வத்திக்கானில் இத்தாலிய வங்கிப் பிரதிநிதிகள் மற்றும் ஊழியர்களைத் திருத்தந்தை லியோ சந்தித்தபோது, “வங்கி மற்றும் நிதி அமைப்புகள் எப்போதுமே மனிதர்களை மையமாகக் கொண்டு செயல்படவேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
“ஒரு வங்கிக்குள் முதலில் நுழைவது மூலதனம் அல்ல; மாறாக, மனிதர்களே என்பதை நினைவில் கொள்ளவேண்டும். எண்களுக்குப் பின்னால் உதவி தேவைப்படும் ஆண்கள்-பெண்கள் மற்றும் குடும்பங்கள் உள்ளனர்” என்று திருத்தந்தை சுட்டிக்காட்டியுள்ளார். தொழில்நுட்ப வளர்ச்சியும், “கணிப்பொறி படிமுறை (Algorithm) முறைகளும்
பெருகிவரும் இன்றைய சூழலில், சேவைகளைப் பெறுவோர் தங்களைக் கணினி அமைப்புகளிடம் கைவிடப்பட்டதாக உணரக்கூடாது; மாறாக, அவர்களுக்குச் செவிசாய்க்கவும் நன்மை செய்யவும் மனிதர்கள் தயாராக இருக்கவேண்டும்” என்று
தெரிவித்துள்ளார்.
“நிதி நிறுவனங்கள் இலாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொள்ளாமல், செல்வத்தைப் பகிர்ந்தளிப்பதன் மூலம் பொதுநலனை ஊக்குவிக்கவேண்டும். சுயநலமான சேமிப்பு வறுமைக்கும் சமத்துவமின்மைக்கும் வழிவகுக்கும்” என்று
எச்சரித்த திருத்தந்தை, அறநெறி சார்ந்த நிதி மேலாண்மையே நிலையான வளர்ச்சிக்கு உதவும் என்றார். வங்கியாளர்கள் தங்களின் உத்திகளை வகுக்கும்போது ‘அன்பு மற்றும் தர்மத்தை’
வழிகாட்டும் கொள்கையாகக்கொள்ள வேண்டும் என்றும் திருத்தந்தை கேட்டுக்கொண்டார்.