news-details
சிறப்புக்கட்டுரை
ஆனால்... உதடுகளின் புன்னகைக்குப் பின்னால்! (வாழ்வின் மறுபக்கம் - 2)

ஒருவரைப் பார்க்கிறோம். முகம் முழுவதும் புன்னகை. முகத்தில் புன்னகை இருந்தால், ‘அவர் மகிழ்ச்சியாக இருக்கிறார்என்று முடிவு செய்துவிடுகிறோம். சிரித்துப் பேசினால், ‘எந்தக் கவலையும் இல்லாதவர்என்று நினைத்துவிடுகிறோம். குடும்பத்தோடு புகைப்படம் எடுத்திருந்தால், ‘அவர்களுடைய வாழ்க்கை மிகவும் அழகாக இருக்கிறதுஎன்று சொல்லிவிடுகிறோம்.

ஆனால், ஒரு முகம் ஒரு வாழ்க்கையின் முழு கதையல்ல; ஒரு புன்னகை ஒருவருடைய மகிழ்ச்சியின் முழு அளவுகோலும் அல்ல; சில நேரங்களில் உதடுகள் சிரித்துக்கொண்டிருக்கும்; ஆனால், மனம் யாருக்கும் தெரியாமல், ஆயிரம் துண்டுகளாக உடைந்து கொண்டிருக்கும்.

சில நேரங்களில் உதடுகள் சொல்வதைவிட, கண்கள் அதிகமாகப் பேசும். சில நேரங்களில் கண்கள்கூட உண்மையைச் சொல்லாது. ஏனெனில், மனிதன் தனது வலியை மறைக்கவும் கற்றுக்கொள்கிறான். குறிப்பாக, தன்னைச் சுற்றியிருப்பவர்களுக்காக வாழ வேண்டிய கட்டாயம். எனவே, அழுவதற்கான இடத்தையும் நேரத்தையும் வாழ்க்கை அவர்களுக்கு விட்டுக் கொடுப்பதில்லை. எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான நற்றிணையில் வரும் ஓர் அழகிய வரி:

அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும்

முல்லை சான்ற கற்பின்

மெல் இயற் குறுமகள் உறைவின், ஊரே     (பாடல் 142).

அடர்ந்த இருளில் தன் தனிமையின் துயரத்தை எண்ணி கண்ணீர் வடிக்கும் தலைவி, வீட்டு வாசலில் விருந்தினர் தட்டும் சத்தம் கேட்டவுடன் தன் சோகத்தையும் குறையையும் மறைத்து முகமலர்ந்து அவர்களை வரவேற்கும் இல்லறப் பண்பை இச்சங்க இலக்கியப் பாடல் நுட்பமாகப் பதிவுசெய்கிறது.

ஒரு புன்னகை ஒரு மனிதரின் மகிழ்ச்சியை மட்டுமே சொல்லாது; சில நேரங்களில் அது அவர் மறைத்திருக்கும் கண்ணீரையும் சொல்லும். சில புன்னகைகள் மகிழ்ச்சியில் பிறக்கின்றன; சில புன்னகைகள் வலியைத் தாண்டிப் பிறக்கின்றன. இவை அன்பின் வெளிப்பாடு; இன்னும் சில நேரங்களில் அது தன்னைத்தானே தாங்கிக்கொள்ளும் மன உறுதி. நம்மில் எத்தனை பேர் இப்படிப்பட்ட மனிதரைத் தினமும் பார்க்கிறோம்!

கணவன் வேலை இழந்திருக்கலாம்; வீட்டுக் கடன் இருக்கலாம்; குழந்தையின் கல்விக் கட்டணத்தைச் செலுத்த இயலாமல் தவித்துக்கொண்டிருக்கலாம்; உடல்நிலை சரியில்லாமல் இருக்கலாம்; உறவுகளுக்குள் புரிந்துகொள்ள முடியாத இடைவெளி இருக்கலாம். இருந்தாலும், காலையில் குழந்தைகளை எழுப்பி, அவர்களுக்குச் சாப்பாடு கொடுத்து, ‘நீ நல்லா படி... நல்லா இருப்பே!’ என்று சொல்லிக்கொண்டே சிரிக்கும் ஒரு தாய்... அவரிடம்அம்மா, நீ மகிழ்ச்சியா இருக்கியா?’ என்று கேட்டால், ‘ஆமாம்எனக்கென்ன குறை?’ என்று சொல்லிக்கொண்டு, அடுத்த நாளை நோக்கி நடக்கிறார். அந்தஎனக்கென்ன குறை?’ என்பதற்குள் எத்தனை இரவுகளின் கண்ணீர் இருக்கிறது என்பது யாருக்குத் தெரியும்?

குழந்தைகள் தூங்கிய பிறகு தனியாக அழுதுவிட்டு, மறுநாள் காலை எதுவுமே நடக்காதது போலப் புன்னகையுடன் எழுந்திருக்கும் அன்னையர் எத்தனை பேர்! அவர்கள் பலவீனமானவர்கள் அல்லர்; உண்மையில், அவர்கள் நம்மால் எளிதில் புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு வலிமையானவர்கள். ஒரு தாய் தன் குழந்தையிடம், ‘நீ கவலைப்படாதே... அம்மா இருக்கேன்!’ என்று சொல்லும்போது, அந்த வார்த்தைகளில் குழந்தைக்கான ஆறுதல் மட்டுமல்ல, தன்னையே தாங்கிக்கொள்ளும் ஒரு தாயின் மன உறுதியும் இருக்கிறது.

ஒரு தந்தையை எடுத்துக்கொள்வோம்; வருமானம் போதவில்லை; மாதத்தின் கடைசி வாரம்; மளிகைக் கடைக்காரரிடம் பாக்கிப் பணம் கொடுக்க வேண்டியுள்ளது; வாங்கியப் பொருள்களுக்கு மாதத் தவணை (EMI) கட்டவேண்டியுள்ளது; வீட்டுக் கடனின் தொகை நெருக்குகிறது; மேலுமோர் எதிர்பாராத செலவு வந்து நிற்கிறது; அலுவலகத்தில் மேலதிகாரியின் அழுத்தம் வேறு... இத்தனைக்கும் நடுவில், இரவு வீட்டிற்குள் நுழையும்போது குழந்தை ஓடி வந்து, ‘அப்பா!’ என்று கட்டிப்பிடிக்கிறது. அந்தக் குழந்தையின் முகத்தில் இருக்கும் மகிழ்ச்சியைப் பார்த்தவுடன், தந்தை தன் கவலைகளை மறைத்துவிட்டுச் சிரிக்கிறார்.

ஐயன் வள்ளுவன் கூறும்,

இடுக்கண் வருங்கால் நகுக அதனை

அடுத்தூர்வது அஃதொப்ப தில் (குறள் 621)

என்ற வரிகள் இங்கே இன்னும் ஆழமான பொருளைப் பெறுகின்றன.

ஆயிரம் வலிகள் வந்தாலும், ‘நான் உடைந்து போகமாட்டேன்என்று ஒரு மனிதர் தனக்குள் எடுக்கும் தீர்க்கமான முடிவின் வெளிப்பாடுதான் அந்தப் புன்னகை. புன்னகை என்பது வலியை மறப்பதற்கான வழி அல்ல; வலியைத் தாங்கிக்கொள்வதற்கான ஆற்றல். அது மனத்தின் தீர்க்கமான உறுதிப்பாடு.

சிரிப்பு என்பது பெரும்பாலும் மகிழ்ச்சியின் அடையாளம் அல்ல; அது மனிதர் தன் கண்ணீரை மறைக்கக் கண்டறிந்த மிகச்சிறந்த கேடயம்\" என்பார்கள். அதனால்தான் சில புன்னகைகள் சாதாரணமானவை அல்ல; அவை போராடிப் பெற்றவை. வலி இல்லாத மனிதர் வலிமையானவர்கள் அல்லர்; வலி இருந்தும் விழாமல் நிற்பவர்களே வலிமையானவர்கள்.

வாழ்க்கையில் மறைக்கப்பட்ட ஒவ்வொரு வலியும் பலவீனத்தின் அடையாளமல்ல. சில வலிகள் அன்பின் காரணமாக மறைக்கப்படுகின்றன. அவை பல நேரங்களில் சத்தமாக வெடிப்பதில்லை; ஆனால், அமைதியாக வளர்கின்றன. கணவன்-மனைவிக்குள் பேசப்படாத வார்த்தைகள், பிள்ளைகளிடம் சொல்லப்படாத கவலைகள், பெற்றோரிடம் பகிரப்படாத தோல்விகள், சகோதரர்களுக்குள் உருவாகும் தூரங்கள், எல்லாரும் இருந்தும் அனுபவிக்கின்ற தனிமைகள்... இவையெல்லாம் வீட்டின் சுவர்களுக்குள் அமைதியாக வாழ்கின்றன. வெளியில் பார்க்கும்போது அந்தக் குடும்பம் மிகவும் சாதாரணமாகத் தோன்றலாம்; பண்டிகை நாளில் அனைவரும் ஒன்றாகப் புகைப்படம் எடுக்கலாம்; பிறந்தநாள் கொண்டாடலாம்; சமூக ஊடகத்தில் வாழ்த்துகளைப் பகிரலாம். ஆனால், அந்தப் புகைப்படத்திற்குப் பின்னால் யார் யாரிடம் பேசாமல் இருக்கிறார்கள்? யார் யாரை மன்னிக்க முடியாமல் இருக்கிறார்கள்? யார் யாரிடம் அன்பு கேட்டு அமைதியாகக் காத்திருக்கிறார்கள் என்பதெல்லாம் நமக்குத் தெரியாது.

நாம் ஒருவரின் வாழ்க்கையின் முகப்புப் பக்கத்தை மட்டுமே பார்க்கிறோம். அவர்களின் அடுத்த பக்கங்களில் என்ன இருக்கிறது என்பது நமக்குத் தெரியாது. “நாம் சந்திக்கும் ஒவ்வொரு மனிதரும் ஏதோ ஒரு கடினமான போராட்டத்தை எதிர்கொண்டு இருக்கலாம். எனவே, எப்போதும் அன்போடும் இரக்கத்தோடும் இருக்கவேண்டும்என்னும் ஸ்காட்லாந்து எழுத்தாளர் இயான் மேக்லாரனின் கூற்று இதையே நினைவூட்டுகிறது.

சிலர் வலியோடு சிரிக்கிறார்கள்; சிலர் கண்ணீரோடு வாழ்கிறார்கள்; சிலர் உடைந்த இதயத்தோடு மற்றவர்களைத் தேற்றுகிறார்கள். தாங்கள் ஆறுதல் தேவைப்படுகிற நேரத்திலும், ‘பரவாயில்லை... எல்லாம் சரியாகிவிடும்என்று மற்றவர்களிடம் சொல்கிறார்கள். இதுதான் மனித மனத்தின் அற்புதம். உலகம் பார்க்கும் மனிதனும், அவனுக்குள் வாழும் மனிதனும் எப்போதும் ஒரே மாதிரி இருப்பதில்லை.

நம்மைச் சுற்றியுள்ள பலர் உதடுகளில் புன்னகையையும், இதயத்தில் ஆயிரம் வலிகளையும் சுமந்துகொண்டிருக்கிறார்கள். ஆனால், அந்த உதடுகளின் புன்னகைக்குப் பின்னால், சொல்லப்படாத ஒரு வலி இருக்கிறது! அந்த வலிதான் மனவுறுதி; அந்த வலிதான் நம்பிக்கை! ஆனால், அந்த வலிகளில்தான், விடியலை நோக்கி நடக்கத் துணியும் ஒரு தீர்க்கமான மனமும் உறுதியும் மறைந்திருக்கின்றன!

எனவே, வாழ்க்கையின் மறுபக்கத்தையும் பார்க்கக் கற்றுக்கொள்வோம். முகத்தை மட்டும் பார்க்காமல் மனத்தையும் பார்க்கலாம்; சிரிப்பை மட்டும் கேட்காமல் மௌனத்தையும் கேட்கலாம்அவர்களுடைய புன்னகையை மதிக்கக் கற்றுக்கொள்வோம்; அதன் பின்னால் இருக்கும் வலியையும் மதிக்கலாம். அவர் சொல்லாத கதைக்கு இடம் கொடுக்கலாம்; அவர் மறைத்த கண்ணீருக்கு மரியாதை கொடுக்கலாம். ஏனெனில், நம்மைச் சுற்றி நடமாடும் பலர் உடைந்தவர்கள் அல்லர்; உடைந்த மனங்களோடு கூட அழகாக வாழக் கற்றுக்கொண்டவர்கள்!

(பயணம் தொடரும்...)