‘எண்ணங்கள் எங்கிருந்து வருகின்றன?’ எனும் கேள்வி இயல்பான ஒன்று. அதற்குச் சரியான விடை என்பது மலைப்பான ஒன்று. சரி, எங்கிருந்துதான் அது உருவெடுத்து நம்மை ஆட்டிப்படைக்கிறது? எனும் பேராவல் நமக்குள் எழுகிறதுதானே! அதைப் பற்றிய தேடல் அல்ல, புரிதலில் சற்று இறங்குவோம்.
இந்தப்
புரிதல் ஒவ்வொருவருக்கும் மாறுபடும் எனக் கூறமுடியாது. இது பொதுவான ஒன்றுதான். அதை
எடுத்துக்கொள்ளும் விதம் மனிதருக்கு மனிதர் மாறுபடும். ஓசோ அவர்கள் கூறுவதுபோல, “சொல்
எனது, பொருள் உனது” எனும் வரிகளைச் சற்று நினைவில்கொள்வோம்.
‘அவரு மனசு வச்சாதான் நடக்கும்’, ‘மனசு சரினு சொல்லாத எதையும் நான்
செய்யவே மாட்டேன்’, ‘அவ என்னதான் சொன்னாலும் என்னோட மனசு
ஏத்துக்க மாட்டிக்கிது’, ‘மனம் கோணாம இத நீங்க எனக்காகச் செஞ்சு
கொடுத்தீங்கனா புண்ணியமா போகும்’, ‘மனம் போன போக்குல வாழ்ந்துராத’ எனும் நம்மீது நல்லெண்ணம் கொண்டவர்களின் எச்சரிக்கை என
இதுபோன்ற பல சொற்றொடர்கள் அங்குமிங்கும் கேட்ட வண்ணம் இருக்கும்.
இங்கு
ஒன்றை நாம் கவனித்தே ஆகவேண்டும். ‘எனக்கு மனசு சரி இல்ல, நாளைக்கு வேணும்னா இத செஞ்சு
தறேன்’ என்றுதான் நாமும் பிறரும் கூறுவது வழக்கம்.
யாருமே ‘எனக்கு மூளை சரியில்ல, நாளைக்கு வா பாத்துக்கலாம்’ என
ஒருபோதும் கூறுவதில்லை. அப்படி என்றால் எண்ணங்கள் பிறக்கும் இடம் மூளையா? மனதா? மூளையும்
மனதும் வெவ்வேறா? வாங்க, இது பற்றி அலசுவோம்.
நான்
முதுகலை உளவியல் படித்தபோது இதைப் பற்றிய தேடல் அதிகமானது. எண்ணங்கள் எங்கிருந்து வருகிறது?
அது நம்மைக் கட்டுப்படுத்துகிறதா? நாம் அதைக் கட்டுப்படுத்த முடியுமா? எனும் கேள்வி,
ஆர்வம் இருந்துகொண்டே இருந்தது. மனிதனும் மற்ற உயிரினங்களும் வேறுபடும் ஒரே ஒரு புள்ளி.
அது சிந்தனையின் (எண்ணங்கள்) மூலம் மட்டுமே.
அப்படி
என்றால் சாப்பிடவேண்டும் எனும் எண்ணம் பிற உயிரினங்களுக்கு வரவே வராதா? வரும்! அது
எண்ணம் அல்ல; உள்ளுணர்வு என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.
மனிதன்
பல வியக்கத்தக்க வகைகளில் பல இயந்திரங்களை உருவாக்கியிருக்கிறான். ஒரு நொடியில் விடை
தரும் கணினிகள், சிக்கலான பணிகளைச் செய்து முடிக்கும் ரோபோக்கள், எங்கிருந்தோ பேசும்
குரலை நொடிப்பொழுதில் நாம் இருக்கும் இடத்தில் இருந்துகொண்டே கேட்கும் விந்தை, அளவற்றத்
தகவல்களை அள்ளித்தரும் செயற்கை நுண்ணறிவு எனத் தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வளர்ந்துகொண்டே
இருக்கிறது. ஆனால், மனிதன் உருவாக்கிய எந்த இயந்திரத்தையும்விட அற்புதமான ஓர் இயந்திரம்
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கிறது. அதுதான் மனம்! அங்கிருந்துதான் சிந்தனை (எண்ணங்கள்)
உருவாகிறது.
சிந்தனை
கண்ணுக்குத் தெரியாது; அதற்கு உருவமில்லை. ஆனால், அது உருவாக்கும் மாற்றங்கள் நம் கண்முழி
பிதுங்கி ஆச்சரியம் கொள்ளும் அளவிற்கு நம் முன்னே வந்து உருவெடுத்து நிற்கும்.
ஒரு
கட்டடம் முதலில் கட்டடக் கலைஞரின் மனத்தில் ஓர் எண்ணமாகத்தான் உருவாகிறது. ஒவ்வோர்
அறிவியல் கண்டுபிடிப்பும் பல நேரங்களில், ‘இப்படிச் செய்தால் என்ன ஆகும்?’ என்ற ஒரு
சிறிய சிந்தனையின் மூலமே தொடங்குகிறது. இப்படி எல்லாமே முதலில் ஒரு சிந்தனையாகத்தான்
பிறக்கிறது. மனிதன் உருவாக்கும் ஒவ்வோர் இயந்திரத்திற்கும் மாற்றாக மற்றொன்றை அவனே
உருவாக்க முடியும். ஏனென்றால், அவனது கூர்தீட்டிய சிந்தனை அவ்வளவு வலிமை வாய்ந்தது!
மனிதனால்
இதுவரை இல்லாத ஒன்றையே கற்பனை செய்ய முடியும். கற்பனை செய்தல், கேள்வி எழுப்புதல்,
தொடர்புபடுத்திப் பார்த்தல் மற்றும் புதியதை உருவாக்குதல் ஆகிய திறன்களே மனிதச் சிந்தனையின்
மிகப்பெரிய வலிமை.
நமது
சிந்தனை எப்போதும் நல்லதையே உருவாக்குவதில்லை. ஒரு நல்ல செயலுக்கான எண்ணத்தை உருவாக்கும்
அதே மனம்தான், பயம், வெறுப்பு மற்றும் அழிவையும் உருவாக்கும். ஒரு நேர்மறையான அல்லது
எதிர்மறையான எண்ணத்தை மீண்டும் மீண்டும் நினைத்துக் கொண்டிருந்தால், அது ஒரு நம்பிக்கையாக
மாறும். அந்த நம்பிக்கை நமது மனப்பான்மையை மாற்றும்; மனப்பான்மை நமது நடத்தையை மாற்றும்.
இப்படியாக, நமது எண்ணங்கள் அமைதியாக நமது குணத்தையும் வாழ்க்கையையும் வடிவமைக்கின்றன.
ஒரே
பிரச்சினையை இரு மனிதர்கள் எடுத்துக்கொண்டால்,
ஒருவர் ‘இது முடியும்’ என்றும், மற்றொருவர் ‘முடியாது’ என்றோ ‘கடினம்’ என்றோ
நினைக்கலாம். இருவருக்கும் பிரச்சினை ஒன்றுதான். ஆனால், அவர்களின் முடிவுகள் முற்றிலும்
மாறுபடும். இதற்கு அடிப்படை அவர்களின் சிந்தனைதான். மற்றொரு வியப்பூட்டும் செய்தி,
சிந்தனைக்குக் காலத்தையும் கடந்து செல்லும் ஓர் அற்புதமான திறன் உண்டு. நினைவுகளின்
மூலம் நாம் கடந்த காலத்திற்குச் செல்ல முடியும். கற்பனையின் மூலம் எதிர்காலத்தைப் பார்க்க
முடியும். நேற்றிலிருந்து பாடம் கற்று, இன்றைய நாளை வாழ்ந்து, நாளைக்குத் திட்டமிட
முடியும். இவை அனைத்தும் ஒரு சிந்தனையின் வழியாகவே நடைபெறுகின்றன. எனவே, மனித மனம்
ஒருபுறம் அனுபவங்களின் நூலகமாகவும், மறுபுறம் எதிர்காலத்தை உருவாக்கும் ஆய்வுக்கூடமாகவும்
இருக்கிறது.
அதிவேகமாக
வளர்ச்சி காணும் இவ்வுலகில் இயந்திரங்கள் மிகப்பெரிய திறனைப் பெற்றுள்ளன. ஆனால், அதற்கெல்லாம்
சவால்விடும் மாபெரும் இயந்திரம் எதுவென்றால், அது மனித மனம்தான். எனவே, நாம் செய்ய
வேண்டிய மிகப்பெரிய முதலீடு தொழில்நுட்பத்தில் மட்டுமல்ல; நமது சிந்தனையின் தரத்திலும்
இருக்கவேண்டும்.
வாசிப்பது
சிந்தனையை விரிவுபடுத்தும்; கற்றுக்கொள்வது அறிவை வளர்க்கும்; கேள்வி கேட்பது புரிதலை
ஆழப்படுத்தும்; சுயபரிசோதனை சிந்தனையைத் தெளிவுபடுத்தும்; ஒழுக்கம் சிந்தனைக்குக் கட்டுப்பாட்டை
வழங்கும்; படைப்பாற்றல் அதற்குப் புதிய பாதைகளைத் திறக்கும்; அன்பும் மனிதநேயமும் அதற்குச்
சரியான திசையைக் காட்டும்.
நமது
எண்ணங்கள் நமது செயல்களுக்கான விதைகளாகின்றன. நம்மைச் சுற்றி நடக்கும் ஒவ்வொரு நிகழ்வையும்
நம்மால் கட்டுப்படுத்த முடியாது. ஆனால், அந்த நிகழ்வுகளுக்கு நாம் எப்படிப் பதிலளிக்கவேண்டும்
என்பதை நமது சிந்தனையின் மூலம் தீர்மானிக்க முடியும்.
எனவே,
மனிதன் உருவாக்கிய மிகப்பெரிய இயந்திரம் கணினியோ, ரோபோவோ, வாகனமோ அல்ல; அது இயற்கை
நமக்களித்திருக்கும் நம் மனம்தான்... அதுதான் சிந்தனை எனும் இயந்திரம். இதற்குக் கம்பிகளும்
இல்லை, தடயங்களும் இல்லை. பயன்படுத்தத் தேவையான தெளிவான கையேடும் இல்லை. ஆனால், அதை
அறிவுடனும் தெளிவுடனும் ஒழுக்கத்துடனும் இருக்கப் பழக்கிவிட்டால், அது ஒரு மனிதனின்
வாழ்க்கையை மட்டுமல்ல, முழு உலகத்தையே மாற்றக்கூடிய பேராற்றலாக மாறும்.
இவ்வளவு
அதிமுக்கியத்துவம் வாய்ந்த மனம் எங்கு உள்ளது? அது எப்படிச் செயல்படுகிறது? எனும் ஆவல்
வேகமெடுத்து இருக்கும்; இது பற்றி அடுத்த வாரம் காண்போம்.
‘மனமும்
பணமும் எத்தனை அடி பாயும்?’ என்று எவருக்குமே தெரியாது.
(தொடர்ந்து பயணிப்போம்...)