‘உயர்வகலம் திண்மை அருமைஇந் நான்கின்
அமைவரண்
என்றுரைக்கும் நூல்’
(குறள் 743)
என்றார்
ஐயன் திருவள்ளுவர். அதாவது, உயரம், அகலம், உறுதி, பகைவரால் அழிக்கமுடியாத அருமை ஆகிய நான்கும் கொண்டிருப்பதே ’அரண்’ என்று நூலோர் வகுத்திருப்பதாக அரணுக்கு வரையறை தருகிறார்.
ஒரு
நாட்டின் அரசமைப்புச் சட்டம் என்பது வெறும் சட்டப் பிரிவுகளின் தொகுப்போ, ஆவணக் காப்பகங்களில் அழகு சேர்க்கும் பெரும் ஏடோ அன்று; அது அந்நாட்டின் ஒட்டுமொத்த மக்களின் கூட்டு மனச்சான்றின் பிரகடனம்; அது சனநாயகத்தின் ஆன்மா!
‘இந்திய மக்களாகிய நாம்...’ என்று கம்பீரமாகத் தொடங்கும் நமது இந்திய அரசமைப்புச் சட்டம், உலக அளவில் மிக நீண்ட, ஆழமான, உன்னதமான விழுமியங்களைக் கொண்ட ஒரு வாழ்வியல் வழிகாட்டி நெறி. தனிமனித மாண்பு, சமூக நீதி, சமத்துவம் ஆகிய மேன்மைமிகு கோபுரங்களின்மீது எழுப்பப்பட்ட இந்தச் சட்டம், அடித்தட்டு மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் ‘அரணாக’ உருவாக்கப்பட்டது. ஆயினும், காலத்தின் சுழற்சியில், மாறிவரும் அரசியல் சூழல்களில் இந்த அரணோ ஆளும் வர்க்கத்தின் கைகளில் மாற்றுக்கருத்துகளை ஒடுக்கும் ‘ஆயுதமாக’ உருமாறி வருகிறதோ? என்றதோர் எண்ணம் இன்று உலகளவில் எல்லாரிடத்திலும் எழத் தொடங்கியுள்ளது.
அண்மையில்,
இந்தியாவின் முதன்மைச் சட்ட வல்லுநரும், நாட்டின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்ட முதல் பெண்ணுமான மூத்த வழக்கறிஞர் திருமிகு. இந்திரா ஜெய்சிங் அவர்களின் நேர்காணலும், அவரது ‘The Constitution is my Home’ (‘அரசமைப்புச் சட்டமே எனது இல்லம்’)
என்ற சுயசரிதை நூலும் நம் கேள்விக்குப் புதியதொரு பரிமாணத்தையும் அறிவுசார் செறிவையும் வழங்கியுள்ளன.
அரசமைப்புச்
சட்டம் ஓர் ஆயுதமாக ஆளும் வர்க்கத்தால் பயன்படுத்தப்படும் தற்காலச் சூழல் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, “ஆம், அரசமைப்புச் சட்டம் ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தப்படுவதை நாம் அண்மைக்காலமாகப் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
ஆனால், அதனால்தான் நான் அரசமைப்புச் சட்டத்தை என் வீடாகக் கருதத் தொடங்கியிருக்கிறேன். அரசமைப்புச் சட்டம் என்பது அரசுகளுக்காகவோ, ஆளும் கட்சிகளுக்காகவோ எழுதப்பட்டது அல்ல; அது மக்களுக்காக எழுதப்பட்டது. இப்போது அரசமைப்புச்சட்டத்தை ஆட்சியாளர்களின் பிடியிலிருந்து மீட்டெடுத்து, அதற்குக் கட்டுப்பட்டு, அதனுள் நாம் குடிபுகும் நேரம் வந்துவிட்டது” என்று
குறிப்பிட்டிருக்கிறார்.
இந்தக்
கருத்து, சட்டம் என்பது ஆட்சியாளர்களின் அதிகார மிரட்டல்களுக்கான கருவி அல்ல; மாறாக, அது சாமானிய மக்களின் உரிமைக் கோட்டை என்பதை நமக்குத் தெளிவுபடுத்துகிறது.
அரசமைப்புச்
சட்டத்தின் பகுதி III-இல்
(பிரிவுகள் 12 முதல் 35 வரை) பொதிந்துள்ள ‘அடிப்படை உரிமைகள்’
இந்தியக் குடிமக்கள் அனைவரும் அமைதியுடனும் இணக்கத்துடனும் சுதந்திரத்துடனும் வாழ்வதற்கான குடிமைச் சமூக உரிமைகளை முழுமையாக உறுதி செய்கின்றன. தனிமனிதனின் பொருள்சார், அறிவுசார், நன்னெறி மற்றும் ஆன்மிக வளர்ச்சிக்கு இவை இன்றியமையாதவை என்பதால், இவை நாட்டின் ‘அடிப்படைச் சட்டம்’ எனப் போற்றப்படுகின்றன.
இங்கிலாந்தின்
உரிமைகள் மசோதா, அமெரிக்காவின் உரிமைகள் மசோதா மற்றும் பிரான்சின் மனித உரிமைப் பிரகடனம் ஆகியவற்றின் சாரமாகத் திகழும் இந்த அடிப்படை உரிமைகள், சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியச் சமூகத்தில் நிலவிய தீண்டாமை, சாதியப் பாகுபாடுகள் மற்றும் சுரண்டல்களை ஒழித்திடும் பெரும் சமூகப் புரட்சிக்கான காரணிகளாக விளங்கின.
‘சட்டத்தின் முன் அனைவரும் சமம்; சாதி, மத, பாலின, பிறப்பிடப் பாகுபாடுகளுக்கு இதில் இடமில்லை’
எனும் சமத்துவ உரிமை (பிரிவுகள் 14-18); பேச்சுரிமை, கருத்துச் சுதந்திரம், அமைதியான முறையில் கூடுதல் மற்றும் சங்கங்கள் அமைக்கும் சுதந்திர உரிமை (பிரிவுகள் 19-22); மனிதக் கடத்தல், குழந்தைத் தொழிலாளர் முறை, அடிமை முறைகளைத் தடுக்கும் சுரண்டலுக்கு எதிரான உரிமை (பிரிவுகள் 23-24); எம்மதத்தையும் வழிபடவும் பரப்பவும் உள்ள சமயச் சுதந்திர உரிமை (பிரிவுகள் 25-28); சிறுபான்மையினரின் மொழி மற்றும் கலாச்சாரப் பாதுகாப்பு கொண்ட கலாச்சார மற்றும் கல்வி உரிமை (பிரிவுகள் 29-30); அடிப்படை உரிமைகள் பறிக்கப்படும்போது உச்ச நீதிமன்றத்தை நாட வழிவகை தந்த அரசமைப்புக்குட்பட்டுத் தீர்வு காணும் உரிமை (பிரிவு 32) எனும் ஆறு தூண்கள்மீது ‘மக்களுக்கான’ இவ்வரண்
அமைக்கப்பட்டுள்ளது.
மேலும்,
அண்ணல் அம்பேத்கர் அவர்களால் ‘அரசமைப்புச் சட்டத்தின் ஆன்மா’ என வர்ணிக்கப்பட்ட பிரிவு
32 மற்றும் உயர் நீதிமன்றங்களின் பிரிவு 226 ஆகியவற்றின் கீழ் நீதிமன்றங்கள் பேராணைகளைப் பிறப்பித்து, அரசு இயந்திரத்தின் அத்து மீறல்களிலிருந்து குடிமக்களைப் பாதுகாக்கும் பேரரணாக விளங்குகின்றன. இவற்றுடன், 2009-இல் சேர்க்கப்பட்ட ‘கல்வி உரிமைச் சட்டம்’
(RTE) சமுதாயத்தின்
விளிம்புநிலைச் சிறுவர்களுக்கான கல்விப்புரட்சியை அதிகார வர்க்கத்தின் பிடியிலிருந்து விடுவித்துள்ளது.
ஆயினும்,
அரசமைப்புச் சட்டம் குடிமக்களுக்கு வலுவான சட்டப் பாதுகாப்பை வழங்கினாலும், மறுபக்கம், ஆட்சியாளர்களின் கைகளில் ஒடுக்குமுறை ஆயுதமாகவே இருக்கின்றது.
குறிப்பாக,
பிரிவு 19 வழங்கும் பேச்சுரிமை, கருத்துச் சுதந்திரம் ஆகியவை முழுமையானவை அல்ல; நாட்டின் பாதுகாப்பு, பொது அமைதி, ஒழுக்கம் ஆகியவற்றின் பெயரால் அரசு ‘நியாயமான கட்டுப்பாடுகளை’ விதிக்கலாம்
என அரசமைப்புச் சட்டம் அனுமதிக்கிறது. ஆனால், இந்த ‘நியாயமான’
என்ற சொல் மிகப்பரந்த, தெளிவற்ற அர்த்தங்களைக் கொண்டிருப்பதால், ஆளும் வர்க்கம் தனக்கு எதிரான நியாயமான விமர்சனங்களையும், மாற்றுக் கருத்துகளையும் ‘தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்’ என
முத்திரைக் குத்தி ஒடுக்குவதற்கு இப் பிரிவைப் பயன்படுத்திக் கொள்கிறது.
மேலும்,
விசாரணையோ, குற்றச்சாட்டோ இன்றி ஒருவரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கைது செய்து சிறையில் அடைக்க பிரிவு 22, அரசை அனுமதிக்கிறது. உலகளாவிய தாராளமயச் சனநாயக நாடுகளில் இல்லாத இந்தக் கொடூரமான அம்சம், இந்திய அரசமைப்பில் இடம்பெற்றுள்ளது குடிமைச் சமூக ஆர்வலர்களால் பெரிதும் விமர்சிக்கப்படுகிறது.
அரசமைப்புச்
சட்டம் வழங்கியுள்ள அதிகார வரம்புகளைப் பயன்படுத்தி இயற்றப்படும் ‘சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம்’
(UAPA - Unlawful Activities Prevention Act) போன்ற
கொடூரமான சட்டங்கள், அண்மைக்காலமாகச் சமூகச் செயற்பாட்டாளர்கள், எழுத்தாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு எதிராக ஏவப்படுகின்றன. நீதிமன்றப் பிணை பெறுவதைக் கடினமாக்கும் இத்தகைய சட்டங்கள், தகுந்த நீதித்துறை மேற்பார்வையின்றி, குடிமக்களை நீண்ட காலம் சிறையில் அடைக்கும் ‘அரசியல் ஆயுதமாகவே’
மாறியுள்ளன.
நீதிமன்றங்களின்
நீண்டகாலத் தாமதங்கள், எளிய மக்களுக்குச் சட்ட உதவி கிடைப்பதில் உள்ள பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் ஆகியவை சட்டம் வழங்கும் பாதுகாப்பைச் சாமானியர்களுக்கு எட்டாக் கனியாக்குகின்றன.
காஷ்மீர்
முதல் கன்னியாகுமரி வரை ‘யாவரும் இந்நாட்டு மக்களே!’ எனும் ஒருமைப்பாட்டுக் கருத்தியலில் காலூன்றிய முண்டாசுக் கவிஞன்,
‘சாதி மதங்களைப் பாரோம் - உயர்
சன்மம்இத்
தேசத்தில் எய்தின ராயினும்
வேதிய
ராயினும் ஒன்றே - அன்றி
வேறு
குலத்தின ராயினும் ஒன்றே!’
என
வேறுபாடுகள் இல்லை, யாவரும் ஒன்றே என்று முழங்கினான்.
நீதியரசர்கள்
ஜான் மைக்கேல் டி’குன்ஹா, சந்துரு போன்றோர் ஒருபுறம், அண்மையில் திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் வழக்கு தொடங்கி அனைத்து வழக்கிலும் சிறுபான்மையினருக்கு எதிராகத் தீர்ப்பு வழக்கும் நீதியரசர் ஜி.ஆர். சுவாமி
நாதன் போன்றோர் மறுபுறம் எனப் பார்க்கும்போது சட்டம் தன் கடமையைச் சரியாகச் செய்கிறதா? என்ற கேள்விதான் எழுகின்றது.
இந்திய
அரசமைப்புச் சட்டம் என்பது தேங்கி நிற்கும் நீரல்ல; அது ஓடும் நதி. அது மக்களுக்கு அரணா? அல்லது ஆட்சியாளர்களுக்கு ஆயுதமா? என்ற கேள்விக்கான விடை, சட்டம் என்ன கூறுகிறது என்பதில் இல்லை; மாறாக, அச்சட்டம் யாருடைய கைகளில் இருக்கிறது மற்றும் நீதித்துறை எவ்வளவு சுதந்திரத்துடன் செயல்படுகிறது என்பதில்தான் இன்று அடங்கியிருக்கிறது.
இறுதியாக,
திருமிகு இந்திரா ஜெய்சிங் அவர்களின் கூற்றுப்படி, அரசமைப்புச் சட்டம் ஆளும் வர்க்கத்தின் அரசியல் சதுரங்கக் களம் அல்ல; அது 140 கோடி மக்களின் வாழ்வுக்கான உன்னத இல்லம். அந்த இல்லத்தின் தூண்களை, அதன் சனநாயகப் பண்புகளை, ஆட்சியாளர்களின் அதிகார ஆக்கிரமிப்புகளிலிருந்து மீட்டெடுத்துப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் தார்மீகக் கடமையும் ஒவ்வோர் இந்தியக் குடிமகனுக்கும் உண்டு. அதுவே தேசத்தின் இறையாண்மைக்கும் மாண்பிற்கும் நாம் செய்யும் உண்மையான தொண்டாகும்!
அன்புத்
தோழமையில்,
அருள்முனைவர்
செ.
இராஜா
@ இராஜசேகரன்
முதன்மை
ஆசிரியர்