news-details
சிறப்புக்கட்டுரை
வாரம் ஒரு குறள் – 11

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்

துப்பாய தூஉம் மழை (குறள் 12)

குறள் விளக்கம்: உண்பவனுக்குத் தக்க உணவுப் பொருள்களை விளைவித்துத் தருவதோடு, பருகுவோருக்குத் தானும் ஓர் உணவாக இருப்பது மழையாகும்.

சிந்தனை: மழை நீரானது உயிர் அளிக்கும் ஊற்றாக இருந்து, இந்த உலகைச் செழிப்படையச் செய்கிறது. உயிர் வாழ்வுக்கு ஆதாரமாகவும் இருக்கிறது. அதுபோல் இன்னும் பல தாவரங்களும் விலங்குகளும் மனிதர்களும் தன்னை முழுவதும் பிறருக்கு வழங்கி, உயிர்களை  வாழ வைக்கின்றன. நமது பிறப்பும் பிறருக்குப் பயன்படும் விதமாக அமையவேண்டும்.

சோம்பேறியான ஒருவன் திருட்டுத் தொழில் செய்து, அதில் கிடைக்கும் பணத்தைக் கொண்டு வாழ்க்கை நடத்தினான். ஒருநாள் காட்டில் அவன் ஒரு நரியைக் கண்டான். அந்த நரிக்கு இரண்டு கால்கள் மட்டுமே இருந்தன. ஆனாலும் அந்த நரி மிகுந்த மகிழ்ச்சியோடு இருந்தது. இந்தச் சோம்பேறி மனிதனுக்கோ அது ஆச்சரியத்தை அளித்தது. இந்நிலையில், ‘இந்த நரி எப்படி மகிழ்ச்சியாக இருக்க முடியும்? அது எப்படித் தன் உணவைப் பெற்றுக்கொள்ளும்? மற்ற விலங்குகளிடமிருந்து அது எப்படித் தன்னைக் காத்துக்கொள்ள முடியும்?’ என எண்ணிக் கொண்டிருக்கும்போதே, சிங்கம் ஒன்று வாயில் இறைச்சித் துண்டுடன் நரியின் அருகில் வருவதைக் கண்டான்.

சிங்கத்தைக் கண்ட எல்லா விலங்குகளும் ஓடிவிட்டன. சோம்பேறி மனிதனும் மரத்தில் ஏறிக்கொண்டான். நரி மட்டும் ஓடாமல் அங்கேயே இருந்தது. அருகில் வந்த சிங்கம் அந்த இறைச்சித் துண்டை நரியிடம் கொடுத்தது. நரிக்கு உணவு கிடைத்த விதத்தைக் கண்ட சோம்பேறி, தனக்கும் யாராவது உணவு கொண்டு வருவர் என நினைத்து, சாலையின் ஓரத்தில் உட்கார்ந்து பார்த்துக்கொண்டே இருந்தான். ஆனால், ஒருவரும் அவனுக்கு உணவு கொடுக்கவில்லை. பின் அங்கு வந்த ஒரு ஞானியைப் பார்த்து, “நரிக்கு உணவளித்த கடவுள் எனக்கு உணவு தரவில்லைஎன்று புலம்பினான். அதற்கு ஞானி, “நீ கடவுளின் திட்டத்தைச் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை. கடவுள் உன்னை முடமான நரியாக அல்லவலிமை உடைய சிங்கமாகப் படைத்துள்ளார். நீ உழைத்துச் சம்பாதித்து மற்றவர்களுக்கு உணவளிக்கவேண்டும்என்றார்.

ஒவ்வொரு மனிதரிலும் ஓர் இறைத்திட்டம் உள்ளது. அதன் நோக்கம் பிறருக்கு நன்மை விளைவிப்பதே ஆகும். உதாரணமாக, திருத்தூதர் பணிகள் 9:36-இல் யோப்பா நகர் தபித்தா என்னும் இயேசுவின் பெண் சீடரை எடுத்துக்கொள்வோம். “நன்மை செய்வதிலும், இரக்கச் செயல்கள் புரிவதிலும் அவர் முற்றிலும் ஈடுபட்டிருந்தார்.”

இயேசுவின் சீடர்கள் இவ்விதம் நற்செயல்கள் செய்யும்போது, இயேசு இதற்கும் ஒரு படி மேலே சென்று, “நீங்கள் உங்கள் பகைவரிடமும் அன்பு செலுத்துங்கள்; அவர்களுக்கு நன்மை செய்யுங்கள்என்று லூக்கா 6:35-இல் தெளிவுபடுத்துகிறார்.

ஒருமுறை வாழும் இந்த உன்னத வாழ்வில்  அனைவருக்கும் பயன்படும் வகையில் வாழ்வோம். மேலும், “கடவுளைப் பிறரில் காணவும், நம்மை மையப்படுத்துவதிலிருந்து வெளியேறி, பிறர் நலனைக் காக்க நம்மைப் படைத்துள்ள அன்பான இறைவனுக்குத் தகுந்த பதில் தரவும் நற்செய்தி நம்மை அழைக்கிறதுஎன்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ் (நற்செய்தியின் மகிழ்ச்சி:39).

எனவே நற்செய்தியை ஆழமாகப் படித்து, நமது சிந்தனையால் நன்மை செய்வோம். நமது சொற்களால் இனிமை சேர்ப்போம். நமது செயல்களால் முன்மாதிரியாவோம். நற்செயல்கள் ஒரு சங்கிலித் தொடர் நிகழ்வாய் இந்த உலகத்தை இணைக்கட்டும்.