‘கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள்
தொழாஅர் எனின்’ (குறள்
2)
குறள் விளக்கம்:
தூய அறிவின் வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளைத் தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் எதுவுமில்லை.
சிந்தனை:
கடவுள் என்பது ஒரு நம்பிக்கை. ‘நம்பினால் கடவுள்; நம்பாவிடில் வெறும் கல்’ என்ற வார்த்தைகள் இதனை உறுதிப்படுத்துகின்றன.
நாத்திகர் மற்றும் ஆத்திகர் மத்தியில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், நம்பிக்கையில் மாறுபாடுகள் அமைந்தாலும், ஒருவர் மற்றவருடன் நல்ல நட்பு பாராட்டமுடியும். ஒருவர்
ஒருவரது நம்பிக்கையை மதிக்கவேண்டும்.
அன்றைய
மேற்கு வங்க முதல்வர் ஜோதிபாசுவிடம், “நீங்கள் தீவிர கொள்கைப் பிடிப்புமிக்க ஒரு கம்யூனிசவாதி; அன்னை தெரசாவோ ஒரு தீவிர ஆன்மிகவாதி; உங்கள் இருவருக்கும் இடையே எப்படி நட்பு மலர்ந்தது?” என்று கேட்டார்கள். சிரித்துக்கொண்டே ஜோதிபாசு கூறிய பதில்: “நாங்கள் இருவருமே ஏழைகளை நேசிப்பவர்கள் என்பதனால்தான்” என்றார்.
மேலும், “எனது மார்க்சியக் கொள்கைகளைத் தடுமாற வைக்கிறார் அன்னை தெரசா! ஏனெனில், இறைவனின் நன்மைத்தனத்தின்மீது நம்பிக்கை வைக்க அவர் என்னைத் தூண்டுகிறார்” என்று
சதுர்வேதி என்பவர் ஜோதிபாசு கூறியதாக ‘ஏழைகளின் மெசியா’ என்ற புத்தகத்தில் எழுதியுள்ளார்.
‘கடவுள் அன்பாயிருக்கிறார்’ என
அனைத்து மதங்களும் போதிக்கின்றன. அதனால் அன்பைக் கடவுள் எனலாம். எனவே, அன்பினால் உந்தப்பட்டு மனுக்குலத்திற்கு ஆற்றும் பணிகளைப் பிறரன்புச் செயல்கள் என்கிறோம். ‘மக்கள் தொண்டே மகேசன் தொண்டு’ என்கிறோம். இதிலிருந்து கடவுள் என்பவர் எட்டாத தொலைவில், காணமுடியாத வகையில் இருப்பவர் அல்லர்; நமது வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும் உள்ள நன்மைத்தனத்தின் வடிவமே அவர். கற்றுத் தெளிந்தோரும் பாமரரும் இந்த மறைபொருளை எளிதில் அறிந்துகொள்ள முடியும். நம்பிக்கை கண்கொண்டு மட்டுமே கடவுளை நோக்க முடியும்.
“மாவீரன் அலெக்சாண்டர் மற்றும் மாமன்னர் சார்லிமென் போன்றோர் படைபலத்தால்தான் பேரரசுகளை நிறுவினர்; ஆனால், அளவற்ற தம் அன்பால் ஆட்சிப் பீடம் அமைத்தவர் இயேசு கிறிஸ்து. அவருக்காக இரத்தம் சிந்தவும் இறப்பைத் தழுவவும் இன்றும் பல்லாயிரம் மக்கள் முன்வர உள்ளனர்” என்றார் பிரான்சின் பேரரசன் நெப்போலியன் போனபார்ட் (1769-1821).
“ஆண்டவரிடம் கொள்ளும் அச்சமே ஞானத்தின் தொடக்கம்”
என்று நீதிமொழிகள் (1:7) கூறுகிறது. இறையச்சம் தீய செயல்களைத் தவிர்த்து, நல்வாழ்வு வாழ உறுதுணையாயிருக்கும்.
உண்மையான
இறையடியார் பாவத்தில் வெகுநாள் வாழ முடியாது. தீமையைத் தொடர்ந்து செய்ய அவர் மனம் ஒப்பாது. உறுத்திக்கொண்டே இருக்கும். நன்மையே உருவான இறைவனுக்கு உகந்தது எதுவோ, அதுவே அவரில் குடிகொள்ளும். தீமைக்கு அங்கு இடமில்லை. ஒளியாம் இறைவன் அருகில் இருள் நிற்க இயலாது. இத்தகைய மனநிலையைத் தரும் இறையச்சமே ஞானத்தின் தொடக்கம். எனவே, கற்றுத் தேர்ந்த ஞானிகள் தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனில் நம்பிக்கை இல்லாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் பயனில்லை என்கிறார் வள்ளுவர்.
மனிதனுக்கு
உறுதியூட்டும் இறைநம்பிக்கை நல்லது. ஆனால், ஒருவர் தனது இறைநம்பிக்கையை உயர்த்திப் பிடித்துக்கொண்டு, பிறரது நம்பிக்கையைத் தாழ்வாக நினைப்பது தவறு. நமது சிந்தனையில் கடவுளைச் சிக்கவைப்பது சாத்தியமல்ல. இறைவனைத் தேடித்தேடி அலைபவர்கள் பலர் உள்ளனர். அதில் முக்தியும் கண்டவருண்டு. ‘கடவுள் இருக்கிறாரா? இல்லையா?’ என்ற கேள்வி எழாத மனித மனமும் உண்டோ? ‘கடவுள் இருந்தால் நன்றாக இருக்கும்’
என்போரே பலர். நன்மை உருவாக, அன்பின் வடிவாக இறைவனைக் காண்போம்.