news-details
ஞாயிறு தோழன்
ஜூன் 14, 2026 ஆண்டின் பொதுக்காலம் 11-ஆம் ஞாயிறு - விப 19:2-6; உரோ 5:6-11; மத் 9:36-10:8

திருப்பலி முன்னுரை

இயேசுவின் சீடர்களாய் இறையாட்சிப் பணியில் நம்மை இணைத்துக்கொள்ள ஆண்டின் பொதுக்காலம் 11-ஆம் ஞாயிறு நமக்கு அழைப்புவிடுக்கிறது. இன்றைய நற்செய்தியில் இயேசு, ‘அறுவடை மிகுதி, வேலையாள்களோ குறைவுஎன்று கூறி, இறையழைத்தலை நமது குடும்பங்களில் ஊக்குவிக்க அழைப்புவிடுக்கிறார்குரலற்றவரின் குரலாக, முகவரி இழந்தவர்களுக்கு முகவரி தருபவராக, பல்வேறு சமூகப் பிரச்சினைகளால் உடல், உள்ளம், மனம் மற்றும் ஆன்ம நோயினால் பாதிக்கப்பட்டு ஆறுதல் பெற ஏங்கித் தவிக்கும் உள்ளங்களின் வாழ்வின் அமைதியைத் தருபவராக வாழ இயேசு நம்மை அழைக்கிறார். அன்பை, அமைதியை, நம்பிக்கையை, சமத்துவத்தை, புத்துணர்வை இம்மண்ணில் உருவாக்க இயேசு நமது ஒத்துழைப்பைக் கேட்கின்றார்.

நமது குடும்பங்களில் உள்ள இளையோரை இறையாட்சிப் பணிக்காகத் தியாகம் செய்ய ஊக்குவிப்போம். நமது அன்பான சேவையால் ஆண்டவரைப் பின்பற்றி திருத்தூதர்கள் வரிசையில் இறையாட்சி மலர உழைக்கும் பேறுபெற்றோர் வரிசையில் இடம்பெறுவோம். அன்போடு செய்யப்படும் ஒவ்வொரு சின்னஞ்சிறிய செயலும் இறையாட்சியின் விதையாக உருவெடுத்து, சமூகத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். இறையாட்சிப் பணிக்கு இளையோரை அனுப்புவோம். நற்செயல்களால் இறையரசைக் கட்டியெழுப்புவோம் என்ற உறுதியான மன நிலையோடு  இணைவோம் இத்திருப்பலியில்.

முதல் வாசக முன்னுரை

இன்றைய முதல் வாசகம் இயேசு தம்முடைய சீடர்களுக்கு உண்மையான அன்பும் பணிவும் எவ்வளவு முக்கியமானவை என்பதையும், கழுகு தன் குஞ்சுகளைச் சுமப்பது போல நானும் உங்களின் பணிவாழ்வில் ஏற்படும் துன்பங்களில் உடனிருப்பேன் என்றும்கிறித்தவ வாழ்வின் மையம் சேவை மனப்பான்மையே என்றும் கூறி கடவுளின் உண்மையான பணியாளர்களாக  வாழ அழைக்கும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

நாம் இறைப்பற்று இன்றி வலுவற்று இருந்தபோதே கிறிஸ்து நமக்காகத் தம் உயிரைக் கொடுத்தார். நாம் கடவுளுக்குப் பகைவர்களாய் இருந்தும் அவருடைய மகன் நமக்காக உயிரைக் கொடுத்ததால் நாம் கடவுளோடு ஒப்புரவாக்கப்பட்டுள்ளோம். அவர் நமது பாவங்களைப் பாராமல் தம்முடைய இரக்கத்தால் ஒவ்வொரு நொடிப்பொழுதும் நம்மைத் தாங்கிக்கொள்வார் என்று கூறி, இறைவனின் பேரிரக்கத்தைச் சிந்திக்க அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

நம்பிக்கையாளர் மன்றாட்டுகள்

1. அழைத்தலின் அர்த்தமே எம் இறைவா! உம் பணி செய்ய உமது அழைப்பைப் பெற்ற திருத்தந்தை, ஆயர், அருள்பணியாளர், துறவியர் மற்றும் பொதுநிலையினர் அனைவருக்கும் ஆசி வழங்கும். தம் பணிவாழ்வில் வரும் எல்லா இடர்களிலும் உம் சிறகின் நிழலில் இவர்களை வைத்துப் பாதுகாக்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. நன்மைகளின் நாயகனே எம் இறைவா! நாட்டு மக்களைப் பாதுகாக்க உமது திருவுளப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட நாட்டுத்தலைவர்களை உம் பாதம் சமர்ப்பிக்கின்றோம். தலைவர்கள் அனைவரும் முப்பொழுதும் மக்களின் நலன்களுக்காய் உழைக்கக் கூடியவர்களாகவும், நாட்டு வளங்களைப் பாதுகாப்பவர்களாகவும், நல்லாட்சி புரிய அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. காக்கும் கடவுளே எம் இறைவா! எம் இளைஞர் தொழில்நுட்ப நுகர்வுக் கலாச்சாரத் தில் வீழ்ந்து கிடக்காமல் தன் அறிவுத்திறனை யும் ஆக்க சக்தியையும்  நாட்டின் வளர்ச்சிக்காய் பயன்படுத்தி சிறந்த இறைப்பற்று மிக்க இளைஞர்-இளம்பெண்களாக வளர அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடு கின்றோம்.

4. அழைத்தலின் நிரந்தரமே எம் இறைவா! திரு அவையை ஆன்மிக வழியிலும் இறைநெறியிலும் வழிநடத்தத் தேவையான இறை அழைத்தலை எம் குடும்பங்களில் இருந்து நீர் தேர்ந்தெடுத்துத் தரவும், எமது குழந்தையருக்கு அழைத்தலின் மகத்துவத்தை நாங்கள் எடுத்துரைக்கவும் தேவையான அருள்வரங்களைத் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.