news-details
சிறப்புக்கட்டுரை
எச்சரிக்கை: நெருங்குகிறது எல் நினோ!

சிபிக் பெருங்கடலின் கிழக்குப்பகுதி மற்றும் மத்தியப் பகுதியில் அதாவது, பூமத்திய ரேகைப் பகுதியில், கடலின் மேற்பரப்பில் ஏற்படும் வெப்பநிலை கூடுதல் மற்றும் குறைதலால் உண்டாகும் சூழ்நிலைக் காரணங்களால் எல் நினோ மற்றும் லா நினா நிகழ்வுகள் உருவாகின்றன. வெப்பநிலை அதிகரித்தால் அந்நிகழ்வுஎல் நினோஎன்றும், குளிர்ச்சி அதிகரித்தால்லா நினாஎன்றும் அழைக்கப்படுகிறது.

பொதுவாக, டிசம்பர் மாதங்களில் பசிபிக் பெருங்கடலில் இம்மாற்றங்கள் ஏற்படுவதால், அப்பகுதி மக்கள் அம்மாதத்தில் பிறந்த இயேசுவைக் கருத்தில் கொண்டுசிறுவன் இயேசுஎன்று பொருள்படும்படிஎல் நினோஎனப் பெயரிட்டு அழைத்தார்கள்.

பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பு வெப்பநிலை 1 டிகிரி சென்டிகிரேட் அளவு அதிகரித்து, 2 டிகிரி சென்டிகிரேடுக்கு மேலும் அதிகரித்தால்சூப்பர் எல் நினோஎன்றும் அழைக்கப்படுகிறது.

அண்மைக்காலங்களில் 1982, 1997, 2015 -ஆம் ஆண்டுகளில்எல் நினோக்கள்  ஏற்பட்டிருக்கின்றன. ஆனால், தற்போது 2026-27-இல் வரவிருக்கின்றசூப்பர் எல் நினோவால் 3 டிகிரிக்கு மேல் வெப்பநிலை அதிகரிக்கும் என்கிற எதிர்பார்ப்பு நிலவுவதால், 1876-ஆம் ஆண்டு, அதாவது 150 வருடங்களுக்கு முன்னர் ஏற்பட்டசூப்பர் எல் நினோவை இது நினைவுபடுத்தி நம்மைப் பயமுறுத்துகிறது.

பொதுவான பாதிப்புகள்

பூமியின் நிலப்பரப்பைவிட பசிபிக் பெருங்கடலின் அளவு பெரிது என்பதால், அங்கு ஏற்படக்கூடிய சூழலியல் மாற்றங்கள் உலகின் எல்லாக் கடல்களிலும் மற்றும் நிலப்பரப்பின் பெரும்பாலான பகுதிகளிலும் எதிரொலிக்கத்தான் செய்கின்றன. வெப்பநிலை அதிகரித்தல் அல்லது குறைதல்  மாறுபாடுகளால் காற்றின் சுழற்சியில் சிக்கல் ஏற்பட்டு, உலகின் பல்வேறு பகுதிகளிலும் கொடூரமான வறட்சி, அதீதப் பெருமழை, அதிவேகப் புயல்கள், கடல்களில் சூப்பர் சூறாவளிகள் போன்ற இயற்கைப் பேரழிவுகள் ஏற்பட்டு, பெரும் பாதிப்பை உண்டாக்கிவிட்டன. இதன் காரணமாக, இவ்வாண்டு ஆகஸ்டின் இந்த நாள்வரை பசிபிக் பெருங்கடலில் மூன்று பெரும் சூறாவளிகள் ஏற்பட்டு, பெரும் பாதிப்பை உண்டாக்கிவிட்டன.

தமிழ்நாட்டின் பாதிப்புகள்

2026-இல் வரவிருக்கின்றசூப்பர் எல் நினோவின் தாக்கத்தால், தென்மேற்குப் பருவக்காற்றின் மூலமாகத் தமிழ்நாட்டிற்குக் கிடைக்கும் மழையின் அளவு மிகவும் குறைவாகவே கிடைக்கும் என்கின்றனர் துறை வல்லுநர்கள். இதன் காரணமாக, தமிழ்நாட்டின் மிக முக்கிய நீர்ப்பிடிப்புப் பகுதிகளான மேட்டூர் அணை, முல்லைப் பெரியாறு அணை போன்றவற்றில் தேவைக்கேற்ப தண்ணீரைப் போதுமான அளவு சேமித்து, விவசாயத்திற்கும் குடிநீருக்கும் உபயோகப்படுத்துவதில் பெரும் பின்னடைவு ஏற்படும் எனக் கணிக்கின்றனர்.

அதேசமயம், வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் திருவள்ளூர் மாவட்டத்திலிருந்து கன்னியாகுமரி மாவட்டம் வரையிலான கடலோரப் பகுதிகளிலும், தமிழ்நாட்டின் உள்மாவட்டங்களிலும் அதீதக் கனமழை, குறுகியகால இடைவெளியில் பெருமழை கொட்டும் மேக வெடிப்புகள் ஆகியவை ஏற்பட்டு, அதன் காரணமாக வெள்ளப்பெருக்கு உண்டாக அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறுகின்றனர். 2027, சனவரி மாதத்திலிருந்து அதன் பின்னர் வரவிருக்கின்ற கோடைக்காலங்களில் கொடூரமான வெப்ப அலையும், மோசமான வறட்சியும் ஏற்பட்டு, மக்களைச் சின்னாப்பின்னப்படுத்தும் என்று எச்சரிக் கின்றனர்.

அரசு செய்ய வேண்டியவை

காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்என்ற பழமொழிக்கு ஏற்ப, நீர்வரத்து உள்ளபோதே அரசாங்கம் தேவையான முன்னேற்பாடுகளைச் செய்யவேண்டியது அவசியத்திலும் அவசியமாகிறது. ‘சூப்பர் எல் நினோகாலகட்டத்தில் தென்மேற்குப் பருவக்காற்றால் குறைவான மழையைப் பெறும் என்று கணிக்கப்படுகின்ற நீர்ப்பிடிப்புப் பகுதிகளான மேட்டூர் அணை, முல்லைப் பெரியாறு அணைப்பகுதிகளில் முடிந்திருக்கின்ற மணல் மேடுகளைத் தூர்வாரி, கூடுதலான நீர் சேமிப்பை உறுதிசெய்து கொள்ளவேண்டும். மாநிலம் எங்கிலும் உள்ள கண்மாய்கள், ஏரிகள், குளங்கள், மழைநீர் வடிகால்கள் ஆகியவற்றைப் புனரமைப்புச் செய்து, நீர் சேமிப்பின் கொள்ளளவைப் பலப்படுத்த வேண்டும். சேமித்த நீர் வெளியேறிவிடாதபடி நீர்நிலைகளின் கரைகளில் மரங்களை நட்டு, கரை உடைப்புகளைச் சரிசெய்யவேண்டும். ‘சூப்பர் எல் நினோவின் பாதிப்பை உணர்ந்து, அரசு இத்திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தே ஆகவேண்டும்.

பொதுமக்களின் பங்கு

சூப்பர் எல் நினோவால் கோடைக்காலங்களில் கொடூரமான வெப்ப அலை வீசும் என்பதால், பொதுமக்கள் அனைவரும் வீடுகள் மற்றும் பணி புரியும் அலுவலகங்களைச் சுற்றிலும் அதிகமான மரங்களை நட்டு, ஏற்படும் பாதிப்பிலிருந்து தங்களைத் தற்காத்துக்கொள்ள முன்வரவேண்டும். கோடைக்காலங்களில் நிலவும் வறட்சியையும் தண்ணீர்ப் பஞ்சத்தையும் கருத்தில்கொண்டு, நீர் மேலாண்மையை மேம்படுத்தும் விதமாகப் பொதுமக்கள் மழைநீர் சேகரிப்பில் இப்போதிருந்தே முனைப்பு காட்டவேண்டும்.

குளோபல் வாமி(னி)ங்

சாதாரணஎல் நினோமூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறையும், ‘சூப்பர் எல் நினோபத்து அல்லது பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறையும் உலகில் வந்துபோவது வழக்கமானதுதான். சுற்றுச்சூழல் பாதிப்புக் காரணிகளால் ஏற்படும் உலக வெப்பமயமாதலுக்கும் (Global Warming), ‘சூப்பர் எல் நினோவிற்கும் தொடர்பு இல்லை என்றாலும், குளோபல் வார்மிங்கால் பாதிப்புகள் இரண்டு மடங்கு கூடுதலாக ஏற்படும் என்பதையும் மக்கள் கவனத்தில் கொள்ளவேண்டும்; சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் தரவேண்டும்.