இன்றைய இளைஞரைப் பொதுவாக இரண்டு குழுக்களாகப் பிரித்துப் பார்க்கலாம். இன்று பெரும்பாலான இளைஞர் வாழ்க்கையை வெறும் விளையாட்டாக எடுத்துக்கொள்கிறார்கள்.
பெற்றோரின்
செல்வம், செல்லம், போலி ஆடம்பரம் ஆகியவை இதற்குத் துணை நிற்கின்றன. ஆனால், இந்த விளையாட்டுத்தனம் பின்னால் இளைஞரின் வாழ்வைத்தான் கேள்விக்குறி ஆக்கி விடுகிறது. பிறந்த கையோடு செல்போன்கள், கணினி விளையாட்டுகள், பள்ளிக்குச் செல்வது, நண்பர்களோடு பொழுதுபோக்குதல் என அவர்கள் காலம்
கழிகிறது.
ஒரு
17 வயது பையன். அப்பா
அவனை எங்கே, என்ன படிக்க வைப்பது? என்று பலரையும் சந்தித்துக் கவலையோடு விசாரிக்கிறார். என்னிடமும் வருகிறார். நான் அந்தப் பையனோடு பேசுகிறேன்: “அரையாண்டுத் தேர்வில் எவ்வளவு மதிப்பெண் வாங்கினாய்?”
“ஆசிரியர்கள் குறைவாக மதிப்பெண் போட்டார்கள். அதனால் குறைந்துபோனது...”
“எவ்வளவு தம்பி?”
“1200க்கு 870”
“என்ன படிக்கப் போகிறாய்?”
“மருத்துவம்”
“மருத்துவம் படிக்க இந்த மதிப்பெண் போதுமா?”
“அதெல்லாம் அப்பா பார்த்துக் கொள்வார்”
அப்பா
பக்கத்தில் தலைநிமிர்ந்து நிற்கிறார். பையனுக்குத் தன்மேல் அவ்வளவு நம்பிக்கையாம்! அதில் அவருக்கு அப்படியொரு தற்பெருமை!
எங்கே
போகிறோம்? எதிர்காலம் எப்படி இருக்கும்? என்பதே தெரியாத வாழ்க்கைப் பயணம்! இது எங்கே போய் முடியும்? காலம்தான் பதில் சொல்லவேண்டும்.
ஆனால்,
எல்லா இளைஞரும் இப்படி இல்லை. சிலர் தங்கள் வருங்காலம் பற்றிச் சிந்திக்கிறார்கள்; தங்கள் குறிக்கோளை நோக்கி முன்னேற முயல்கிறார்கள்.
இவர்களிடம்
குறிக்கோள் இருக்கிறது. ஆனால், இவர்களின் குறிக்கோள் மிகவும் குறுகியதாக அமைந்துவிடுகிறது. இன்று பல இளைஞரின் மையக்
குறிக்கோள் பணம்... பணம் மட்டுமே!
எந்தத்
தொழிலில், குறைந்த உழைப்பில் அதிகப் பணம் கிடைக்கிறது? இன்று யார் யார் பணத்தை அள்ளிக் குவிக்கிறார்கள்?
ஒரு
காலத்தில் பொறியியல்... அப்புறம் மென்பொருள் துறை... இன்று வணிகவியல், எம்.பி.ஏ. போன்ற
நிதி நிர்வாகத் துறை, என்றும் மங்காத மருத்துவப் படிப்பு (3,000 இடங்களை நோக்கி எட்டு இலட்சம் இளைஞரின் போராட்டம்!)
இவற்றில்
ஏன் அதிக ஆர்வம்? தங்களுக்கு இயல்பான ஈடுபாடு இருப்பதாலா? இல்லை... அப்பா சொல்வதால்! நிறையப் பணம் வரும் என்பதால்! வெளிநாட்டிற்குப் போகலாம் என்பதால்!
‘அடைந்தால் மகாதேவி; அடையாவிட்டால் மரணதேவி’ என்கிற வகையிலான போராட்டம்! பல ஆண்டுப் போராட்டம்!
படிக்க
இடம் கிடைக்காதபோது... படிப்பில் சிறப்பாக வெற்றிபெற முடியாதபோது... படித்தவுடன் வேலை கிடைக்காதபோது... வேலையில் பணம் வந்து கூரையைப் பிய்த்துக்கொண்டு கொட்டாத போது...! மன அழுத்தம், வெறுப்பு,
தடுமாற்றம், தற்கொலை முயற்சி! இன்றைய இளைஞர்கள் பலர் இத்தகைய தோல்விச் சேற்றில் தவிக்கும் அவலம் நம் கண்முன் அரங்கேறிக் கொண்டிருக்கிறது.
இப்போது
நாம் மையக்கேள்விக்கு வருவோம்... வாழ்க்கை என்பது போராட்டமா? விளையாட்டா? வாழ்க்கை என்பது இரண்டுமில்லை; ஆனால், இரண்டும் கலந்த ஒன்று.
வாழ்க்கை
என்பது விளையாட்டுதான். ஆனால், ஓர் அர்த்தமுள்ள விளையாட்டு; குறிக்கோளை நோக்கிய விளையாட்டு. நம்மையும் நம்மைச் சுற்றி இருப்பவர்களையும் மகிழ்ச்சியாக வைத்திருக்கக் கூடிய விளையாட்டு.
வாழ்க்கை
சவால்கள் நிறைந்ததுதான். ஆனால், மிகவும் குறுகிய பணத்தை மட்டும் மையமாகக் கொண்ட போராட்டமல்ல; மற்றவர்களோடு சேர்ந்து நாம் விளையாடும் விளையாட்டுப் போட்டி! இப்படித்தான் விளையாட வேண்டும் என்கிற நியதிகள் நிறைந்த விளையாட்டுப் போட்டி!
இங்கே
வெற்றியும் தோல்வியும் அன்றாடச் சந்திப்புகள். அடுத்த வெற்றிக்கு வழி படைக்கும் சந்திப்புகள். ஆகவே, வாழ்க்கைச் சவால்களை மகிழ்ச்சியோடு சந்திப்போம், வெற்றி பெறுவோம்.
வாழ்க்கை
என்பது எப்படியாவது வெற்றி பெற்றாகவேண்டிய போராட்டம் அல்ல; வெறும் பொழுதுபோக்கு விளையாட்டும் அல்ல; சரியான வழியில், விதிகளுக்கு உட்பட்டு, சக நண்பர்களோடு விளையாடும்
ஒரு விளையாட்டுப் போட்டி!
தோல்விகள்
வந்தாலும், விதிகளை மீறாமல் விளையாடுவோம்... வெற்றி பெறுவோம்.