“சுடும்வரை நெருப்பு
சுற்றும்வரை
பூமி
போராடும்வரை
மனிதன்
நீ
மனிதன்... இறுதிவரை போராடு”
என்றார்
கவிப்பேரரசு வைரமுத்து. இளையோரின்
போராட்ட எழுச்சி அண்மையில் இந்திய மண்ணில், டெல்லி - ஜந்தர் மந்தர் முற்றத்தில் போர்க்குணம்
கொண்டு போர்க்களம் கண்டிருக்கிறது.
தொழில்நுட்ப
ஊடகத் தளத்தில் மலர்ந்து, சிந்தனையில் வளர்ந்து, உறவுகளில் இணைந்து, உலகின் கவனத்தை ஈர்த்த ‘காக்ரோச் ஜனதா பார்ட்டி’
(CJP) என்பது
என்ன? யார் இவர்கள்? இதற்குப் பின்னால் யார் இருக்கிறார்கள்? இதன் மறைமுக நோக்கம் என்ன? இவர்களின் அடுத்தகட்ட நகர்வு எத்தகையது? என அரசியல் தளத்தில்
நாம் அறிய வேண்டிய அரிய நுட்பங்கள் பல உள்ளன.
இந்த
‘காக்ரோச் ஜனதா பார்ட்டி’
(சி.ஜே.பி.) குறித்து
நாடு தழுவிய அளவில் எழும் பெரும்பாலான எதிர்வினைகளும் விவாதங்களும் ஒரு மிக எளிய எதார்த்தத்தைக் காணத் தவறி விடுகின்றன. சி.ஜே.பி.
என்பது சட்டப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்ட ஓர் அரசியல் கட்சி அல்ல; அது வெறும் பொதுமக்களின் திரளும் அல்ல; ஆனால், பொதுமக்களைக் காட்டிலும் அது எவ்வகையிலும் தாழ்ந்ததும் அல்ல; அது ஒரு குறிப்பிட்ட சமூகமோ, தற்காலிகமாகத் திரண்ட ஒரு கூட்டமோ அல்ல; அது உண்மையில், காலங்காலமாகத் தேங்கிக் கிடக்கும் ஏமாற்றங்கள் மற்றும் ஆவேசங்களின் உறைவிடமாகத் திகழும் ‘உணர்வுகளின் ஒரு பெருங்குவியல்.’
ஓர்
அரசியல் இயக்கமாக உருவெடுப்பதற்கான நீண்ட தூரத்திற்கு அப்பால் அது நின்றுகொண்டிருக்கிறது. துல்லியமாகக் கூறின், அது ஒரு ‘தருணம்’ மட்டுமே! அந்தத் தனித்துவத்தால்தான் அது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறுகிறது. இது ஒரு தற்காலிகத் தருணமாக இருக்கலாம்; ஆனால், அது இந்தியக் குடியரசின் எதிர்காலம் குறித்த ஒரு பேருண்மையின் தரிசனத்தை நமக்கு வழங்குகிறது.
எல்லையற்ற
அதிகாரவாதத் தாக்குதல்களிலிருந்தும், ஒற்றைத்தன்மை வாய்ந்த ஆதிக்கத்திலிருந்தும் இந்தியக் குடியரசை மீட்டெடுக்கக்கூடிய மாற்று ஆற்றலின் அரசியலின் தரிசனம் அது. இதனை ஒரு தற்காலிகத் தேர்தல் அலையாகப் பார்க்காமல், அடித்தளத்தில் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு ‘நீரோட்டம்’
என்று உணர்ந்தால் மட்டுமே நம்மால் இதன் உள்ளடக்கத்தைப் புரிந்துகொள்ள முடியும்.
இந்தத்
திடீர் எழுச்சியானது மிகப்பெரிய நாடாளுமன்றப் பெரும்பான்மை ஆதரவுடன் ஆட்சி செய்யும் அரசுகளின் மத்தியில் உருவாகும் ஒரு பரவலான சமூக நெருக்கடியின் கூறாகவே தோன்றுகிறது. அதிகாரத்தின் பலவீனமான உட்பகுதியை வெளிக்கொணரும் பொருட்டு எங்கிருந்தோ திடீரெனத் தோன்றும் போராட்ட இயக்கங்களின் வரலாற்று வரிசையில் இதையும் நாம் சேர்த்தே பார்க்கவேண்டும்.
வரலாற்றின்
பக்கங்களைத் திருப்பிப் பார்த்தால், 1973-74-ஆம் ஆண்டுகளின் குஜராத் மற்றும் பீகார் நவநிர்மாண் இயக்கங்கள், 1983-ஆம் ஆண்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க அசாம் இயக்கம், 2012 மற்றும் 2021-ஆம் ஆண்டுகளின் அன்னா ஹசாரே இயக்கம், அண்மையில் நடந்த விவசாயிகளின் தொடர் போராட்டம்... இவை அனைத்தும் அன்றைய காலகட்டத்தில் வீழ்த்தவே முடியாத கோட்டைகளாகத் தோன்றிய வலிமைமிக்க அரசுகளுக்கு எதிராக மிக வெற்றிகரமாகச் சவால் விடுத்தவை ஆகும். நாடாளுமன்றத்தில் பலவீனமாகக் காணப்பட்ட எதிர்க்கட்சிகளின் எல்லைகளையும் தாண்டி, மக்களின் ஒட்டுமொத்த அதிருப்தியை மாபெரும் அரசியல் சக்தியாக மாற்றிய பெருமை இந்த இயக்கங்களுக்கு உண்டு.
மே
16, 2026 அன்று பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் மக்கள் தொடர்புக் கல்வி பயிலும் அபிஜீத் திப்கே என்பவரால் இது தோற்றுவிக்கப்பட்டது. இந்தியத் தலைமை நீதிபதி சூர்யகாந்த் அவர்கள் வேலையில்லா இளைஞர்களை ‘கரப்பான் பூச்சிகள்’
எனப் பொருள்படும் வகையில் ஒப்பிட்டுக் கூறிய சர்ச்சைக்குரிய கருத்துக்கு எதிராக, அச்சொல்லையே தங்களின் அடையாளமாக மாற்றி, இளையோர் இந்த இயக்கத்தைத் தொடங்கினர்.
இதற்கு
ஒரு நிறுவுநர் இருக்கிறார்; ஆனால், கட்டளையிடும் ‘ஒற்றைத் தலைவர்’ என்று எவரும் இல்லை. இதன் பின்தொடர்பவர்களில் பெரும்பாலானோர் வெறும் சமூக ஊடகப் பார்வையாளர்களே. நடைமுறை அரசியல் செயல்பாடுகளில் குறைவான ஆர்வமுடையவர்களே. அவர்களில் பெரும்பாலோர் குறிப்பிட்ட ஒரு பொது எதிரியை நோக்கியவர்களே. அரசியல் அறிஞர் எர்னெஸ்டோ லக்லாவின் கோட்பாட்டின்படி, இத்தகைய பிரபலமான மக்கள் எதிர்ப்பியக்கங்களின் முதன்மை அடையாளமே ‘பொது எதிரி’ என்பதுதான். வரலாற்றின் மாபெரும் சக்தி வாய்ந்த இயக்கங்கள் அனைத்தும் இத்தகைய மூல ஆற்றலைக் கொண்டே
தொடக்கத்தில் கட்டியெழுப்பப்பட்டுள்ளன.
அதிகார
வர்க்கம் நாளுக்கு நாள் வளர்ந்து வரும் சூழலில் சி.ஜே.பி.
‘கரப்பான் பூச்சியையே’ தன்னுடைய
அடையாளச் சின்னமாகத் தேர்ந்தெடுத்திருப்பதுதான் இதன் அரசியல் உத்தியைச் சிறப்பானதாக்குகிறது. செர்பிய நாட்டின் புகழ்பெற்ற சிந்தனையாளர் ஸ்ர்தா போபோவிச் வலியுறுத்தியதன்படி, நிலவும் அரசியல் அமைப்பைக் கைப்பற்றுவதற்காக அல்லாமல், அந்த அமைப்பின் குறைகளைக் கிண்டலடிப்பதற்காக ‘கரப்பான் பூச்சியை’
ஒரு சின்னமாக எடுத்துக்கொள்வது நகைச்சுவையும் எள்ளிநகையாடுவதும் வன்முறையற்ற எதிர்ப்பின் மிக முக்கியக் கருவிகள் என்பதற்கான மிகச் சிறந்த உதாரணமாகும்.
வரலாற்றில்
இத்தகைய ‘கிண்டல் அரசியல்’ மரபார்ந்த எதிர்க்கட்சிகள் வெற்றியடையாத இடங்களில்கூட மிக எளிதாக வெற்றி பெற்றிருக்கின்றது. இத்தகைய போராட்ட வடிவங்கள் அதிகாரவாத ஆட்சியாளர்களை ஒரு பெரும் குழப்பத்தில் தள்ளுகின்றன. அந்தத் தீவிரக் கிண்டல் அரசியலை அப்படியே சகித்துக்கொண்டு அனுமதித்தால், ஆட்சியாளர்கள் மக்களின் முன்னிலையில் பலவீனமானவர்களாகத் தோன்றுவார்கள்; மாறாக, அதனை அதிகாரம் கொண்டு ஒடுக்க முற்பட்டால் அவர்கள் கொடூரமானவர்களாகவும், உலக அரங்கில் அபத்தமானவர்களாகவும் காட்சியளிப்பார்கள்.
மிக
முக்கியமாக, இந்தப் போராட்ட முறை இன்றைய இந்தியாவின் உண்மையான அரசியல் எதார்த்தத்தை நமக்கு உணர்த்துகிறது. குறிப்பாக, நாடாளுமன்றத் தேர்தல் வெற்றியைச் சுற்றி ஆளும் வர்க்கத்தால் உருவாக்கப்படும் மிகைப்படுத்தப்பட்ட பிம்பங்களோ அல்லது தற்காலிக நம்பிக்கைகளோ, நாட்டின் இளைஞரிடையே பரவலாகக் காணப்படும் வேலைவாய்ப்பின்மை மற்றும் பொருளாதாரப் பாதுகாப்பின்மை குறித்த அதிருப்தியை ஒருபோதும் மறைத்துவிட முடியாது.
மேலும்,
ஒரு சக்திவாய்ந்த பேரரசு சமூக ஊடகங்களில் பதிவிடப்படும் வெறும் ஒரு கேலிச் சித்திரத்தைத் தடை செய்வதற்காக ‘தேசியப் பாதுகாப்பு’ என்னும்
காரணத்தை முன்வைக்குமேயானால் அல்லது தனது இணையவழித் தாக்குதல் படையை ஏவி அந்த ‘ட்ரெண்டை’
அவதூறு செய்ய முற்படுமேயானால், அந்த அரசு உள்ளுக்குள் மிகவும் பலவீனமாக அஞ்சி நடுங்கிக்கொண்டிருக்கிறது என்றுதான் அர்த்தம். மக்களின் இந்த அடிமட்டக் கோபத்திற்கு இணையான அளவில் இன்னும் தீவிரமாகச் செயல்படவில்லை. இன்ஸ்டாகிராமில் 2.2 கோடிக்கும் அதிகமான பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ள சி.ஜே.பி.யின் இந்தப் பிரம்மாண்ட வளர்ச்சி, அனைத்து எதிர்க்கட்சிகளும் தங்கள் செயல்பாடுகளை ஒருமுகப்படுத்தவும், மக்கள் போராட்டங்களை அரசியல்மயமாக்கவும் வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.
வெறுப்பும்
கோபமும் மட்டுமே நிலையானதோர் அரசியல் கோட்பாடாக ஒருபோதும் மாறிவிட முடியாது. ஆளும் பா.ச.க.
போன்ற பலமான கட்டமைப்பைக் கொண்ட கட்சிகளை இவர்கள் எதிர்கொள்ள வேண்டுமாயின், வெறும் சமூக ஊடகக் கேலிகளைத் தாண்டி, அடித்தட்டு மக்களின் சமூக, பொருளாதாரப் பிரச்சினைகளைப் பேசும் ஒரு நிலையான கொள்கைத்திட்டத்தை வகுக்கவேண்டும்.
எனவே,
வினோத் குமார் சுக்லாவின் புகழ்பெற்ற கவிதை வரிகளான,
‘அவர் என்னை அறிந்திருக்கவில்லை;
ஆனால்,
நான் நீட்டிய கரத்தை அவர்
அறிந்திருந்தார்...
நாங்கள் ஒருவரையொருவர்
தனிப்பட்ட
முறையில் அறிந்திருக்கவில்லை;
ஆனால்,
இருண்ட பாதையில்
ஒன்றாகச்
சேர்ந்து நடப்பதை அறிந்திருந்தோம்’
என்பவை
பரவலாக நிலவும் விரக்தியை எதிர்கொள்வதற்கு, ஒரு புதிய அரசியல் ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதற்கான இலக்கணத்தை நமக்குக் கற்றுத்தருகிறது.
ஆகவே,
நாம் ஒருவரையொருவர் இன்னும் முழுமையாக அறியாமல் இருக்கலாம்; ஆனால், நாடு எதிர்கொண்டுள்ள இந்தச் சூழலில், நாம் அனைவரும் இணைந்து நேர்மையான பாதையில் நடக்கக் கற்றுக்கொள்வதே இத்தருணம் நமக்குத் தரும் உண்மையான தரிசனமாகும்!
அன்புத்
தோழமையில்,
அருள்முனைவர்
செ.
இராஜா
@ இராஜசேகரன்
முதன்மை
ஆசிரியர்