news-details
சிறப்புக்கட்டுரை
தோமா கால் பதித்த தேசம் – 08

காந்தாரம் நோக்கி தன் சீடர்களோடு தோமா வழி நடந்து செல்கையில் மக்கள் சிலரும் அவரைப் பின்தொடர்ந்தனர். அவ்விதம் அவர் செல்லும் வழியில் இறந்து கிடந்த ஓர் இளைஞனைச் சுற்றி சிலர் கூடியிருப்பதைக் கண்ட சீடர்கள், அருகே சென்று பார்த்தபோது அந்த இளைஞன் நீலம் பாய்ந்த உடலோடு வாயில் நுரைதள்ளி இறந்து கிடப்பதைக் கண்டனர். அவ்விளைஞன் கிடந்த இடத்திற்குச் சற்றுத் தள்ளி ஒரு பெரிய பாம்புப் புற்று இருப்பதை உடன் சென்ற மக்கள் கவனித்ததும், பாம்பு கடித்துதான் அந்த இளைஞன் இறந்திருக்கிறான் என்பதைப் புரிந்துகொண்டனர்.

இறந்துகிடந்த இளைஞனின் உடலுக்கு அருகே சென்ற தோமா செபிக்கத் தொடங்கினார். அவர் செபிக்கத் தொடங்கியதுமே கரிய நிற நாகம் ஒன்று புற்றுக்குள்ளிலிருந்து எட்டிப் பார்த்து, மெல்ல வெளியே வர ஆரம்பித்தது. அது தோமாவின் அருகில் வந்து படமெடுத்து நின்றபடி, தான் அந்த இளைஞனைக்  கடித்ததற்கான காரணத்தைக் கூறியது: “நான் பாம்பு வடிவில் இருக்கும் சாத்தான். நான் ஒரு பெண்ணைக் காதலித்தேன். அதே பெண்ணை இந்த இளைஞனும் காதலித்தான். இவனுடைய சொல் பிடிக்காததால் இவ்வழியே வரும்போது இவனைக் கடித்துக் கொன்றேன்என்றது.

பாம்பின் வடிவில் இருந்த சாத்தானின் கூற்றைக் கேட்ட தோமா, “இயேசுவின் பெயரால் உனக்குக் கட்டளையிடுகிறேன். இந்த இளைஞனின் உடலில் உள்ள நஞ்சை உறிஞ்சி வெளியே எடுஎன்றார்.

தோமாவின் உத்தரவைக் கேட்ட பாம்பு உடனே இளைஞன் உடலில், தான் கடித்த இடத்தில் தன் வாயை வைத்து அவன் உடலில் கலந்திருந்த நஞ்சை உறிஞ்சத் தொடங்கியது. அது நஞ்சை உறிஞ்ச உறிஞ்ச இளைஞனின் உடலில் பரவியிருந்த நஞ்சு பாம்பின் உடலுக்குள் மீண்டும் திரும்ப அதன் உடல் பருமனாகி விரிந்துகொண்டே இருந்தது. அதேநேரம் இளைஞன்  உடலின் நீல நிறம் மாறி, மெல்ல அவன் உடலில் அசைவு தெரியலாயிற்று. நஞ்சை உறிஞ்சிய பாம்பு அந்த நஞ்சாலேயே உடல் வீங்கி வெடித்து இறந்தது. சற்று நேரத்தில் இளைஞன் உயிர்பெற்றவனாய் எழுந்து தோமாவின் பாதத்தில் விழுந்து நன்றி கூறினான்.

நடந்த அற்புதங்களைக் கண்ட மக்கள் அனைவரும் மிகுந்த ஆச்சரியத்துடன் தோமா போதிக்கும் கடவுளாகிய இயேசு கிறிஸ்துவிடம் நம்பிக்கை கொண்டனர். தோமாவோடு இணைந்து இறைவனைப் போற்றியதோடு புகழ்ப் பாடல்களையும் பாடினர்.

தோமா உண்மையில் இயேசுவின் மற்ற திருத்தூதர்களைக் காட்டிலும் மாறுபட்ட சூழ்நிலையிலேயே நற்செய்தி அறிவித்து வந்தார். மற்ற சீடர்கள் மத்தியதரைக் கடலைச் சுற்றியுள்ள நாடுகளில் இயேசுவின் நற்செய்தி அறிவிப்பு இப்பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளையில் எருசலேமை விட்டுத் தொலைதூரம் கீழைநாடு நோக்கிப் பயணித்து நற்செய்தி அறிவிக்க வந்தவர் தோமா. இவர் இயல்பிலேயே மனத்திடம் நிறைந்தவர்; ஐயம் தெளிவுறும் ஆர்வம் மிக்கவர்; நம்பிக்கை உறுதிமிக்கவர் என்பதைத் திருவிவிலியத்தில் இவர் சார்ந்த மூன்று நிகழ்வுகள் நமக்கு அறிவிக்கின்றன.

இறையாட்சியை அறிவிப்பதன் பொருட்டு இயேசுவிற்கு நாட்டில் எதிரிகள் பெருகிவரும் சூழலில், பிரித்தானியாவில் நண்பன் இலாசரின் இறப்பை உணர்ந்த இயேசு அங்கே செல்ல முடிவெடுக்கிறார். வெளியே நடமாடினால் இயேசுவின் உயிருக்கு ஆபத்து என்ற நிலையில் சீடர்கள் தடுக்க முயல, அப்போது உடன் சீடரிடம் தோமா, “நாமும் செல்வோம், அவரோடு இறப்போம் (யோவா 11:16) எனக் கூறிய வீரமிக்க வார்த்தைகளில் அவரிடம் மனவுறுதி தென்பட்டது.

கடைசி இராவுணவில் தம் பன்னிரண்டு சீடர்களிடம் நடக்கவிருப்பவை பற்றியும், அவர்கள் ஆற்ற வேண்டிய பணிகள் பற்றியும் கூறிய இயேசு, மேலும் தாம் தந்தையிடம் செல்லவிருப்பதாகவும், அதற்கான வழி சீடர்களுக்குத் தெரியும் என்றும் குறிப்பிடுகிறார். இந்நிலையில், “ஆண்டவரே, நீர் எங்கே போகிறீர் என்றே எங்களுக்குத் தெரியாது; அப்படியிருக்க நீர் போகுமிடத்திற்கான வழியை நாங்கள் எப்படித் தெரிந்துகொள்ள இயலும்?” (யோவா 14:5) என்ற கேள்வியைத் தோமா முன்வைத்தபோது, “வழியும் உண்மையும் வாழ்வும் நானேஎன்ற பதிலை இயேசுவிடம் பெறுவதில் அவருக்கிருந்த ஐயத்தெளிவிற்கான ஆர்வம் தென்படுகிறது.

இயேசு தாம் உயிர்த்து தோமாவைத் தவிர மற்ற சீடர்களைச் சந்தித்த நிலையில், இதைக் கேள்வியுற்ற தோமா அவநம்பிக்கையை வெளிப்படுத்துகிறார். “அவருடைய கைகளில் ஆணிகளால் ஏற்பட்ட தழும்புகளைப் பார்த்து, அதில் என் விரலை விட்டு, அவர் விலாவில் என் கையை விட்டாலன்றி நான் நம்பமாட்டேன் (யோவா 20:25) என்று நம்பிடத் தயங்கிய நிலையில், அவர் ஆணித்தரமாக நம்புவதற்கு ஆண்டவர் இயேசுவே முன்வந்து காட்சி தந்தபோது, “என் ஆண்டவரே! என் தேவனே!” என்று அவர் அடிபணிந்து இயேசுவிடம் முழுமையாகச் சரணடைந்த காட்சியில் தோமாவின் நம்பிக்கை உறுதியாகிறது.

இவ்விதம் மனிதனிடம் தெளிவு, நம்பிக்கை உறுதி, வீரம் இவற்றோடு தன் தலைவரின் பணி செய்ய இந்தியப் பகுதிக்கு வந்த துணிவு நிறைந்த தோமா, அச்சம் சிறிதுமின்றி தான் செல்லும் வழியெங்கும் மக்களுக்குப் போதித்துக் கொண்டே சென்றார். தன் சீடர்களுடன் காந்தாரம் நோக்கிய கால்நடைப் பயணம் தொடர்கையில் மக்கள் இருந்த ஒரு பகுதியில் இதுநாள்வரை அவர்கள் கேள்விப்பட்டிராத கடவுளைப் பற்றி அங்கே போதிக்கத் தொடங்க, சிறியதாகக் கூடிய கூட்டம் தோமாவையே ஆர்வமுடன் கவனித்துக் கொண்டிருந்தது. இவ்விதம் போதித்திருந்த வேளையில் மக்கள் கூட்டத்திற்கு முன்னால் கழுதை ஒன்று வந்து நின்றது.

தன் முன்னே வந்து நின்ற கழுதையை நோக்கினார் தோமா. கடவுள் அருளோடு அவ்விலங்கைப் பேச அவர் அனுமதிக்க, வாய் திறக்கப்பட்ட அந்த விலங்கு, “கடவுளின் மகனாகிய இயேசு கிறிஸ்துவின் தூதரே, நீர் போகுமிடத்திற்கு உம்மைச் சுமந்து செல்வதற்காகவே நான் வந்திருக்கிறேன்என்று, தான் அங்கு வந்த காரணத்தைச் சொன்னது. கழுதை பேசுவதைக் கேட்டு மக்கள் வியப்படைந்தனர்.

தோமாவோ, “நான் அழைக்காமலேயே வந்திருக்கிறாயே... நீ யார்?” என்று கேட்டார். கழுதை கூறிய பதில் அங்கிருந்த மக்களுக்குப் புரியவில்லை. சீடர்களுக்கோ அரைகுறையாகப் புரிந்தது. அது கூறியது: “கடவுள் எங்கள் இனத்தின்மீது எப்போதும் இரக்கம் உள்ளவர். பிலயாம் இறைவாக்கினரிடம் பேசியதும், உம் தலைவர் எருசலேம் நகருக்குள் நுழைகையில் அவரைச் சுமந்து சென்றதுமான கழுதைகளின் இனம்தான் நான். இப்போது உம்மைச் சுமக்கக் காத்திருக்கிறேன்.”

விலங்கின் சொற்களைக் கேட்ட தோமாவின் சீடர்கள், தோமாவின் தலைவர் என்று குறிப்பிடப்படுபவர் இயேசு கிறிஸ்துவே என்பதைப் புரிந்துகொண்டனர். ஆனால், ‘யார் இந்த இறைவாக்கினார் பிலயாம்?’ என்பது அவர்களுக்குத் தெரியவில்லை. ஆனாலும் ஆச்சரியமான அந்த நிகழ்வால் அங்கே அப்போதைக்குக் கேள்வி எழவில்லை.

திருவிவிலிய நூலில் பழைய ஏற்பாட்டினை வாசித்தறியாதோர் அறிந்துகொள்ள வேண்டியவர் இந்தப் பிலயாம். மோசே தலைமையிலான இஸ்ரேல் மக்கள் விடுதலைப் பயணத்தின்போது, தாங்கள் செல்லும் வழியெங்கும் அயல்நாட்டவர் எதிர்ப்பையே சந்தித்து வந்தனர். பாலஸ்தீனாவின் தென் கிழக்குப் பகுதியில் வாழ்ந்த மோவாப் நாட்டு மன்னன் பாலாக்கு, இஸ்ரயேலரின் வலிமையை அறிந்து, அவர்களின் எதிர்ப்பை எப்படி எதிர்கொள்வது என்று குழம்பியவனாய் இதற்கான தந்திர வழியைத் தேடினான். பெகோர் என்பவரின் மகனான பிலயாம் என்ற இறைவாக்கினர் ஆசிர் வழங்குவதிலும் சபிப்பதிலும் வல்லமை மிக்கவர் என்பதால், அவரைக் கொண்டு எதிரிகளான இஸ்ரயேலரைச் சபிக்கத் திட்டமிட்டான். அதற்காகத் தூதுவர்களை அவரிடம் அனுப்பி வைத்தான்.

ஆமாபு ஆற்றின் கரையருகே வாழ்ந்திருந்த பிலயாமை பாலாக்கின் தூதுவர்கள் சந்தித்தபோது, ஆண்டவர் தனக்குச் சொன்னபடி அவர்களுடன் செல்ல பிலயாம் மறுத்துவிட்டார். ஆனாலும், தொடர்ந்து அரசரின் வற்புறுத்தலால் பிலயாம், கடவுளுக்கு எதிரான மனநிலையோடு அவனைச் சந்திக்கப் புறப்பட்டார். தான் வளர்ந்து வந்த கழுதைக்குச் சேணம்பூட்டி தன் பயணம் தொடங்கினார். சினம் கொண்ட கடவுள் பிலயாமுக்குப் பாடம் புகட்ட விரும்பினார்.

கடவுளின் தூதர் கையில் வாளோடு கழுதைக்கு மட்டுமே தெரியும்படி வழிமறித்தபோதெல்லாம் முரண்டுபிடித்த கழுதையை அடித்தார். ஓரிடத்தில் இரு மதில் சுவர்களுக்கு மத்தியில் தூதர் நிற்க, பிலயாமைச் சுமந்த கழுதை சுவரில் முட்டி, பிலயாம் காலைச் சுவரோடு நெருக்கித் தேய்த்தது. மூன்றாம் முறையாக அடி வாங்கிய கழுதை கடவுள் கட்டளையால் வாய் திறக்கப்பட, “இப்படி மூன்று முறை அடி வாங்குவதற்கு நான் என்ன தவறு செய்தேன்?” என்று கேட்டது. அதற்குப் பிலயாம், “வரும் வழியில் என்னை ஏளனப்படுத்தியபடி வருகிறாய்என்றார். கழுதையோ, “இன்றுவரை என் வாழ்நாளெல்லாம் உம்மைச் சுமந்து வருகிறேனே, எப்போதாவது நான் இப்படி நடந்ததுண்டா?” என்று கேட்க, ‘இல்லைஎன்றார் பிலயாம். அப்போதுதான் அவருக்குக் கண் திறந்தது. கடவுளின் தூதரைக் கண்டவர் முகங்குப்புற விழுந்து வணங்கினார். கடவுளின் விருப்பத்திற்கு மாறாகத் தான் செய்யவிருந்த தவறை உணர்ந்தார். அதற்குப்பின் மன்னன் பாலாக்கைச் சந்தித்த பிலயாம், நான்கு முறையும் குறி சொல்கையில் இஸ்ரயேலரை ஆசிர்வதித்தார் (எண் 22:23,24).…

இவ்விதம் பிலயாம் என்ற இறைவாக்கினரோடு பேசிய கழுதையைத்தான் தன் முன்னோர் என்று தோமாவிடம் பேசிய விலங்கு கூறியது. தனது போதனையை முடித்த தோமா, “விலங்கினைப் பேச வைத்த ஆண்டவரே, உமக்கே மாட்சியும் மகிமையும்என்றவராய் கழுதையின் மீது அமர்ந்து தன் பயணத்தைத் தொடர்ந்தார்.

நகர்ப்புற நுழைவு வாயிலை நெருங்குவதற்குமுன் கழுதையினின்று இறங்கிய தோமா, “இனி நீ உன் இருப்பிடத்திற்குச் செல்லலாம்என்று அதற்குக் கட்டளையிட்டார். ஆனால், அங்கு நடந்ததோ வேறு! தோமா தன்னை விட்டு இறங்கியதும், தான் வந்த நோக்கம் நிறைவேறியதுபோல் கழுதை அங்கேயே தன் உயிரைவிட்டது. இறந்துவிட்ட கழுதையைக் கண்ட மக்கள் அதற்கு உயிர்ப்பிச்சை தருமாறு தோமாவை வேண்டினர். அவரோபேச வைத்த கடவுளே, இதனை இறக்கவும் அனுமதித்துள்ளார். இதனை நல்லடக்கம் செய்யுங்கள்என்றார். அவர் சொற்படியே சீடர்கள் அவ்விலங்கை நல்லடக்கம் செய்தனர்.

இயேசுவின் நற்செய்தியைப் பரப்புவதில் முதன்மையாளராக விளங்கிய புனித பவுலைப்போல் தெளிவான சிந்தனை, அழுத்தம், திருத்தமான பேச்சாற்றல், நினைத்ததை விளக்கமாக எழுதும் ஆற்றல் எனத் தலைமைப் பண்புக்குரிய தகுதிகள் தோமாவுக்கு இல்லாதிருந்தாலும், அவருக்கு இருந்த ஒரே தகுதி இயேசுவின்மீது கொண்ட அளவில்லாத பற்றும், அவருடைய கொள்கைகள்மீது வைத்த அசைக்கமுடியாத பிடிப்புமே. கல்வியறிவில் அவர் குறைபாடு உள்ளவராயிருந்தாலும்படிக்காத மேதைஎன்று கூறுமளவிற்கு வாழ்க்கையிலும், சமயம் சார்ந்த விசயங்களிலும் அனுபவ அறிவு நிறைந்தவராக இருந்தார். இயேசுவின் நற்செய்தியை உலகெங்கிலும் பரப்பவேண்டும் என்ற வெறி மட்டுமே தோமாவிடம் மிதமிஞ்சி இருந்தது.

இந்த நிலையில் அவருக்குச் செல்லும் இடமெல்லாம் வரவேற்பு இருக்கும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. ஒருசில சீடர்களுடன் அவர் காந்தாரத்திற்குள் நுழையும்போது அவரை வரவேற்பவர் எவருமில்லை. ஆனால், அவர் தான் போதித்துக்கொண்டே செல்கையில் நோயாளிகளைக் குணப்படுத்தியது, பேய்களை ஓட்டியது போன்ற புதுமைகளால் ஈர்ப்புக்குள்ளாகிய மக்கள் அவர் பின்னால் திரண்டனர். அவர் போதனைகளை ஆர்வமாகக் கேட்டனர். மக்கள் மனம் மாறுமளவிற்குத் தொடர்ந்து அங்கே மேலும் சில புதுமைகள் நிகழ்த்த வேண்டிய சூழ்நிலையும் அவருக்கு ஏற்பட்டது.

(தொடரும்)