news-details
ஆன்மிகம்
அருள்மிகப் பெற்ற மரியே வாழ்க!

அருள்மிகப் பெற்ற மரியே வாழ்கஎன்பது மரியாவை வாழ்த்தும் ஒரு செபம் மட்டுமல்ல; இந்தச் செபம் இறைவனின் அருளைப் பெற்ற மரியாவின் வாழ்வை நமக்கு நினைவுபடுத்துகிறது. இறைவன் மரியாவைத் தேர்ந்தெடுத்து, தமது மீட்புத் திட்டத்தில் பங்குகொள்ள அழைத்தார். அந்த அழைப்பை நிறைவேற்றத் தேவையான அருளையும் அவருக்கு வழங்கினார்.

மரியா  இறைவனின் அழைப்பை ஏற்றுக்கொண்டார். அவர் இறையருளுடன் இணைந்து வாழ்ந்தார். அவர் பெற்ற அருளைப் பிறருடன் பகிர்ந்தார். துன்பங்களின் நடுவிலும் இறைவன்மீது நம்பிக்கை வைத்தார். இறுதியில், அவர் இயேசுவை நோக்கி மக்களை வழிநடத்தினார். ‘அருள்மிகப் பெற்ற மரியே வாழ்கஎன்ற செபம் மரியாவைப் பற்றிய செபமாக மட்டும் அமையவில்லை; அது நமது கிறித்தவ வாழ்வின் ஆணிவேராக அமைகிறது.

வானதூதரின் வாழ்த்து

வானதூதர் கபிரியேல் மரியாவை வாழ்த்துகிறார்: “அருள்மிகப் பெற்றவரே, வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார் (லூக் 1:28).  ‘அருள்மிகப் பெற்ற மரியேஎன்று நாம் கூறும்போது, ‘இறையருளால் நிறைந்த மரியேஎன்று பொருள் கொள்ளலாம். மரியா பெற்ற இறையருள் அவரது சொந்த முயற்சியால் கிடைக்கவில்லை. இறைவன் தமது அன்பால் மரியாவுக்கு அருளைக் கொடுத்தார். இறைவன் அவரைத் தேர்ந்தெடுத்தார். இறைவன் அவரை அழைத்தார். அந்த அழைப்பை நிறைவேற்றத் தேவையான அருளையும் வழங்கினார். திரு அவையின் மறைக்கல்வி எண் 488 கூறுவது போல், இறைவன் தம் திருமகனின் தாயாக இருப்பதற்காக மரியாவைத் தொடக்கத்திலிருந்தே தேர்ந்தெடுத்தார். மரியாவின் அழைப்பு கிறிஸ்து ஆற்றிய மீட்புப் பணியோடு நெருங்கிய தொடர்புடையது.

அருள் என்பது இறைவனின் இலவசமான கொடை

அருள் என்பது நாம் சம்பாதிக்கும் ஒன்று அல்ல; நமது அறிவாலும் திறமையாலும் செல்வத்தாலும் பதவியாலும் அருளைப் பெறமுடியாது. அருள் என்பது இறைவன் தமது அன்பால் நமக்குக் கொடுக்கும் இலவசமான கொடை. திருமுழுக்கின் வழியாக இறைவனின் பிள்ளைகள் என்ற அருளைப் பெறுகிறோம். மரியா பெற்ற இறையருள் அவரை மற்றவர்களைவிட உயர்ந்தவராகக் காட்டவில்லை; மாறாக, அந்த அருள் அவரை இறைவனுக்கும் பிறருக்கும் அர்ப்பணிக்கச் செய்தது. எனவே, ‘நான் எவ்வளவு அருளைப் பெற்றுள்ளேன்?’ என்று மட்டும் நாம் கேட்கக்கூடாது; ‘நான் பெற்ற இறையருளை எவ்வாறு பயன்படுத்துகிறேன்?’ என்று நாம் கேட்கவேண்டும்.

அருளைப் பெற்ற மரியா-அருளைப் பகிர்ந்தார்

மரியா இறைவனின் அழைப்பை ஏற்றுக்கொண்ட உடனே எலிசபெத்தைச் சந்திக்கச் சென்றார் (லூக் 1:39-45). மரியா தன்னைப் பற்றியும், தனக்குக் கிடைத்த அழைப்பைப் பற்றியும் மட்டும் சிந்திக்கவில்லை. எலிசபெத்தின் நிலையை அவர் உணர்ந்தார். அவருக்கு உதவி தேவை என்பதை அறிந்து, தாமதிக்காமல் அவருடைய இல்லத்திற்குச் சென்றார். மரியா பெற்ற இறையருள் அவரைத் தன்னுள் வைத்துக்கொள்ளச் செய்யவில்லை; மாறாக, அந்த அருள் அவரைப் பிறரின் தேவையை உணர்ந்து அவர்களுக்காகச் செயல்படத் தூண்டியது. அவர் இறைவனிடமிருந்து பெற்ற அருளைத் தனது வாழ்வின் மூலம் வெளிப்படுத்தினார். அவரது வருகை எலிசபெத்திற்கு மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் அளித்தது.

மரியாவின் வாழ்க்கை ஒரு முக்கியமான உண்மையை நமக்குக் கற்றுத்தருகிறது. இறையருள் நம்மைப் பிறரிடமிருந்து பிரிப்பதில்லை, அது நம்மை அவர்களுடன் இணைக்கிறது. இறையருளை உணர்ந்தவர் பிறருடைய துயரத்தைப் புறக்கணிக்க முடியாது. பிறருடைய தேவையை உணர்ந்தவர் உதவ முன்வருவார். அன்பு செயலில் வெளிப்படும். மரியா எலிசபெத்திடம் சென்றது ஒரு சாதாரண சந்திப்பு அல்ல; அவர் பெற்ற இறையருள் அவரைச் சேவைக்குத் தூண்டியது. இதனால் அருள் என்பது தனிப்பட்ட அனுபவமாக மட்டும் இருக்கக் டாது என்பதை அறிகிறோம். அது நமது வாழ்வின் வழியாகப் பிறருக்குச் சென்றடையவேண்டும். நாம் பெற்ற அருள் பிறருக்கு ஆறுதலாக மாறும்போது, நமது வாழ்வு இறையருளின் கருவியாக மாறுகிறது.

மரியன்னையே கடவுள் நமக்குத் தந்த அருள்

அன்னை மரியா இறைவன் மனிதகுலத்திற்குக் கொடுத்த அரிய கொடை. அவரது தூய்மையான வாழ்வும், இறைவன்மீது கொண்ட ஆழமான நம்பிக்கையும் நமக்கு முன்மாதிரியாக உள்ளன. அன்னை மரியா இறைவனின் மீட்புத் திட்டத்தில் சிறப்பான பங்கு பெற்றவர். இயேசுவின் தாயாக இருப்பதற்கு இறைவன் அவரைத் தேர்ந்தெடுத்தார். மரியா வழியாக இறைவன் தமது மகனாகிய இயேசுவை உலகிற்கு அளித்தார். இதனால் மரியா இறைவனின் அளவற்ற அன்பையும் அருளையும் நமக்கு நினைவூட்டும் தாயாகத் திகழ்கிறார். மரியா தனக்குக் கிடைத்த சிறப்பைத் தனது பெருமையாகக் கருதவில்லை. அவர் தன்னை இறைவனிடம் முழுமையாக அர்ப்பணித்தார். “என் ஆன்மா ஆண்டவரை ஏத்திப் போற்றுகின்றதுஎன்று அவர் பாடினார். இந்தப் பாடல் மரியாவின் தாழ்மையையும் இறைநம்பிக்கையையும் வெளிப்படுத்துகிறது. இறைவன் தனக்குச் செய்த அரும்பெரும் செயல்களுக்காக அவர் இறைவனைப் போற்றினார். மரியாவின் வாழ்க்கை நமக்குச் சொல்லும் செய்தி இதுதான். இறைவனின் அருளைப் பெற்றவர் தாழ்மையுடன் வாழவேண்டும்; பெற்ற அருளுக்காக இறைவனுக்கு நன்றி கூறவேண்டும்; அந்த அருளைப் பிறருடன் பகிரவேண்டும்.

அருள் என்பது துன்பமின்மை அல்ல!

மரியாஅருள்மிகஎன்று அழைக்கப்பட்டார். ஆனால், அவரது வாழ்க்கையில் துன்பங்கள் இல்லாமல் போகவில்லை. ஏரோதுவின் அச்சுறுத்தல், எகிப்திற்குச் சென்ற பயணம், இயேசுவின் பாடுகள், கல்வாரியில் சிலுவையின் அடியில் நிற்றல் ஆகியவற்றை அவர் எதிர்கொண்டார். அருள், துன்பத்தை எப்போதும் அகற்றுவதில்லை. ஆனால், இறையருள் துன்பத்தின் நடுவில் நம்மைத் தாங்குகிறது. சிலுவையின் அடியில் மரியா நின்றார். அவர் எல்லாவற்றையும் புரிந்துகொள்ளவில்லை. ஆனால், அவர் இறைவனை விட்டு விலகவில்லை. அவர் நம்பிக்கையில் நிலைத்தார்.

நான் இறைவனின் அருளை உணர்கிறேனா?

நான் பெற்ற இறையருளைப் பிறருடன் பகிர்கிறேனா?

துன்பத்தின் நேரத்திலும் இறைவனை நம்புகிறேனா?

என் வாழ்க்கையில் இயேசு மையமாக இருக்கிறாரா?

இறுதியாக, ‘அருள்மிகப் பெற்ற மரியே வாழ்க!’ என்பது ஒரு செபத்தின் தொடக்கம் மட்டுமல்ல; அது ஒரு வாழ்க்கைப் பாதை. நாம் பல்வேறு சவால்கள், குடும்பப் பிரச்சினைகள், நோய்கள், அச்சங்கள் மற்றும் நம்பிக்கையின்மை ஆகியவற்றை எதிர்கொள்கிறோம். இத்தகைய சூழலில் மரியாவின் வாழ்க்கை நமக்கு ஆறுதலையும் வழிகாட்டுதலையும் அளிக்கிறது. அவரது பணிவு, இறைநம்பிக்கை, பொறுமை, செப வாழ்க்கை மற்றும் இறைவனின் திருவுளத்தை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் ஆகியவை ஒவ்வொரு கிறித்தவருக்கும் வழிகாட்டியாக இருக்கின்றன. கிறித்தவர்கள் மட்டுமல்லாமல், அனைவருக்கும் அன்னை மரியாவின் பெயர் சக்தியையும், அவர்கள் வாழ்வில் நம்பிக்கையை இழந்த நேரங்களில் நம்பிக்கையையும் தருகிறது.

அருள்மிகப் பெற்ற மரியே வாழ்கஎன்று நாம் ஒவ்வொரு முறையும் செபிக்கும்போது, மரியாவை மட்டும் போற்றுவதில்லை; மரியாவின் வழியாகச் செயல்பட்ட இறைவனின் அருளையும் மகிமைப்படுத்துகிறோம். அதேவேளை, மரியாவைப் போல இறைவனின் வார்த்தையை ஏற்று வாழவும், கிறிஸ்துவை உலகிற்குச் சாட்சியாக அறிவிக்கவும் நம்மை அர்ப்பணிக்கிறோம்.

அன்னை மரியாவின் வாழ்க்கை முழுவதும் கிறிஸ்துவை மையமாகக் கொண்டதாக இருந்தது. அவர் ஒருபோதும் தன்னை முன்னிறுத்தவில்லை. எப்போதும் தன் மகனாகிய இயேசுவை நோக்கியே மக்களை வழிநடத்தினார். எனவே, மரியாவைப் போற்றுவது கிறிஸ்துவை மகிமைப்படுத்துவதிலிருந்து ஒருபோதும் பிரிக்க முடியாது.

கிறிஸ்துவை மையமாகக் கொண்ட நம்பிக்கை வாழ்வில் வளர நாம் அனைவரும் அழைக்கப்படுகிறோம். நாமும் இறைவனின் அருளை ஏற்றுக்கொள்ளவேண்டும். நாம் பெற்ற இறையருளைப் பிறருடன் பகிரவேண்டும். துன்ப நேரங்களிலும் இறைவன்மீது நம்பிக்கை வைக்க வேண்டும். அன்னை மரியாவின் வழியாக இயேசுவை இன்னும் ஆழமாக அறிந்து, அவரை அன்பு செய்து, அவரைப் பின்பற்றி வாழ்வோம்.