எழுத்தும் மொழியும்: முன்பொரு காலத்தில் பாறையில் கீறப்பட்ட ஒரு சிறு கோடுதான் இன்று உலகை ஆளும் பேராற்றலாக, ‘எழுத்து’ என்ற வடிவில் நம் கைகளில் தவழ்கிறதென்பது கேட்பதற்கு வியப்பாக இருக்கும்.
நாம்
கண்டெடுக்கும் பழங்காலக் கற்பாறைச் சித்திரங்கள், தோல் சுருள் மடல்கள், மண்பானை ஓடுகள், பனை ஓலை இலக்கியங்கள் போன்ற நம் முன்னோர் விட்டுச்சென்ற புதையல்கள் அனைத்துமே கைகளால் உருவானவையே. இவை நம் கண்களுக்குத் தெரியும் வெறும் பொருள்களல்ல.
சித்திரங்களும்
எழுத்துகளும் ஒருவகை கீறலாயிருந்தாலும், ஏதோ ஒன்றைச் சொல்கின்றன. எழுத்தை வரைவின் (drawing)
முதிர்ச்சி என்றும் கூறலாம். தேவைக்கேற்ப உருவான எழுத்தின் வளர்ச்சி ஒரு கட்டத்தில் கணிதம் (arithmetic),
வடிவியல் கணிதம் (geometry), வானியல் (astronomy),
விவசாயம் (agriculture)
என்று பல துறைகளில் கால்
பதித்திருக்கிறது.
எழுத்தைப்
பற்றி ஆராய, மொழியை அறிந்திருக்கவேண்டும். மனிதன் எதிர்வினையாற்றவும், மற்றொருவரை தூண்டச் செய்யும்
கருவியாக மொழி உள்ளது. நிரந்தரமான பதிவுகளும் செய்திகளும் இடம்பெயர்ந்து செல்லக்கூடியவை என்பதால் எழுத்து ஒரு மொழியோடு மட்டும் நின்றுவிடாமல், மனிதத் தொடர்புக்குப் பாலமாகவும், நாகரிகத்தின் பகுதியாகவும், கலாச்சார அடையாளமாகவும் போற்றப்படுவதைப் பார்க்கிறோம்.
எழுத்துலகில்
இயந்திர
ஊடுருவல்
அலுவலகங்களின்
தோற்றமும் இயக்கமும் கடந்த 70-80 ஆண்டுகளில் வெகுவாக மாறிவிட்டதை, இன்று வாழும் மில்லினியல் தலைமுறையினர் நன்கு அறிவர். முன்பொரு காலத்தில் தட்டச்சு இயந்திரங்களின் (type
writers) சத்தமும், மை - பேனாக்களை அலங்கரித்த மேஜைகளும் மறைந்துவிட்டன. கையினால் எழுதி ஆவணங்களாக்கப்பட்ட காலம் சென்று, அடுத்து வந்த தட்டச்சு இடத்தைக் கணினி ஆக்கிரமித்து, தானியக்கமாகி வருவதெல்லாம் நம் கண்முன்னே நடந்து வருகிறது.
அடுக்கடுக்கான
காகிதக் கோப்புகள் (files),
லெட்ஜர் பதிவேடுகள், பிரம்மாண்ட மர அலமாரிகள் இன்று
காணாமல் போய்விட்டன. கணினிகளின் வருகை ஆவணங்கள் அனைத்தையும் டிஜிட்டல் மயமாக்கிவிட்டன. ஆவணங்கள் தொலைந்து போகாமல் மேகக்கணிமை (cloud
storage) அமைப்பில் பாதுகாப்பாகச் சேமிக்கப்படுகின்றன. தனித்தனிப் பிரிவுகள், அதற்குப் பல பணியாளர்கள் என்பது
பழங்கதையாகி, ஒட்டுமொத்த அலுவலகத்தையும் இயக்கும் தானியங்கி முறைகள் (automation)
வந்துவிட்டன.
மனித
உழைப்பு தேவைப்படும் இடங்கள் குறைந்து, மேற்பார்வை செய்யும் பணிகளே இன்று பிரதானமாக உள்ளன. வங்கி, மருத்துவம், போக்குவரத்து, கல்வி என்று கடந்த ஐம்பது ஆண்டுகால இயந்திரமயத்தில், எழுத்தர் பணி முதல் பலிகடாவானதைத் தவிர்க்க முடியவில்லை. என்றாலும், பல எதிர்ப்பலைகளைச் சந்தித்து, கடந்த
500 ஆண்டுகளில் அச்சு இயந்திரம், தட்டச்சு, டிஜிட்டல் போன்ற தொழில்நுட்பங்களைத் தனக்குச் சாதகமாக்கிக் கொண்டிருக்கும் ‘எழுத்தை’ மனிதனிடமிருந்து எந்நிலைமையிலும் பிரிக்க முடியாதென்கிறது வரலாறு.
எழுத்து - அச்சு
- டிஜிட்டல்
- வெறும்
தொடர்புக்
கருவிகளா?
கையினால்
எழுதுவதென்பது மனித தொடர்புகளுக்கான கருவியென்று முடித்துவிட முடியாது; இது நம் நாகரிகத்தின் அங்கமாகவும், கலாச்சாரத்தின் அடையாளமாகவும் விளங்குகிறது. எழுதுவதற்குப் பார்வை, கைவிரல்களின் அசைவு, தொடு உணர்வு மற்றும் எழுத்துகளின் வடிவத்தை மனத்தில் உருவாக்குதல் போன்ற பல நகர்வுகளை மூளை
ஒரே நேரத்தில் ஒருங்கிணைக்கிறது. தட்டச்சு செய்வதைவிட மெதுவாக எழுதுவது, ஒரு கருத்தை ஆழமாகச் சிந்திக்கவும் உள்வாங்கவும் மூளைக்கு அவகாசம் அளிக்கிறது. இதனால் கற்றல் மேம்படுகிறது; நினைவாற்றல் பெருகுகிறது.
காகிதத்தில்
எழுதும்போது வரைபடங்கள், குறியீடுகள் மற்றும் யோசனைகளை எளிதாக இணைக்க முடிவதால் புதுமை படைக்கும் திறன் தூண்டப்படுகிறது. மறுபுறம், யோசனைகளையும் தகவல்களையும் மிக வேகமாகக் கடத்தவும், அதிக தரவுகளை உருவாக்கவும் தட்டச்சு, டிஜிட்டல் முறை உதவுகிறது; ஆன்லைன் மூலம் உலகெங்கிலும் உள்ள மாணவர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் நொடியில் தகவல்களைப் பகிரவும் முடிகிறது. எனவே, இச்சிறப்பு வாய்ந்த தட்டச்சு அல்லது டிஜிட்டல் வழி எழுத்து முறைக்குச்
சளைத்தது என்று கூறமுடியாது; இரண்டும் வெவ்வேறு தேவைகளுக்குப் பயன்படுவதை நடைமுறையில் காண்கிறோம்.
ஏ.ஐ.
எழுதத்
தொடங்கிவிட்டது!
ஏ.ஐ. கருவிகள் (chat GPT, Gemini,Claude) நாம் கேட்பதைச் சில நொடிகளில் எழுதிக்கொடுக்கின்றன. இதனால் மனிதர்கள் சிந்தித்து எழுதும் உழைப்பும் குறைகிறது. ஏ.ஐ. ஒரு
சிறந்த உதவியாளரைப் போன்று
(co
- writer) ஒரு கட்டுரையின் ஆரம்பக்கட்ட கருத்துகளைப் பெறவும், தரவுகளைத் திரட்டவும், அரிய தருணங்கள், தலைப்புகள், தயாரிப்புகளை விளக்குதல், வாடிக்கையாளர் உதவி போன்ற பிரிவுகளில் நம் நேரத்தையும் சேமிக்கிறது; என்றாலும், சில குறைகளும் உள்ளன.
ஏ.ஐ. கருவிகள் ஏற்கெனவே
இணையத்தில் உள்ள தரவுகளை வைத்தே எழுதுவதால், மனிதர்களின் தனித்துவ நடை, கற்பனை மற்றும் ஆழமான உணர்வுகள் குறைந்து, ஒரே வழியில் (generic) மாறும் வாய்ப்பும் உள்ளது. இருப்பினும், இன்றைய வாழ்க்கை முறைக்கு ஏ.ஐ. ஒரு
துணையாக உருவெடுத்திருப்பதை மறுக்க
முடியாது.
கையினால் எழுதுவதற்கு
ஏ.ஐ.
மாற்றாகுமா?
சில
நேரங்களில் நம் மூளைக்கு வேலை கொடுத்து, பேனாவை எடுத்து காகிதத்தில் எழுதுவதில் உயிர் இருக்கும்; ஏனென்றால் நாமே தேடி எடுக்கும் ஒரு வார்த்தையில் இருக்கும் உயிர் ஏ.ஐ. நொடியில்
தரும் ஆயிரம் வார்த்தைகளில் இருக்காது. கையினால் எழுதுவது என்பது வெறும் வார்த்தைகளைக் கோர்ப்பது மட்டுமல்ல; அது ஒரு சிந்தனைச் செயல்முறை. இன்றைய டிஜிட்டல் உலகில் கீபோர்டு, தொடுதிரைகள் (touch screen) மற்றும் வாய்ஸ்
மெசேஜ் (voice to text) ஆகியவற்றின் பயன்பாடு
அதிகரித்துள்ளதால், கைகளில் எழுதும் வழக்கம் குறைந்து வருகிறது. இம்மாற்றம் ஏ.ஐ. தொழில்நுட்பம்
வருவதற்கு முன்பே டிஜிட்டல் மயமாக்கலால் (digitalisation) தொடங்கிவிட்டது. தற்போது பேனா பிடித்து எழுதும் பழக்கம் பெரும்பாலும் பள்ளி, கல்லூரிகளோடு சுருங்கிவிட்டது.
ஆனால்,
ஏ.ஐ. ஒருபோதும் பேனாவைப்
பிடிக்கும் எழுத்தாளனாக மாறமுடியாது; அந்த எழுத்தாளனின் கையில் இருக்கும் ‘மேஜிக் பேனாவாக’ நிச்சயம் செயல்பட முடியும். எழுதுவது என்பது, வெறும் கருத்துகளைச் சொல்வது மட்டுமல்ல; மாறாக, இவைகளை
ஒலிக்கச் செய்வதில்தான் உள்ளது. ஓர் எழுத்தாளரைப் பிழிந்து எடுக்கும் முன்வரைவுகளே (Draft) அவரின்
எழுத்திற்கு வளம் சேர்க்கின்றன. முன்வரைவுகளைத் திரும்பத் திரும்ப மாற்றியமைத்தல், மீண்டும் சிந்தனைக்கு உள்ளாக்குதல் என்பவை எழுத்திற்கு மெருகேற்றி சிறப்பாய் அமைவதற்குப் பின்னால் இருப்பவை எழுத்துகளே. இலக்கிய நடைக்கு மனித குரலைக் கொடுப்பதும் எழுத்துகளே! எழுதுவதில் போராடி தோண்டி எடுக்கும் அரிய புதையல்களான கண்டெடுப்புகள், மாற்றியமைத்தல், நுணுக்கங்கள் என்பவை எல்லாம் நாம் பேசும் இயந்திரங்களிடம் விலைக்கோ அல்லது வாடகைக்கோ பெறமுடியாது. இப்பொழுது சொல்லுங்கள், எழுத்தின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று?