அண்மைக்கால இந்திய அரசியல் வரலாற்றில் குறிப்பாக, தமிழ்நாட்டின் தேர்தல் களங்களில் ‘மாற்று அரசியல்’ என்ற சொல் வழக்கு மிக அதிகமாக உச்சரிக்கப்படும் ஒரு கவர்ச்சி சொல்லாடலாக மாறியுள்ளது. ஆனால், நடைமுறை அரசியலின் எதார்த்தம், இந்தச் சொல்லின் ஆன்மாவை முற்றிலும் சிதைப்பதாகவே உள்ளது.
கோட்பாடுகளும்
கொள்கைசார் அர்ப்பணிப்புகளும் தேர்தல் வெற்றியைத் தீர்மானிக்கும் என்ற காலம் மறைந்து, இன்று ‘அளவுகடந்த இருப்பு’ அதாவது பணபலம், படைபலம், ஊடக ஆதிக்கம் ஆகியவையே ஒரு கட்சியின், அதன் வேட்பாளரின் வெற்றியைத் தீர்மானிக்கும் காரணிகளாக உருவெடுத்துள்ளன.
நடந்து
முடிந்த 2026 - தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், முன்னெப்போதும் இல்லாத வகையில் அரங்கேறிய பணப் புழக்கமும், அதனைத் தொடர்ந்து அரங்கேறும் அன்றாடக் காட்சிகளும் குறிப்பாக, கட்சித் தாவல்களும் நம் சனநாயகத்தின் அடித்தளத்தையே உலுக்கியுள்ளன. இச்சூழலில், நாம் காண்பது மக்கள் நலனை மையமாகக் கொண்ட இறையாண்மைமிக்க ஆட்சியா? அல்லது பெரும் முதலாளிகள் இலாபம் ஈட்டுவதற்காக முதலீடு செய்யும் ஒரு கார்ப்பரேட் வணிகமா? என்பதுதான்.
இந்தியத்
தேர்தல்களில் பணத்தின் ஆதிக்கம் என்பது ஏதோ ஒருசில தொகுதிகளோடு நின்றுவிடுவதில்லை. அது ஒட்டுமொத்த அமைப்பையும் தன்வயப்படுத்திய ஒரு பெரும் நோயாகவே இன்று மாறியுள்ளது. கடந்த 2004 முதல் 2014 வரையிலான நாடாளுமன்றத் தேர்தல்களில் போட்டியிட்ட வேட்பாளர்களின் தன் விவரப் பிரமாணப் பத்திரங்களை ஆய்வு செய்ததில், வேட்பாளர்களின் சராசரி சொத்து மதிப்பு 330% உயர்ந்துள்ளது. பணவீக்கத்தைச்
சரிசெய்து பார்த்தாலும், உண்மை மதிப்பில் இந்த உயர்வு 116% ஆகும். 2014 தேசியத்
தேர்தலில் போட்டியிட்ட முதன்மை வேட்பாளர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூபாய் 23.8 இலட்சமாக இருந்தது, இது அன்றைய இந்தியாவின் தனிநபர் வருமானத்தை விட (ரூ. 88,533) சுமார் 27 மடங்கு அதிகமாகும். 2026-இன் தற்போதைய தேர்தல் களங்களில் இந்த இடைவெளி பல மடங்கு அதிகரித்துள்ளது.
தேர்தல்
ஆணையம் விதிக்கும் செலவு வரம்புகளுக்கும், களத்தில் கட்சிகள் செய்யும் நேரடிச் செலவுகளுக்கும் இடையே எவ்விதத் தொடர்பும் இருப்பதில்லை. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் (1954)-இன் விதிகளை முற்றிலுமாக மீறி, கோடிக்கணக்கான பணம் தேர்தல்களில் இறைக்கப்படுகின்றன. குறிப்பாக, வெற்றிபெறும் வாய்ப்புள்ள வேட்பாளர்கள், சாதாரண வேட்பாளர்களைவிடச் சராசரியாக 20 மடங்கு அதிகச் சொத்து மதிப்புடையவர்களாக இருக்கிறார்கள்.
தேர்தல்
களத்தில் பணத்தின் செல்வாக்கு என்பது வாக்காளர்களின் வாக்குத் தெரிவை நேரடியாக மாற்றியமைக்கும் பேராபத்தாக உருவெடுத்துள்ளது. புள்ளிவிவரங்களின்படி, தேர்தல் களங்களில் கொடுக்கப்படும் பணம் சுமார் 15.83% வாக்காளர்களின் வாக்குத்
தெரிவை நேரடியாகத் தீர்மானிக்கிறது. இதில் பெண் வாக்காளர்களைவிட ஆண் வாக்காளர்களே பணத்தின் செல்வாக்கிற்கு அதிகம் ஆட்படுகிறார்கள்.
இங்கே,
வாக்கிற்குக் காசு வாங்கும் வாக்காளர்கள் தாங்களாகக் கேட்காமல் கட்சிகள் கொடுக்கும்போது ‘இயல்பாக’ பெற்றுக்கொள்பவர்கள் எனவும், தேர்தல் களச்சூழலைப் பயன்படுத்தி, வேட்பாளர்களிடமிருந்தோ அல்லது இடைத்தரகர்களிடமிருந்தோ பணத்தைக் கோரிப் பெறுபவர்கள் எனவும் இருவகையாகப் பிரிக்கப்படுகிறார்கள். மாற்றுக்கருத்துகளாலும், நலமான விவாதங்களாலும் ஈர்க்கப்படவேண்டிய வாக்காளப் பெருமக்கள், இன்று தற்காலிகப் பணப் பயன்களுக்காகத் தங்களின் ஐந்தாண்டு கால எதிர்காலத்தையே அடகுவைக்கும் அவலநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இது சட்டவிரோதச் செயல் மட்டுமல்ல; ஒரு சமூகத்தின் கூட்டுத் தார்மீக வீழ்ச்சி.
தேர்தலுக்கு
முன் வாக்கிற்குக் காசு கொடுக்கும் வேட்பாளர்கள், தேர்தலுக்குப் பின் தங்களின் ‘முதலீட்டை’
அசுர வேகத்தில் திரும்பப் பெற முனைகிறார்கள். அண்மைக்காலங்களில் சட்டமன்ற உறுப்பினர்கள் கோடிக்கணக்கான ரூபாய்களுக்கு விலை பேசப்பட்டு, கட்சி மாறும் ‘குதிரைப்பேர’ கலாச்சாரம்
தமிழ் நாட்டிலும், அதன் அண்டை மாநிலங்களிலும் அதிகம் அரங்கேறி வருகின்றது.
கட்சித்தாவல்
தடைச்சட்டம் போன்ற சட்டக் கட்டமைப்புகள் இருந்தபோதிலும், ஆளும் வர்க்கமும் அதிகார மையங்களும் அச்சட்டங்களின் துளைகளைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றன. மக்கள் ஒரு குறிப்பிட்ட கொள்கைக்காகவும், கட்சியின் சின்னத்திற்காகவும் வாக்களித்து ஒருவரைத் தேர்ந்தெடுக்கிறார்கள். ஆனால், அவரோ தன் சுய இலாபத்திற்காக மக்கள் அளித்த வெற்றியை விற்று, வேறொரு முகாமிற்குத் தாவுகிறார். இது ஒட்டுமொத்தச் சனநாயகக் கோட்பாட்டையும் கேலிக்கூத்தாக்கும் செயலாகும்.
ஆகவே,
உண்மையான மாற்று அரசியலுக்குத் தேவைப்படுவது அர்ப்பணிப்பா? அல்லது அளவு கடந்த இருப்பா? என்ற கேள்வி இன்று தமிழ்நாட் டில் எல்லாருடைய மனத்திலும் எழத்தொடங்கியுள்ளது. காரணம், அர்ப்பணிப்பு இங்கே முற்றிலும் ஓரங்கட்டப்பட்டு, அளவுகடந்த இருப்பே அடிப்படை அலகாக முன்னிறுத்தப்படுகிறது.
இந்திய
அரசியலில் சில கட்சிகளில் வேட்பாளர் தேர்வைக் கட்சியின் உயர்மட்டக் குழு தீர்மானிக்கிறது. பல நேரங்களில் தேர்தல்
சீட்டுகள் பெரும் பணக்காரர்களுக்கு விற்கப்படுகின்றன. இதனால் எளிய பின்னணியைக் கொண்ட மக்களுக்காக உழைக்கின்றவர்கள் தேர்தல் அரசியலில் இருந்து முற்றிலுமாக ஓரங்கட்டப்படுகிறார்கள்.
ஒரு
வேட்பாளர் தனக்குச் சாதகமாகக் களச் சூழலை மாற்றியமைக்க, தன்வசம் உள்ள ‘அளவு கடந்த இருப்பை’ காட்ட வேண்டியுள்ளது. ஆடம்பரப் பேரணிகள், பிரம்மாண்ட விளம்பரங்கள், சமூக ஊடகப் பக்கங்களை விலைக்கு வாங்குதல் என அனைத்தும் பணத்தால்
மட்டுமே சாத்தியமாகிறது. இதன் விளைவாக, மக்கள் பணி என்பது பின்னுக்குத் தள்ளப்பட்டு, சுயநிதி பங்களிப்புச் செய்யக் கூடிய பண முதலைகளின் புகலிடமாக
நாடாளுமன்றமும் சட்டமன்றமும் மாறுகின்றன.
பணமே
அரசியலையும் அதன் அதிகாரத்தையும் தீர்மானிக்கும் பட்சத்தில், அங்கு விளையும் ஆட்சி ஒருபோதும் ‘மக்கள் நல்வாழ்வுக்கான ஆட்சியாக’
இருக்க முடியாது. அது முற்றிலும் ஒரு ‘வணிக முதலீடாகவே’ மாறும்.
ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தில் முதலீடு செய்யும் முதலாளி எவ்வாறு இலாபத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொள்வாரோ, அதே போலத் தேர்தலுக்காக ரூ. 50 கோடியும், ரூ.100 கோடியும் செலவழிக்கும் வேட்பாளர், ஆட்சிப் பொறுப்பிற்கு வந்தவுடன் தன் முதலீட்டைவிடப் பல மடங்கு இலாபம்
ஈட்டவே முயல்வார்!
இதன்
விளைவாக, அரசின் திட்டங்களும் டெண்டர்களும் ஏழை எளிய மக்களின் நலனுக்காக வகுக்கப்படாமல், பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், வேட்பாளரின் சொந்தத் தொழில்களுக்கும் சாதகமாக வளைக்கப்படும். உட்கட்டமைப்புத் திட்டங்கள், சாலை மேம்பாடு, பொதுப்பணித்துறைச் செயல்பாடுகள்
என அனைத்திலும் முறைகேடுகள் மலிந்து, தரம் குறைந்த திட்டங்களே செயலாக்கம்பெறும். ஆட்சியாளர்களும் அரசியல்வாதிகளும் தங்களை எளிய மக்களின் பிரதிநிதியாகக் கருதாமல், தங்களின் சொத்துகளைப் பாதுகாக்கும் மேல்தட்டு வர்க்கமாகவே தங்களைக் கருதுவர்.
மேனாள்
தலைமைத் தேர்தல் ஆணையர் ஆர்.கே. திரிவேதி குறிப்பிட்டதுபோல, “தேர்தலில் வெற்றி பெறும் வாய்ப்பு என்பது செலவழிக்கப்படும் பணத்தின் அளவிற்கு நேர் விகிதத்தில் உள்ளது என்ற விதியை அரசியல் கட்சிகள் கண்டறிந்துள்ளன. இது நாட்டின் கொள்கை முடிவுகளை எடுக்கும் உயர் மட்டங்களைச் சீரழிக்கும் என்பது பற்றி அவர்களுக்கு எவ்விதக் கவலையும் இல்லை.”
பேரதிர்ச்சி
தரும் இந்தச் சீரழிவிலிருந்து நமது சனநாயகத்தை மீட்டெடுக்க வேண்டுமெனில், போர்க்கால அடிப்படையில் நாம் சில இலட்சிய மாற்றங்களைச் செய்தாகவேண்டும். அரசியல் கட்சிகளின் வரவு-செலவுக் கணக்குகள், தேர்தல் பத்திரங்களின் உண்மைத் தன்மை ஆகியவை உடனுக்குடன் மக்கள் பார்வைக்கு வைக்கப்படவேண்டும்; வாக்கிற்குக் காசு கொடுக்கும் வேட்பாளர்களையும், வாங்கும் வாக்காளர்களையும் உடனடியாகத் தகுதி நீக்கம் செய்யவும், வெற்றிபெற்ற பிறகு பணத்திற்காக விலைபோகும் உறுப்பினர்களையும், முறையான காரணமின்றி தானாக முன்வந்து பதவியைத் துறக்கும் உறுப்பினர்களையும் மீண்டும் போட்டியிடாதவாறு தடைசெய்யும் அளவிற்குக் கடுமையான தண்டனைகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அனைத்திற்கும் மேலாக, தங்களின் வாக்கு என்பது ஒரு நாட்டின் ஐந்தாண்டு காலத் தலையெழுத்து என்ற விழிப்புணர்வு மக்களிடையே விதைக்கப்படவேண்டும்.
இறுதியாக,
சனநாயகம் என்பது சாமானிய மனிதனின் கையில் இருக்கும் மிக உயரிய அதிகாரம். அந்த அதிகாரத்தை ஒருசில தாள்களுக்காகவும், தற்காலிகப் பரிசுப் பொருள்களுக்காகவும் விற்கும் சமூகம், ஒருபோதும் தன் உரிமைகளைக் கோரிப் போராட முடியாது. இவ்வேளையில்,
‘முடிவுகள் வந்த பின்னரே
வாழ்க்கைத்
தேர்வின்
வினாத்தாள்
முன் வைக்கப்படுகிறது!’
எனும்
கவிஞர் தமிழகனின் ‘கருப்பு நதி’ கவிதைதான் நினைவுக்கு வருகிறது. ஆகவே, தமிழ்நாட்டிற்கு இன்று தேவைப்படுவது ‘அளவுகடந்த இருப்பை’ காட்டி மக்களை ஏமாற்றும் தற்காலிக அரசியல் அல்ல; மாறாக, எளிய மக்களின் வலியை உணர்ந்து, அவர்களுக்காகத் தன் வாழ்வையே அர்ப்பணிக்கும் தூய கொள்கை கொண்ட மாற்று அரசியல் மட்டுமே! பணபலம் வெல்லும் என்ற மாயையை மக்கள் தங்களின் வாக்குரிமையின் மூலம் உடைத்தெறியாத வரை, சனநாயகம் என்பது பணக்காரர்களின் முதலீட்டுப் பெட்டியாகவே என்றும் நீடிக்கும் என்பது தவிர்க்க இயலாததே!
அன்புத்
தோழமையில்,
அருள்முனைவர்
செ.
இராஜா
@ இராஜசேகரன்
முதன்மை
ஆசிரியர்