news-details
ஞாயிறு மறையுரை
பொதுக்காலம் 21-ஆம் ஞாயிறு (23.08.2026) எசா 22:19-23; உரோ 11: 33-36; மத் 16:13-20 - இயேசுவுக்கு நான் யார்? எனக்கு இயேசு யார்?

யூத போதகர்கள், ரபிக்கள் கேள்விகளை எழுப்பி, சீடர்களுக்குப் போதிப்பது வழக்கம். கல்விப் போதனையில் இதனைசாக்ரடீஸ் முறைஎன்று அழைப்பார்கள். ஒரு சிறந்த சிந்தனையை வழங்கும்முன் அதனையொட்டிய கேள்வியை ஆசான்கள் எழுப்பி, அதற்கான விடையைத் தேடிடும் ஆர்வத்தை மாணவர்களிடம் தூண்டியெழுப்புவது ஒரு சிறந்த ஆசிரியரின் பயிற்றுவிக்கும் விதம். கேள்விகள் ஆழமாக இருக்கும்பட்சத்தில், அதனையொட்டிய சிந்தனைகளும் பதில்களும் ஆழமான உண்மையை, தெளிவான மனநிலையை, உறுதியான நிலைப்பாட்டை, அசைக்கமுடியாத உண்மையை நோக்கி இட்டுச்செல்லும்.

இன்றைய நற்செய்தியானது மத்தேயு 16-ஆம் அதிகாரத்தில் ஏறக்குறைய நற்செய்தியின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. இரண்டு கேள்விகளைச் சீடர்களை நோக்கி இயேசு எழுப்புகிறார்: 1. ‘மானிட மகன் யாரென்று மக்கள் சொல்கிறார்கள்?’ 2. ‘நீங்கள் நான்  யார் என்று சொல்கிறீர்கள்?’

முதல் கேள்வியில்மானிட மகன்என்று குறிப்பிடும் இயேசு, இரண்டாவது கேள்வியில்நீங்கள் நான் யார் என்று சொல்கிறீர்கள்?’ என வினவுகின்றார். நற்செய்தியின் மையப்பகுதியில் இக்கேள்விகள் இயேசுவைப் பற்றிய ஆழமான புரிதலைச் சீடர்களுக்கும், அவரைப் பின்பற்றுபவர்களுக்கும் வழங்குகின்றன. அதன் மூலம் இயேசுவின் மீட்புப் பணி எவ்வாறு தொடர்ந்து நிறைவுறும் என்பதை இயேசு இந்நற்செய்திகளுக்குப் பின்வரும் பகுதிகளில் விளக்க இருக்கின்றார். எனவேதான் இவ்விரு கேள்விகளும் முக்கியத்துவம் பெறுகின்றன.

இயேசுவின் பல்வேறு மலைப்பொழிவுப் போதனைகள், உவமைகள் குறிப்பாக, விதைப்பவன் உவமை, புதையல், விலையுயர்ந்த முத்து, வலை, வயலில் தோன்றிய களைகள், புளிப்பு மாவு, கடுகு விதை, இறையாட்சி பற்றிய இயேசுவின் நிலைப்பாடு, பசித்தோருக்கு உணவளிக்கும் நிகழ்வு, கடலில் தத்தளித்த சீடர்களைத் தேடிச்சென்ற நிகழ்வு, கானானியப் பெண்ணுடனான சந்திப்பு... இவற்றையெல்லாம் வழங்கிய பிறகு மத்தேயு நற்செய்தியாளர் இயேசுவைப் பற்றிய கேள்வியை எழுப்புகிறார். மேற்கூறிய நிகழ்வுகளில், இயேசுவின் போதனைகளில், சந்திப்புகளில், குணமளித்தலில், உரையாடல்களில் இயேசுவுக்கு மிக அருகில் நின்று அவருக்குச் செவிமடுத்து, உணர்ந்து அனுபவித்த சீடர்களின் புரிதலை, மானிட மகனைப் பற்றிய தெளிவினை வழங்க இயேசு இக்கேள்விகளை எழுப்புகின்றார்.

ஒரு மாணவன் தனது மறைக்கல்வி ஆசிரியரிடம் கேட்டான்: “ஆசிரியர் அவர்களே, உலகத்தில் மிகக் கடினமான கேள்வி எது?” ஆசிரியர் புன்னகையுடன், “இவ்வுலகில் மிகக் கடினமான கேள்வி, உன்னைப் பற்றிநீ யார்?’ என்று கேட்பதும், இயேசுவைப் பற்றிஅவர் உனக்கு யார்?’ என்று கேட்பதும்தான்என்றார்.

இயேசுவின் முதல் கேள்விக்குச் சீடர்கள் கூறிய பல்வேறு பதில்கள்: “திருமுழுக்கு யோவான், எலியா, எரேமியா, இறைவாக்கினர்களில் ஒருவர்.” மக்கள் இயேசுவைப் பற்றிய புரிதல்களை, மற்றவர்கள் கூறிய சொல்லாடல்கள், செவிவழியாக அறிந்துகொண்ட செய்திகள் இவற்றின் அடிப்படையில் சீடர்கள் பதில் அளிக்கின்றார்கள். அவர்கள் கூறிய பதில்கள் மேலோட்டமான பதிலாக அமைந்திருந்தன.

இயேசுவின் இரண்டாம் கேள்விஆனால்என்று தொடங்குகின்றது. இக்கேள்வி சீடர்களுக்கு மிகப்பெரும் சவாலாக அமைந்திருந்தது. ஆனால், ‘நீங்கள் நான் யார் எனச் சொல்கிறீர்கள்?’ எனும் இயேசுவின் இரண்டாவது கேள்விக்குச் சீடர்கள் உடனடியான பதிலைத் தந்திருப்பார்களா? நிச்சயமாக அவர்களுக்குள் அமைதி நிலவியிருக்கும். ‘மக்கள் என்ன சொல்கிறார்கள்?’ என்னும் கேள்வியிலிருந்துநீங்கள் என்னை யார் என்று சொல்கிறீர்கள்?’ என்னும் கேள்வி சீடர்களைச் சிந்திக்கவைத்தது. இதன் பதில், ஒருபொழுதும் உதட்டளவிலிருந்து உதித்துவிடாது. உள்ளத்தை ஆராயவேண்டும், உறவுகளை எண்ணிப் பார்க்கவேண்டும். தங்களது இறைநம்பிக்கையை, கேட்டறிந்த படிப்பினைகளை, இயேசுவுடன் பயணித்த நாள்களை, அவருடனான உறவினை எண்ணிப்பார்த்துப் பதிலளிக்கவேண்டும். இயேசுவின் இக்கேள்வியைச் சீடர்கள் எதிர்பார்க்கவில்லை. திக்குமுக்காடிப் போனார்கள். இயேசுவின் மீதான நம்பிக்கையை, புரிதலைப் பரிசோதித்துப் பார்க்கும் கேள்வியே இக்கேள்வி!

நம்பிக்கையின் பதில் - நம்பிக்கையான பதில்

மரபு சொல்வதை மட்டும் ஏற்றுக்கொள்வதும்பிறர் சொல்வதை மட்டும் மீண்டும் மீண்டும் கூறுவதும் நம்பிக்கை அல்ல; பெரும்பான்மையினரின் கருத்தோடு இணைந்து நிற்பதும் நம்பிக்கை அல்ல; நம்பிக்கை என்பது ஒரு தனிப்பட்ட சந்திப்பு. அது ஒரு தனிப்பட்ட அனுபவம்; அது ஒரு தனிப்பட்ட உறவு.

இயேசு தம் சீடர்களை நோக்கி இக்கேள்வியை எழுப்பும்பொழுது, தம்மைப் பற்றிய சரியான இறையியல் வரையறையை அவர் எதிர்பார்க்கவில்லை. மற்ற இறைவாக்கினர்களைவிட, திருமுழுக்கு யோவானைவிட தாம் உயர்ந்தவரா? என்பதை அறியவும் அவர் விரும்பவில்லை. இயேசு தேடிய பதில், உறவின் அடிப்படையில் அமைந்திடவேண்டும்; அனுபவத்தின் அடிப்படையில் அமைந்திடவேண்டும். “என்னைச் சந்தித்த பிறகு உன் வாழ்க்கையில் என்ன மாற்றம் நிகழ்ந்தது?”, “என் வார்த்தைகளால் நீ தொடப்பட்டாயா?” இதற்கு நாம் எத்தகைய பதிலை அவருக்கு வழங்கமுடியும்? இந்தக் கேள்விக்குப் பதில் வழங்கிட நமது புத்தகங்களை மூடிவிட்டு, அவரைப் பற்றிய இறையியல் வரையறைகளைச் சற்றே தள்ளி வைத்துவிட்டு, நம் வாழ்க்கையை உற்றுநோக்கும்பொழுது, ‘இயேசு எனக்கு யார்?’ எனப் பதில் கூறமுடியும்.

நமது இக்கட்டான சூழலில், நோயில், வேதனையில், மகிழ்வில், இருள் சூழ்ந்த தருணங்களில், வாழ்வின் உயர்வு - தாழ்வில்இயேசு எனக்கு யார்?’ இயேசு எனது ஒளி; அவரே வழிகாட்டும் விளக்கு; என் வீழ்ச்சியில், தொய்வில்என்னை உயர்த்திப்பிடிக்கும் கரம், என் வாழ்வு பாய்மரத்தை இயக்கும் காற்றும், துடுப்பும்; என் காயங்களுக்கு மருந்து; என் வாழ்வின் அர்த்தம் என்று பதில் கூற நம் வாழ்வையும், இயேசுவின் கேள்வியையும் ஆழ்ந்து சிந்திப்போம்.

இயேசு மெசியா எனக் கண்டறியலும், நமது அடையாளமும்

மேற்கூறிய அனைத்தையும் சுருக்கி ஒற்றை வார்த்தையில் பேதுரு மிக எளிமையாக, ஆழமாகப் பதிலளிக்கின்றார்: “நீர் மெசியா; வாழும் கடவுளின் மகன்.” இயேசு யார் என்று உலகிற்கு அடையாளப்படுத்துகின்றார். இத்தகைய பதில் அனுபவத்தினால் உருவாகிய அழகிய பதில்மொழி. இயேசு வாழும் கடவுளின் மகன்; அவர் வாழ்விப்பவர்; வாழ்வை வழங்குபவர். வாழ்வு நசுக்கப்படும்பொழுது குரல் எழுப்பி நிலைப்பாட்டை வெளிப்படுத்துபவர். பிறர் வாழ்வதற்காகவே தன் வாழ்வை வழங்குபவர். நான் வாழ்கிறேன் நீங்களும் வாழ்வீர்கள் என்று தனது உயிர்ப்பின் நம்பிக்கையின் வாழ்வைத் தருபவர் என்றும் புரிதலை, பேதுருவின் பதில் வழங்குகின்றது. இயேசு எனக்கு யார் என அடையாளப்படுத்தினால் நாம் யார் என்ற அடையாளம் நமக்குக் கிடைத்துவிடும்.

பேதுருவின் அடையாளமே நமது அடையாளம்

இயேசு எனக்கு யார் என்பதை நான் உணர்ந்தால், நமது அடையாளமும், திரு அவையில் நமது பொறுப்புணர்வும் கண்டறிதல் மிகச் சுலபமே. பேதுரு இயேசுவை மெசியா என்றும், கடவுளின் மகன் என்றும் அடையாளம் காண்கின்றார். உடனே இயேசு அவரைப் பாறை ‘Caipha’ என்றும் இந்தப் பாறையின் மீது திரு அவையைக் கட்டுவேன் என்றும் பேதுருவின் உண்மையான தன்மையை அடையாளப்படுத்துகின்றார். இதுவே நம் வாழ்க்கையிலும் நடக்கின்றது. நாம் இயேசுவை உண்மையாக அறிந்துகொள்ளும் பொழுது, நம்மையும் நாமே உண்மையாக அறியத் தொடங்குகின்றோம். நான் யார்? எனது அழைப்பு என்ன? என் வாழ்வின் பொருள் என்ன? எதற்காக நான் பிறந்துள்ளேன் என்னும் கேள்விகளுக்கு வாழ்வின் பதிலைக் கண்டறிவோம்.

நாமும் திரு அவையைத் தாங்கும் பாறைகளே!

இயேசுவே திரு அவையின் மூலைக்கல். திருத்தூதர்களை அடித்தளமாகக் கொண்டு அமைக்கப்பட்ட கட்டடம். நாம் அனைவரும் திரு அவையின் உறுப்பினர்கள். அதன் வளர்ச்சியில் பங்காளிகள், உடன் உழைப்பாளர்கள். இயேசுவுக்கு அன்று பேதுருவும் சீடர்களும் திரு அவையை அமைக்க அவசியமானவர்கள். நாமும் இத்திரு அவையில் அவசியமானவர்களே. இயேசு எச்சிறிய கல்லையும் இக்கட்டடத்தில் இருந்து ஒதுக்குவதில்லை. மாறாக, சிறிய கல்லைக் கொண்ட சிற்பி தனது படைப்பை உருவாக்குவதுபோலும், குயவன் களிமண்ணைக் கொண்டு பானையை உருவாக்குவது போன்றும் இறைவன் நம் பலவீனங்களோடும் காயங்களோடும் மனித இயல்போடும் நம்மை ஏற்றுக்கொண்டு திரு அவையை கட்டுகின்றார். நமது பங்களிப்பால் நாமும் திரு அவையின் சிறிய பாறைகள் என்பதில் பெருமிதம் கொள்ளவேண்டும்.

பேதுருவின் அதிகாரமும் எலிசாவின் அதிகாரமும்

இன்றைய முதல் வாசகத்தில், எசாயா இறைவாக்கினர் வழியாக தாவீது அரசின் அரண்மனைப் பொறுப்பாளனும் அதிகாரியுமாக ஆணவத்துடன் செயல்பட்ட செபுனாவை அப்பதவியிலிருந்து இறக்கி, இலக்கியாவின் மகனான எலியாக்கிமையை அதன் பொறுப்பாளனாக இறைவன் நியமிக்கின்றார். அவனது தோலில் தாவீது குடும்பத்தாரின் திறவுகோலை வைத்து அதனைத் திறக்கவும் பூட்டவும் அதிகாரம் வழங்குகின்றார். இவ்வார்த்தைகள் Typological வழிமுறையில் பேதுருவிற்கு மிகச் சிறந்ததாக பொறுந்துகின்றது.

திரு அவையின் அதிகாரத்தில் உள்ள அனைவரும் பொறுப்பாளர்களாக, பணியாளர்களாக, ஊழியர்களாகச் செயல்படவே பணிப்பொறுப்பு வழங்கப்படுகின்றது என இன்றைய முதல் வாசகமும் நற்செய்தி வாசகமும் அறிவுறுத்துகின்றது.

திரு அவையின் பாறைகளாகிய நாமும் நமது பணிப்பொறுப்பில், குடும்பப்பொறுப்பில், துறவற வாழ்வில் பொறுப்புணர்வுடன் செயல்பட இயேசு நமக்கு யார் என்பதையும், இயேசுவுக்கு நாமனைவரும் அவரது அன்புப் பிள்ளைகள் என்பதையும் அறிந்துகொள்ளும் பொழுது, நமது வாழ்வின் பொருளும் பொறுப்புணர்வும் மிகுதியாகும்.