news-details
ஞாயிறு மறையுரை
பொதுக்காலம் 25-ஆம் ஞாயிறு (20.09.2026) எசா 55:6-9; பிலிப் 1:20-24,27; மத் 20:1-16 - மனிதனின் நீதியும் இறைவனின் நீதியும்

பழைய ஏற்பாட்டில் ஏழைகளையும் பாதிக்கப்பட்டவர்களையும் ஒதுக்கப்பட்டவர்களையும் பொருளாதார ரீதியாக-சமூக ரீதியாக ஒடுக்கப்பட்டவர்களையும் நிலமற்றவர்களையும் அதிகாரமற்றவர்களையும், தங்களுக்கென்று ஒன்றுமே இல்லாத மனிதர்களையும்அனாவிம்என்று அழைத்தார்கள். அவர்கள் அனைத்திலும் கடவுளைச் சார்ந்தவர்களாகவே இருந்தார்கள். தங்கள் வாழ்வில் கடவுளை முற்றிலும் சார்ந்து வாழும் ஏழை, எளிய, புறம்பே தள்ளப்பட்ட, முன்னுரிமை வழங்கப்படாத மக்களின் சார்பாக இறைவன் வெளிப்படுத்தும் தாராள உள்ளமும் நிலைப்பாடும் இன்றைய நற்செய்தியின் சாராம்சமாக அமைகின்றது.

கடவுளின் கருணையை, அவர் தரும் ஆசிரை நமது செயல்களினால் மட்டுமே நாம் பெறுவதில்லை. அவை அனைத்தும் கடவுளின் பராமரிப்பின் அடையாளங்கள். அவரின் ஆசிரைப் பெறுவதற்கு நாம் தகுதியற்றவர்களாக இருப்பினும், தமது மிகுந்த கருணையினாலும், தாராள உள்ளத்தினாலும் செயல்பாட்டினாலும் நம்மைத் தகுதிப்படுத்துகின்றார். மத்தேயு நற்செய்தியில் மட்டுமே திராட்சைத் தோட்ட வேலையாள்களின் உவமையை நாம் படிக்கின்றோம். இந்த உவமையில் திராட்சைத் தோட்ட உரிமையாளர் வேலையாள்களை வேலைக்கு அமர்த்த ஐந்து முறை வெளியே செல்கின்றார். இன்றைய நற்செய்தி, திராட்சைத் தோட்ட உரிமையாளர் வேலையாள்களைத் தேடிச்செல்லும் ஐந்து கால நேரங்களைக் குறிப்பிடுகின்றது அவை: விடியற்காலை, காலை ஒன்பது மணி, பன்னிரண்டு மணி, மதியம் மூன்று மணி, மாலை ஐந்து மணி.

திராட்சைத் தோட்டத்தில் பணிபுரியும் பணியாளர்கள், அதிகாலை முதல் மாலை ஆறு மணிவரை பணி செய்வார்கள். மாலையில் அவர்களுக்கு உரிய கூலி வழங்கப்படும். திராட்சைகளை அறுவடை செய்யும் காலம் கோடைகாலமாகவே அமையும். சூரியன் உதிக்கும் நேரம் முதல் அது மறையும் வரை வேலையில் ஈடுபடுவார்கள். ‘அனாவிம்(Anawim) எனப்படும் ஏழைகளுக்கு, அவர்களின் அன்றாடக் கூலி மட்டுமே குடும்பத்தின் உணவிற்கான, அடிப்படைச் செலவினங்களுக்கான ஒற்றைவழி (இச 24:15). அன்றாட வேலையில்லையென்றால் குடும்பங்கள் பசி, பட்டினியுடன் அன்றைய இரவைக் கழிக்கவேண்டும்.

பணியில் அமர்த்துதல், அதிகாரப்படுத்துதல், அங்கீகாரம் அளித்தல்: இன்றைய நற்செய்தியில் மதியம் மூன்று மணி, மாலை ஐந்து மணிக்கு பணியில் அமர்த்தப்பட்டவர்களை மற்ற திராட்சைத் தோட்ட உரிமையாளர்கள் வேலைக்கு அழைக்காததால் அவர்களின் திறமை மற்றும் உழைப்பின்மீது நம்பிக்கையில்லாமல் இருந்திருக்கும். மாலை வரை வேலையின்றிக் காத்துக்கிடக்கும் அவல நிலை ஏற்பட்டிருக்கும். பலம் நிறைந்தவர்கள், திறமையானவர்கள், அனுபவமிக்கவர்கள், அறிமுகமானவர்கள் எனப் பல அளவுகோலின்படி உடனடியாக மற்றவர்கள் வேலைக்கு அழைக்கப்பட்டிருக்கலாம். மற்றவர்கள் திறமையற்றவர்களாகக் கருதப்பட்டு விடப்பட்டிருக்கலாம். திராட்சைத் தோட்ட உரிமையாளர் பிறரின் கவனங்களை ஈர்க்காத, புறக்கணிக்கப்பட்ட பணியாளர்கள் மேல் தனது கவனத்தைச் செலுத்துகின்றார். தனது திராட்சைத் தோட்டத்தைவிட இத்தகையோரின் அடிப்படைத் தேவையையும், அவர்களின் குடும்பங்களையும், பிள்ளைகளையும் மிக முக்கியமாகக் கருதினார். நாள் முழுவதும் வேலைக்கு அமர்த்தப்படாமல் நின்று காத்துக்கிடப்போரை வேலைக்கு அமர்த்தி, அவர்களுக்கு உரிய மாண்பை வழங்குகின்றார். ஒருவருக்கு வேலை வழங்குவது அவரை அங்கீகரிப்பதன் அடையாளம். ஒருவரை வேலைக்கு அமர்த்தாமல் புறக்கணிப்பது அவரது மாண்பைப் புறக்கணிப்பதற்குச் சமம்.

இரு முரண்பாடுகள்: இவ்வுவமையின் முரண்பாடான கதைக் கருவே அவர்களுக்குக் கூலி வழங்குவதில் அமைந்திருக்கிறது.  1. திராட்சைத் தோட்ட உரிமையாளர், கடைசியில் வந்தவருக்கு முதலில் கூலி வழங்கவேண்டும் என மேற்பார்வையாளரிடம் கூறுகின்றார். ஒரு மணி நேரம் மட்டும் உழைத்த- மாலை ஐந்து மணிக்கு பணிக்கு அமர்த்தப்பட்டவருக்கு, முதலில் கூலி வழங்குவது விநோதமாக உள்ளது. 2.     பன்னிரண்டு மணி நேரம் உழைத்தவருக்கும், ஒரு மணி நேரம் உழைத்தவருக்கும் ஒரு தெனாரியம் கூலி. அதிகாலை முதல் பணியாற்றிய வேலையாள்கள் முணுமுணுக்கின்றார்கள். தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாக உணர்கின்றார்கள். ஆனால், தோட்ட உரிமையாளர் அவர்களுக்கு உரிய கூலியை வழங்கினாரே தவிர, அநீதி இழைக்கவில்லை; மாறாக, கடைசியாகப் பணிக்கு அமர்த்தப்பட்ட பணியாளர்களின் தேவைகளை அறிந்து கூலியை வழங்குகின்றார். கடைசியில் வந்தவர்கள்தான் அதிக தேவையில் இருந்திருக்கக் கூடும். எனவேதான் அவர்களுக்கு முதலில் கூலி வழங்கப்பட்டுள்ளது. ஏனெனில், அவர்கள்தான் கடைநிலையில் மறக்கப்பட்டவர்கள், கவனிப்பாரற்றுச் சந்தையில் காத்துக் கிடந்தவர்கள். கடவுளின் இறையாட்சிப் பணியில் விருப்பத்தோடு பணிசெய்யும் பொழுது, இறைவன் நமக்குக் கூலி வழங்குவதில்லை; மாறாக, கொடையை அருளாக, மழையாகப் பொழிகின்றார். அவர் தருவதில்லை; அமுக்கி, குலுக்கி, சரிந்து விழும்படியாகக் கொட்டுகின்றார்.

இறைவனின் பொருளாதாரத் தத்துவம்: கடவுளின் பெருங்கருணையை இன்றைய நற்செய்தியின் உவமை எடுத்துரைக்கின்றது. நேரத்தை அளவிட்டு, உழைப்பை மதிப்பீடு செய்து கூலி வழங்குபவரல்லர் நம் இறைவன்; மாறாக, மனிதர்கள் வாழ வேண்டும் என்பதற்காக, பல்வேறு வழிகளில் அதனை நிறைவேற்றிடத் துடிப்பவர். அவர்களால் படைக்கப்பட்ட, அவரின் சாயலாக இருக்கும் மனிதர்களாகிய நாமே அவரின் முன்னுரிமை. வர்த்தகச் சட்டமும், உலகின் அளவுகோலும் இன்றைய நற்செய்தியில் பின்னுக்குத் தள்ளப்படுகின்றது.

இறைவனின் பொருளாதாரத் தத்துவம் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றது. கடவுள் நாம் நினைப்பதற்கும் சிந்திப்பதற்கும் மேலாகவே நமக்கு அருளை பொழிபவர். சந்தைவெளியின் அளவுகோலும் கணக்குகளும் இறைவனின் கணக்கினைப் புரிந்துகொள்வதில்லை. மனிதரின் தேவைகளே அவர் கண்முன் எப்பொழுதும் இருக்கின்றன. அவர் நம்மைத் தேடிவந்து, பணி அமர்த்தி வேண்டியவற்றைச் செய்யும் கடவுளாகவே உள்ளார். நாம் செய்யவேண்டியது ஒன்று மட்டுமே. அவருக்குச் செவிமடுத்து அவரின் இறையாட்சித் தோட்டத்தில், வாஞ்சையோடு பணிபுரிவோம். நமது பணிகளுக்கு உழைப்பிற்கும் மேலாகவே பல மடங்கு ஆசிரைக் காண்போம்.

இறைவனின் வழிமுறைகளும் எண்ணங்களும்: இன்றைய முதல் வாசகத்தில் எசாயா இறைவாக்கினர் இறைவனை வாய்ப்பு உள்ளபோதே தேடும்படிப் பணிக்கின்றார். அவரைத் தேடிச் செல்லும் பொழுது, அவரின் எண்ணங்களைப் போல நமது எண்ணங்களும் மாற்றம் பெறும் என்பதும், நமது தேவைகள் சந்திக்கப்படும் என்பதும் உறுதி. இதனையே இன்றைய பதிலுரைப்பாடல் (திபா 145:2-3,8-9, 17-18) எடுத்துரைக்கிறது.  

உலகின் நீதிக் கொள்கையும், இறைவனின் நீதிக் கொள்கையும்: உலகின் நீதிக் கொள்கை ஒவ்வொருவருக்கும் உரியது. அவரவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்னும் நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது. இறைவனின் நீதிக் கொள்கையில் ஒவ்வொருவருக்கும் சிறந்ததை வழங்கவேண்டும். குறிப்பாக, கடைநிலையினயிருக்கு முன்னுரிமை என்னும் நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது. கடைசியாகப் பணியமர்த்தப்பட்டவருக்கு வழங்கப்படும் கூலி மற்றும் அவர்களுக்கு வழங்கப்பட்ட முன்னுரிமை செயலினைக் குறித்து அங்கலாய்த்துக் கொண்ட முதலில் பணியமர்த்தப்பட்ட பணியாளர்கள் அச்செயலினை வரவேற்கவில்லை. தங்களுக்கு அவர்களைவிட அதிக முன்னுரிமையும், சிறப்புக் கவனமும், கூடுதல் கூலியும் நீதியும் கிடைக்க வேண்டும் என எதிர்பார்த்தனர். இங்குத் திராட்சைத் தோட்ட உரிமையாளர் நீதியோடு கலந்த அன்பினால் செயல்படுகின்றார்.

மனித உரிமை போராட்ட வீரர் மார்ட்டின் லூதர் கிங் அவர்களின் வரிகள் இங்கே பொருத்தமாய் அமைகின்றது: “அன்பிற்கு எதிராக நிற்கும் அனைத்தையும் சரிசெய்வதுதான் நீதியின் உன்னத நிலை. அதுவே சிறந்த அன்பு.” இன்றைய நற்செய்தியில் இறைவன் நீதியை, இரக்கத்தினால் சுற்றி, அதில் அன்பு என்னும் நறுமணத்தை ஊற்றுகின்றார். இதுவே, இறைவனின் நீதிக் கொள்கை.

ஒளி மங்கும் வேளையில், தேடிவரும் இறைவன்: திராட்சைத் தோட்ட உரிமையாளர், ஐந்தாம் முறையாக மாலை ஐந்து மணிக்கு சந்தைவெளிக்குச் சென்று அங்குப் பணிக்காகக் காத்திருப்போரை அழைத்து, அவரது தோட்டத்தில் வேலையில் அமர்த்துகின்றார். இறைவனுக்கு எதுவும் தாமதமில்லை. மிகவும் தாமதமான நேரங்களில் கூட அவர் நம்மைத் தேடிவரத் தயங்குவதில்லை. நமது வாழ்க்கையின் கடைசி ஒளி மங்கும் வேளையிலும், இறைவன் நம்மைத் தேடி வருகின்றார். அவரது இறையாட்சியின் திராட்சைத் தோட்டத்தில் அனைவருக்கும் உரிமையும் கடமையும் உண்டு. நமது உழைப்பால், உடனிருப்பால் அதனை இன்னும் வளமையாக்குவோம். எவரும் அவரது அன்பிலிருந்து, பார்வையிலிருந்து தொலைவில் இல்லை

நம் உடன் உழைப்பாளர்களை மதிப்போம்நமது உழைப்பாளர்களை மாண்புடனும் அக்கறையுடனும், அவர்களின் தேவைகளை உணர்ந்து, குடும்பச் சூழ்நிலை அறிந்து, அவர்களுக்குத் தேவையானவற்றைச் செய்திட மறந்திட வேண்டாம். இறைவன் நம்மிடம் தாராள உள்ளத்தினை, அருளினை வழங்குவது போன்று, நாமும் நம் சகோதர உடன் உழைப்பாளர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் தேவைகளைக் கண்முன் கொண்டு அவர்களின் தேவைக்கேற்ப தாராளமாய் வழங்குவோம். “வறியவரும், எளியவருமான கூலியாளர்கள், உன் இனத்தவராயினும் சரி, உன் நகர்வாயிலுக்குள் உள்ள அந்நியராயினும் சரி, அவரைக் கொடுமைப்படுத்தாதே. அவரது கூலியை அந்தந்த நாளில் கொடுத்து விடு. கதிரவன் மறையுமுன்னே கொடு. ஏனெனில் அவர் வறியவராய் இருப்பதால், அவரது பிழைப்பு அதில் அடங்கியுள்ளது (இச 24:14-15) என்னும் இறைவார்த்தையை நினைவில் கொள்வோம். பிழைப்பிற்காக உழைக்கும், உழைப்பாளர்களின் உயிரை உறிஞ்ச வேண்டாம். உள்ளுணர்வு கொண்டு, உளமார மதித்து, அவர்களின் உழைப்பை, உணர்வை, உயர்த்திப் பிடிப்போம்.