“இன்ன இன்புறும் இனிய இத் திருப்பெயர் தன்னைப்
பன்ன,
இன்புறும் பன்னிய வாயும், உள் வணங்கி
உன்ன
இன்புறும் உன்னிய உன்னமும், இதனைத்
துன்ன
இன்புறும் துன்னிய திசையெலாம் அன்றோ!” (எண் 99)
என்கிறது
வீரமாமுனிவரின் ‘தேம்பாவணி’
எனும் தேன் தமிழ்க் காவியம். அதாவது, இயேசுவின் இனிய திருப்பெயரை உச்சரிப்பதனால் உதடுகளும், நினைப்பதனால் மனமும், அதை அடைவதனால் ஆனந்த வாழ்வும், இத்திருப்பெயர் செல்லும் இடமெல்லாம் கிடைத்திடுமே என்று இயேசுவின் திருப்பெயரின் மகிமையையும், அத்திருப்பெயர் விதைக்கப்படும் இடத்திலும் மக்கள் மனங்களிலும் வாழ்விலும் ஏற்படும் பெரும் மாற்றத்தையும் ஏற்றத்தையும் தாக்கத்தையும் பதிவு செய்கிறார் வீரமாமுனிவர்.
இயேசுவின்
திருப்பெயரைச் சுமந்து, மக்களுக்கு அறிவிக்க மறைபரப்புப் பணியை மேற்கொண்டு இந்திய மண்ணில் தடம்பதித்த திருத்தூதர் தோமா, அவரைத் தொடர்ந்து மதுரை மறைத்தளத்தில் சேசு
சபையார், அதன் வழியில் 17-ஆம் நூற்றாண்டில் புதுவை மண்ணில் மறைபரப்புப் பணியைத் திறம்பட மேற்கொண்டு அழியாத, ஆழமான சுவடுகளைப் பல்வேறு பணித்தளங்களில், பணிக்கூறுகளில் பதித்து, மக்கள் மனங்களில் நீங்காது இடம் பிடித்திருப்பவர்கள் ‘பாரிஸ் அயலக மறைபரப்புச் சபையினர்’(MEP - Missions
Etrangeres de Paris / Paris Foreign Missions Society).
“மறைப்பணி என்பது திரு அவையின் இதயம்” என்கிறார் மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ். தங்களின் தாய்நாடு, தாய் மொழி, உறவு, உடைமைகளைத் துறந்து, பண்பாட்டு நாகரிகங்களை விடுத்து, முகவரியைத் துறந்து புதிய இடங்களை, பணித்தளங்களைத் தழுவிக்கொண்டு, புதிய பண்பாட்டுச் சமூக விழுமியக் கூறுகளைத் தம்வயப்படுத்தி, மக்கள் மொழி பேசி, அவர்களின் மண்சார்ந்த சமூக மேம்பாடுகளில் திட்டமிட்டு, அவர்களின் களம் சார்ந்த அரசியலில் ஈடுபட்டு மனித மாண்பையும், மானுடநேயத்தையும், மகத்தான வாழ்வையும் அவர்கள் காண்பதற்காக இயேசுவின் திருநாமத்தை உரக்க உச்சரித்தவர்கள் இந்த MEP மறைப்பணியாளர்கள்.
‘எங்கள் வாழ்வும் வளமும் இம்மக்களுக்கே’ என்ற
முழக்கத்தோடு நிறைவான அருளையும் பொருளையும் தந்து, மறைத்தளங்களை வளமிக்க நம்பிக்கை கொண்டோரின் தளமாகக் கட்டமைத்ததுடன், மேய்ப்புப் பணிகளுக்கான நேர்த்தியான திட்டங்களும் செயல்பாடுகளும் உருவாக்கியிருப்பதை இந்திய மறைப்பணியின் வரலாற்றுப் பக்கங்களில் எங்கும் காணலாம். இரண்டரை நூற்றாண்டுகள் கடந்து நிற்கும் இந்த மகத்தான மறைப்பணியின் மாண்பினை உணர்ந்து, பாண்டி - கடலூர் உயர் மறைமாவட்டம், MEP சபையினர் புதுவை மறைப்பணித்தளத்தில் மேற்கொண்ட இறைப்பணியை நன்றியுணர்வோடும் மகிமையோடும் பெருமையோடும் கொண்டாடி மகிழ்கிறது. இவ்வேளையில், ‘நம் வாழ்வு’ வார இதழ் சிறப்பிதழை வெளிக்கொணர்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறது.
MEP மறைப்பணியாளர்களின் இப்பணிகள் உலகெங்கும் வாழும் தமிழ்க்கூறும் நல்லுலகிற்குச் சென்று சேரவேண்டும் என்ற நல்லுணர்வோடு இச்சிறப்பிதழுக்கு ஆசி வழங்கியுள்ள பாண்டி - கடலூர் உயர்மறைமாவட்டப் பேராயர் மேதகு பிரான்சிஸ் கலிஸ்ட் அவர்களுக்கும், இப்பணியை முன்னின்று எடுத்துச் செல்கின்ற யூபிலி வரலாற்றுப் பணிக்குழு உறுப்பினர்களுக்கும், அவர்களை ஒருங்கிணைத்திருக்கும் அருள்முனைவர் L.A. அருள்புஷ்பம்
அவர்களுக்கும் ‘நம் வாழ்வு’ தனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது.
திரு
அவையின் மறைப்பணி மங்காது ஒளி வீசட்டும்! பாண்டி-கடலூர் உயர் மறைமாவட்டத்தில் MEP மறைப்பணியாளர்கள்
உருவாக்கிய மறைப்பணித் திட்டங்களும் இலக்கும்
நோக்கமும் வளர்ந்து உயர்ந்திடவும், அதனால் மக்கள் பணி செழித்திடவும் இவ்வரலாற்றுச் சிறப்புமிக்க நாளில் வாசகர்கள் சார்பாக ‘நம் வாழ்வு’ மனதார வாழ்த்துகிறது!
அன்புத்
தோழமையில்,
அருள்முனைவர் செ.
இராஜா
@ இராஜசேகரன்
முதன்மை
ஆசிரியர்