எண்ணங்கள் நம் வாழ்க்கையைச் சீராக்கிச் செதுக்குவதில் அதிமுக்கியப் பங்கு வகிக்கின்றன. அது நம் செயல்பாட்டைப் புரட்டிப் போடும் ஆற்றல் கொண்டவை.
எண்ணங்கள்
என்பது வெறும் கருத்து மட்டுமல்ல; பல்வேறு பின் விளைவுகளை (நேர்மறை மற்றும் எதிர்மறை) ஏற்படுத்தும் வீரியம் கொண்டவை. இப்படிப்பட்ட எண்ணங்களை நாம் கவனமுடன் கையாண்டால் அதன் பலன் அதிகம். இல்லையென்றால், பின் விளைவுகள் நம்மைப் புரட்டி எடுக்கும்.
அறிவியல்
தரவுகளின் அடிப்படையில் ஒரு நாளைக்கு நமக்குள் 50,000 - 70,000 எண்ணங்கள் வந்துபோகும் எனக் கூறப்படுகிறது. அதை ஒரு மணி நேரத்திற்கு என்று பார்த்தால், சுமார் 300 முதல் 3,000 எண்ணங்கள் வரை இருக்கலாம்.
இது
நமது வேலை, கவனம், மனஅழுத்தம், தூக்கம் மற்றும் மனநிலையைப் பொறுத்து மாறும். பல எண்ணங்கள் மீண்டும்
மீண்டும் வந்து தொல்லை தரும் எண்ணங்களாக இருக்கும். ஆழ்ந்த கவனத்துடன் வேலை செய்யும்போது எண்ணங்கள் குறைந்து ஒரே நேர்கோட்டில் குவிந்து இருக்கும். கவலை அல்லது அதிக சிந்தனைகள் (over thinking) இருக்கும்போது எண்ணங்கள் வேகமாகப் பல விசயங்களுக்கு மாறிக்கொண்டே
இருக்கும்.
இப்படி
நிலையற்ற எண்ணங்களைக் கொண்டுதான் நிலையான வாழ்க்கையை அமைக்கப் போராடுகிறோம். ‘நிலையான, நிம்மதியான வாழ்க்கைக்கு வாய்ப்பே இல்லையா?’ என ஆதங்கம் வேண்டாம்.
அது முடியும்! எப்படி? அதற்குச் சில உளவியல் முறைகளை முறைப்படி அறியவேண்டும். அதை அறியும் ஒரு முயற்சியாக, என் வாழ்க்கையில் இதெல்லாம் நடந்ததற்கு இதுதான் காரணமா? என நம்மை நாமே
ஒரு சுயசோதனை செய்யும் வழி முறையாக, இனி ஒவ்வொரு வாரமும் உங்களோடு உரையாடக் காத்திருக்கிறேன்.
எண்ணங்களை
மேம்படுத்துவதும் மற்றும் செயல்படுத்துவதும் அவ்வளவு எளிதான அணுகுமுறை அல்ல; அதற்குச் சில ஒழுங்குமுறைகளும் விழிப்புணர்வும் ஆர்வமும் அவசியம். இவை
உங்களிடம் இருக்கிறது என்றால் அதை நடைமுறைப்படுத்தி உயர்வு காண இந்தத் தொடர் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்.
‘வாழ்க்கையைக் கொண்டாடு’
தொடருக்கு நீங்கள் தந்த பேராதரவைப் போல, இந்தத் தொடருக்கும் உங்கள் ஆதரவு நீளும்; உங்கள் எண்ணங்களையும் மனங்களையும் கவரும் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உண்டு. அந்த நம்பிக்கையோடு இனி உங்களோடு உரையாடுகிறேன். தொடர் மூலம் சந்திப்போம், தொடர்ந்து சிந்திப்போம்.