news-details
சிறப்புக்கட்டுரை
வளர்கிறோமா? வளர்க்கப்படுகிறோமா? இளமை ஒரு சவால்! – 2

உண்மையில் விவரம் தெரிந்த பிள்ளைகள் எத்தனை பேர் தங்கள் பெற்றோருக்குத் தங்களைவிட அதிகம் தெரியும் என்று நினைக்கிறோம்? அவர்களுடைய அறிவையும் அனுபவத்தையும் மதிக்கிறோம்?

அம்மா, நீ சும்மா இரும்மா. உனக்கு ஒண்ணும் தெரியாது.”

அப்பா, இது எனக்கு உடனே வேணும்பா. ஏம்பா இப்படிப் புரியாம பேசுறே?”

இப்படிப்பட்ட குற்றச்சாட்டுகளை நாம் எத்தனை முறை நம் பெற்றோர்மேல் சுமத்துகிறோம்?

எனக்குத் தெரியும்... நான் எனக்குப் பிடித்ததைத்தான் சாப்பிடுவேன், பிடித்தபடி உடுத்துவேன், பிடித்தவர்களோடு பழகுவேன்...

ஒரே பிள்ளை என்று செல்லமாக வளர்க்க முயலும் பெற்றோர்கள் இத்தகைய பிடிவாதப் போக்கைக் குழந்தைகளிடம் வளர்த்துவிடுகிறார்கள். அப்பா கண்டிக்க முயன்றால், அம்மா குறுக்கே வருவார். அம்மா கண்டிக்க முயன்றால், அப்பாவின் குறுக்கீடு, தாத்தா-பாட்டியின் குறுக்கீடு. இதுவா நம் இளைய தலைமுறையை வளர்ச்சிப் பாதையில் வழிநடத்துகிறது? நிச்சயம் இல்லை!

இளைஞர்களாகிய நாம் வளரவேண்டும். நிச்சயம் நம் சொந்தக் காலில் நிற்கப் பழகவேண்டும். ஆனால், இது படிப்படியாக நிகழவேண்டும். இந்த வளர்ச்சியில் மூன்று படிநிலைகள்: 1. நாம் பிறக்கும் போது முற்றிலுமாக நம் தாயையும் பெற்றோரையும் சார்ந்திருக்கிறோம். 2. அடுத்த கல்விப் பருவத்தில் நாம் படிப்படியாக நம் சொந்தக் காலில் பெற்றோர், ஆசிரியர், சக நண்பர்களின் துணையோடு வளரப் பழகுகிறோம். 3. உயிரினங்களிலேயே நமக்குத்தான் மிக நீண்ட 20, 25 ஆண்டுப் பயிற்சிக்காலம் கிடைத்திருக்கிறது. இந்தக் காலம் முழுவதும் நாம் பெற்றோரையும் ஆசிரியரையும்தான் நம்பி இருக்கிறோம். பெற்றோரின் உழைப்பும் அன்பும் அரவணைப்பும்தான் நம் தேவைகளை எல்லாம் ஒன்றுவிடாமல் நிறைவு செய்கிறது.

நம் உணவு, உறைவிடம், வாழ்க்கை, வசதிகளைத் தேடித் தருவது மட்டுமல்ல; நமது உடல் நலம், நல்ல பழக்கங்கள், நல்ல ஒழுக்கம், நல்ல கல்வி ஆகியவற்றைத் தேடித்தருவதும் அவர்களுடைய கடமையாகிறது. பெரும்பாலான பெற்றோர் தங்கள் பிள்ளைகளை வளர்ப்பதற்காகப் பல கடுமையான தியாகங்களைச் செய்கிறார்கள். நாம் ஒரு வேலைக்குப் போய்ச் சொந்தமாகச் சம்பாதித்து நம் சொந்தக் காலில் நிற்கும்வரை அவர்கள்தான் நம்மை வளர்க்கிறார்கள்.

நாமே நம் காலில் நின்று, நம் பெற்றோரையும் நிம்மதிப் பெருமூச்சுவிட வைக்கும்போதுதான் நாம் முழுச்சுதந்திரத்தைப் பெறுகிறோம். நாம் முழுமையாக வளர்க்கப்படும் முதல் பருவத்தில் சிக்கல் எதுவுமில்லை. நம்முடைய தேவைகளை முழுமையாகப் புரிந்துகொண்டு பெற்றோர் நிறைவேற்றி வைத்து விடுகிறார்கள்.

நாம் நாமாகச் சிந்தித்துச் செயல்படப் பழகும்போதுதான் நம் மனப்போராட்டம் தொடங்குகிறது. பதின்பருவங்களில் ஏற்படும் உடல்நிலை மாற்றங்களும் நமக்குள்ளே ஒரு புதிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எடுத்தேன், கவிழ்த்தேன் என்று செயல்படத் தொடங்குகிறோம். சுயசிந்தனை, நிதானம், சக நண்பர்களையும் மதித்துச் செயல்படும் பக்குவம் போன்ற வாழ்க்கைப் பண்புகள் உருவாகத் தேவையான அனுபவங்கள் பதின்மப் பருவத்தைத் தாண்டிய பிறகுதான் வந்து சேர்கிறது.

இந்த மனப்பக்குவம் வந்து சேரும்வரை நாம் பெற்றோரையும் ஆசிரியரையும் மற்ற வழிகாட்டிகளையும் மதித்து, அவர்கள் காட்டும் வழித்தடங்களைப் பற்றிச் சிந்தித்துச் செயல்பட நாம் பழகிக் கொள்ளவேண்டும். இப்படிப் பழகிக்கொள்கிற பிள்ளைகள்தாம் வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார்கள். இப்படிப் பயிற்றுவிக்கிற பெற்றோர்தாம் தங்கள் முதுமைப் பருவத்தை நிம்மதியாகக் கழிக்கிறார்கள்.

வளர்க்கப்படும் பருவத்திலிருந்து, சொந்தக் காலூன்றி வளரும் பருவத்தை நோக்கி நகர்கின்ற பயணம் நீண்டது. இருபது ஆண்டுகள் வரை நீண்டு நிற்பது சலனங்களும் சவால்களும் நிறைந்தது. நன்றாக வளர்ந்து நிற்கும்வரை, நாம் வளர்க்கப்படுகிறோம் என்பதை உணர்ந்து பயணிப்போம். வெற்றி நிச்சயம்!

என் பெற்றோருக்கு என்மேல் அக்கறை உண்டு! அவர்களால்தான் நான் பக்குவமாக வளர்க்கப்படுகிறேன். என் சொந்தக் காலில் நிற்கும் முழுத்திறமையும் வரும்வரை நான் அவர்களுக்குப் பணிந்திருப்பேன்.’