news-details
சிறப்புக்கட்டுரை
இளையோரே! துணிவுடன் இருங்கள்!

இளைஞர் இயேசுவில் அன்பிற்கினிய ஆண் - பெண் இளையோரே, அருள்பணியாளர்களே, ஆண் - பெண் துறவியரே, இளைஞர் பணியில் ஈடுபட்டு உழைக்கும் இயக்குநர்களே, வழிகாட்டிகளே! இளைஞர் இயேசுவின் அருளும், புதுப்பிக்கும் தூய ஆவியாரின் வழிநடத்துதலும், தாயும் தந்தையுமான கடவுளின் உடனிருப்பும் உங்கள் அனைவரோடும் இருப்பதாக!

இவ்வாண்டு முழுவதும் இளையோரை ஆற்றல்படுத்தும் கருப்பொருளாகதுணிவுடன் இருங்கள்! நான் உலகின்மீது வெற்றி கொண்டு விட்டேன் (யோவா 16:33) எனும் இறைவார்த்தை உலகளாவிய திரு அவையால் தரப்பட்டுள்ளது.

இளைஞர் இயேசுவின் நட்புடன் அவரின் விழுமியங்களை வாழ்வாக்கும் இளைஞர் பலர் துணிவுடன் உண்மைக்குச் சான்று பகர்வதையும், பொதுநலப்பணிகளில் மிளிர்வதையும், சமூக நயன்மையை (நீதியை) நிலைநாட்டுவதையும், கிறித்தவ நம்பிக்கையை வாழ்ந்து காட்டுவதையும், ஏழைகளின் ஏக்கக் குரல் கேட்டு அவர்களுக்காக ஈகம் செய்வதையும், எளியோர் சார்பெடுத்து அவர்களுக்குரிய வாழ்வுரிமைகளை மீட்டெடுக்கப் போராடுவதையும் அவ்வப்போது கண்டு மகிழ்கிறோம். இயேசுவின் அன்புறவில் இணைக்கப்பட்ட இளையோர் தங்கள் தனிப்பட்ட வாழ்வில் நேர்மையுடனும் உண்மையுடனும் துணிவுடனும் நயன்மையுடனும் (நீதியுடனும்) சுதந்திரத்துடனும் பொறுப்புடனும் இலட்சியத் தெளிவுடனும் வாழ்வதையும் நாம் காணத் தவறுவதில்லை.

காங்கோ நாட்டின் தரக் கட்டுப்பாட்டு அலுவலகத்தில் தர ஆய்வாளராகப் பணியாற்றிய 26 வயதான ஃப்ளோரிபெர்ட் பவானா சுய் (Florivert Bwana Chuii) என்ற இளைஞனின் வாழ்வை ஓர் எடுத்துக்காட்டாக உங்களுக்குத் தர விரும்புகிறேன். உங்களைப் போல ஒரு சிறந்த கிறித்தவ இளைஞனாக வாழ்ந்த ஃப்ளோரிபெர்ட், நீங்கள் கிறித்தவக் கடமைகளை ஆற்றுவது போலவே எளிய மக்களுக்கும், தெருவோரக் குழந்தைகளுக்கும் உதவுவதைத் தனது அன்றாடக் கடமையாகக் கொண்டிருந்தார். தான் பணியாற்றிய காங்கோ நாட்டின் கோமா நகருக்குக் கடத்தல் கும்பல், கப்பல் வழியாகத் தரமற்ற, கெட்டுப்போன உணவுப் பொருள்களைக் கடத்த முயற்சித்தபோது அதை நேர்மையுடன் தடுத்தார்.

ஆயிரக்கணக்கான டாலர்களைக் கடத்தல்காரர்கள் வழங்க முன்வந்தபோது, அதை வாங்கத் திட்டவட்டமாக மறுத்தார். “பணத்திற்காக ஆயிரக்கணக்கான ஏழை மக்களின் உயிரை என்னால் பணயம் வைக்க இயலாது; எனது கிறித்தவ மனச்சான்று இதற்கு ஒருபோதும் இடம் தராதுஎன்று கூறி துணிச்சலுடன் கெட்டுப்போன உணவுகளை அழிப்பதற்கான உத்தரவைப் பிறப்பித்தார்.

ஆத்திரமுற்ற அந்தக் கடத்தல் கும்பல் 2007 சூலை 09 அன்று நேர்மையோடும் துணிவோடும் கிறித்தவ மனச்சான்றோடும் நிலைப்பாடு எடுத்த 26 வயதான இளைஞனைக் கொடும் வதைசெய்து, கொன்று கோமா நகரின் தெருவில் வீசி எறிந்தது. இளைஞர் இயேசுவின் உண்மைக்கான துணிவைத் தன் வாழ்வில் கடைப்பிடித்த அந்த இளைஞனை நினைவில் வாழும் திருத்தந்தை பிரான்சிஸ் மறைச்சாட்சியாக அறிவித்தார். திருத்தந்தை லியோ 2025 சூன் 15 அன்று இவரை அருளாளராக அறிவித்தார். இவர் அன்றாடம் வாசித்து கிறித்தவ மனச்சான்றில் வேரூன்ற வழிகாட்டிய இவரது விவிலியம் உரோமை நகரிலுள்ள புனித பர்த்தலமேயு பெருங்கோவிலில் நினைவுச் சின்னமாக வைக்கப்பட்டுள்ளது.

அன்புமிக்க இளையோரே! நீங்கள் அன்றாடம் இறைவார்த்தையை வாசிக்கிறீர்களா? உங்கள் திருவிவிலியம் உங்களை இறையாட்சி விழுமியங்களின்படி துணிவுடன் செயல்பட அனுமதிக்கின்றதா? இன்று இளைஞர் பலர் அச்சத்திலேயே வாழ்கிறார்கள். தாழ்வு மனப்பான்மையிலும், தம்மை ஏற்க இயலா நிலையிலும், குற்றப்பழி உணர்விலும் தன்னம்பிக்கையின்மையிலும் உழல்கிறார்கள். இணையவழி அச்சுறுத்தல், ஊடக அடிமைத்தனம், பாலுணர்வைத் தூண்டும் படங்கள், இணைய விளையாட்டுகள் போன்றவற்றால் முடமாக்கப்படுகிறார்கள். வேலைவாய்ப்பின்மை, பாதுகாப்பற்ற, நிலைத்தன்மையில்லா வேலை, அச்சுறுத்தும் தகுதித்தேர்வுகள், ஏழைகளின் உயர்கல்வி வாய்ப்பினைப் பறிக்கும் கல்விக் கொள்கைகள், மும்மொழிக் கொள்கைத் திணிப்பு போன்றவைகளால் நிலைகுலைக்கப்படுகிறார்கள்.

ஆணவப் படுகொலை, சாதியப் பாகுபாடு, காவல்நிலையப் படுகொலைகள், பாலியல் வன்கொடுமைகள், கவர்ச்சி அரசியல், நாயக வழிபாடு, சுற்றுச்சூழலைச் சீர்குலைக்கும் திட்டங்கள், வாழும் உரிமையை மறுக்கும் அரசாணைகள் போன்றவற்றால் சிதைக்கப்படுகிறார்கள். அக, புறக் காரணிகளால் அச்சத்தில் வாழும் இளையோருக்காக நம் திரு அவை கண்ணீர் வடிக்கிறது (கிறிஸ்து வாழ்கிறார் எண்:75).

இளைஞர்களின் அச்சங்களை நீக்கித் துணிவூட்டக் காத்துக் கொண்டிருக்கிறார் இளைஞர் இயேசு. “உலகில் உங்களுக்குத் துன்பம்  உண்டு; எனினும் துணிவுடன் இருங்கள்!” என்கிறார். உங்கள் துயரம் மகிழ்ச்சியாக மாறுமென உறுதியூட்டுகிறார். இளைஞர் இயேசு தமது வரலாற்று வாழ்வில் ஒடுக்கப்பட்ட நிலையில், அச்சத்தில் வாழ்ந்த ஏழையர், சமாரியர், நோயுற்றோர், நாடிழந்து அடிமையானோர், பெண்கள், யாருமற்றோர் போன்றோருக்குத் தமது உடனிருப்பால், வார்த்தையால், நலமாக்கும் செயல்களால், வல்ல செயல்களால், விழிப்புணர்வாக்குதலால், விடுதலைச் செயல்களால் துணிவூட்டினார். அதுபோலவே, தந்தை இறைவனோடு கொண்டிருந்த நெருக்கமான உறவால், இறைத் தந்தையின் திருவுளம் அறிந்ததால், தம்மைப் பற்றிய தெளிவான புரிதலால், இறையாட்சி எனும் பொதுமைத் தத்துவத்தால், தமது இலட்சியத் தெளிவால், ஆழ, அகலமான சுதந்திரத்தால், அடிமைத்தனங்களில்லாத் தூய்மையால், பகுத்தாயும் பார்வையால், அளவற்ற அன்பால், ஈடில்லா ஈகத்தால் இவ்வுலகின்மீது வெற்றி கொண்டார்.

இன்று பல்வேறு அச்சங்களால் அலைக்கழிக்கப்படும் இளைஞர்களை வலுவூட்ட இளைஞர் இயேசு நமக்கு ஆழமான அழைப்பு விடுக்கிறார். “கவனச் சிதறல்களிலிருந்து விலகி, கிறிஸ்துவுடன் ஆழமான நட்பை வளர்த்து, பிளவுபட்ட உலகில் அமைதியின் செயலூக்கமுள்ள தூதுவர்களாக வாழுங்கள்என்று திருத்தந்தை லியோ இளையோருக்கு அழைப்பு விடுக்கிறார். “உங்கள் பாதுகாப்பு வளையங்களைத் தாண்டி அமைதியைக் கட்டி எழுப்புங்கள்என்ற சிறப்புச் செயல்பாட்டிற்குத் திசைகாட்டுகிறார்.

துணிவுடன் வாழ நாம் இளைஞர் இயேசுவின் ஆழமான நட்பு வளையத்திற்குள் நம்மை இணைப்போம். இளைஞர் இயேசுவோடு நெஞ்சார்ந்து உரையாடுவோம்; உறவாடுவோம். இளைஞர் இயேசு தமது சீடர்களோடு இணைந்து இயக்கமாகச் செயல்பட்டது போன்று எல்லாப் பங்குகளிலும் ஆண்-பெண் இளைஞர் இயக்கங்கள் உருவாக்கப்பட்டு, தமிழ்நாடு திரு அவையின் இளைஞர் பணிக்கான கொள்கையின் அடிப்படையில் செயல்படுவோம்.

உளச்சிக்கல்களில் வாழும் இளையோருக்கு உளநல உதவிகள் வழங்கிட மறைவட்ட, மறைமாவட்ட அளவில் உளநல ஆலோசகர்களை நியமிப்போம். மனநல முகாம்களை நடத்துவோம். இணைய அடிமைத்தனம், போதை நோய் போன்ற அடிமைத்தனங்களிலிருந்து இளையோர் வெளிவர மறுவாழ்வு மையங்களைப் பயன்படுத்துவோம். தொடர் வழிகாட்டுதல்கள், அருள்வாழ்வுப் பயிற்சிகளை வழங்குவோம்.

மாவட்ட அளவில் இளையோருக்கான வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்துவோம். தொழில் முனைவோர் பயிற்சிகளையும் வழிகாட்டுதல்களை யும் வழங்குவோம். இளைஞர் உருவாக்கத்திற்காக ஆண்டுதோறும் தலைமைத்துவம், சமூகப் பகுப்பாய்வு, அரசியல் பகுப்பாய்வு போன்றவற்றை உள்ளடக்கிய மூன்று கட்டப் பயிற்சிகளை வழங்குவோம்.

இளைஞரின் வாழ்வுரிமையைச் சீர்குலைக்கும் கல்விக்கொள்கை, பொருளாதாரத் திட்டங்கள், கனிமவளக் கொள்ளை, தகுதித் தேர்வுகள் போன்றவற்றிற்கெதிராகச் சட்டப்பூர்வமான நமது எதிர்ப்புகளைப் பதிவு செய்வோம். நம் சிந்தனையொத்த பிற முற்போக்கு இயக்கங்களோடும் கைகளைக் கோர்ப்போம்.

தமிழ்நாடு ஆயர் பேரவையின் சிறப்பு அறிவுறுத்தலின்படி மறைமாவட்ட இளைஞர் இயக்கங்கள் மறைமாவட்டங்களில் செயல்படும் துறவறத் தாரோடு இணைந்து, பன்முனை இளைஞர் உருவாக்கப் பணிகளில் ஈடுபடுவோம். துறவற சபைகளும் மறைமாவட்டங்களும் சிறப்புக் கரிசனையோடு இளையோரை நம் பணியாற்றும் தளங்களில், பங்குகளில், கல்வி நிறுவனங்களில், இயக்கமாக்கி இறையாட்சிப் பணிகளில் ஈடுபட வழி காட்டுவோம்.

இளைஞரே, நீங்கள் இறைவனின் இப்பொழுது (கி.வா:178). கிறிஸ்து உங்களுக்குள் இருக்கிறார், உங்களுடன் இருக்கிறார், அவர் உங்களை ஒருபோதும் கைவிடமாட்டார். ‘கிறிஸ்து வாழ்கிறார், நீங்களும் உயிர்த்துடிப்புடன் இருக்கவே அவர் விழைகிறார் (கி.வா:1).

இளமை ஒரு கொடை! கவலையும் அச்சமும் நம் கனவுகளையும் நம்பிக்கையையும் உடைக்க நேரிடும். எனவே, கவலையையும் அச்சத்தையும் அகற்றிவிட்டுத் துணிவுடன் எழுந்து நில்லுங்கள். உங்களால் புதிதாகத் தொடங்க முடியும். உங்களுடைய நம்பிக்கையைக் கொள்ளையடிப்பதற்கு யாருக்கும் உரிமையில்லை. துணிவுடன் உங்களை உறுதிப்படுத்தும் தூய ஆவியார் உங்களோடு இருப்பாராக! இளமைத் துடிப்போடு அச்சம் அகற்றிஇதோ, ஆண்டருடைய அடிமைஎனத் துணிவுடன் தன்னை இறையழைத்தலுக்குக் கையளித்து, பணி செய்ய விரைந்து சென்ற இளம்பெண் மரியாவின் வழிநடத்துதல் உங்களோடு இருப்பதாக!