news-details
சிறப்புக்கட்டுரை
சுமையா? சுமைதாங்கியா? (இளமை ஒரு சவால்! – 12

பிள்ளைகள் வளர்ந்து, பெற்றோர் ஆகின்றார்கள். பிள்ளைகளை வளர்த்துச் சுமந்த பெற்றோர் முதிர்ந்து பிள்ளைகளாகிப் போகிறார்கள்.

பிள்ளைகளை வளர்ப்பதை நாம் சுமை என்று கருதுவதில்லை. ஏன்? வருங்காலத்தில் பிள்ளைகள் நம்மைச் சுமக்கும் என்கிற நம்பிக்கைதான் காரணம்.

பழங்காலக் கூட்டுக் குடும்பங்களில் இந்த நம்பிக்கை ஓரளவுக்கு நிறைவேறியது. சொத்துரிமையும் அதிகாரமும் பெற்றோரிடம் இருந்ததால் அவர்கள் மதிக்கப்பட்டார்கள்.

இன்று நாம் நம் பெற்றோரை மதிக்கிறோமா? அவர்களுக்கு இன்னும் சுமையாக இருந்து அவதிப்படுத்துகிறோமா? அவர்களை அன்போடு சுமக்கும் சுமைதாங்கிகளாக இருக்கிறோமா?

இன்றைய இளைஞர்களின் சமுதாயப் பொருளாதார நிலையைப் பொறுத்து இந்தக் கேள்விக்கான விடையும் மாறக்கூடும்.

பொறுப்புணர்வோடும் சுயக்கட்டுப்பாட்டுடனும் வளராத, வளர்க்கப்படாத பிள்ளைகள் தங்கள் பொருளாதார நிலையைச் சரிப்படுத்திக்கொள்ள பெற்றோரையே நச்சரிக்கிறார்கள். முதிய வயதிலும் பெற்றோருக்குச் சுமையாகவே மாறிப்போகிறார்கள். தங்கள் சுயநலத்திற்காகப் பெற்றோரை அவதிக்கு ஆளாக்கும் பல இளைஞர்களின் அவலங்களைப் பார்க்கிறோம். ஆனால், இது அங்கொன்றும் இங்கொன்றுமாய் நடப்பவைதான்நம் மன உறுத்தலுக்கு இது ஓர் ஆறுதல்.

மிகுந்த சுயகட்டுப்பாட்டுடன் படித்து  முன்னேறிவிடும் இளைஞர்களில் பலர் பெற்றோரைச் சார்ந்திருப்பதில்லை. வெளியூர், வெளிநாடு என்று உயர, தனிமையை நோக்கிப் பறந்துவிடுகிறார்கள். இவர்கள் நிச்சயம் பெற்றோருக்குச் சுமையாக இருப்பதில்லை. பலர் பெற்றோருக்குத்  தேவையான பொருளாதார, மருத்துவ வசதிகளையும் நன்றாகக் கவனித்துக்கொள்கிறார்கள்.

அடிக்கடி பெற்றோரைச் சந்திக்கவோ, நேரத்தைச் செலவிடவோ இவர்களால் முடிவதில்லை. இவர்களது பெற்றோர் கொஞ்சம் ஏக்கத்தோடு  காலம் தள்ளுவது தவிர்க்க முடியாத காரியம்தான். ஆனால், நம் இளைஞர்களில்  பெரும்பாலோர் நடுத்தரப் பொருளாதார நிலைகளில்தான் உள்ளனர். சந்தைச் சமூகத்தின் ஆடம்பரத் தேவைகளை ஈடுகட்ட முடியாமல் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

அடிப்படைத் தேவைகளைவிட சந்தை தூண்டும் ஆசைகளுக்கு அடிமையாகி, வரவுக்கு மேல் செலவு செய்து அவதிப்படுகிறோம். நம்மோடு நம் பெற்றோரையும் சேர்த்து அவதிப்படுத்திக் கொண்டிருக்கின்றோம்.

நகரத்தில் நாம் வசதியாக வாழ முயற்சிக்கின்றோம். நம் பெற்றோர் கிராமங்களில் சிரமப்படுகிறார்கள்.

நாம் வீடு வாங்க ஆசைப்படுகின்றோம்; அதற்காகப் பெற்றோர் தங்கள் கையிருப்பைச் செலவு செய்யும் நிலை வருகிறது. சில நேரங்களில் பெற்றோர் தங்கள் வீட்டையும், வீட்டு நிலத்தையும் விற்க வேண்டி வருகிறது.

ஒரு முதிய நண்பர் ஓய்வூதியம் பெறுகிறார். தங்கள் ஓய்வூதியம் முழுவதையும் தன் ஒரே மகனிடம் கொடுத்துவிட்டு, அவன் குடும்பத்தோடு தங்கிக்கொள்ளலாம் என்று பையன் சொல்கிறான் என்று சோகத்தோடு கூறினார்.

இன்றைய நிலையில் பல குடும்பங்களில் கணவன்-மனைவி இருவரும் வேலைக்குப் போக வேண்டிய நிலை உருவாகிவிட்டது. வீட்டு வேலைகளைக் கவனித்துக்கொள்வதும், பிள்ளைகளைப் பார்த்துக்கொள்வதும் தாத்தா-பாட்டியர் வேலையாகிப் போகிறது. பேரப்பிள்ளைகளோடு இருப்பது முதியவர்களுக்கு ஒரு சுகம்தான். ஆனால், அதுவே வயதுக்கு மீதிய வேலைச்சுமையாக மாறிவிடாமல் இருக்கவேண்டுமே! நிறைய குழந்தைகள் இருப்பது ஒரு காலத்தில் பெற்றோருக்கு வலிமை சேர்த்தது. இன்று நான்கு பிள்ளைகள் தனித்தனிக் குடும்பத்தில் வசிக்கும்போது, வயதான பெற்றோர் எங்கே தங்குவது? ஒரு வீட்டில் ஒரு மாதம் என்று சில முதியவர்கள் அலைக்கழிக்கப்படுகிறார்கள். இன்னும் சில வீடுகளில் அம்மா ஒரு வீட்டில், அப்பா இன்னொரு வீட்டில்! இவ்வளவையும் தாண்டி பிள்ளைகள் வசதியாக இருந்தாலும், அவர்களை வசதிக்கு ஆளாக்கிய பெற்றோர், முதியோர் இல்லங்களில் வாழும் அவலங்களும் அரங்கேறுகின்றன.

இளைய தலைமுறை கொஞ்சம் நிதானமாகச்  செயல்பட்டால் இந்த வகை அவலங்களைத் தவிர்க்கலாம். நாம் அசுர வேகத்தில் வசதிகளைப் பெருக்கிக்கொள்ளவேண்டிய அவசியம் இல்லை. அளவுக்கு மீறிக் கடன்பட வேண்டிய தேவையும் இல்லை. கொஞ்சம் நிதானமாகத் திட்டமிட்டால் நம் பெற்றோரின் அன்பும் ஆசியும் நமக்குக் கிடைக்கும். நம் பிள்ளைகளும் தாத்தா-பாட்டியரின் அன்பைச்  சுவைப்பார்கள். முதிய பருவத்தில் தங்கள் பெற்றோரை மதிக்கவேண்டும் என்பதையும்  கற்றுக்கொள்வார்கள்.

ஒரு குடும்பத்தில், பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் மூலம் தாத்தா-பாட்டியரின் செலவுகளுக்காக மாதந்தோறும் பணம் கொடுப்பது வழக்கம். அந்தப் பிள்ளைகள் வளர்ந்த பிறகு தங்கள் பெற்றோரின் தேவைகளைப் புரிந்துகொண்டு செயல்படுவார்கள் என்பதில் சந்தேகமில்லை! அதற்கான பயிற்சிதான் இளமையிலேயே கிடைத்துவிடுகிறதே! என்னைச் சுமந்து வளர்த்து ஆளாக்கிய பெற்றோரை முதுமைக் காலத்தில் நான் மதித்து நடப்பேன். என் துணைவரின் பெற்றோரின் அன்பையும் ஆசியையும் நான் பெறுவேன். எங்கள் பெற்றேரின் அன்பு எங்களுக்கும் எங்கள் பிள்ளைகளுக்கும் அவசியம்.