news-details
கவிதை
வல்ல தேவன் அழைக்கின்றார்!

வழியும்  உண்மையும்  நானென்றே

                வல்ல  இயேசு  மொழிந்தாரே!

வழியின்  துணையாய்  இறைச்சொற்கள்

                விழிபோல்  நம்மைக்  காத்திடுதே!

 

பாவ  இருளில்  வாழ்வோர்க்குப்

                பரமன்  அருளைப்  பகிர்வதற்கும்

காவல்  தூதர்  பணியாற்ற

                காக்கும்  இளையோர்  வருவீரே!

 

திராட்சைக்  கொடியாய்  வாழ்ந்திங்கே

                தேவன்  கனியைச்  சுவைப்பதற்குத்

திரட்டித்  தரவே  இளையோரே

                திரண்டு  வாரீர்  பணியாற்ற!

 

இறைவன்  பணியை  ஆர்வமுடன்

                இமைபோல்  நாளும்  வளர்த்திடவும்

துறவு  வாழ்வின்  சபைகளிலே

                தொடர்ந்து  பணியை  ஆற்றிடலாம்!

 

அழியா  இல்லம்  விண்ணகத்தை

                அடையும்  வழிகள்  இவையென்றே

வழியைக்  காட்ட  இளையோரை

                வருக  என்றே  அழைக்கின்றோம்!

 

கல்வி  மற்றும்  மருத்துவத்தைக்

                கடவுள்  பணியாய்ச்  செய்வோமே!

வல்ல  தேவன்  அழைக்கின்றார்

                வாரீர்  மேய்ப்புப்  பணியாற்ற!