அருள்முனைவர் அந்தோணி ஜோசப் அவர்கள் செங்கல்பட்டு மறைமாவட்டத்தைச் சார்ந்தவர். தற்பொழுது பெங்களூரில் அமைந்துள்ள புனித பேதுரு பாப்பிறை உயர்கல்விப் பயிலகத்தில் (St. Peter’s Pontifical Insititute) திரு அவைச் சட்டப் பேராசிரியராகவும் பதிவாளராகவும் பணியாற்றி வருகின்றார். மேலும், தமிழ்நாட்டுத் திரு அவைச் சட்ட அறிஞர்கள் சங்கத்தின் செயலாளராகவும், செங்கல்பட்டு மறைமாவட்ட நீதிமன்றத்தின் நீதிபதியாகவும் பணியாற்றுகின்றார்.
உரோமை, பாப்பிறை உர்பானியா
பல்கலைக்கழகத்தின் திரு அவைச் சட்டத்தில் முனைவர் பட்டமும், வத்திக்கானின் உரோமை திருப்பீடப்
பேராலயத்தில் சிறப்புப் பட்டயப் படிப்புகளையும் நிறைவு செய்துள்ளார். இவர் திரு அவை
நீதிமன்ற நடவடிக்கைகள் சார்ந்த ஓர் ஆங்கிலப் புத்தகத்தையும், திரு அவைச் சட்டம் சார்ந்த
அறிவியல் ஆய்வுக் கட்டுரைகளையும், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் மறையுரை, திரு அவைப்
போதனைகள், இறையியல் மற்றும் ஆன்மிகச் சிந்தனைகள் கொண்ட படைப்புகளை வெளியிட்டுள்ளார்.
தற்போது ‘நம் வாழ்வு’
வார இதழில் மறையுரை வழங்க முன்வந்துள்ள அருள்முனைவர் அந்தோணி
ஜோசப் அவர்களை ‘நம் வாழ்வு’
அன்போடு வரவேற்கிறது.
- முதன்மை ஆசிரியர்
நம்பிக்கை
வாழ்வினை வளர்த்திட, ஆழமாய் வாழ்ந்திட, வேரூன்றி விருட்சமாய் வளர்ந்து, நம்பிக்கை கனிகளை வழங்கிட, புதுமைகளையும் அசாதாரண நிகழ்வுகளையும் எதிர்நோக்கி வாழ்வது நம்பிக்கை வாழ்வின் உண்மையான அர்த்தங்களையும் மதிப்பீடுகளையும் மங்கச் செய்யும். புதுமைகள் மட்டுமே நம்பிக்கையை மிகுதியாக்கும் என ஒரு நம்பிக்கையாளர்
கருதினால், அந்த நம்பிக்கை ஆழமற்ற, மேலோட்டமான நம்பிக்கையை வெளிப்படுத்துகின்றது. புதுமைகளால் மட்டுமே கிறித்தவ நம்பிக்கை மிகுதியாகின்றதா? ஆனால், அன்றாட வாழ்வின் நிகழ்வுகளும் இறைப்பராமரிப்பும் அமைதியும் உடனிருப்பும் நமது நம்பிக்கையை மிகுதியாக்கும் காரணிகள் என்பதை இன்றைய வாசகங்கள் தெளிவுபடுத்துகின்றன.
எலியாவின் கவலையும்
அச்சமும்
முதல்
வாசகம் எலியாவின் ஓரேபு மலை அனுபவத்தைப் பற்றி உரைக்கின்றது. பொய் இறைவாக்கினர்களைக் கொன்றுவிட்டு, வேற்றுத் தெய்வங்களின் வழிபாட்டினை வெறுமையாக்கி, யாவே இறைவனின் உடனிருப்பையும் வார்த்தைகளையும் மெய்ப்பிக்கின்றார். அதனால் அந்நாட்டு அரசனின் கோபத்திற்கு உள்ளாகி அவர் எலியா இறைவாக்கினரைக் கொன்றொழிக்க முடிவெடுத்துச் செயல்பட்டபொழுது, அவரிடமிருந்து
தப்பி ஓடுகின்றார். காகத்தின் வழியாக அப்பமும் தண்ணீரும் பெறப்பட்டு இறைப்பராமரிப்பை உணர்கின்றார். அவர் ஓரேபு மலையைச் சென்றடைந்தபொழுது இறைவன்
அவர்முன் கடந்து வருவது இறைவனால் அறிவுறுத்தப்பட்டு, மலையின் குகையிலிருந்து வெளியே வந்து நிற்கின்றார். மேகத்தூண்களிலும், நெருப்புப் பிழம்புகளிலும், வானிலிருந்து தோன்றுகின்ற இடி முழக்கங்களிலும் பேரிரைச்சல்களிலும் பூமியை உலுக்குகின்ற நிலநடுக்கங்களிலும் இறைவன் பிரசன்னத்தை அறியலாம் எனக் காத்திருந்த எலியாவிற்கு ஏமாற்றமே மிஞ்சியது.
அவரது
உள்ளம் மன அமைதியின்மை என்னும்
இரைச்சலால், பயம் என்னும் நடுக்கத்தால் நிறைந்திருந்த தருணத்தில், இறைவன் தம்மை இன்னும் அதிகமான இரைச்சல் மிகுந்த சூழ்நிலையில் வெளிப்படுத்த விரும்பவில்லை. இறைவனின் பிரசன்னத்தில் நின்று மனபலம் பெறவேண்டும் என்று எண்ணிய எலியா இறைவாக்கினருக்கு இறைவன் மெல்லிய தென்றலில் வெளிப்படுத்துகின்றார். இறைவனின் வெளிப்பாடு அசாதாரண சூழலில், நிகழ்வுகளில், பிரமிப்பும் பிரமாண்டமும் மட்டும் நிறைந்தது அல்ல; அந்நிலைக்கு,
அச்சூழலுக்கு ஏற்ப அவரின் வெளிப்பாடு அமைதியிலும், மெல்லிய தென்றலிலும் மெல்லிய குரலிலும் அமைந்துள்ளது; அக்குரல் எலியாவை
உறுதிப்படுத்தியது; மீண்டும் இறைவாக்குப் பணிக்கு அவரை உந்துகின்றது.
‘ஆண்டவராம் இறைவன் உரைப்பதைக் கேட்டேன்...’ எனத் தொடங்கும் இன்றைய திருப்பாடல் 85, இஸ்ரயேல் மக்களின் வாழ்வில் இறைவனின் குரலும் உடனிருப்பும் அவர்களுக்கு நல்லதை மட்டுமே வழங்கியது என்பதை எடுத்துரைக்கின்றது. ‘அவரின் குரலுக்குச் செவிமெடுக்கும் நாட்டிற்கு நல்வினை அமையும், வாழ்வு பிறக்கும்’
என்னும் வரிகள் இன்றைய வாசகங்களோடு பொருந்திச் செல்கின்றது. எலியாவிற்கு மனவுறுதியும், நற்செய்தியில் இவர்களுக்கு நம்பிக்கையையும் இறைவனின் குரலின் வழியாகக் கிடைக்கின்றது.
இன்றைய
இரண்டாம் வாசகத்தில் தூய பவுல் இறைவன் மாட்சியை, பிரசன்னத்தை அவரைக் கடவுளாக ஏற்றுக்கொண்ட மக்கள் மத்தியில் வெளிப்படுத்தியதை நினைவுகூர்ந்து, இறைவாக்குகளும் உடன்படிக்கையும் திருச்சட்டங்களும் இஸ்ரயேல் மக்களின் அன்றாட வாழ்வின் இறைமகனின் பிரசன்னத்தை உணர்த்தும் வெளிப்பாடுகளாகவே அமைந்திருந்தன எனக் கோடிட்டு விளக்குகின்றனர். அனுதின வாழ்வின் சூழலில் துன்பங்களும் வேதனைகளும் போராட்டங்களும் நிலைகுலையச் செய்யும் தருணங்களில், இஸ்ரயேல் மக்களிடத்தில் ஒப்படைக்கப்பட்ட உடன்படிக்கையும் இறைவாக்குகளும் அவர்களை
உறுதிப்படுத்தின.
இன்றைய
நற்செய்தி வரிகளுக்கு முன்பாக இயேசு முதலில் 5,000 மனிதர்களைச் சந்தித்து உணவளிக்கின்றார். அவர்களின் பசியை அறிந்து அவர்களுடன் நின்று, தோழமையை வெளிப்படுத்திப் பசியாற்றுகின்றார். பிறகு இரவில் தனித்துச் சென்று இறைத்தந்தையுடன் உரையாடுகின்றார். அதிகாலைப் பொழுதில் தம்மைச் சார்ந்த சீடர்களைச் சந்திக்கக் கடலுக்குள் செல்கின்றார். இவ்வாறு இயேசுவின் செயல்பாடு சந்தித்தல், உரையாடுதல், உடனிருத்தல் என அமைகின்றது.
சீடர்களின் கலக்கமும்
இயேசுவின்
உடனிருப்பும்
அலைகளால்
படகு அலைக்கழிக்கப்பட்டு, கரையிலிருந்து நெடுந்தொலைவு சென்றுவிட்டதால் சீடர்கள் கலக்கம் அடைகின்றனர். துன்பத்தில், அபாயகரமான சூழலில், ஆர்ப்பரித்து எழும் அலைகளின் மத்தியில் சீடர்கள் தாங்கள் தனித்துவிடப்பட்டதாக உணர்கின்றனர். அச்சூழலைத் தனியாக எதிர்கொள்ள வேண்டியதாக அஞ்சினர். இயேசு அவர்களை விட்டு வெகுதூரத்தில் இருப்பதாகக் கருதிய நிலையில், இயேசு அவர்களை நோக்கி வருகின்றார். ‘துணிவோடு இருங்கள்; அஞ்சாதீர்கள்’ என
நம்பிக்கையை வளர்க்கின்றார்.
நமது
வாழ்விலும் பல நேரங்களில் பெரும்புயல்
போன்ற சூழல்கள் போராட்டங்கள், மனக்கவலைகள், இழப்புகள்... இவற்றில் சிக்கி மன அமைதியை இழக்கும்பொழுதும்,
செய்வதறியாது திகைக்கும்பொழுதும் இறைவன் நம்மைவிட்டு வெகுதூரத்தில் இருப்பதாக உணர்கின்றோம். இறைவன் மௌனமாய் இருப்பதாய் நினைக்கின்றோம். மௌனத்திலும் செயலாற்றும், உறைந்துபோன இறைமகனாகவே அவரை நினைக்கின்றோம்.
இயேசுவைத்
தொடக்கத்தில் சீடர்களால் ‘கண்டுகொள்ள’ முடியவில்லை.
இருள் சூழ்ந்த கடல், பயம் நிறைந்த கண்கள், புயல் காற்று நிறைந்திருந்த அலைகள்... இவற்றின் பேரிரைச்சல் மத்தியில் இயேசு அவர்களை நோக்கிச் செல்வதை அவர்களால் அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. இயேசு “நான் உங்களோடுதான் இருக்கிறேன்” என்ற
இயேசுவின் மெல்லிய - சாந்தமான குரல் அவர்களின் காதில் விழவில்லை. பயமும் அச்சமும் கலக்கமும் அவர்களிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகிய தருணத்தில்தான் இயேசுவின் உடனிருப்பை, அருகாமையை உணர்கின்றனர். துடுப்புகளை இயக்கிய சீடர்களின் கரங்களில் இறைவனின் கரமும் உடனிருக்கின்றது.
நம்மைக்
கவலையும் சோதனையும் வேதனையும் அலைக்கழிக்கும்போது இயேசுவின் மெல்லிய, நம்பிக்கை தரும் உடனிருக்கும் வார்த்தைகள், நம் செவிகளைக் கூர்மையாக்கவேண்டும். அச்சூழலில்தான் நமது நம்பிக்கை பலப்படும்.
பேதுருவின் துணிச்சலும்
ஆழமற்ற
நம்பிக்கையும்
இயேசு
கடல்மீது சீடர்களை நோக்கி நடக்கும்பொழுது மற்ற சீடர்கள் பயத்தில் உறைந்திருந்தபொழுது பேதுரு மட்டுமே துணிச்சலோடு பேசுகின்றார். அவரது துணிச்சல் மிகுந்த விருப்பத்தினால் தானும் கடல்மீது நடக்க அனுமதிக்க இயேசுவிடம் உரையாடுகின்றார். குறைவான, குறைந்த நேரமே தாக்குப்பிடித்த அவரது ஆழமற்ற நம்பிக்கையால் கடலில் மூழ்குகின்றார். இயேசுவை நோக்கிச் செல்லவேண்டும் என எண்ணிய அவரது
விருப்பம் அவர் கடல்மீது நடந்திட காரணமாய் அமைந்தது. ‘இயேசுதான் அவர்’ என மெய்பிக்கத் தானும்
கடல்மீது நடந்திடும் புதுமையை அனுபவிக்க விரும்பிய பேதுரு, திடீரென ஏற்பட்ட அச்சத்தினால் இயேசுவின்மீது தான் பதித்த கண்கள் விலகியதால் நீரில் மூழ்குகின்றார். புதுமையை மட்டும் கொண்டு நம்பிக்கையை உறுதிப்படுத்த விரும்பிய பேதுருவால் அலைகளை எதிர்கொள்ள இயலவில்லை.
புதுமைகள்
மட்டுமே நம்பிக்கையின் அடித்தளமாய் அமைவதில்லை. புதுமைகள் மட்டுமே நம்பிக்கையை உருவாக்குவதில்லை. புதுமைகளின் அடித்தளத்தில் அமைந்திடும் நம்பிக்கையினால் மட்டுமே ஊன்றி நிலைத்து வாழ்ந்திட முடியாது. அவை அடையாளங்கள் மட்டுமே! இயேசுவின் மீதும் அவரது வார்த்தைகள் மீதும் அவரது உடனிருப்பின் மீதும் நம்பிக்கை கொண்டு செயல்படுவதும்தான் உண்மையான நம்பிக்கையின் அடித்தளம்.
நம்பிக்கை தளரும்போது
குரல்
எழுப்புவோம்
பேதுருவின்
நம்பிக்கை இயேசுவை விட்டு விலகி கடல் அலைகள் மீதும், ‘நான் நடக்கின்றேனா?’ என அவரது கண்கள்மீதும்
திரும்புகின்றபொழுது மூழ்குகின்றார். ‘ஆண்டவரே காப்பாற்றும்’ என
இயேசுவை நோக்கிக் குரலெழுப்பும்பொழுது, இயேசுவின் கரங்கள் அவரை நோக்கி நீண்டு பேதுருவை மீட்கிறது. நமது வேதனையின் கூக்குரலுக்கு எப்போதும் இறைவன் செவிமடுக்கின்றார். அவரது குரலும் கரங்களும் நம்மைப் பலப்படுத்துகின்றன.
திருத்தந்தை
புனித 23-ஆம் யோவான் இவ்வாறு குறிப்பிடுகின்றார்: “உங்களது அச்சங்களையும் பயங்களையும் அல்ல; உங்களது நம்பிக்கையையும் கனவுகளையும் கலந்தாலோசியுங்கள்.”
பதற்றமான,
கலக்கமான சூழ்நிலையில் நமது இதயத்தின் எண்ணங்களையும் அதிலுள்ள பயத்தையும் கண்முன் கொண்டு அவரை ஆலோசிப்பதற்குப் பதிலாக, நமது நம்பிக்கையையும், கடந்தகால நிகழ்வுகளில் அவற்றை எதிர்கொண்ட இறையனுபவத்தையும் மெல்லிய தென்றலிலும் உயர்த்திப் பிடித்து நிற்கின்ற இறைவனின் பிரசன்னத்தை உணர்வோம்.