சுயநலமும் வன்முறையும் பிரிவினை வாதமும் நாளுக்கு நாள் வளர்ந்து வருகின்ற இன்றைய உலகச் சூழலில், திரு அவையாகிய நாம், ஒரு மாற்றுப் பண்பாட்டை நற்செய்தியாய் எடுத்துரைக்கின்ற சமூகமாக மலர அழைக்கப்படுகின்றோம். அதன்படி, திரு அவைத் தலைவர்களும் துறவியரும் பொதுநிலையினரும் இணைந்து இறைத்திருவுளத்தைத் தெளிந்து தேர்ந்து (Spiritual Discernment) வாழ்வாக்குகின்ற கூட்டியக்கமாகத் திரு அவை மலரவேண்டும். அக்கனவை நனவாக்கிடவே, கூட்டொருங்கியக்கத் திரு அவைக்கான மாமன்றத்தைத் திருத்தந்தை பிரான்சிஸ் அமைத்தார். இம்மாமன்றம் வழக்கமான ஆயர் மாமன்றங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது. திரு அவைத் தலைவர்கள், துறவியர், இறையியலாளர்கள், துறை வல்லுநர்கள், பொதுநிலையினர் என அனைவரையும் உள்ளடக்கியதாக அமைந்தது.
இதற்கு
அடிப்படையாக அமைவது திருத்தூதர் பணிகள் நூலில் அமைந்துள்ள எருசலேம் முதற் சங்கத்தைப் பற்றிய பகுதியாகும் (திப 15:5-21). விருத்தசேதனம் செய்துகொள்வது பற்றிய கேள்வி எழுந்தபோது, திருத்தூதர்களும் திரு அவை மூப்பர்களும் இறைமக்களும் இணைந்து ஒருவர் மற்றவருக்குச் செவிகொடுத்து இறைவனின் விருப்பத்தைக் கண்டுணர்கின்றனர். அதே வழியில், இன்றைய திரு அவையானது, கடவுளோடும் சக மனிதர்களோடும் இயற்கையோடும்
உடன் நடந்து, உணர்வுகளுக்கும் சிந்தனைகளுக்கும் செவி கொடுத்து, இணைந்து இறைத்திருவுளத்தைத் தெளிந்து தேர்ந்திட அழைக்கப்படுகின்றது. அத்தகைய செயல்பாடு வழியாக உலகத்தின் பிரச்சினைகளுக்குப் பதிலிறுப்புச் செய்வதே கூட்டொருங்கியக்க மாமன்றம் வெளிப்படுத்திய நம்பிக்கை. ஆனால், இக்கனவு ஆயர் மன்றத்தோடு நிறைவுபெற்றுவிட இயலாது. இதன் உண்மையான பலன், நமது குடும்பங்கள், இயக்கங்கள், பங்குக் குழுமங்கள், துறவற அமைப்புகள், திரு அவை அமைப்புகள் அனைத்தும் அதே வழியில் சிறு சிறு கூட்டியக்கங்களாக மாறுகின்றபோதுதான் முழுமையடையும். அதற்கான அமைப்புமுறை மற்றும் செயல்முறை மாற்றங்களோடு, நம்மில் உள்ளார்ந்த பண்பியல் மாற்றமும் நிகழ, திரு அவையானது ஒரு தொடர் திருப்பயணத்தை மேற்கொள்ள வேண்டியுள்ளது.
வாழும் கடவுளின்
திருவுளம்:
இறைத்திருவுளம் என்பது நிறைவுசெய்யப்பட்ட கோட்பாட்டுக் கருவூலம் அல்ல; அது உயிரோட்டமான இயக்கமாகும். படைத்துக் காக்கும் இறைவன் தொடர்ந்து சமூகம், பொருளாதாரம், கலாச்சாரம் மற்றும் வாழ்வியல் சூழலில் உடன் நடந்து, நம்மைத் தூய ஆவியார் வழியாக வழிநடத்துகிறார். “என் சட்டத்தை அவர்கள் உள்ளத்தில் பதிப்பேன்”
(எரே 31:33) எனக் கூறிய கடவுள், நமது உள்ளார்ந்த ஏக்கங்கள், நீதி மற்றும் ஒப்புரவுக்கான சமூகக் குரல்கள் வழியாகத் தம் கட்டளைகளை வெளிப்படுத்திக் கொண்டேயிருக்கின்றார். எனவே, தனிப்பட்ட வாழ்விலும் குழுவாகவும், நமது முயற்சிகளிலும் முடிவுகளிலும் இறைத்திருவுளத்தைத் தேர்ந்து செயல்படுவதை வாழ் வாக்கவேண்டும்.
உறவு ஒன்றிப்பு:
தெளிந்து தேர்தல் என்பது கடவுளின் திருவுளத்தினைக் கண்டறிவதற்கான மனித முயற்சி மட்டுமல்ல; அது தூய ஆவியாரின் கொடை என்கிறது திருவிவிலியம் (1கொரி 2:12-14, 12:10-11). அவரே நம்மை முழு உண்மையை நோக்கி வழிநடத்துகிறார். வரப்போகிறவற்றை அறிவித்து, தகுந்த முடிவுகளை எடுக்க உதவுகிறார் (யோவா 16:13). எனினும், அவர் தனித்துச் செயல்படுவதில்லை. அவர் மூவொரு இறைவனின் அன்பிலிருந்து பிறக்கின்ற இறையாட்சிக்கான கனவிலிருந்தே நமக்கான இறைத்திட்டத்தை வெளிப்படுத்துகிறார். எனவே, இறைத்திருவுளம் என்பது மூவொரு இறைவன் தமக்குள் கொண்டிருக்கும் உறவை மையமாகக்கொண்டது.
மூவொரு
இறைவனின் உறவில் இணைக்கப்பட்டவர்களாக, இறையாட்சிக்கான திட்டத்தில் நம்மையும் பங்குபெறச் செய்வதே தெளிந்து தேர்தல் முறையாகும். எனவே, அது அறிவுத்தளத்தில் நிகழ்கின்ற மனிதச் செயல்பாடு அல்ல; இறைநம்பிக்கையையும் உறவு ஒன்றிப்பையும் அடிப்படையாகக் கொண்ட ஆன்மிகச் செயல்பாடு என்பதைப் புரிந்துகொள்ளலாம். எனவே, செபச் சூழலில், சுயநலங்களைக் கடந்து, அனைவருக்கான நன்மையை நாடி கருத்துகளைப் பகிர்வது இதன் அடிப்படையாகும்.
காலத்தின் அறிகுறிகள்:
மாறிவரும் காலச்சூழலில், தகுந்த பதிலிறுப்பைத் தெளிந்து தேர்ந்திட, இன்றைய சமூகத்தைச் சார்பின்றி அறிவார்ந்த முறையில் ஆய்ந்தறிவது அவசியமாகும். இன்றைய சமூகத்தின் போக்கினை நான்கு அடிப்படைப் பண்புகளைக் கொண்டதாக அறிஞர்கள் விளக்குகின்றனர். அதன்படி, இன்றைய உலகமானது நிலையற்றது, நிச்சயமற்றது, குழப்பமானது, தெளிவற்றது. இந்த உலகம் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கின்றது. எத்தகைய மாற்றத்தை நோக்கிப் பயணிக்கின்றது என்று யூகிக்க முடியாத அளவு குழப்பம் நிறைந்ததாகவும் இருக்கிறது. பல பிரச்சினைகள் ஒன்றோடு
ஒன்று பின்னிப்பிணைந்ததாக, எளிதாகத் தீர்வுகள் காணமுடியாத அளவு சிக்கலானதாகவும் தெளிவற்றதாகவும் விளங்கின்றன. எனவே, இன்றைய சமூகத்திற்கான தீர்வுகளை ஒற்றைப் பார்வையின் அடிப்படையில் கண்டறிந்திட முடியாது என்பதே உண்மை. எனவே, குழுமத்தில் உள்ள யாவரும் பொறுப்பினையேற்று, ஒரு கூட்டியக்கமாக அனைவருடைய பார்வைகள், கருத்தியல்கள், அனுபவங்கள், உணர்வுகள், அவர்கள் சந்திக்கின்ற பிரச்சினைகள் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கி, நிகழ்த்துகின்ற உள்ளார்ந்த தேடலே தகுந்த முடிவுகளை நோக்கி நகர்த்தும்.
மாற்றுக்
கருத்துகளும், தூய ஆவியாரின் தூண்டுதலில் வெளிப்படுகின்றன என்கிற நம்பிக்கையில், மாண்போடு அவற்றை உள்ளத்தில் ஏற்றுச் சிந்திக்கவும் அதில் வெளிப்படுகின்ற உண்மையைக் கண்டுணரவும் முயல்வது நம்மை உண்மையை நோக்கி வழிநடத்தும். இவ்வாறு, நாம் கருத்தளவில் வேறுபட்டாலும், இறைநம்பிக்கையிலும் இறைத்திருவுளத்தை நாடித் தேடுகிற அடிப்படை முயற்சியிலும் ஒரே மனமும் உள்ளமும் கொண்டவர்களாய் விளங்க முடியும்.
திறந்த மனம்:
முதல் ஏற்பாட்டில், இறைவாக்கினர் எலியா குழப்பத்தோடு இருந்தபோது, இறைவன் அவரைக் குகைக்கு வெளியே வருமாறு அழைக்கிறார் (1அர 19: 9-18). அவர் வெளியே வந்ததும், புயல் காற்றும், பூகம்பமும் நெருப்பும் ஒன்றன்பின் ஒன்றாக நிகழ்கின்றன. ஆனால், அவற்றில் எல்லாம் கடவுள் இல்லை. இறுதியாக, மெல்லிய தென்றல் காற்றில் கடவுளின் குரலை எலியா கண்டுகொள்கிறார். குழப்பம் தெளிந்து, இறைத்திருவுளத்தை உணர்ந்து செயல்படுகிறார். இந்நிகழ்வு, தெளிந்து தேர்தலுக்கான பல இறையியல் உண்மைகளை
வெளிப்படுத்துகிறது. குகையிலிருந்து கடவுள் அவரை வெளியே அழைப்பதன் வழியாக, நாமும் நமது முற்சார்பு சிந்தனைகள், கவலைகள், எதிர்பார்ப்புகள், கருத்தியல்கள் ஆகியவற்றில் முடங்கிவிடாமல், திறந்த மனத்தோடு இறைவனின் உடனிருப்பை உணர்ந்து இறைத்திட்டத்தை நாட அழைக்கப்படுகிறோம். புயல் காற்றாகவும் பூகம்பமாகவும் நெருப்பாகவும் நம்மைத் துன்புறுத்தும் வெளியிருந்து வரும் அழுத்தங்கள், உள்ளார்ந்த பலவீனங்கள், உள்மனப் போராட்டங்கள் ஆகியவற்றை ஒதுக்கி, அமைதி நிறைந்த உள்ளத்தோடு நாடும் போது கடவுளின் குரலை உணர முடியும்.
குழுமத்
தெளிந்து தேர்தல் முயற்சியில், அரசியல் செல்வாக்கு, செல்வம், புகழ், பெருமை ஆகியவற்றை நாடும் அதிகாரத்தின் குரலும், அவற்றிற்கு அடி பணிந்து, அச்ச உணர்வினால் தங்களைத் தற்காத்துக்கொள்ள முற்படும் சமரசக் குரல்களும் வெறுப்பும் வன்முறையும் நிறைந்த குரல்களும் புயல் காற்றாகவும் பூகம்பமாகவும் நெருப்பாகவும் நம்மைத் திசை திருப்பலாம். அத்தகைய நிலைகளில் மெல்லிய காற்றாக வீசுகிற ஏழைகள், ஒடுக்கப்பட்டோர், பெண்கள், குழந்தைகள், ஊனமுற்றோர், அகதிகள் போன்றோரின் குரல்களே கடவுளின் குரலாக அமையலாம். விளிம்பு
நிலையில் வாழ்வோரின் குரலையும் உள்ளடக்கிய தேடலே இறையாட்சியின் பாதையில் நம்மை வழிநடத்தும்.
எதிர்நோக்கு நிறைந்த
உள்ளம்:
எல்லாரும் எதிர்பார்க்கிற முடிவுகளைக் குழுமமாக விவாதித்து ஏற்பது அல்ல தெளிந்து தேர்தலின் நோக்கம். இஸ்ரயேல் மக்கள் தங்களை மீட்க வரும் மெசியா, அரசராக வந்து தங்களை அரசியல் அடிமைத்தனத்திலிருந்து மீட்பார் என்கிற தீர்வினை நாடிக் காத்திருந்தனர். ஆனால், இறைத்திட்டமோ அரசியல் அடிமைத்தனத்தையும் கடந்து உள்ளார்ந்த விடுதலையைத் தருகின்ற மீட்பினை நோக்கியதாக இருந்தது.
மேலும்,
அம்மீட்பினைத் தர, இறைமகன் தம்மையே சிலுவையில் அர்ப்பணிப்பது என்பது மனிதர்களின் கற்பனைக்கு எட்டாத ஒன்றாகவே இருந்தது. அதைப்போல, நம்முடைய வாழ்வுக்கான இறைத்திட்டமும் நமது பார்வைகளின் எல்லைகளைக் கடந்ததாக அமையலாம். எதிர்நோக்குக் கொண்ட பரந்த பார்வையோடு இறைத்திட்டத்தை நாடித் தெளிந்து தேர்ந்திட தூய ஆவியார் நம்மை வழிநடத்துவார். எனவே, நமது சிறிய ஞானத்திற்குள் முடங்கிவிடாமல், இறைஞானத்தின்மீது நம்பிக்கை வைக்க அழைக்கப்படுகிறோம்.
அத்தகைய
நம்பிக்கையோடு, கூட்டடொருங்கியக்கத் திரு அவையை வாழ்வாக்கும் எதிர்நோக்குடன் திருப்பயணிகளாக இணைந்து பயணிப்போம்.