சனநாயகத்தின் உன்னதமான நோக்கம், மக்கள் நலன் சார்ந்த ஆட்சியை அமைப்பதாகும். ஆனால், இன்றைய சூழலில் மத்தியிலும் மாநிலங்களிலும் (தமிழ்நாடு உள்பட) நிலவும் ஆட்சி அமைப்புகள் தங்களின் உண்மையான சனநாயகக் கடமையிலிருந்து விலகி, ஒருசில அதிகாரச் சக்திகள் மற்றும் நிதி மூலதனக் குழுக்களின் கரங்களில் சிக்குண்டு கிடக்கின்றன என்பதுதான் எதார்த்தமான கசப்பு மிகுந்த உண்மை.
இத்தகைய
சூழலில், இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள கூட்டாட்சித் தத்துவமும், அமைச்சரவைச் செயலகங்களின் அதிகாரப் பகிர்வுகளும் வெறும் ஏட்டுச் சுரைக்காயாகவே மாறிப்போயின.
‘அரசியல்’ என்பது கொள்கை வழிபட்டது அல்ல; மாறாக, அது முதலீடு, இலாபம், அதிகாரம் என்ற வணிகக் கணிதமாக இன்று சுருங்கிவிட்டது. திரைப்படங்களுக்கு நிதி அளிக்கும் ‘நிதியாளர்கள்’ (Financiers) போல இன்றைக்கு அரசியலையும், அரசியல் கட்சிகளையும், ஏன்... ஆட்சிகளையுமே பின்னணியில் இருந்து இயக்கும் ‘அரசியல் நிதி முதலீட்டாளர்கள்’ (Political Financial Investors) உருவாகிவிட்டார்கள். சிறுமதி கொண்ட இந்த வெகுமதியாளர்களின் பணபலத்தாலும், பின்புல ஆதிக்கத்தாலும் ஆட்சி அதிகாரத்தில் அமர்பவர்கள் மக்கள் பிரதிநிதிகளாகச் செயல்படாமல், வெறும் பொம்மைகளாகப் பல நேரங்களில் உலா
வருகிறார்கள்.
மத்தியிலும்
சரி, மாநிலத்திலும் சரி, இன்றைய ஆட்சி நிர்வாக அமைப்பில் அமைச்சர்களுக்குத் தங்களின் துறை சார்ந்த அடிப்படை அறிவோ, அரசின் சட்டதிட்டங்கள் குறித்த புரிதலோ, ஏன்... ஓர் அமைச்சகத்தின் அன்றாடக் கடமைகள் என்ன என்பது பற்றிய தெளிவோ சிறிதும் இல்லாமல் இருப்பதுதான் இந்தச் சனநாயகத்தின் மிகப்பெரிய அவலம்.
அமைச்சரவை
என்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அறிவார்ந்த தலைவர்களின் வழிகாட்டுதலில் இயங்க வேண்டும். ஆனால், தொழில்நுட்பமும் சட்ட நுணுக்கங்களும் நிர்வாகத் திறனும் தேவைப்படும் இக்காலகட்டத்தில், தங்களின் தகுதியைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாமல் வெறும் அரசியல் அறிமுகம், நட்பு, நெருக்கம் போன்றவற்றை மட்டுமே தகுதியாகக் கொண்டு அமைச்சர்களாகிவிடும் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் குடிமைப்பணி அதிகாரிகளின் கைகளில் ஆட்சி நிர்வாகம் முற்றிலும் முடங்கிப்போகிறது அல்லது நிழல் உலக நிதி முதலாளிகளின் கட்டளைக்கேற்பக் கோப்புகள் நகரத் தொடங்குகின்றன.
ஒன்றியத்தில்
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ச.க.
அரசு எதேச்சதிகாரப் போக்கோடு செயல்படுகிறது என்ற விமர்சனம் பரவலாக உள்ளது. எனினும், தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடித்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் முதலமைச்சர் ஜோசப் விஜய், அதே மோடி மாடலைத் தனது ஆட்சி மாடலாகக் கொண்டிருப்பதுபோல் தோன்றுவது, மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டில்
எந்தவொரு கொடூர நிகழ்வு நடந்தாலும் வாய் திறக்காதவர்களாகவே இருவரும் வலம் வருவது, ‘மக்கள்மைய அரசியலை’ கேள்விக்குறியாக்குவதோடு கேலிக்குள்ளாக்குவதாகவும் இருக்கிறது. தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக நிகழும் காவல்நிலைய மரணங்கள், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், பழனி கோவில் நிலம் மோசடியாகத் திட்டமிட்டு விற்கப்பட்ட பெரும் அதிர்ச்சியான நிகழ்வு, காவிரி நதிநீர்ப் பிரச்சினை, மேகதாது அணைப் பிரச்சினை, ‘நீட்’ தேர்வு குறித்த மாணவர் போராட்டம்... இவை எதற்கும் அரசு பொறுப்பேற்பதில்லை.
டெல்லியில்
‘நீட்’ தேர்வுக்கு
எதிராக நாடு தழுவிய மாணவர் போராட்டங்கள் கொழுந்துவிட்டு எரியும்போது, முதலமைச்சரும், ஒட்டுமொத்த அமைச்சரவையும் ‘ஜனநாயகன்’
திரைப்படத்தைப்
பார்த்து உணர்ச்சிப்பெருக்கில் மிதக்கிறார்களே தவிர, நாட்டைப் பற்றிய கவலை இல்லை.
தமிழ்நாட்டின்
பல பகுதிகளிலும் சென்னையிலும் ஜந்தர் மந்தர் போராட்டத்திற்கு ஆதரவாக மாணவர்கள் வீதியில் இறங்கிப் போராடியபோது, தமிழ்நாடு அரசு தனது நிலைப்பாட்டைத் தெளிவாக வெளிப்படுத்தவில்லை. இராகுல் காந்தி கைது செய்யப்பட்ட பிறகே பா.ச.க.-வின் பெயரைக் கூடக் குறிப்பிடாமல் ஒரு மென்மையான கண்டன அறிக்கையோடு தன் கடமையை முடித்துக் கொண்டது.
அரசமைப்புச்
சட்டம் வழங்கிய போராட்ட உரிமைகளைக்கூட இவ்விரு அரசுகளும் நசுக்குகின்றன.
பல இடங்களில் போராடிய மாணவர்களையும், அரசியல் கட்சித் தலைவர்களையும் காவல்துறை கடுமையாகத் தாக்கியுள்ளது. ‘தெருவில் இறங்கிப் போராடக் கூடாது’ என்ற அமைச்சர்களின் கூற்று, சனநாயகத்தைப் பற்றிய அவர்களின் அற்பப் புரிதலையே காட்டுகிறது. போராட்டம் என்பதே வீதியில் இறங்கி மக்களுக்காகக் குரல் கொடுப்பதுதானே?
‘நீட்’ தேர்வு முறைகேடுகள் நாடெங்கும் பற்றி எரியும் பிரச்சினையாக இருக்கும்போதும் மௌனம் காப்பதும், விமர்சனங்களை எதிர்கொள்ளத் தயங்குவதும், விமர்சிப்பவர்களைக் கைது செய்வதும் நல்ல தலைமைக்கான அழகல்ல. ஒன்றியத்தில் மோடியை எதிர்க்கும் காங்கிரஸ், தமிழ்நாட்டில் விஜய்க்கு முட்டுக்கொடுப்பது அவர்களின் எதிர்கால அரசியலுக்கே ஆபத்தானது. தி.மு.க.
மீதான வன்மத்தால் சிறுமதியாளர்களின் தூண்டுதலுக்குப் பலியாகி இராகுல் காந்தி எடுத்த இந்தக் கூட்டணி முடிவு தவறானது என்றே அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
மேலும்,
தமிழ்நாட்டின் வாழ்வாதாரப் பிரச்சினைகளில் இந்த அரசு காட்டும் மெத்தனப் போக்கு பெரிதும் கண்டிக்கத்தக்கது. “மேகதாது அணைப் பிரச்சினையில் டெல்லி எஜமானர்களைப் பகைத்துக்கொள்ளாமலும், ஆட்சிக்கட்டிலைக் காப்பாற்ற காங்கிரசுக்கு எதிராகப் பேசாமலும், தமிழ்நாட்டின் உரிமையை முதலமைச்சர் அடகு வைத்துள்ளார்” என
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி குற்றம் சாட்டியுள்ளது இங்கு கவனிக்கத்தக்கது.
மாநிலங்களவையில்
பா.ம.க. தலைவர்
அன்புமணி ராமதாஸ் எழுப்பிய கேள்விக்கு, “காவிரி ஆற்றின் குறுக்கே எந்தவொரு கட்டுமானத்தையும் மேற்கொள்ள கீழ்பாசன மாநிலமான தமிழ்நாட்டின் அனுமதியைப் பெறவேண்டும் என உச்ச நீதிமன்றத்
தீர்ப்பில் குறிப்பிடப்படவில்லை” என
மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சர் பூஷன் சௌத்ரி அளித்த பதில் தமிழ்நாட்டில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆயினும்,
“2018 பிப்ரவரி 16-ஆம் தேதியிட்ட உச்ச நீதிமன்றத் தீர்ப்பு மற்றும் சட்ட விதிகளைக் கணக்கில் கொள்ளாமல் மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சர் அளித்த பதில் ஏமாற்றமளிக்கிறது. அந்தப் பதில் உடனடியாகத் திரும்பப் பெறப்படவேண்டும்; மேகதாது திட்டம் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பிற்கு உட்பட்டது என்பது நிரூபிக்கப்படும் வரை அதற்கு எவ்வித சட்டப்பூர்வ அனுமதியும் வழங்கக்கூடாது” எனப்
பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய், காலம் தாழ்த்தி எழுதியுள்ள கடிதமும் பாராட்டத்தக்கதே!
காவிரி
ஆறு என்பது வெறும் நீர் ஆதாரம் மட்டுமல்ல, தென்னிந்தியாவின் கோடிக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரம். ஆனால், ஒன்றிய அரசின் இந்தத் துரோகப்போக்கிற்கு எதிராக வெறும் கடிதங்களோடு நிறுத்திக்கொள்ளாமல், வலுவான அரசியல் மற்றும் சட்டப் போராட்டங்களை தமிழ்நாடு அரசு முன்னெடுக்கவேண்டுமென்றே மக்கள் விரும்புகின்றனர். மேலும், வேகம் அல்ல விவேகமே இந்த அரசிற்கு வேண்டுமென அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
இன்றைய
அரசியல் களம், கொள்கை அற்ற வெறும் ‘நிதி முதலீட்டாளர்களின்’ விளையாட்டு
மைதானமாக மாறிவிட்டது. அரசியலைப் பற்றிய போதிய தெளிவு இல்லாத, மக்கள் நலனில் அக்கறையற்ற, வெறும் விளம்பர வெளிச்சத்தில் மிதக்கும் நபர்களிடம் ஆட்சி அதிகாரம் சிக்கிக்கொண்டது.
இச்சூழலில்,
சிறுமதி கொண்ட வெகுமதியாளர்களால் நமது அரசியல் தினமும் சீரழிந்து கொண்டிருக்கிறது. இந்த அவலநிலை மாறவேண்டுமானால், சமூகப் பொறுப்பும், அரசியல் தெளிவும், சட்ட அறிவும் கொண்ட கற்றறிந்த இளைஞர்கள் துணிவோடு அரசியலுக்கு வரவேண்டும்.
அரசியல்
என்பது வெறும் வாக்கு வங்கி வியாபாரம் அல்ல; மாறாக, அது சமூக மாற்றம் மற்றும் மக்கள் சேவைக்கான கருவி என்பதை உணர்ந்த இளம் தலைமுறை பொறுப்பேற்க முன்வரவேண்டும்.
பணபலமும்,
திரையுலகச் செல்வாக்கும் மட்டுமே தகுதி என்று நினைக்கும் அரசியலை வீழ்த்தி, அறிவு சார்ந்த, கொள்கை சார்ந்த புதிய சனநாயகத்தை உருவாக்க கற்றறிந்த இளைஞர்கள் தலைமை ஏற்கவேண்டிய தருணம்
இதுவே!
அன்புத்
தோழமையில்,
அருள்முனைவர்
செ.
இராஜா
@ இராஜசேகரன்
முதன்மை
ஆசிரியர்