத்தில் ஒன்றிணைந்து வாழ அழைக்கப்படுகிறோம் என்பதைப் புனித பவுல் தெளிவுபடுத்துகிறார்.
மூவொரு
கடவுளின் இந்தப் பேரன்பு நம் அன்றாட வாழ்விற்கு மூன்று முக்கியப் பாடங்களைக் கற்றுத்தருகிறது. முதலாவதாக, விலகி நிற்காத ஈடுபாடு. இன்றைய ‘தனிநபர்வாதம்’ எனும்
நோய்க்கு மூவொரு கடவுளின் உறவே மருந்து. ‘எனக்குத் தெரிந்தால் போதும், நான் நலமாக இருந்தால் போதும்’ என்ற சுயநலத்தை விடுத்து, ஒருவருக்காக ஒருவர் அர்ப்பணிப்புடன் வாழவேண்டும். விட்டுக் கொடுப்பதில் தாழ்வு இல்லை, அங்கேயே தெய்வீகம் பிறக்கிறது. மற்றவர்களோடு இணைந்து வாழ்வதே உண்மையான வாழ்வு.
இரண்டாவதாக,
பன்மைத்துவத்தில் ஒருமைப்பாடு. தந்தை, மகன், தூய ஆவி என மூவரும் வெவ்வேறு
பணிகளைச் செய்தாலும், நோக்கத்தில் ஒன்றாக இருக்கிறார்கள். நம்மிடம் உள்ள வெவ்வேறு திறமைகளும் பண்புகளும் பிளவுகளை உண்டாக்காமல், சமூகத்தின் நன்மைக்காக ஒன்றிணைய வேண்டும். “அன்பு இருக்கும் இடத்தில் ஒற்றுமை இருக்கும்”
என்ற அன்னை தெரசாவின் வாக்குப்படி, வேற்றுமையில் ஒற்றுமை காண்போம்.
மூன்றாவதாக
‘தியாகம் கலந்த பகிர்தல்.’ தந்தை தம் மகனை உலகிற்குத் தந்தது என்பது ஒரு சாதாரண கரம் கொடுக்கும் செயல் அல்ல; அது தம் இதயத்தையே கொடுத்த உன்னதச் செயல். கடவுள் நம்மிடம் எதிர்பார்ப்பது நம்மிடம் மிஞ்சியிருப்பதை அல்ல; மாறாக, நமக்கு மிக நெருக்கமானவற்றைப் பிறரோடு பகிர்ந்துகொள்வதையே. மூவொரு கடவுளின் பேரன்பு என்பது தேங்கி நிற்கும் குளமல்ல; அது பொங்கி வழியும் நீரூற்று. அது பிறரைச் சென்றடையவேண்டும்.
நிறைவாக,
மூவொரு கடவுள் பெருவிழா என்பது மறைபொருளை ஆராயும் நாள் அல்ல; மாறாக, ஒரு வாழ்வுமுறையைத் தழுவும் திருநாள். மூவொரு கடவுளின் இந்தப் பேரன்பை நாம் உய்த்துணர ‘நம்பிக்கையே’ ஆணிவேராகிறது.
அந்த நம்பிக்கையே பரிவும் இரக்கமும் நிறைந்த இறைவனை நம் தந்தையாகக் காணச்செய்கிறது. நாமும் அவரைப் போலவே கருணை உள்ளம் கொண்டவர்களாக வாழத் தூண்டுகிறது. “அன்பின்றிச் செய்யப்படும் எதுவும் பயனற்றது”
என்ற புனித பிரான்சிஸ் டி சேல்சின் வாக்கிற்கு
இணங்க நம் வாழ்வு ஒரு பகிர்தலாக, தியாகமாக, உறவின் சங்கமமாக மலரட்டும். தந்தையின் அருளும், மகனின் அன்பும், தூய ஆவியாரின் வழிநடத்துதலும் எப்போதும் நம்மோடு தங்கி, நம்மை அன்பின் சாட்சிகளாக மாற்றட்டும்.