இயற்கை என்பது வெறும் அகவமைப்போ, நாம் நுகர்வதற்கானப் பொருளோ அன்று; மாறாக, அது இறைவனின் அருள்கொடை; நாம் அதன் பிரிக்க முடியாத ஓர் அங்கம்!
21-ஆம்
நூற்றாண்டின் மனிதச் சமூகம் தொழில்நுட்பப் புரட்சியிலும், கட்டுப்பாடற்ற நுகர்வுப் போக்கிலும் மூழ்கியிருக்கும் இக்காலகட்டத்தில், சூழலியல் சமநிலையின்றி பூமிப்பந்து தவித்துக் கொண்டிருக்கிறது. காலநிலை மாற்றத்தின் பேரழிவுகள், நீர்நிலைகளின் வறட்சி, மனிதப் பேராசையால் ஏற்படும் சூழலியல் சீரழிவுகள் ஆகியவற்றிற்கு மத்தியில், கத்தோலிக்கத் திரு அவையும் உலகளாவிய கிறித்தவச் சமூகங்களும் ‘படைப்பின் காலத்தை’ (Season of Creation) ஒரு
புனிதமான ஆன்மிகச் சமூகப் பொறுப்பாகக் கொண்டாடுகின்றன.
2026-ஆம் ஆண்டின்
படைப்பைப் பராமரிப்பதற்கான 11-வது உலக இறைவேண்டல் தினத்தை முன்னிட்டு (செப்டம்பர் 1) திருத்தந்தை லியோ அண்மையில் சிறப்புமிக்க உரையாற்றியுள்ளார். அதன் அடிப்படையில், படைப்பின் காலத்தின் ஆழமான ஆன்மிகப் பொருள், அமைதிக்கும் சூழலியலுக்கும் இடையிலான பிணைப்பு மற்றும் ‘நீரைப் பாதுகாப்போம்’ எனும்
காலத்தின் கட்டாயக் கோரிக்கை குறித்த ஒரு விரிவான சிந்தனைப் பகிர்வு ஆகியவை இன்றைய காலத்தின் அடிப்படைத் தேவையாக உள்ளன.
படைப்பின் காலம்:
தோற்றமும்
ஆன்மிக
அவசியமும்
வரலாற்று
ரீதியாக, படைப்பின் காலம் என்பது செப்டம்பர் 1-ஆம் நாள் தொடங்கி அக்டோபர் 4-இல் வரும் புனித பிரான்சிஸ் அசிசியாரின் திருவிழா வரை ஐந்து வாரங்கள் தொடரும் ஒரு சிறப்புமிக்கக் காலகட்டமாகும்.
1989-ஆம் ஆண்டு
கீழைத் திரு அவையின் அகில உலகத் தலைவர் முதலாம் திமித்ரியோஸ் என்பவரால் செப்டம்பர் 1 ‘படைப்பிற்கான இறைவேண்டல் நாள்’ அறிவிக்கப்பட்டது. பின்னர் 2007-இல் ஐரோப்பியத் திரு அவைகளின் கூட்டமைப்பால் இது ஐந்து வாரக் கொண்டாட்டமாக நீடிக்கப்பட்டு, 2015-ஆம் ஆண்டு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் கத்தோலிக்கத் திரு அவையிலும் அதிகாரப்பூர்வமாக இணைக்கப்பட்டது.
திருத்தந்தை
லியோ அவர்கள் ‘Missa pro
custodia creationis\\\' (படைப்பைப்
பாதுகாப்பதற்கான திருப்பலி) எனும் புதிய வழிபாட்டு முறையை உரோமன் திருப்பலிப் புத்தகத்தில் முறைப்படி இணைத்து, அகில உலகத் திரு அவையும் சூழலியல் பாதுகாப்பிற்காக ஒன்றிணைந்து செபிக்கப் பாதையமைத்துள்ளார்.
படைப்பின்
காலம் என்பது ஏதோ ஓர் அரசியல் கொள்கையோ அல்லது வெறும் சமூக அமைப்புகளின் பிரச்சாரமோ அன்று; மாறாக, அது கிறித்தவ நம்பிக்கையின் மையப்பகுதியாகும். இயற்கையின் பேரழகைக் கண்டு வியப்பதோடு நிறுத்திக்கொள்ளாமல், அதன் படைப்பாளராகிய இறைவனை நோக்கி நமது பார்வையை உயர்த்துவதே இக்கால கட்டத்தின் முதன்மை நோக்கமாகும்.
நீரைப் பாதுகாப்போம்!
செப்டம்பர்
மாத இறைவேண்டல் கருத்தாகத் ‘நீரைப் பாதுகாப்போம்’ என்பதைத்
திருத்தந்தை லியோ அறிவித்துள்ளார். வத்திக்கானில் வெளியிட்ட செய்தியில், “தண்ணீர் எல்லைகளற்ற உரிமையாகும்; அது அனைவருக்கும் உரிய பொதுவான கொடை” என்று அவர் அழுத்தம் திருத்தமாக இயம்பியுள்ளார்.
வாழ்வளிக்கும்
நீர் (Living Waters) என்பது
பற்றிக் குறிப்பிட்ட திருத்தந்தை, “நீர் என்பது வணிகப் பொருளன்று; அது உலகளாவிய மானுட உரிமை” என்றும், “அது கிணறு மற்றும் பாத்திரங்களில் தேங்கியே இருப்பது அல்ல; மாறாக, அது தேக்கமின்றி ஓடும் வாழ்வின் ஊற்று” என்றும், அது நிலத்தை வளப்படுத்தி, பூக்களை மலரச் செய்து, சுழற்சியைக் காக்கும் ஜீவநதி என்றும், யோவான் நற்செய்தியில் கிறிஸ்துவே அத்தகைய தாகம் தீர்க்கும் ‘ஜீவ தண்ணீராக’
திகழ்கிறார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நீரின் தத்துவமும்
அசிசியின்
பார்வையும்
புனித
பிரான்சிஸ் அசிசியார் தனது ‘சூரியனின் கீதம்’ (The Canticle of the Sun) நூலில்,
நீரைத் ‘தங்கை நீர்’ (Sister Water) என்று அழைக்கின்றார். அது பயனுள்ளது, தாழ்மையானது, விலைமதிப்பற்றது மற்றும் தூய்மையானது என்று அவர் போற்றுகிறார். ஆனால், இன்றைய நுகர்வுக் கலாச்சாரத்தில், குடிநீர் வணிகப் பொருளாக்கப்பட்டு, ஏழை எளிய மக்கள் தூய்மையான நீரின்றி மைல்கணக்கில் நடந்து செல்லும் அவலம் நிலவுகிறது. குழாய் கசிவுகளைச் சரிசெய்தல், நீரைக் குறைவாகப் பயன்படுத்துதல், நீர்நிலைகளை மாசடையாமல் தடுத்தல் போன்ற தனிநபர் பொறுப்புகளை நாம் தட்டிக் கழிக்க முடியாது என்று திருத்தந்தை லியோ சுட்டிக்காட்டுகிறார்.
ஆயுத மோதல்களும்
சூழலியல்
அழிவும்:
ஒரு
நச்சுச்
சுழற்சி
2026-ஆம் ஆண்டின்
படைப்பைப் பராமரிப்பதற்கான இறைவேண்டல் தினச் செய்தியில், திருத்தந்தை லியோ ஒரு மிக முக்கியமான உண்மையை உலகிற்கு முன்வைத்துள்ளார்: ‘ஆயுத மோதல்களுக்கும் சுற்றுச்சூழல் சீரழிவிற்கும் இடையிலான ஆழமான பிணைப்பு.’ இறைவாக்கினர் எசாயாவின் “அவர்கள் தங்கள் வாள்களைக் கொழுக்களாகவும், தங்கள் ஈட்டிகளை அரிவாள்களாகவும் அடிப்பார்கள்” (2:4) என்ற
இறைவார்த்தையை இவ்வாண்டின் மையக்கருத்தாகத் திருத்தந்தை அறிவித்துள்ளார்.
போரினால்
ஏற்படும் காயங்கள், போர்க்களத்தைத் தாண்டி பூமியின் ஒட்டுமொத்தக் கட்டமைப்பையும் சேதப்படுத்துகின்றன. இது மனித இதயத்தின் ஆன்மிக மற்றும் நன்னெறி வீழ்ச்சியைக் காட்டுகிறது. பேராசை, ஆதிக்கம் செலுத்தும் மனப்பான்மை மற்றும் உடனடி இலாப நோக்கமே இந்த அழிவுகளுக்குக் மூலக்காரணமாகும்.
உண்மையான சூழலியல்
மனமாற்றம்
படைப்பின்
காலத்தில் நாம் செய்யவேண்டிய முதன்மைப் பணி, அன்றாட வாழ்வின் இரைச்சல்களிலிருந்து விலகி ‘அமைதி நிலைக்கு’
(Silent Mode) மாறுவதாகும்.
மனித நடவடிக்கைகளால் ஏற்படும் இரைச்சல்களைக் குறைத்தால் மட்டுமே, இயற்கை எழுப்பும் மெல்லிசைக் குரலையும், அதன் வழியே பேசும் இறைவனின் குரலையும் நம்மால் கேட்க முடியும். புனித பிரான்சிஸ் அசிசியார் இயற்கை உலகை தனியான ஒன்றாகப் பார்க்காமல், மனிதர்களாகிய நாமும் அதன் குடும்பத்தில் ஒரு பகுதி என்று உணர்ந்தார். விண்மீன்கள், கதிரவன், நிலவு, நீர், நெருப்பு, தாய் பூமி ஆகிய அனைத்தும் நமக்குச் சகோதர-சகோதரிகளாகும்.
நாம் மேற்கொள்ள
வேண்டிய
நடைமுறைகள்
ஆழ்ந்த தியானம்:
இயற்கை உலகைப் பார்த்து வியப்பதன் மூலமாக, அதைப் படைத்த இறைவனின் எல்லையற்ற அன்பை உணர்தல்.
தனிநபர் நுகர்வைக்
குறைத்தல்:
எளிமையான வாழ்முறையைக் கையாண்டு, வளங்களை வீணாக்குவதைத் தவிர்த்தல்.
வாள்களைக் கொழுக்களாக
மாற்றுதல்:
வன்முறையையும் பேராசையையும் கைவிட்டு, அழிவுச் சக்திகளை ஆக்கப்பூர்வமான வாழ்வாதாரப் பணிகளுக்குத் திருப்புதல்.
ஏழைகளின் கதறலுக்குச்
செவிமடுத்தல்:
சூழலியல் சீரழிவால் முதலில் பாதிக்கப்படுவது ஏழை எளிய மக்களே. எனவே, பூமியின் கதறலையும் ஏழைகளின் கதறலையும் ஒன்றிணைத்துக் கேட்டல்.
‘இன்னமும் காலம் கடந்துவிடவில்லை!’ (It is not yet too late) என்று உரத்த குரலில் நம்பிக்கை அளிக்கிறார் திருத்தந்தை லியோ. நமது அழிவுப் பாதையிலிருந்து விலகி, வாழ்வின் பாதைக்குத் திரும்ப படைப்பின் காலம் நம்மை அன்போடு அழைக்கிறது.
பாலைவனங்களைச்
சோலைகளாகவும், பிரிவினைகளைச் சமூகப் பிணைப்பாகவும், வன்முறையை அமைதியாகவும் மாற்றும் ‘சூழலியல் மன மாற்றத்தை’ நாம் ஒவ்வொருவரும் நமது உள்ளங்களில் தொடங்குவோம். இயற்கையைத் தாயாகவும், அதன் வளங்களை இறைவனின் கொடையாகவும் போற்றி, ‘தங்கை நீரை’ மாசாக்காமல் காத்து, எக்காலமும் படைப்பின் அழகில் இறைவனைக் கண்டு இறைப்புகழ் பாடுவோம்!
“என் ஆண்டவரே!
உமது
படைப்புகள்
அனைத்திற்காகவும்,
சிறப்பாகச்
சகோதரன்
கதிரவனுக்காகவும்,
சகோதரி
நீருக்காகவும்
உமக்குப்
புகழும்
மாட்சியும்
உரித்தாகுக!”
- புனித
பிரான்சிஸ்
அசிசியார்.